கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 21, 2014
பார்வையிட்டோர்: 24,496 
 

வேதனையாக இருந்தது எனக்கு சவாரியும் ஒன்றும் கிடைக்கவில்லை. கதை புத்தகங்கள் ஆட்டோவிலேய வைத்திருப்பேன், அதை படிக்க கூட மனம் வரவில்லை, பயம்தான் அதிகமாக இருந்தது. இந்த பிரச்சனை எனக்கு தேவையில்லாதது. ஆனால் நியாயம் என்று ஒன்று இருக்கிறதே, இருந்தாலும் நான் அதிகமாக பேசிவிட்டேனோ என்று தோன்றுகிறது. அந்த இடத்தில் வேறு யாராக இருந்தாலும் அப்படித்தான் பேசியிருப்பார்கள். மேலும் என்னுடைய ஆட்டோவிற்குத்தான் சேதம் அதிகம். எப்படியும் தொட்டால் செலவு 1000 ரூபாயுக்கு மேல் ஆகும், மாத கடைசி வேறு, ஆட்டோ சவாரியும் குறைவாகத்தான் இருக்கும். பத்து நாள் தள்ளி ரிப்பேர் கொள்ளலாம், ஆனால் இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என்றுதான் புரியவில்லை. அடிபட்டவன் நான், ஆனால் அடித்தவன் மிரட்டிவிட்டு போகிறான். “இன்னைக்கு சாயங்காலதுக்குள்ள உன் கையை காலை எடுக்கல என் பேரு மாரி இல்ல” என்று என் சட்டையை பிடித்து உலுக்கிவிட்டு எதுவும் பேசாமல் ஆட்டோவை எடுத்துக்
கொண்டு சென்றுவிட்டான்.

காலையில் சவாரி ஒன்று ரயில்வே ஸ்டேசனில் நின்று கொண்டிருந்தபொழுது கிடைத்தது, கணவன், மனைவி கைக்குழந்தை என குடும்பமாய் வந்து லட்சுமி மில் வரை சவாரி கேட்டார்கள். நான் கேட்ட தொகைக்கு பேரம் பேசாமல் ஒத்துக்கொண்டதால் சந்தோசத்துடன் வண்டியை ஸ்டார்ட் செய்தேன். வண்டி அரை பர்லாங்கு தூரம் கடந்து இருக்கும், தீடீரென பக்கத்து சந்திலிருந்து வெளிவந்த ஆட்டோ ஒன்று என் ஆட்டோவின் வலது ஓரம் உரசி நின்றது. ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றுவிட்டேன், பின் சுதாரித்துக்கொண்டு கீழிறங்கி பார்த்தேன். என் ஆட்டோவின் முன்பாகம் சேதமாகி இருந்தது. கோபம் தலைக்கு மேல் வந்தது,

என் வண்டியின் மீது மோதி நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கி வந்தவனை பார்த்து கெட்ட வார்த்தைகளை சரமாரியாக வீசினேன், கூட்டம் வேறு கூட ஆரம்பித்து விட்டது. அவன் தீடீரென்று என் சட்டையை பிடித்து “இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள உன் கையை காலை எடுக்கலைன்னா என்பேரு மாரி இல்ல” என்று கூறிவிட்டு வேகமாக ஆட்டோவை எடுத்து சென்றுவிட்டான். நான் அதிர்ந்து நின்று விட்டேன்.

என் வண்டியில் வந்த குடும்பம் ‘அபபா வண்டி வருமா இலல இறங்கிக்கவா’ என்று கேட்டவுடன் சுதாரித்துக் கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு லட்சுமி மில்லில் அவர்களை இறக்கி விட்டு விட்டு ஸ்டேண்ட் வந்து ஆட்டோவை நிறுத்தினேன்.

பக்கத்து ஆட்டோக்காரர் என் வண்டியின் சேதத்தை பார்த்துவிட்டு என்ன ஆச்சு என்று கேட்டார். நான் நடந்ததை சொன்னேன், சொல்லும்போதே துக்கம் தொண்டையை அடைத்தது. ‘யார்? மாரியா அவன் பெரிய ரௌடி ஆச்சே,
நம்மாளுங்க அவன் கிட்ட சகவாசமே வெச்சுக்கற்தில்லெ’ என்றார். இது வேறு என் பயத்தை அதிகப்படுத்தியது. வண்டி அடிபட்ட துயரத்தை விட மாரியை பற்றிய பயமே என்னை பிடித்துக்கொண்டது. ஆட்டோ நண்பர்கள் நீ பயப்படாத நாங்க இருக்கிறோம் என்று சொன்னது வேறு பயத்தைத் தான் அதிகப்படுத்தியது.

பொதுவாகவே சண்டை சச்சரவு எதிலும் ஈடுபடாமல் ஏதோ ஆட்டோ ஓட்டி வாழ்க்கையை ஓட்டி வருகிறேன், வீட்டுக்காரியும் ஏதோ கம்பெனிக்கு வேலைக்கு செல்வதால் எங்கள் இரண்டு குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க முடிகிறது. இப்பொழுது மாரியின் பயத்தால் என் குடும்பம் என் கண் முனனால் நின்றது.

மதியம் மேல் சவாரி ஒன்று கிடைத்தது, கொண்டு போய் விட்டு வந்தேன், அதன் பின் சவாரி ஒன்றும் கிடைக்கவில்லை, மனது சவாரியை விட மாரியை நினைத்து பயந்து கொண்டிருந்தது, இலேசாக இருட்ட ஆரம்பித்த உடன் பக்கத்து ஆட்டோக்காரரிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டேன்.

வீட்டுக்கு அருகில் வந்த போது வீடு வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தது. மனதுக்குள் கலவரம் பிடித்துக்கொண்டது. “வீட்டுக்கு வந்து ஏதாவது ரகளை செய்து விட்டானோ”

வண்டியை வீட்டு சந்தில் கொண்டு போய் நிறுத்தினேன், பையனும், பெண்ணும் வண்டி சத்தம் கேட்டு மெதுவாக வெளியே வந்தார்கள், குழந்தைகள் பயந்தது போல் தென்பட்டார்கள், எங்கடா உங்கம்மா? பயத்தால் என் குரல் எனக்கே கேட்கவில்லை. பையன் அப்பா அம்மாவை இன்னும் காணலே”என்றான், எனக்கு பகீர் என்றது. எப்பொழுதும் ஆறுமணிக்குள் வீட்டுக்கு வந்துவிடுபவள் இன்று இதுவரை வரவில்லை என்றால் மனது பயத்தின் எல்லைக்கே சென்றுவிட்டது.

எதற்கும் மனைவியின் கம்பெனிக்கு போன் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது ஆட்டோ சத்தம் கேட்டது.

திரும்பி பார்த்த எனக்கு கையும் ஓடவில்லை,காலும் ஓடவில்லை ஆட்டோவை நிறுத்தி மாரி இறங்கினான் ஆட்டோவின் பின்னால் இருந்து இற்ங்குவது யார்? என் மனைவியாயிற்றே’ இவள் எப்படி இவன் வண்டியில்? எனக்கு குழப்பமாக இருந்தது.இருவரும் வீட்டுவாசல் வரை வந்தனர். என் மனைவி மாரியை பார்த்து இதுதான் எங்க வீடு, இதுதான் எங்க வீட்டுக்காரர், நீங்க உள்ளே வாங்கண்ணே” என்றாள்.

இல்லம்மா தங்கச்சி, இன்னொரு நாள் வாரேன், உன் உதவியை மறக்க மாட்டேன் என்றவனை என் மனைவி பார்த்து அண்ணே இவர் கூட ஆட்டோதான் ஓட்டுறாரு என்று அறிமுகப்படுத்தினாள். அவன் உடனே என் கையைப் பிடித்துக்கொண்டு தம்பி உன் சம்சாரம் மட்டும் இல்லயின்னா என் சம்சாரத்த உயிரோட பார்த்திருக்க முடியாது, ரோட்டுல அடிபட்டு பேச்சு மூச்சு இல்லாம கிடந்த என் சம்சாரத்த உன் சம்சாரம் எடுத்துட்டு போயி ஆஸ்பிடல்ல சேர்த்து ட்ரிட்மெண்ட் கொடுத்திருக்குது, இப்ப என் சம்சாரம் நல்லா இருக்குது, ரொம்ப நன்றிப்பா என்று என் கைகளை நெகிழ்வுடன் பிடித்துக்கொண்டான். எனக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை, மெல்லிய குரலில் நீங்க என்னை மன்னிக்கனும் காலையில ஆத்தித்துல அப்படி திட்டிட்டேன் என்றேன், அவன் ஒரு நிமிடம் யோசித்து எப்ப திட்டினீங்க? என்றவன் தீடீரென்று ஞாபகம் வந்தவனாக ஓ” காலையில உங்க வண்டியில தான் மோதினேனா? அடடா என்றவன் நேராக என் வண்டியை சென்று பார்த்தான். சே’ அநியாயமா அடிபட்டிருச்சு, என்று வருத்தத்துடன் நேராக என்னிடம் வந்து தன் கைப்பையில் கைவிட்டு நிறைய பணம் எடுத்து என் கையில் திணித்து தம்பி இதுல 750 ரூபாய்க்கு மேல இருக்கும் இத முதல்ல எடுத்து வண்டிய ரிப்பேருக்கு விடு ஆன செலவு பாக்கிய நான் அப்புறம் கொடுக்கிறேன் என்றவன் என்னை மன்னிச்சுரு தம்பி என் சம்சாரத்த ஆஸ்பத்திரியில சேர்த்துருக்காங்க அப்படீன்னதும் எனக்கு என்ன பண்றதுண்னே தெரியல்ல அதனாலதான் வேகமா வந்து உன்னை இடிச்சுட்டேன். நீ மனசுல எதயும் வச்சுக்காதே” என்று சொல்லிவிட்டு
என் பதிலை எதிர்பார்க்காமல் அவன் வண்டியை நோக்கி நடந்தான்.

நான் ஒரு நிமிடம் திகைத்து நின்றவன் பின் சுதாரித்துக் கொண்டு மாரி அண்னே என்று அவனருகில் ஓடி கையிலிருந்த பணத்தை அவன் சட்டைப்பையில் திணித்து அண்ணிய போயி முதல்ல பாருங்க, அவங்க தான் முக்கியம், வண்டிய அப்புறம் பார்த்துக்கலாம், நாளைக்கு நாங்க எல்லோரும் ஆசுபத்திருக்கு வர்றோம் என்று சொல்லிவிட்டு விரு விருவென வீட்டுக்கு வந்தேன், மனது சந்தோசம் கலந்த துக்கப்பட்டது, என் முகம் பார்த்து மனைவி,குழ்ந்தைகள் ஆச்சர்யப்பட்டனர்.

Print Friendly, PDF & Email

3 thoughts on “மனித நேயம்

  1. நன்றி ! தாங்கள் என்னுடைய கதையை வெளியிட்டதற்கு

    அன்புடன்
    ஸ்ரீ.தாமோதரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *