கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: August 24, 2021
பார்வையிட்டோர்: 11,794 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மாடா! டேய் …. எழும்படா!”

“நான் கத்துறான் கத்துறன் அவன் விரும கட்டை மாதிரிக் கிடக்கிறான்…எழும்பன்ரா எருமை!”

“மூதேவியாருக்கு நித்திரையெண்டால் போதும்!…மாடுமாதிரிக் கிடக்குது…”

“ராசாவுக்கு நான் கத்துறது கேக்கயில்லையோ?…பொறும் வாறன்!”

அம்மாவினுடைய அதட்டலில் ‘மாடு’ இன்னும் எழும்பவில்லை; நான் எழும்பிவிட்டேன். மேற்கொண்டு நிலவிய மௌனம் ‘அம்மா’ அடுத்த நடவடிக்கையில் இறங்கப் போகின்றா என்பதை உணர்த்தியது.

வெளியே கடுமையான பனி பெய்கிறது. இன்னும் இருள் அகலாத அதிகாலை. போர்வையை இழுத்து உடலை மூடிக்கொண்டு சொகுசைத் தேடுகிறேன். வெளியே, சீமெந்துத் தரையில் சீற்றுப் பழசொன்றைப் போட்டுக் குறண்டிக்கொண்டிருக்கும் சுந்தரத்தினுடைய நிலை பரிதாபமாக இருந்தது.

‘அம்மா’ வினால் மாடு என அழைக்கப்பட்டவன் சுந்தரம் தான். இந்த வீட்டு வேலைக்காரன். பத்தோ பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க பொடியன். அம்மா இந்த வீட்டு அல்லிராணி.

நான் உத்தியோக நிமித்தம் கொழும்புக்கு வந்தவன். என்னைப்போல இன்னும் ஏழோ எட்டுப் பேர் இந்த வீட்டில் வாசம் செய்கின்றோம்.கொழும்புக்கு வேலையாகி வந்த புதிதில், அறையொன்று தேடி அலைந்தபொழுது; மிஸ்ஸிஸ் அருள் நாயகம் ‘ வீட்டில் இடம் இருக்கிறது என இங்கே கொண்டுவந்து சேர்த்துவிட்டான் நண்பனொருவன் சந்தேகப் பட வேண்டாம்; மிஸ்டர் அருள் நாயகம் தான் அம்மாவினுடைய ‘அவர்’ – வீட்டிலே குடியிருக்கும் எங்களால் ‘பெட்டைக் கோழி ‘ என செல்லமாகக் கதைக்கப்படும் பேறு பெற்றவர்.

அவர் இவ்வீட்டில் மிஸ்டர்’ ஆக இருந்தாலும் எவராலும் கதைக்கப்படும் பொழுது ‘மிஸ்ஸிஸ் அருள் நாயகம் வீடு’ எனத் தான் குறிப்பிடப்படும்! அது; இந்த வீட்டு அல்லிராணி இராச்சியத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் ! அவரும் முன்பு உத்தியோக நிமித்தம் கொழும்புக்கு வந்தவர்தானாம். ராணி அம்மா அப்பொழுது குமரியாக இருந்தபொழுது, அவவுக்கும் இவருக்கும் ஏதோ ஒரு சின்னத் தொடர்பாம் ! பிறகு பார்த்தால் விஷயம் முத்திப்போச்சுது! இவரும் நல்ல உத்தியோகம் தானே என்று ‘புடிச்சுக் கட்டிவைச்சாச்சு!’ ராணி அம்மா அவையளும் யாழ்ப்பாணத்து ஆக்கள் தான். அந்தக் காலத்திலேயே கொழும்புக்கு வந்து, ‘செற்றில்ட்டௌன்’. இது, அவர்களுடைய வீடு தான். ஐயாவுக்கு அதைக் கண்ணிலை காட்டி ‘அமத்திப்’ போட்டினம்.

வீடு, முன்னுக்குப் பார்த்தால் வடிவாய்த்தான் இருக் கும். அழகான வாசல், பொலிஷ் பண்ணிய சீமெந்து. பூச்சாடிகள், பூக்கள், படங்கள், பறவைகள், ஃப்பிரிஜ். வானொலி இப்படி எத்தனையோ அலங்காரப் பொருட்கள் (கவனிக்கவும்; குளிர்பெட்டியும் வானொ பியும் கூட ராணி அம்மாவைப் பொறுத் தவரை அலங்காரப் பொருட்கள் தான்!)

வாசற் கதவில் ‘கடி நாய்கள் கவனம்’ என அழகாக எழுதப்பட்ட ஒரு பலகை தொங்குகிறது. அது கூட: அலங்காரத்திற்காகத்தான்! உள்ளே வந்தாற்தான் ‘மிஸ்ஸிஸ் அருள் நாயகம்’ என்ற ஒரே ஒரு கடிநாய்தான் இருக்கின்ற உண்மை தெரியும். அவ, கடிநாயாக இருந்தாலும், எங்களைப் பொறுத்த வரையில் (அதாவது, வீட்டில் வாடகைக்கு இருக்கின்றவர்களைப் பொறுத்தவரையில்) பச்சைத்தண்ணி! ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு ஒழுகும். அது தான் எங்களை மடக்கி வைத்திருக்கின்ற மந்திரமும் கூட! கொழும்பிலே அறை தேடி எடப்பது குதிரைக் கொம்புதானென்றாலும்…இப்படி, வீட்டுக் கோடியினுள்ளே அறைகளாகப் புனருத்தாரணம் செய்யப்பட்ட கொட்டில்களினுள்ளும் கோழிக்கூடுகளினுள்ளும் நாங்கள் அடைந்து கிடக்கின்ற விசித்திரத்துக்கும் ஏதாவது காரணம் வேண்டுமே!

‘மாடு! எழும்பு…எருமை மாதிரி விடிய விடியக் கிடக்காமல்…” என்றவாறே பாத்திரத்திலிருந்து தண்ணீரை ஊற்றுகின்ற சத்தம் கேட்கிறது. இதைத் தொடர்ந்து;

“ஐயோ…அம்மா…” என்ற சுந்தரத்தினுடைய அலறல், அவன் இந்த அம்மாவையா, தன்னுடைய சொந்த அம்மாவையா அழைக்கின்றான் என்பது கடவுளுக்குத் தான் வெளிக்சம். பகல் முழுவதும் அயராது உழைக்கின்ற அலுப்புத்தான், அவன் இந்தக் கடும் குளிரிலும் சீமெந்துத் தரையில் மாடு மாதிரி உறங்குவதன் இரகசியம்! அப்படி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பவனின் முகத்தில் சடுதியாக குளிர்ந்த நீரையும் ஊற்றினால் எப்படி இருக்கும்? இது வழக்கமான சங்கதிதான்.

“போ! மாடு, தேத்தண்ணிக்குத் தண்ணியை வை..” ராணி அம்மாவினுடைய அதட்டல் தான்.

சுந்தரம் பாத்திரங்கள் கழுவத் தொடங்கிவிட்டான். குளிர் தாங்கமுடியாமற் போலும்….பாத்திரங்கள் சிணுங்குகின்றன.

அவன் இவ்வீட்டிற்குத் ‘தொட்டாட்டு’ வேலைகள் செய்வதற்கு என்றுதான் எடுக்கப்பட்டவனாம். ஆனால் பாவம்; அவனுடைய வயதுக்கு, அவனுடைய சக்திக்கும் மீறியே வேலை வாங்கப்படுகிறான். அவன் ராணி அம்மாவுக்காக மாடாகத்தான் உழைக்கின்றான்.

“ராணி அம்மா அசையமாட்டா அலுவல் செய்தால் அவவுக்கு முறிஞ்சுபோடும்! பாவம்!…இந்தப் பொடியனைப் போட்டு என்ன பாடுபடுத்துறாள்….” இப்படி எனது சக அறைவாசிகள் கதைத்துக்கொள்வார்கள். ராணியிடம் கதைக்கத் துணிவு வராது.

“ஐயா!..கண்ணன் ஐயா!”

எனது அறைக்கதவு தட்டப்படுகிறது; சுந்தரம் தேநீருடன் வந்திருப்பான்.

“ஆரது?…சுந்தரமே?….வா ராசா!…”

நான் அவனுடன் கதைக்கும் பொழுதுகளில் அவனுக்கு இனிக்கக்கூடியதாக அன்பைத் தாராளமாகவே கலந்து விடுவேன். பாவம்; எங்களுடன் கதைக்கும் போதாயினும் ஆறுதலடையட்டுமே என்ற எண்ணத்தில்.

“சுந்தரம்!..நீ தேத்தண்ணி குடிச்சிட்டியே?”

நான் மிகவும் கரிசனையோடு கேட்க, அவன் அதில் வெட்கமடைகிறான். இப்படித்தான்; அவன் மேற் கரிசனைப்பட்டு அக்கறையோடு நாங்கள் ஏதாவது கேட்டால், பதிலளிக்க முடியாமல் வெட்கப்படுவான் – ஏதோ கேலிக்குட்படுபவனைப் போல! தன்னிலும் கரிசனைப்படக்கூடிய ‘ஐயாக்கள்’ இருக்கின்றார்களே என்ற அதிசயம் போலும்.

தேநீரை அருந்தி விட்டு கோப்பையைக் கொடுக்கும் பொழுது அவனது சொக்கிலே தட்டி எனது நன்றியைச் செலுத்துகிறேன். அவன் ஏதோ தவறுக்குத் தான் உடந்தையாகுபவனைப் போல வெருண்டு கொண்டு ஓடுகிறான்.

வேலைக்குப் போகின்றவர்களுக்கு சாப்பாடு போடுவதற்காக சுந்தரம் ஒற்றைக்காலில் நின்று சுழலத் தொடங்கிவிட்டான். இதற்குள்ளே…தவறுதலாக, தேனீர்ப்பாத்திரமொன்றைப் போட்டு உடைத்திருக்க வேண்டும்; ராணி அம்மாவினுடைய பத்திரகாளித்தனம் தொடங்கிவிட்டது. எனக்கு இதைப்பார்க்கச் சகிக்கவில்லை:

“ஏன் இப்படி அடிக்கிறீங்கள்…பாவம்” என்கிறேன்.

“பாவமோ?…இவன்ரை திமிரைப் பாருங்கோவன்!…என்ன குறை வைச்சனான்?…விழுங்கக் குடுக்கிறதிலை குறைவே?…சாப்பிட வழியில்லாமல் கிடந்த நாய்க்கு…நேரத்துக்கு நேரம் விழுங்கக் குடுத்தால்…கொழுப்பு வைக்கும்தானே…”

‘ஐயோ!…அம்மா…அடிக்காதீங்கம்மா…”

“சரி, சரி! இனி விடுங்கோ…போதும்!”

“இவனுக்கு நாரிமுறியக் குடுக்காட்டித் திருந்தமாட்டான்…இப்பிடித்தான், ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்டைப் போட்டு உடைக்குது, மாடு!”

ஒரு பாத்திரம் தவறுதலாக் விழுந்து உடைந்ததற்கு இவ்வளவு தண்டனையா? பக்குவமாகச் சொல்லித் திருத்தலாமே; ‘உங்கடை பிள்ளையும் தவறி எதையாவது உடைச்சால் இப்பிடித்தான் அடிப்பியளோ?’ என்று கேட்கவேண்டும் போலிருக்கிறது. கேட்கவில்லை. கேட்டால் ராணி அம்மாவினுடைய பத்திரகாளித்தனம் என்மேற் திரும்பிவிடுமோ என்ற பயம்!

“ஐயோ! அம்மா…அடிக்காதீங்க….நான் போறேங்க…அடிக்காதீங்கம்மா, நான் போறேங்க!…”

“என்னடா? போகப்போறியோ?….இஞ்சை திண்டு திண்டு கொழுப்பு வைச்சிட்டுதல்லே?…இனி உப்பிடித்தான் சொல்லுவாய்!…மெய்யடா? போகப்போறியே?…”

“டேய் மாடா. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லிப் போட்டு அழடா!….போகப் போறியே?”

சுந்தரம் அடிவிழுந்த இடங்களை உரசி உரசி அழுது கொண்டிருக்கிறான்.

உவன் சரியான சாலக்காறன் பாருங்கோ!….அடிக் கயிக்கை போகப்போறன், போகப்போறன் எண்டு கத்துவன்…பேந்து கேட்டால் மாட்டனெண்டிடுவன்! அங்கை போனால்…தின்னக் குடிக்க வழியில்லாமல் கிடந்து சாகவேணுமெல்லே!…”

“உவன்ரை தமையனொருத்தன் அழகப்பன் எண்டு பேர்….முந்தி இவற்றை தேப்பனோடை நிண்டவன்…இப்ப நல்லாயிருக்கிறான்…இவனையும் அவன் தான் கொண்டு வந்து சேத்து விட்டவன்…”

“இக்கணம் அவனுக்குச் சொன்னமெண்டால் தோலை உரிச்செடுத்துப் போடுவன்…உப்பிடித்தான்….இவர் முந்தியு மொருக்கால் …போகப்போறனெண்டு..ஓடப் பார்த்தவர்…பிறகு அவன் தமையனைக் கூப்பிட்டுச் சொன்னம்; நல்ல வடிவாய்க் குடுத்திட்டுத்தான் போனவன். அவன்ரை ஒவ்வொரு உதைக்கும் என்னமாதிரிச் சுருண்டு கொண்டு விழுந்தவன் தெரியுமே…நாங்கள் பாவத்தைப் பாத்து எப்பன் தட்டினவுடனை….அவருக்குக் கோபம் வந்திடுது…”

“மெய்யேடா? சொல்லன், போகப்போறியே?…. அப்பிடியெண்டால் சொல்லு கொண்ணனைக் கூப்பிடுவம்.”

சுந்தரத்தினுடைய அழுகையின் சுருதி குறையத் தொடங்யது.

சொல்லன்ரா கெதியாய் !…. இஞ்சை உன்ரை வாயைப் பாத்துக்கொண்டு நிக்க எங்களுக்கு நேரமில்லை…!”

“அம்மா! அடியாதையுங்க, நான் போகயில்லீங் கம்மா”

“பாத்தீங்களே!…தமையனுக்கெண்டால் சரியான பயம். அவன் கேள்விப்பட்டால், கொண்டுபோடுவன்…”

“போ! மூதேவி…போய் அலுவலைப் பார்!” சுந்தரம் அழுதுகொண்டே குசினிக்குள் செல்கிறான்.

சுந்தரத்தினுடைய அண்ணனை நினைக்க எனக்கு எரிச்சல் மேலிடுகிறது. மடையன், அவனும் இந்தப் பாலடைக்குப் போட்டு உதைத்திருக்கிறானே! ராணி அம்மா இல்லாததையும் பொல் லாததையும்’ சொல்லியிருப்பா. அவவுடைய சுபாவமே அது தான், இவன் தம்பி …. ஒரு அலுவலும் செய்யிறானில்லை….. எந்த நேரமும் வீட்டை போகப்போறன் வீட்டை போகப்போறன் எண்டுதான் நிக்கிறான்’ என்றால், அது போதுமே அவனுக்கு. வீட்டிற் சாப்பாட்டுக்கு வழியில்லை. இங்கு இதாவது கிடைப்பது கடவுள் புண்ணியம்! இதையும் விட்டால் எங்கே போவது என்ற ஆத்திரத்தில் உதைத்திருப்பான்.

சுந்தரத்தினுடைய பலவீனம் இது தான். அடியிலும் உதையிலும் வதைப்பட்டாலும், பின்னர் சாப்பாட்டின் தேவை வரும்பொழுது அந்த வேதனைகளை மறந்து விடுகிறான் போலும் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தையெல்லாம் அவன் சகித்துக் கொள்வதைப் பார்த்தால் முன்னர் பசியின் கொடுமையை எவ்வ ளவு உணர்ந்திருப்பான் என்று தோன்றியது.

ராணி அம்மாவினுடைய நாணயக்கயிறும் அதுதான். மாடு மாதிரி வேலை வாங்குவா. விருப்பம் போல அடிப்பா. உதைப்பா. சாப்பாட்டை அளந்து போடுவா. சாப்பாட்டைக் குறைத்துக் கூட்டி (இதிலே , ‘கூட’ என்பது அவனுடைய வயிற்றுக்குப் போதுமான அளவைக் குறிக்கிறது) தனது எண்ணத்துக்கு ஆடவைப்பா. அதில் அவன் சுழலுவான். சொன்னபடி நிற்பான்.

மாடு வண்டில் இழுக்கிறது தான். எவ்வளவோ பாரத்தை அது; எசமான் சாப்பாடு போடுகின்ற நன்றியுணர்வுடனும், கடமையுணர்வுடனும் இழுத்தாலும் ஏனோ வண்டிக்காரன் ஏதோ நியதிக்குட்பட்டவன் போல அதை அடிக்கொருதரம் அடித்து இம்சைப் படுத்துகிறான்? வண்டி இழுக்கின்ற மாட்டினுடைய கட்டுப்பாடும் அவனுடைய கையிற்தான். அதன் மூக்கினூடு துளையிட்டுச் செலுத்தப்பட்ட கயிறு (நாணயக்கயிறு) அவன் கையிலிருக்கும். அதைச் சுண்டி இழுப்பதன் மூலமும், அசைப் பதன் மூலமும் மாடு போக வேண்டிய திசையையும், நிற்க வேண்டிய இடத்தையும் அவனே நிர்ணயிப்பான்.

சுந்தரத்தினுடைய நாணயக்கயிறு ராணி அம்மாவினுடைய கையிலிருக்கிறது. காரணமற்ற அடியிலும் உதையிலும் இம்சைப்பட்டுப் போகவேண்டும் என் முனைபவன், பின்னர் சாப்பாட்டு மந்திரத்தில் அடங்கி விடுகிறான்.

இப்படிச் சிந்தித்தவாறே இருந்தபொழுது ‘அங்கிள்’ என்றவாறே ஓடிவந்து பாய்ந்தான் ராணி அம்மாவினுடைய புத்திர பாக்கியம். பாலர் பாடசாலைக்குப் போகின்ற வயதுச் சிறுவன்தான். அம்மாவினுடைய செல்லக் குஞ்சு.

“சும்மா போ தம்பி அங்காலை….மனிசருக்குக் கரைச்சல் தராமல்…” என்கிறேன், எரிச்சலுடன். பெடியன் ‘இங்கிலிசில்’ சிணுங்கிக்கொண்டு போகிறான். இதைப்பார்த்துக்கொண்டு நின்ற ராணி அம்மாவுக்கு ‘மன்னை’யாகப் போய் விட்டது. பெடியனுடைய இங்கிலீஷ் பெயரைச்சொல்லி, அவனோடு அன்போடு கதைக்கவில்லை என்ற கோபம் தான். அவனுடைய பெயரைச் சொன்னால் எனக்கு நாக்கு கொழுவிவிடும் என்ற பயம்!

இவன் கொழும்பிலே ஒரு பாலர் பாடசாலையிற் படிக் கின்றான். சில தினங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது…இவனுடைய ‘ரீச்சர்’ பாடசாலையில் எதற்காகவோ அடித்துப்போட்டாவாம். பெடியன் சரியான குழப்படி தான். அம்மாவுக்குத் தாங்கவில்லை. ‘கொடுக்கிழுத்துக் கட்டிக் கொண்டு’ கிளம்பிவிட்டா.

“பிள்ளையள் பிழைவிட்டால் ரீச்சர் அடிக்கிறதுதானே” எனச் சமாதானம் சொல்லிப்பார்த்தேன்.

“பிள்ளையளை அங்கை படிப்பிக்க அனுப்புறனாங்களோ….அடிச்சுக்கொல்ல அனுப்புறனாங்களோ…அவளவையள் நனச்ச மாதிரி அடிச்சுக் கொல்லுறத்துக்கே இஞ்சை பெத்துப் போட்டிருக்கிறம்!…. அவளவை அங்கை படிப்பிக்க வாறாளவையோ…ஆடுறதுக்கு வாறாளவையோ…” என சம்பந்தமில்லாக நியாயமெல்லாம் வளர்த்துக் கொண்டு போனா. பின்னர் ஏதோ சாதனை செய்து விட்டதுபோல “நாச்சியாருக்கு நல்ல வடிவாய்க் குடுத்திருக்கிறான்…எனி அடங்கிக்கொண்டு இருப்பா” என்றவாறே திரும்பி வந்தா.

‘தனக்கொரு நீதி பிறர்க்கொரு நியாயம் என இவர்களால் எப்படி இருக்க முடிகிறது? எல்லோரையும் போலவே, இரத்தமும், எலும்பும், தசையும் உணர்ச்சிகளும் சேர்ந்து ஒரு தாயின் வயிற்றில் உருவாகிப்பிறந்து இன்னொரு குழந்தைக்குத் தாயாகின்றவர்கள் தானே இவர்களும்?…அல்லது தாங்களெல்லாம் வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் என்ற நினைவோ?’ என எரிச்சலுடன் எண்ணியவாறே நான் அலுவல்களில் ஈடுபடுகிறேன்.

இனி வேலைக்குப் போகவேண்டும், ஆயத்தமாகிக் கொண்டு ‘டைனிங் ரேபிளில்’ அமர்கிறேன்.

“டேய்! கெதியிலை சாப்பாட்டை வையன்ரா!, ஐயா அவையள் வேலைக்குப் போகவேணும்,…” ராணி அம்மாவுடைய அதட்டல் தான். சுந்தரம் சாப்பாட்டு மேசைக்கு ஓடி வருகிறான்.

“அங்கை பாருங்கோ…அவன்ரை வண்டியை…ராத்திரிச் சாப்பிட்டது இன்னும் செமிக்கயில்லை…அதுதான் உந்தத்திமிர்…”

அவனுடைய வயிற்றின் பருமனைக் குறிப்பிட்டு ராணி அம்மா கதைக்க, அதில் அவன் மாத்திரமல்ல…நானுமே சங்கடப்படுகிறேன்.

“ஏன்ரா மறைக்கிறாய்?…இஞ்சாலை திரும்பன்ரா எருமை!…வயித்தை எக்கிக்கொண்டு நில்லாமல் வடிவாய் நில்லடா…”

அவன் என் பக்கம் தனது வயிறு தெரியக்கூடியதாகத் திரும்பி, ஏதோ குற்றம் செய்துவிட்டவனைப்போலக் கூனிக் குறுகுகிறான். சாதாரணமாகவே அவனுடைய வயிறு சற்றுப் பருமனான தோற்றமுடையது தான். ராணி அம்மா அடிக்கடி, “அங்கை பாருங்கோ வண்டியை!…மூக்கு முட்ட விழுங்கிப் போட்டு நிக்கிறான்” என எங்களுக்குச் சொல்லிக்கொள்வது வழக்கம் – தான் அவனுக்கு, குறைவின்றி சாப்பாடு போடுவ தாகக் காட்டிக்கொள்வதற்குப் போலும்! ஆனால்…இங்கு அறைகளில் இருக்கின்ற நாங்கள் அனைவரும் தாங்களும் சாப்பிட்ட பின்னரே, மிகுதியில் சுந்தரத்துக்குச் சாப்பாடு போடுவதை நான் எத்தனையோமுறை கவனித்திருக்கிறேன். அதையும் அவன், உடனே சாப்பிடுவது தண்டனைக்குரிய குற்றம்! அவனுடைய பாத்திரத்தில் ராணி அம்மா அளந்து விடுவா; அதனை ஒரு புறத்தில் வைத்துவிட்டு, மற்றவர்கள் சாப்பிட்ட பாத்திரங்களையெல்லாம் கழுவி ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டுப் பின்னர்தான் சாப்பிடலாம்.

நான் வேலைக்குச் சென்று விட்டு, மதியச் சாப்பாட்டிற்காகத் திரும்பிய பொழுதும் அமர்க்களம் ஓயவில்லை. இப்பொழுது அம்மாவுடன் ஐயாவும் சேர்ந்து கொண்டுவிட்டார்.

“ஐயோ!..அடியாதைங்க சாமீ!”

“றாஸ்க்கல்!…கொண்டு போடுவன், வேலையைச் செய்யடா எழும்பி!…”

சுந்தரம் விறாந்தையிற் கிடந்து உருண்டவாறே அழுகின்றான். நான் வந்ததை ராணி அம்மா கண்டதும் நியாயம் கூறத் தொடங்குகின்றா .

“இல்லைப் பாருங்கோ….அவன் இண்டைக்குரு குணம் கொண்டு நிக்கிறான்…ஒரு அலுவலும் செய்யிறானில்! சொல்லுறதைக் கேக்கிறானில்லை…அவரும் தான் அங்கை எழும்படா எழும்படா எண்டு வாய் கிழியக் கத்திக்கொண்டு நிக்கிறார்…அவன் அசைஞ்சால்தானே!”

நான் பதில் பேசாமலே நிற்கிறேன்.

என்னைக் கண்டதும், சுந்தரத்தினுடைய குழறல் கூடுகிறது.

“ஐயா! கண்ணன் ஐயா!…அடிக்கிறாங்க ஐயா!…என்னைக் கொல்லுறாங்க…. ஐயா!”

கூப்பிட்ட குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்; இங்கே சுந்தரத்தினுடைய அவலக்குரலைக் கட்டும் மௌனம் சாதித்துக்கொண்டு நிற்கிறேன், கண்ணன் என்கிற நான்!

“டேய்! வாய் பொத்தடா மாடு!” – இது ஐயா,

“ஐயோ! அடிக்காதீங்க சாமீ!”

ஐயாவுக்கு சுந்தரத்தின் பால் சற்று இரக்கம் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால்…ராணி அம்மாவினுடைய அன்பைச் சம்பாதித்துக்கொள்வதற்கு, இது அவருக்கு ஒரு சுலபமான வழி!

சுந்தரத்தினுடைய முதுகிலே பல புதிய தழும்புகள். வலது பக்க தோள் மூட்டிலே ஒரு காயத்திலிருந்து இரத்தம் வழிகிறது. நான் பொறுக்கமுடியாமல் ஐயாவிடமே கேட்கிறேன்.

“என்ன பாருங்கோ?…அங்கை அவனுக்கு ரத்தம் வழியுது. நல்லாய் அடிச்சுப்போட்டீங்களே?…”

ஐயா ஒரு சமாளிப்புச் சிரிப்புடன் சொல்கிறார்.

“சீ! உப்பிடி அடிப்பமே?…அது..அவ அடுப்புக்கு வைக்க விறகுக் கொள்ளியை எடுத்தா…இவன், தனக்கு அடிக்கப்போறாவாக்குமெண்ட பயத்திலை திரும்பினான்…அது தான் சாதுவாய்ப் பட்டிட்டுது.”

“சாதுவாய்த் தட்டுப்பட்டு உப்பிடி ஒரு காயம் வந்து இரத்தம் வழியும் எண்டு இண்டைக்குத்தான் கேள்விப்படுறன்!” – எனது பேச்சில் சற்று சூட்டைக் கலந்துவிடுகிறேன்.

அதைத் தாங்கமுடியாமற் போலும் ராணி அம்மாவுடைய கோபம் சுந்தரத்தின் பால் அதிகரிக்கிறது;

“உன்ரை திமிருக்குக்…காலமை பட்டினி போட்டிருக்கு…வடுவா!…இண்டு முழுக்க உனக்குச் சாப்பாடு தாறயில்லை…கிடந்து வத்தினால் தான் புத்தி வரும்”.

“அம்மா!…அடிக்காதீங்கம்மா!…நான் போறேங்க…என்னைக் கொல்லாதீங்கம்மா!…” என்றவாறே சுந்தரம் எழுகின்றான். வாசலை நோக்கி ஓட முயற்சிக்கிறான். ராணி அம்மா எட்டிப் பிடித்துவிடுகிறா.

“என்னடா?…போகப் போறியோ?”

“ஆமாங்க! நான் போறேங்க…எனக்கு அடிக்காதீங்க…உங்களைக் கும்புடுறேம்மா…”

அம்மாவினுடைய தாக்குதலின் உரம் அதிகரிக்கிறது. அடியின் கோரத்தில், “நான் போகல்லீங்க…” என சுந்தரம் சொல்லவேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அவன் நெளிந்து நெளந்து குழறுகிறான்;

“நான் போகப்போறேங்க!…போறேங்க…போகப்போறேங்க!…”

“தோட்டக்காட்டுச் சனியன்! உன்ரை புத்தியைக் காட்டிப் போட்டாய்…நாங்கள் இவ்வளவு காலமும் தின்னத் கந்ததுக்கு என்னடா கூலி!…மாதா மாதம் கொண்ணனுக்குக் தடுத்த காசு நூறு ரூபாய்க்கு மேலை வரும். அதையெல்லாம் தந்திட்டுப் போடா!”

எனக்கு சுரீரென்கிறது! இவ்வளவு கீழ்த்தரமாக வெல்லாம்…இந்தப் பெரிய மனிதர்களால், கதைக்க முடிகிறதே!…

“அடியாதீங்கம்மா!..நான் போறேங்க….”

“நான் கேட்டதுக்குப்பதிலைச் சொல்லி போட்டுப் போய்த் துலையன்ரா…மூதேவி! உடுத்த துணியோடை நிதெண்டு ரெண்டு சாறமெல்லே தச்சுத் தந்தனாங்கள்…அதையெல்லாம் தந்திட்டுப் போடா”

சுந்தரத்தினுடைய அழுகை குறைகிறது…அம்மாவை நோக்கி இரக்கமாகத் திரும்புகிறான். ‘போகல்லீங்க’ என்று சொல்லப் போகின்றானோ! இப்பொழுது அவனுக்குப் பாய்ந்து உதைக்க வேண்டும் போலிருக்கிறது எனக்கு.

“மெய்யடா மாடா, திண்டதுக்குக்கூலி என்னடா?” – அம்மாவின் ஆவேசம்.

சுந்தரத்தினுடைய அழுகை நின்றது:

“நீங்கதானே கூலி தரணும்?…நான் எவ்வளவு வேலை செஞ்சிருக்கிறான்…”

“என்னடா? திமிர் புடிச்ச மாடு?”

ராணி அம்மா அவனுடைய வயிற்றில் ஓங்கி உதைகின்றா. ‘தொப்’பென விழுந்து மீண்டும் எழ முயற்சித்த பொழுது…ஐயா தனது பங்கைச் செலுத்துகிறார். அந்த உதையில் சுந்தரம் வீட்டுக்கு வெளியே விழுகின்றான்.

எனது நெஞ்சு குளிருகின்றது;

கீழே விழுந்தவன், இனி எழும்புவான். எழப்போகின்ற ஆவேசம் அவன் கண்களில் அனலாகப் பறக்கின்றது!

“எருமை மாடு! உன்னை என்ன செய்யிறன்பார்!” என்ற வாறே ராணி அம்மா அவனை நோக்கி ஓடுகின்றா.

சுந்தரம் எழுந்துவிட்டான்.

“தூ! மிருகங்கள்!” என்றவாறே அவன் ராணி அம்மாவை நோக்கித் துப்புகிறான். எச்சில் அம்மாவினுடைய முகத்திற் பட்டுத் தெறிக்கிறது. அந்த எதிர்பாராத தாக்குதலில் அவ அதிர்ந்து போய் நிற்க,

அவனுடைய பாதங்கள் ஒரு புதிய தீவிரத்துடன் பூமியை முத்தமிட்டுச் செல்கின்றன!

நாணயக்கயிறு அறுந்தது!

இனி மாடு அதன் எண்ணத்துக்கு ஓடும்.

– இலங்கைக் கலாச்சாரப் பேரவையினால் நடத்தப்பட்ட 1976-ம் ஆண்டிற்கான சிறு கதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கதை – பலாத்காரம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பாதிப்பு: 10-07-1977, தமிழ்ப்பணிமனை, யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *