தமிழ்த் தாத்தா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2021
பார்வையிட்டோர்: 6,242 
 

யார் வீட்டிலாவது பழைய நகையோ, பாத்திரமோ இருந்தால் அதை லேசில் அழிக்க மனசு வராது. “எங்கள் தாத்தாவுக்குத் தாத்தா காலம் முதல் இது எங்கள் வீட்டில் இருக்கிறது; ஆகிவந்தது” என்று பெருமையாகச் சொல் லிக்கொள்வார்கள். இப்படியே, “இந்த நிலம் நூறு வருஷத்துக்கு மேலாக எங்கள் குடும்பத்தில் இருக்கிறது” என்று சொல்லுவார் கள். நூறு வருஷம் கிடக்கட்டும். இருநூறு வருஷம் , முந்நூறு வருஷம் ,நானூறு வருஷமாக இருந்து வரும் அருமையான சொத்து நமக்குக் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! இதெல்லாம் நூற்றுக்கணக்கு. இரண்டாயிரம் வருஷகாலமாக இருந்த சொத்து மறைந்துபோய்த் திடீரென்று கிடைக்கிறது அப்போது நாம் எப்படித் துள்ளிக் குதிப்போம்!

தமிழ்த் தாத்தா மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அப்படித்தான் துள்ளிக் குதித்தார். தமிழ் நாட்டையே சந்தோஷமாகத் துள்ளிக் குதிக்கச் செய்தார். இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் இருந்த வித்வான்கள் எத்தனையோ பாடல்களைப் பாடினார்கள். அவற்றையெல்லாம் சேர்த்துப் புத்தகமாக்கி வைத்தார்கள். பழைய காலத்தில் அச்சுப் புத்தகம் இல்லை. பனையோலையில் எழுதிச் சுவடியாகச் சேர்த்து வைப்பார் கள். இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் தமிழ் நாட்டில் தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்தது. அதில் பல புலவர்கள் இருந்தார்கள்.

அவர்கள் பாடிய பாடல்களெல் லாம் ஏட்டுச் சுவடிகளில் இருந்தன. அந்தச் சுவடிகளைப் பாது காப்பவர் இல்லாமல், எங்கோ மூலையில் கிடந்தன. அந்தப் பாடல்களைப் படிக்கிறவர்களும் இல்லை. அதனால் அந்தக் கவிகளினால் தெளிவாகும் செய்திகள் தெரியாமல் போயின. இருக்கும் இடம் தெரியாமல் அந்தத் தமிழ் நூல்கள் மறைந்திருந்தன. அந்தப் பாடல்களைத் தமிழ்த் தாத்தா கண்டுபிடித்தார். புதையல் எடுப்பது போல எடுத்து, சுத்தமாக்கி அச்சிட்டுத் தந்தார். அந்தப் புத்தகங்களைப் படித்துப் பார்த்த போது எத்தனை புதிய விஷயங்கள் தெரிந்தன! புதிய விஷயங்கள் என்று சொல்லக்கூடாது; பழைய விஷயங்களே. பல காலமாகத் தெரியாமல் மறைந்திருந்ததனால், புதுமையாக இருந்தன.

தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் இருந்த அரசர்களைப்பற்றி அந்த நூல்கள் பல கதைகளைச் சொல்லுகின்றன. பல புலவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுகிறோம். ஜனங்கள் எப்படி வாழ்ந்தார் கள் என்று அறிகிறோம். பழைய ஊர்கள், பழைய சபைகள், பழைய நாகரிகம் இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்களை நாம் தெரிந்துகொள்ளுகிறோம்.

1855-ஆம் வருஷம் பிறந்து 88- வருஷ காலம் தமிழ்த் தாத்தா வாழ்ந்தார். பெரிய கவிஞராகிய மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டார். அவரும் மகா வித்வான் ஆனார். கும்பகோணம் காலேஜிலும் சென்னைப் பிரஸி டென்ஸி காலேஜிலும் தமிழ் ஆசிரியராக இருந்தார். எத்தனையோ பேர்களுக்கு வீட்டிலும் பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.

அவர் முதல் முதலில் சீவகசிந்தாமணி என்ற புத்தகத்தை அச்சிட்டார். பத்துப் பாட்டு, புறநானூறு முதலிய அருமையான நால்களை அவர் பதிப்பித்திருக்கிறார். அவருக்கு இங்கிலீஷ் தெரியாது. ஆனாலும் மேல் நாட்டில் பல பெரிய ஆராய்ச்சிக்காரர்க ளெல்லாம் அவர் செய்த ஆராய்ச்சியைப் பாராட்டினார்கள். நூறு புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறார்.

அவர் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இவ் வளவு படித்த அவர் உங்களுக்குக்கூடப் புரியும்படி தெளிவான நடையில் எழுதியிருக்கிறார். நடந்த விஷயங்களைக் கதை போலச் சொல்வதில் அவர் மிகவும் கெட்டிக்காரர். பண்டிதர்களுக்கெல் லாம் பெரிய பண்டிதர். ஆனாலும் குழந்தைகளுக்கும் விளங்கும்படி பேசுவார்; எழுதுவார்.

அவர் தம்முடைய சரித்திரத்தை விரிவாக எழுதியிருக்கிறார். முழுதும் எழுதி முடிக்கவில்லை. அதற்குள் அவர் வாழ்வு முடிந்தது.

தமிழ்த்தாத்தாவுக்கு ஒரு தாத்தா இருந்தார். அவர்களுடைய ஊர் தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள உத்தமதானபுரம். தமிழ்த் தாத்தாவுக்குப் பிற்காலத்தில் எத்தனையோ பட்டங்கள் கிடைத் தன. திருவாவடுதுறை என்ற ஊரில் உள்ள சைவ மடத்தின் தலைவர் மகாவித்வான் என்று ஒரு பட்டம் அளித்திருக்கிறார். அரசாங்கத்தார் மகாமகோபாத்தியாயர் என்ற பட்டம் அளித் தார்கள். சென்னை யூனிவர்ஸிட்டியில் டாக்டர் என்ற பட்டம் கிடைத்தது. இன்னும் திராவிட வித்தியாபூஷணம் , தாட்சிணாத்திய கலாநிதி என்றெல்லாம் வேறு பட்டங்களும் கிடைத்தன.

இவைகளெல்லாம் இருக்கட்டும். மற்றொரு பட்டம் அவருக்குக் கிடைத்தது. அந்தப் பட்டம் என்ன தெரியுமா? “கத்திரிக்காய்த் தொகையல்’ அவருக்கு ஒரு தாத்தா இருந்தார் என்றேனே.

அந்தத் தாத்தாவால் வந்த பட்டம் அது.

ஆறு வயசுக்குழந்தையாக இருந்தார் சாமிநாதையர். அவர் தகப்பனார் வெளியூருக்குச் சென்றிருந்தார். வீட்டில் அவருடைய தாயார் இருந்தார். அவர் தாத்தாவாகிய கிழவருக்குச் சாப்பாட்டில் அதிகப் பிரியம். “ஒருவரும் நான் சொல்கிறபடி நடக்கிறதில்லை” என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அவருக்குப் பிரியமான சமையலைச் செய்ய வேண்டுமென்று சாமிநாதையருடைய தாயார் எண்ணுவார். தம் குமாரரைக் கூப்பிட்டு, “உன் தாத்தாவிடம் போய் என்ன சமையல் பண்ண வேண்டுமென்று கேட்டுக் கொண்டுவா என்று சொல்லி அனுப்புவார். குழந்தை சாமிநாதையர் தாத்தாவிடம் போவார், “என்ன சமையல் செய்ய வேண்டும்?” என்று கேட்பார்.

தாத்தா உடனே பதில் சொல்ல மாட்டார்; கனைத்துக்கொள் வார். மேலும் கீழும் பார்ப்பார்; “சமையலா?” என்பார். சிறிது நேரம் கழித்து, “மண்ணாங்கட்டி, தெருப்புழுதி” என்று வெறுப்பாகச் சொல்வார்.

அதைக் கேட்ட பேரர் உடனே அம்மாவிடம் ஓடுவார். “மண்ணாங்கட்டி, தெருப்புழுதி” என்று சொல்வார்.

“என்னடா இது? சமையல் என்ன செய்கிறதென்று கேட்டால், எதையோ உளறுகிறாயே!” என்று தாயார் கேட்பார்.

“தாத்தா அப்படித்தான் சொன்னார்” என்பார் குழந்தை. “சரி, சரி, மறுபடியும் போய்க் கேட்டுவிட்டு வா” என்று அனுப்புவார்.

பேரர் தாத்தாவிடம் மறுபடியும் போவார். “என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்பார். நிதானமாக, “கத்திரிக்காய் இருக்கிறதா?” என்று கேட்பார்.

மறுபடியும் சாமிநாதையர் அம்மாவிடம் போவார். “கத்திரிக் காய் இருக்கிறதா?” என்ற கேள்வியை ஒப்பிப்பார். ”இருக்கிறது” என்று தாயார் சொல்வார். அங்கிருந்து தாத்தாவிடம் வந்து, “இருக்கிறது” என்பார்.

“சரி, அந்தக் கத்திரிக்காயைச் சுட்டுவிட்டு … என்ன, தெரிகிறதா?” என்று தாத்தா ஆரம்பிப்பார்.

“ஹும்” என்று கேட்பார் பேரர்.

“அதைச் சுட்டுவிட்டு அம்மியில் வைத்து…என்ன, கேட்கிறதா?”

“ஹும்!”

“கத்திரிக்காயை அம்மியில் வைத்து ஓட்டி ஓட்டி ஓட்டி ஓட்டி ..”

ஓட்டி ஓட்டி அரைப்பதை அவர் ஓட்டிக்கொண்டே போவார்.

அதை அப்படியே அம்மாவிடம் போய்ச் சொல்வார் குழந்தை. மறுபடியும் தாத்தா கூப்பிடுவார். கத்திரிக்காய்த் துவையலை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைச் சாங்கோபாங்கமாகச் சொல் வார். இந்த மாதிரி கத்திரிக்காய்த் துவையல் விஷயத்தைத் தாத்தாவிடம் கேட்டு அம்மாவுக்குச் சொல்வதால் எல்லாரும் அவரைக் கத்திரிக்காய்த் துவையல்” என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

தமிழ்த் தாத்தாவின் தகப்பனார் சங்கீத வித்வான். அதனால் சாமிநாதையரும் சங்கீதம் கற்றுக்கொண்டார். சின்ன வயசி லேயே கவிபாடுவார். அங்கங்கே உள்ள தமிழ்ப் புலவர்களிடம் அவர் தமிழ் படித்தார். அந்தப் புலவர்களில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நூல் தெரியும். அவரவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கற்றுக்கொண்டார். கடைசியில் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்னும் பெரிய கவிஞரிடம் பாடம் கேட்க ஆரம்பித்தார்.

முதலில் அந்தக் கவிஞர் சாமிநாதையருக்கு நேரே பாடம் சொல்லவில்லை. அவரிடம் படித்து வந்த மாணாக்கர் ஒருவர் பாடம் சொன்னார். சாமிநாதையருக்கோ நேரே பிள்ளையவர்க ளிடம் பாடம் கேட்க வேண்டுமென்ற ஆசை. புதிதாக வந்த அவர் எப்படித் தம் ஆசையைத் தெரிவிப்பது? ஒரு வழியும் தெரிய வில்லை. மனசுக்குள்ளேயே அந்த ஆசையை வைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தார்.

மாயூரத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தம்முடைய வீட்டின் பின்புறத்தில் ஒரு தோட்டத்தை அமைத்தார். பெரிய மரங்களை மண்ணோடு பறித்துக்கொண்டு வந்து வைக்கச் செய்தார். அழகான மலரையும் பசுமையான மரங்களையும் பார்ப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம். கவிஞர்களுக்கே இயற்கை அழகில் ஈடுபடும் இயல்பு இருக்கும்.

வைத்திருந்த மரங்களெல்லாம் தளிர்த்துப் பூத்துச் சோலையாக விளங்க வேண்டும் என்ற ஆசை மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு இருந்தது. மரங்களில் புதிய தளிர் வந்திருக்கிறதா என்று பார்ப் பார். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் வீட்டுக்குப் பின் புறம் சென்று மரங்களைக் கவனமாக ஆராய்வார். எங்காவது ஒரு மரத்தில் புதிய தளிர் தளிர்த்திருந்தால் அவர் மனசிலும் மகிழ்ச்சி தளிர் விடும். இப்படித் தினந்தோறும் அவர் பார்த்து வருவதைச் சாமிநாதையர் கவனித்தார். மறுநாள் சீக்கிரமே எழுந்தார். நேரே வீட்டின் பின்புறம் சென்று எந்த எந்த மரங்களில் புதிய தளிர்கள் தோன்றியிருக்கின்றன என்று பார்த்துத் தெரிந்து கொண்டு போனார். சிறிது நேரம் கழித்துக் கவிஞர் அங்கே வந்தார் . தளிர்களைப் பார்க்கத் தொடங்கினார். பார்த்துக்கொண் டிருக்கையில் சாமிநாதையர் அங்கே வந்தார். தம்முடைய ஆசிரி யரை மிகவும் மரியாதையோடு அணுகினார். தாமும் தளிரைப் பார்ப்பது போலப் பார்த்து, “அதோ , அங்கே ஒரு தளிர்” என்றார். ஆசிரியர் ஆவலோடு , “எங்கே?” என்று சொல்லி அதைப் பார்த்தார். மறுபடியும், “இதோ இங்கே ஒன்று” என்றார். அதையும் ஆசிரியர் பார்த்து மகிழ்ந்தார்.

இந்தக் காரியத்தால், சாமிநாதையருக்கு ஆசிரியரோடு நேரில் பேசிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது புதிய தளிர்களைக் காணக் காண மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மனசு மிகவும் சந்தோஷம் அடைந்தது. அவற்றைப் பார்த்துச் சொன்ன சாமிநாதையரிடத்திலும் அன்பு உண்டாயிற்று. அத்தகைய சமயத்தில் சாமிநாதையர், ” நேரிலே பாடம் கேட்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது” என்று ஆசிரியரிடம் விண்ணப்பித்துக் கொண்டார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அப்படியே பாடம் சொல்லத் தொடங்கினார்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்குக் கவி பாடுவதென்றால் தண்ணீர் பட்ட பாடு. அன்பர்களுடன் பேசிக்கொண்டே கவிகளையும் சொல்வார். சொல்லச் சொல்லச் சாமிநாதையர் ஏட்டில் எழுதிக் கொள்வார். இப்படிப் பல புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை பல மாணாக்கர்களுக்குப் பாடம் சொன்னார். அந்தக் காலத்தில் இருந்த எல்லா நூல்களையும் நன் றாகப் பாடம் சொல்லுவார். ஆனால் அவருக்குக்கூடத் தெரியாத புத்தகங்களை நாம் இப்போது படிக்கிறோம். அதற்குச் சாமி நாதையரே காரணம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த புலவர்கள் பாடிய நூல்கள் அந்தக் காலத்தில் எங்கோ கிடந்தன. கும்ப கோணம் காலேஜில் ஆசிரியராக இருந்த போது சாமிநாதையர் அந்த நூல்களை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். ஊர் ஊரா கச் சென்று ஏட்டுச் சுவடிகளைத் தேடினார். ஏட்டுச் சுவடிகளில் உள்ளதைப் படிப்பது மிகவும் கஷ்டம். எழுதினவர்கள் செய்த தப்புகளெல்லாம் அவற்றில் இருக்கும். நூல்களோ மிகப் பழங்காலத்து நூல்கள். இப்படி இருந்தும் ஏட்டுச்சுவடிகளைப் படித்து, பழைய பாடல்களின் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டார் தமிழ்த்தாத்தா; பிறகு அவற்றை அழ்காக அச்சிட்டார்.

தமிழ் படித்துக் கரையேற வேண்டுமானால் அவர் பதிப்பித்த நூல்களைப் படிக்காமல் இருக்க முடியாது. தமிழ்நாட்டின் பழைய சரித்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் அவர் அளித்த நூல்களைப் படிக்க வேண்டும்.

நீங்கள் இன்னும் சில வருஷங்கள் ஆன பிறகு அவர் வெளி யிட்ட நூல்களைப் படிக்கத்தான் போகிறீர்கள். அப்போது அவருடைய பெருமை உங்களுக்கு நன்றாகத் தெரியவரும்.

– விளையும் பயிர், கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *