காடுகளை பாதுகாப்போம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 9, 2019
பார்வையிட்டோர்: 8,235 
 

அது ஒரு அடர்ந்த காடு, அந்த காட்டிலே எல்லா மிருகங்களும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தன. புலி, சிங்கம் போன்றவைகள் கூட அதனதன் இடங்களில் வாழ்ந்து வந்து கொண்டிருந்தன.

கொஞ்ச நாட்களாக மனிதர்கள் கூட்டம் கூட்டமாக காட்டுக்குள் வருவதும்

போவதுமாக இருந்து கொண்டிருந்தனர். இதனால் அமைதியாக இருந்த காடு இவர்களின் வருகையால் நிம்மதி இழந்து தவித்துக்கொண்டிருந்தது.

இது இப்படி இருக்க ஒவ்வொரு விலங்குகள் கூட்டத்திலும், நிறைய விலங்குகள் காணாமல் போகத்தொடங்கின. மான் கூட்டத்திலும்,வரிக்குதிரை கூட்டத்திலும்,ஏன் யானைகள் கூட சத்தமில்லாமல் காணாமல் போயின. இந்த விலங்குகளின் எலும்புகள் கூட அந்த காட்டில் காணப்படவில்லை.

அங்குள்ள சாதுவான விலங்குகள், அனைத்தும் சிங்கத்தின் மீது சந்தேகம் கொண்டன.. சிங்கம்தான் அத்தனை விலங்குகளையும் தன்னுடைய குகைக்குள் கொண்டு போய் அடித்து சாபிட்டு விடுகின்றது என முடிவு செய்தன. இதனால் எப்படியாவது சிங்கத்தை விலங்குகளை கொல்வதை கை விட வேண்டும் என்று கேட்பதற்கு முடிவு செய்தன.ஆனால் எப்படி கேட்பது? புலியாரை பார்க்க சென்றன. புலியார் சிங்கத்தின் அளவுக்கு பலசாலிதான் என்றாலும் இரண்டும் ஒன்றை ஒன்று சந்தித்து கொள்வதோ,மோதிக்கொள்வதோ இல்லை, அவைகள் தனித்தனியாக தங்கள் பாதையில் சென்று கொண்டிருந்தன.

இப்படி பட்ட சூழ் நிலையில் புலியாரிடம் சென்ற மான் கூட்டங்கள் சிங்கம்

தங்கள் இனத்தவரை கொன்று குவித்துக்கொண்டுள்ளது, அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று கேட்டன. புலியார் அவர்களை பார்த்து இப்படி சொன்னது. சிங்கமும், சரி நானும் சரி, எங்கள் பசிக்கும் போது தவிர பிற உயிர்களை மறந்தும் கொல்ல மாட்டோம், இது வேறு யாரோ செய்யும் சதி, அநாவசியமாய் சிங்கத்தின் மீது சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று அறிவுரை சொன்னது. ஆனால் மான்களோ, மற்றவைகளோ அதை கேட்கும் மன நிலையில் இல்லை. ஆகவே சிங்கத்தை ஒழிக்க வேறு உபாயம் செய்யலாம் என்று முடிவு செய்து அங்கிருந்து சென்றன.

இது இப்படி இருக்க நரியார் சிங்கத்திடம் சென்று சாது விலங்குகள் யாவும் உம்மை ஒழிப்பதற்கு முயற்சிகள் செய்து கொண்டுள்ளன என்று கூறியது. சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை, நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்க நரியார் அவைகளின் இனங்கள், காட்டில் குறைந்து வருவதால் அவைகள் உங்களை சந்தேகப்படுகின்றன. சொன்னவுடன் சிங்கம் சற்று யோசித்து, இதற்கு நான் சீக்கிரம் தீர்வு காண்கிறேன் என்று மனதுக்குள் முடிவு செய்தது.

முதலில் நம் காட்டின் எல்லையை சுற்றி வர வேண்டும் என்று முடிவு செய்த சிங்கம் காட்டு எல்லை முழுவதும் சுற்றி வர ஆரம்பித்தது. சுற்றி வரும்பொழுது ஒரு சில இடங்களில் பெரிய பெரிய குழிகள் வெட்டப்பட்டிருப்பதையும்,அந்த குழிகளின் அருகில் வரி வரியாய் வண்டித்தடங்களும்இருந்தன. மனித வாடைகளும் தென்பட்டன.

சிங்கத்திற்கு உண்மை புரிய தொடங்கியது.இது மனிதர்களின் வேலை, இது தெரியாமல் என் மீது சந்தேகம் கொண்ட விலங்குகளை நினைத்து சிரித்து கொண்டது. மறு நாள் அனைத்து விலங்குகளையும் வர சொல்லி அவைகளை கூட்டிச்சென்று, அந்த இடங்களை கண்பித்தது.

இப்பொழுது என்ன செய்யலாம், மனிதர்களை இப்படியே விட்டால் எல்லா விலங்குகளையும் வேட்டையாடிக்கொண்டே இருப்பார்கள், அதே நேரத்தில் மனிதர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது.அவர்கள் நம்மை விட பலசாலிகள், இவ்வாறு பல யோசனைகளுடன் கலந்தாலோசித்துக்கொண்டிருந்தன.

நரியார் மெல்ல முன் வந்து நான் ஒரு யோசனை சொல்கிறேன் என்றது.

அனைத்து விலங்குகளும் நரியை பார்க்க, நம்முடைய சிங்கம், புலி, கரடி, இவைகள், காட்டு எல்லையை விட்டு ஊர் எல்லைக்குள் நுழைய வேண்டும். சாதாரண விலங்குகள் நாம் சென்றோமென்றால், மக்கள் நம்மை அடித்து கொன்று விடுவார்கள், சிங்கம்,புலி, கரடி போன்றவைகளுக்கு மனிதன் பயப்படுவான். மக்கள் காட்டுக்கு வேலி போட வேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்த ஆரம்பிப்பார்கள், அரசாங்கம் அப்படி செய்ய வரும்போது இந்த கூட்டம் ஓடிப்போகலாம்.

அனைத்து விலங்குகளும் ஆமோதிக்க, மறு நாள் காலையில் ஊர் தெற்கு எல்லையில், நடந்து கொண்டிருந்த பலர் சிங்கத்தை பார்த்து விழுந்தடித்து ஓடினர். அது போல, வடக்கு ஊர் எல்லையில் புலி ஒன்று நின்று கொண்டிருப்பதை பார்த்த மக்கள் பயந்தடித்து ஓட ஆரம்பித்தனர்.கிழக்கு எல்லையில் கரடியும், மேற்கு எல்லையில் யானைக்கூட்டமும் மக்களை பயமுறுத்த, மக்கள் அரசாங்கத்தை நோக்கி எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்க ஆரம்பித்து விட்டனர்.வன பாதுகாவலர்களும், விலங்குகள் நல ஆர்வலர்களும், மனிதன் காட்டுக்குள் சென்று விலங்குகளை கொல்வதால்தான் இந்த பிரச்சினை வருகிறது என்று அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினர்.

அரசாங்கம் காட்டு எல்லைகளை வரையறை செய்ய ஆரம்பித்தது. அப்பொழுதுதான் தெரிந்தது, இந்த வேட்டைக்கார்ர்கள் கூட்டம் பெரிய பெரிய குழிகள் வெட்டி விலங்குகளை பிடிப்பதை கண்டு பிடித்த்து. உடனே அவர்களை கைது செய்து எல்லைகளுக்கு பாதுகாப்பு போட்டு பலப்படுத்தியது.

இப்பொழுதெல்லாம் மனிதர்களும்,விலங்குகளும், அவரவர் எல்லைக்குள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *