கார்பரேட் கம்பெனியில் பாட்டி வடை சுட்ட கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 9,838 
 

கண்ணயர்ந்திருந்த ராமகோபாலன், வீட்டின் காலிங் பெல் சத்தம் தொடர்ந்து அடித்ததால் வெளியே போய் எட்டிப் பார்த்தார்.

”அடே, அடே, வாப்பா இராஜேஷ்” என உள்ளே கூப்பிட்டு போனார்.

என்ன அங்கிள் வெளியே போகலையா? என்று கேட்டான் இராஜேஷ். அதற்கு ” வெயில் கொளுத்தறதால வீட்டை விட்டு எங்கும் போகவில்லை என்றார் ராமகோபாலன்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது….

“அங்கிள் சாக்லேட், அப்புறம் ஒரு கதை” வழக்கமாய் கேட்பது போலவே அன்றும் கேட்டான் ராமகோபாலனின் பேரன் சீனு.

இராஜேஷ் தன் மடியில் உட்கார்த்தி வைத்து, ”ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டு” அப்படின்னு ஆரம்பித்தான். ”போங்க அங்கிள், அந்த வடை கதையா? எல்லாரும் இதைத்தான் சொல்றாங்க, போரடிக்குது, வேற ஏதாச்சிலும் சொல்லேன்” என்று கேட்டான்.

“அது இல்லேடா செல்லம், பாட்டி வடை சுட்ட கதையில, ஒனக்கு தேவையானதும் இருக்கும், எங்க கம்பெனிக்கு தேவையானதும் இருக்கு” என்றான் இராஜேஷ்.

“சரி அங்கிள் சொல்லுங்க, எனக்கு தேவையானதை நான் கேட்டுக்கறேன்” என்றான் சீனு. “சரி இந்த சாக்லேட் சாப்பிட்டுகிட்டே கேளு”, அதற்கு “என்னப்பா இராஜேஷ், பெரிய மல்டி நேஷனல் கம்பெனில கம்ப்யூட்டர் என்ஜினியர் நீ போய் அந்த காலத்து பாட்டி வடை சுட்ட கதையைப் போய் சொல்றே, இன்னுமா பத்தாம்பசலித்தனமா இருக்கே?” என்று கேட்டார்.

“இல்லே, நான்கூட பாட்டி வடை சுட்ட கதைல இன்னா இருக்குன்னுதான் நினைச்சேன். ஆனா அதில, பெரிய கார்பரேட் நிறுவனத்துக்கு தேவையான தாரகமந்திரமும் இருக்கு, குழந்தைகளுக்கு தேவையான அறிவுரையும் இருக்குன்னு அப்புறமாத்தான் புரிய ஆரம்பிச்சுது. அந்த கதையில பத்துவிதமான நீதிபோதனைகள் அடங்கி இருக்கு அங்கிள்” என்று ஆரம்பித்தான்.

“முதல்ல, சீனுவுக்கு சொல்லிடுறேன். அப்புறம் ஒங்களுக்கு பாட்டி வடை சுட்ட கதை, கார்பரேட் கம்பெனிக்கு எப்படி பொருந்துது-ன்னு சொல்றேன்” என்றான்.

முதலாவதாக பாட்டி வடை சுட்ட வடையில், ஒரு வடையைக் காகம் கொத்தி சென்றதிலும், அதைப் பறித்த நரியின் தந்திரம்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், பாட்டி சுட்ட வடையில் ஒரு வடையைக் காகம் கொத்தி சென்றதால், வறுமை நிலையில் உள்ள பாட்டிக்கு அன்றைய வருவாயில் ஒரு வடைக்கான தொகை நட்ட கணக்கில் சேர்கிறது. இது வியாபாரத்தில் கவனக்குறைவாக இருப்பதைக் காட்டுகிறது.

இரண்டாவதாக, பாட்டி அசந்த நேரம் பார்த்து, காகம் வடையைக் கொத்தி சென்றது. எப்போதும் விழிப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்பது சீனு மாதிரி உள்ள குழந்தைகளுக்கு.

மூன்றாவதாக, பாட்டி வடையைச் சுட்டு விற்கும்போது, பொருட்களைத் தக்க பாதுகாப்பின்றி வைத்து வியாபாரம் செய்தது தெரியவருகிறது.

நான்காவதாக, பாட்டி சுட்ட வடையை கொத்தி சென்ற காகம் மரக்கிளையில் அமர்ந்திருந்தன. கீழே இருந்த நரி, தனக்கே உரித்தான தந்திர புத்தியால், “காக்கா, காக்கா, நீ எவ்வளுவு அழகா இருக்கே, ஒரு பாட்டு பாடேன்” என்று கேட்டது. காகம், யோசிக்க வில்லை, தனக்கு அழகிருக்கிறதா, பாட்டு பாடும் திறனும் உள்ளதா என யோசிக்காமலே, வாயைத் திறந்து வடையைக் கோட்டை விட்டது இது குழந்தைகளுக்கு தேவையில்லாம புகழ்ந்தா எச்சரிக்கையா இருக்கணும்-ன்னு ஒரு நீதி.

ஐந்தாவதாக, கீழே விழுந்த வடையை நரி எடுத்து சென்று சாப்பிட்டது. அதாவது ஏமாற்றி சாப்பிட்டது இது குழந்தைகளுக்கு.

ஆறாவதாக, பாட்டி சுட்ட வடையில் ஒரு வடையை திருடிக் கொண்டு சென்றது. திருடுவது குற்றம். ஆனால், உயிரினங்களின் உணவுக்கான தேவை. இதையேதான் புலி மானை வேட்டையாடுவது நிகழ்கிறது. இது மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கு உள்ள வாழ்வியல் வேறுபாட்டைக் காட்டுகிறது.

ஏழாவதாக, பாட்டி வடை சுட்ட கதையில், வயதான காலத்தில், தன் உழைப்பையே நம்ப வேண்டும். அடுத்தவர்களின் தயவினை எதிர்பார்ப்பது நல்லதல்ல – இது குழந்தைகளுக்கு.

எட்டாவதாக, காகத்தை நீ அழகாய் இருக்கிறாய் என்று நரி சொல்ல அதையே நம்பிய காகம். இது தவறுதானே.

ஒன்பதாவதாக, யாராவது தேவையின்றி திறமையிருப்பதாக புகழ்ந்தால் யோசிக்க வேண்டும். இது குழந்தைகளுக்கு.

பத்தாவது, இந்த பாட்டி வடை சுட்ட கதை, இந்த காலத்து சந்ததிகளுக்கு தெரியாதென்பதால், கதையை மறக்காமல் சொல்லி, தலைமுறையை இடைவெளியை சமன்படுத்த முயற்சிப்பது குழந்தைகளுக்கு. “சீனு, உனக்கு கதை முடிஞ்சுதடா, இப்போ ஒன் தாத்தாவுக்கு சொல்றேன்” என ஆரம்பித்தான்.

திறனுள்ள ஒருவரை, மற்றோர் கம்பெனி, ஆசைவார்த்தைக் காட்டி கூட்டி போனால், அந்த கார்பரேட் கம்பெனிக்கு நட்டம்.

திறனுள்ள ஒருவரைக் கோட்டை விட்டதில், அந்த கம்பெனி நிர்வாகத்தில் விழிப்புணர்வு அவசியம் என்பதை உணர்த்துகிறது.

கணிணி போன்ற மின்னணுப் பொருட்களை தக்க பாதுகாப்பின்றி கவனமின்றி கையாண்டால் இந்நிலைதான் என்பதும் புரிகிறது.

ஒரு சிலரிடம், நீதான் இந்த கம்பெனியில ஸ்மார்ட், ஒன்னைய விட்டா இந்த வேலைய முடிக்க ஆளே இல்லே” என சும்மாவாச்சும் புகழ்ந்து, தன்வலையில் விழவைப்பது ஒரு ரகம். இப்படியும் சிலர் இருக்கிறார்கள் எங்கள் கம்பெனியில்.

நரி வடையைச் சாப்பிட்டது போல, தன் வேலையை பிறரிடம் நயமாக கொடுத்து விட்டு, அரட்டை அடிக்க கேன்டின் பக்கம் போய்விடுவது. அதாவது அடுத்தவர் உழைப்பில் வாழ்வது.

சில நிறுவனங்களில் தேவைக்கதிகமாக வேலை நேரத்தை அதிகப்படுத்தி, பணியாளர்களின் உழைப்பினை வாங்குவதும் ஒரு வகையில் திருட்டுதான். அதாவது உழைப்பு திருட்டு.

உங்கள் திறமைக்கு இந்த பதவி குறைச்சல், பெரிய பதவிக்கு லாயக்கான ஆள் நீங்க, நீங்க இந்த கம்பெனில”அப்படின்னு உசுப்பேத்தினா… உங்க வேலைக்கு உலை வைக்கிறாருன்னு அர்த்தம்.

கம்பெனியில் சீனியர்கள் பலர் இருப்பார்கள். அவர்களுக்கு கணிணி நுணுக்கம் தெரியாது. ஆனால், மற்ற வேலைகளில் சிறந்த அனுபவம் இருக்கும். அதைப் பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.

பெரிய கார்பரேட் நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிகிறார்கள். அவர்களிடம் புகழ்ச்சியாக பேசி அவர்களை வஞ்சிப்பதும் நடக்கத்தானே செய்கிறது. ஆதலால் எச்சரிக்கை உணர்வு அவசியம் என்பதை உணர்த்துகிறது.

எப்படி, வீர சிவாஜிக்கு அவரது தாயார் வீரதீர கதைகளைச் சொல்லி, வீரனாக வளர்த்தாரோ, அப்படி இந்த பாட்டி வடை சுட்ட கதையில் இவ்வளவு விஷயம் இருக்கிறது என்ற முடித்தான் இராஜேஷ்.

எனக்கு இவ்வளவு வயசாயிடுத்து, நான் இதைப்பத்தி யோசிக்கவில்லையே. பலே, பலே, கைக்குலுக்கி வழியனுப்பினார் ராமகோபாலன்.

நன்றி – வளர்தொழில் பத்திரிகை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *