கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 6,452 
 

ஞாயிற்றுக்கிழமை

புது வீட்டுக்கு மாறியிருந்தார்கள், ரங்கநாதன், மாலினி தம்பதியினர். கூடவே, மாமனார், மாமியார், மைத்துனன் ராகவ்மற்றும் குழந்தை ப்ரியா.

கடந்த வெள்ளிக்கிழமைதான் கிருஹப்ரவேசம் முடிந்திருந்தது.

வீடு ஒரே களேபரமாக இருந்தது. நடுக் கூடத்தில் மொத்தமாக பெட், ஸோபா செட், பீரோ என்று பரப்பியிருந்தார்கள். இன்னமும் எல்லாம் போட்டது போட்டபடி இருந்தது. இதை ஒழுங்குபடுத்தவேண்டும் என்று நினைத்தபோது எப்போதுமுடியுமோ என்று மிகுந்த மலைப்பாக இருந்தது மாலினிக்கு.

நல்லவேளை, எல்லா வேலைகளையும் அவள் தலையில் கட்டிவிடாமல் வீட்டிலுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து வீட்டைஒழுங்குபடுத்தவேண்டும் என்று மாமியார் கட்டளையிட்டிருந்தார். எனக்கு இந்த வேலை வேண்டாம், எனக்கு இது தான்வேணும் என்று ஒவ்வொருவரும் கழண்டுகொள்ள, அவர்களை வழிக்குக் கொண்டுவர பலூன்களை பயன்படுத்திய உத்திமிகவும் புதுமையானது. வீட்டை முழுவதுமாக ஒழுங்குபடுத்தி முடிக்க இரவு பன்னிரண்டானது,

பெட்டில் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்த மாலினியைப் பார்த்து,

“நாளைக்கு வேணும்னா லீவ் போட்டுடேன் மாலு” என்றான் ரங்கநாதன்.

“இல்லைங்க நாளைக்கு போயே தீரணும், நாளைக்கு எங்க சி.இ.ஒ வறார். புது ப்ராஜக்ட்டுக்கு ப்ரசன்டேஷன் தரணும்இன்னும் நான் ஒண்ணுமே ப்ரிபேர் பண்ணலை” என்றாள் ஏக்கத்துடன்.

“புரியலை, கொஞ்சம் விளக்கமா சொல்லு?”

“கம்பெனில புதுசா கிடைச்சிருக்கிற ப்ராஜக்டை எப்படி டீமுக்கு பகிர்ந்தளிப்பதுன்றது தான் இப்ப பெரிய பிரச்சினை. ஒவ்வொருத்தரும் ‘எனக்கு கோடிங் வேண்டாம்’, எனக்கு டெஸ்டிங் வேண்டாம்’, எனக்கு டீபக்கிங் தான் வேண்டும் என்றுஏகப்பட்ட தேவைகள், விருப்பு / வெறுப்புகள் இத்தனைக்கும் நடுவில் இவர்களுக்கு அந்தந்த பணிகளை திறம்படபிரித்தளிப்பவருக்கே ‘டீம் லீடர்’ போஸ்ட்னு செயல் தலைவர் உத்தரவு.”

“எங்க டீம்ல மொத்தம் இருபது பேர் இருக்கோம். இதுல நாலுபேர் சீனியர் என்னையும் சேர்த்து, எங்களில் யாருடையசெயல் திட்டம் சரியா இருக்குன்னு பார்த்து, அவங்களை டீம் லீடரா செலெக்ட் பண்ணபோறார்”

“ஆமா நீ என்ன பண்ணப்போறே” என்றான் சுவாரசியத்துடன்.

“அதுவா, எதுவும் ப்ரிபேர் பண்ணலை, டைமும் இல்லை அதான் ஒண்ணும் புரியலை, உங்க
அம்மா நேத்து செஞ்ச அதேடெக்னிக் தான் டெமொன்ஸ்ட்ரேட் பண்ணலாம்னு இருக்கேன், ம்.. நாளைக்குத் தெரியும் பலூன் பறக்குமாவெடிக்குமான்னு” என்றாள்

“பலூன் டெக்னிக்கா, சேச்சே, இதுக்கு பேசாம நீ இந்த சிக்கலிலிருந்து ஒதுங்கிக்கிறதே பெட்டர்.

என்னைபொருத்தவரை நீவேலைக்குப் போறதே அதிகம், இதுல டீம் லீடரெல்லாம் தேவையே இல்லை, மனசைப் போட்டு அலட்டிக்காம தூங்கு” என்றவன் சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். வீடு மாற்றியது, கிருஹப்ரவேசம் என்று தொடர்ச்சியாகவேலை அதனால் வந்த அயர்ச்சி என்று நினைத்துக்கொண்டாள்.

கிடைத்த வாய்ப்பை யாராவது தவற விடுவாங்களா என்ன? என்றெண்ணிய மாலினிக்கு இரவு முழுதும் தூக்கம்வரவில்லை. விடிகாலை வந்த சிறிது நேர உறக்கத்திலும் கனவில் கலர் கலராக பலூன்கள் பறந்துகொண்டிருந்தன.

காலை எழுந்தது முதல் இதே நினைவுடன் அலுவலகத்துக்குக் கிளம்பினாள். வழியில் தன் தோழியிடம் இது பற்றி சிறிதுநேரம் விவாதித்தாள். கொஞ்சம் தெளிவு பிறந்தது. மிகுந்த சிந்தனையுடன் அலுவலகத்துக்குச் சென்றாள்.

தன் இருக்கையில் அமர்ந்திருந்தவளை,

“மேடம் சி.இ.ஒ சார் உங்க எல்லாரையும் கான்ஃபரன்ஸ் ரூமுக்கு வரச்சொல்றார்” என்றார் அலுவலக உதவியாளர்.

சிறிது நேரத்தில்..

மாலினி உட்பட ஐவரும் அந்த கான்ஃபரன்ஸ் அறையில் கூடியிருந்தார்கள்.

தலைமை செயல் அலுவலர் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ ஸ்டைலில் குறுந்தாடி வைத்திருந்தார். எ.சியிலும் முன் மண்டைலேசாக வியர்த்திருந்தது அறை வெளிச்சத்தில் அழகாக டாலத்தது.

அவர் வாசு, தினேஷ், விக்டர், மாலினி என்று ஒவ்வொருவரையாக இந்தத் திட்டத்தை எப்படிச் செயல்படுத்தப்போகிறார்கள்என்று விவரிக்கச்சொன்னார்.

மற்ற மூவரும் மிகுந்த சிரமத்துடனும், கவனத்துடனும் தயாரித்திருந்த காணொலி காட்சி மூலம் தங்கள் திட்டத்தைவிவரித்தார்கள். டீமில் இருந்த ஒவ்வொருவருக்கும் என்னென்ன தெரியும், அவர்கள் விருப்பம் என்ன என்று, வரைபடங்கள்மூலம் விளக்கினர். தினேஷ், வாசு, விக்டர் மூவரும் தங்களுடைய திட்டத்தை விவரித்து முடித்தபோது மாலினிக்குச்சற்றே பிரமிப்பாக இருந்தது.

ஒவ்வொன்றுமே ஒன்றை ஒன்று விஞ்சும் அளவுக்கு இருந்தது.

செயல் அலுவலர் கடைசியாக மாலினியைப் பார்த்து, ‘எஸ் மாலினி இப்ப உங்க டர்ன்” என்றார்.

“சார் நான் என்னுடைய செயல்திட்டத்தை ஒரு சின்ன கேம் மூலமா விளக்கலாமா?” என்று கேட்டாள்.

வாசு, “நோ ப்ரசன்டேஷன்?, ‘கேம் ஷோ’, ஷிட்” என்றான் ஏளனத்துடன்.

மற்ற இருவரும் வெடித்துச் சிரித்தார்கள், மேசையைத் தட்டினார்கள். செயல் அலுவலர் மிகுந்த சிரமப்பட்டு தனக்கு வந்தசிரிப்பை அடக்கிக்கொண்டு, மெல்லச் சுதாரித்து

“சாரி மாலினி அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். உங்க கருத்து எதுவானாலும் இந்த நிர்வாகம் அதுக்குமதிப்பளிக்கும். கடைசியா நிர்வாகத்தினுடைய முடிவு எதுவா இருந்தாலும் அதை நீங்க முழு மனதுடன் ஏத்துக்கணும். சொல்லுங்க உங்க ப்ளான் என்ன? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டார் மிகுந்த கவனத்துடன்.

“ஜஸ்ட் இருபது பலூன், ஒரு ஸ்கெச்ட்ச் பென்”. என்றாள் சற்றே ஏமாற்றத்துடன்.

அவளுக்கு இருபது பலூன்களும் ஒரு ஸ்கெட்ச் பேனாவும் அளிக்கப்பட்டது

காலியாக இருந்த ஒர் அறைக்குள் பலூன்களுடன் சென்ற மாலினி சிறிது நேரத்தில் வெளியே வந்தாள். அறையில்ஆங்காங்கே அத்தனை பலூன்களும் பறந்துகொண்டிருந்தன.

ஒவ்வொன்றிலும் ‘கோடிங்’, ‘டெஸ்டிங்’ என்று பலவாறாகஎழுதப்பட்டிருந்தது.

மாலினி “சார் நான் தனே டீம் லீடர், இந்த டாஸ்கை நான் எடுத்துக்கொள்ளட்டுமா?” என்று தனக்கு மிகவும் எளிதானடாஸ்கைக் கொண்ட பலூனை எடுத்துக்கொண்டாள்.

“இட்ஸ் ஒன்லி கேம் நோ? ஒகே” என்றார் தோள்களை குலுக்கி.

மாலினி தொண்டையை செருமிக்கொண்டு அங்கிருந்த குழு உறுப்பினர்களைப் பார்த்து, “உங்களுக்குச் சரியாக இரண்டுநிமிடம் அவகாசம், அதற்குள் நீங்கள் அந்த அறைக்குச் சென்று நீங்கள் எதிர்பார்த்த (அ) உங்களுக்கு வேண்டிய டாஸ்கைக்கொண்ட பலுனை கொண்டுவர வேண்டும், யுவர் டைம் ஸ்டார்ட்ச் நவ்” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்துகட்டளையிட்டாள்.

விடுவிடுவென அவர்கள் அனைவரும் உள்ளே சென்றனர். இரண்டு நிமிட நேரம் சென்றதும் வெளியே வந்தவர்களில்ஒன்றிருவரைத் தவிர யார் கையிலும் பலூனில்லை.

வியப்புடன் அவர்களைப் பார்த்த செயல் அலுவலர் பின்பு மாலினியை நோக்கி,

“வாட் இஸ் திஸ் மாலினி?” என்றார்.

அவள் மிகுந்த பொறுமையுடன், “இல்லை சார், கேம் இன்னமும் முடியலை” என்றவள், திரும்பவும் அவர்களைப் பார்த்து, “இப்ப ஒரு சின்ன சேஞ்ச் இந்த முறை நீங்கள் உள்ளே சென்றதும் ஏதேனும் ஒரு பலூனை எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு அது தேவையில்லையெனில் அது யாருக்குத் தேவையோ அவரிடம் மாற்றிக்கொள்ளுங்கள், அதற்குமேலும் ஒரு மூன்று நிமிடம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்” என்றாள்.

இந்த முறை பொறுமையுடன் உள்ளே சென்றவர்கள் கையில் கிடைத்த ஏதொ ஒரு பலூனை தேவையானவர்களுக்குகொடுத்து, அவர்களுக்குத் தேவையானதை மற்றவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். சரியாக ஐந்து நிமிடம் சென்றபோதுஅனைவர் கைகளிலும் பலூன் இருந்தது.

வாசு, தினேஷ், விக்டர் மட்டும் சுரத்தில்லாமல் கையில் பலூனுடன் நின்றுகொண்டிருந்தனர்.

தினேஷுக்கு விக்டரிடமிருந்த டாஸ்க் உண்மையில் பிடித்திருந்தது, அதேபோல் விக்டருக்கும், இருப்பினும் மாலினிவெற்றியடைவதில் அவர்களுக்கு விருப்பமில்லை, எனவே பலூனை மாற்றிக்கொள்ளாமல் இருந்தனர்,

ஒருவிதத்தில் மாலினி அவர்களைச் சரியாக பழிவாங்கிவிட்டதாகவே எண்ணினர்.

“குட், இஸ் தட் ஒவர்” என்ற செயல் அலுவலரிடம்,

‘இல்லை சார் கேம் இன்னும் முடியலை, உண்மையில சொல்லணும்னா கேம் மூலமா ‘டீம் வொர்க்’கொட முக்கியத்துவம்எல்லாருக்கும் புரிந்திருக்கும்’ என்ற புன்னகையுடன், அதிருப்தியுடன் இருந்த மூவரையும் பார்த்தாள்.

“இப்ப உங்கபிரச்சினை என்ன?” என்றாள் கனிவான முகத்துடன்.

அவர்கள் மவுனமாகச் சற்றே கோபத்துடன் அவளைப் வெறித்துப் பார்த்தனர்.

“கூல், உங்களுக்கு வேண்டிய டாஸ்க் கிடைக்கலை அதானே?” என்றாள்

“ம்” என்றனர் கோரசாக.

“சரி இப்ப உங்க மூணு பேருக்குள்ளேயே டாஸ்கையாரவது மாத்திக்க விரும்பறிங்களா? கடைசி சான்ஸ், அனுமதிக்கட்டுமா?” என்றாள் மிகுந்த எதிர்பார்ப்புடன் செயல் அலுவலரைப் பார்த்து.

“யெஸ் கொ அஹெட்” என்றார் அவர் ஆமோதிப்புடன்

இப்போது வேறு வழியில்லை என்று உணர்ந்த தினேஷும், விக்டரும் தங்களிடம் இருந்த பலூன்களைமாற்றிக்கொண்டனர்.

கடைசியாக ‘வாசு’ ஒரே ஒரு அதிருப்தியாளர், ‘ஷிட்’ என்று ஆர்ப்பரித்தவன்.

‘அடுத்து என்ன?’ என்பது போல் பார்த்துக்கொண்டிருந்தார் செயல் அலுவலர்.

கடைசியாக மாலினி வாசுவைப் பார்த்து “எங்கிட்ட இருக்கிற பலூன் (மிகவும் எளிதான டாஸ்கைக் கொண்ட பலூனைக்காட்டி) வேண்டுமா?, எடுத்துக்கறீங்களா?” என்றாள் மிகுந்த அக்கறையுடன்.

“என்ன?, என்றான் கட்டுப்படுத்தமுடியாத ஆச்சரியத்துடன் செயல் அலுவலரைப் பார்த்து.

நடப்பதை ஒரு அதிசயம் போல் பார்த்துக்கொண்டிருந்தவர், மாலினையைப் பார்த்து,

“வெல்டன், கோ அஹெட்” என்றார்.

“ப்ளீஸ்” என்று அவரிடமிருந்த பலூனை பெற்றுக்கொண்டு, தன்னிடமிருந்த பலுனை அவனிடம் தந்தாள்.

“சார் இப்ப இந்த ப்ராஜக்ட் ஒழுங்கா முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு,” என்றாள் ஆணித்தரமாக.

மெல்ல மெல்ல அனைவர் முகத்திலும் திருப்தியும், மகிழ்ச்சியும் திரும்பியது. மற்ற மூவரும் செயல் வடிவத்தைத்காணொலி காட்சியில் காட்டினார்கள், மாலினி அதைச் செயல்படுத்தியே காட்டியிருந்தாள்,

ஒரு குழுவை நிர்வகிப்பதற்கான தலைமைப் பண்பு அவளிடம் இருப்பதை உணர்ந்த செயல் அலுவலர் அவரையறியாமல்எழுந்து நின்று கை தட்டத் தொடங்கினார். பின்பு ஒவ்வொருவராய் அவரைத் தொடர்ந்து அறை முழுதும் எதிரொலித்துகரவொலி அடங்க வெகு நேரமாகியது.

சரியாக மாலினியின் பையிலிருந்து மொபைல் போன் ஒலிக்க எடுத்துப் பார்த்தவள் அதில் ‘ரங்கநாதன்’ என்றிருக்கக்காதில் வைத்து “சொல்லுங்க?” என்றாள்.

“பலூன் என்னாச்சு, பறந்ததா? வெடிச்சுதா?” என்றான் ஆவலுடன்,

“அதுவா இப்ப வானத்தில பறந்துட்டிருக்கு!’ என்றாள் உற்சாகத்துடன். பலூனைப்போல் அவள் மனதும் வானில்பறந்துகொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *