கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 25, 2023
பார்வையிட்டோர்: 2,217 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரில் ஒரு தாய்க்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். இந்த நான்கு பேர் சந்திரன் சூரியன், வருவணன், வாயுதேவன் முதலியோர் ஆவர். அன்னை நான்கு பிள்ளைகளையும் மிகவும் அன்புடன் வளர்த்து வந்தாள். ஒரு நாள் அவர்களுக்குத் தெரிந்தவர் வீட்டில் நடந்த விருந்திற்கு நான்கு பிள்ளைகளையும் அழைத்திருந் தார்கள். அந்நால்வர்களும் விருந்துக்குச் செல்ல ஆயத்தமாயினர். அப்பொழுது தாய் அவர்களை நோக்கி , குழந்தைகளே , விருந்தில் பட்சணங்கள் போடுவார்கள் அவற்றில் எனக்கு சிலவற்றை எடுத்து வாருங்கள்” என்று கூறி அனுப்பினாள்.

நான்கு பேர்களும் விருந்துக்குப் போனார்கள். மிகவும் சுவையான காய்கறிகளையும், பட்சணங் களையும் விருந்து படைத்தவர்கள் போட்டார்கள். சூரியன் தன்னுடைய தாய் கூறியற்றை நினைத் துக் கொண்டு பட்சணங்களைத் தனியே எடுத்து வைக்கலாமா என்று எண்ணினான். மற்றப் பிள்னைகள் இருக்கிறார்களே, அவர்கள் எடுத்து வைப்பார்கள், நாம் எடுத்து வைக்க வேண்டாம் என்று எண்ணி, அப்பட்சணங்கள் அனைத்தையும் தானே தின்று விட்டான்.

ThaiAnbu

வருணன் தனக்குப் போட்ட பட்சணங்களில் பாதி எடுத்துத் தனியே வைத்தான் மீதிப் பாதி யைத் தின்ற பொழுதும் திருப்தி உண்டாகவில்லை, நம்முடைய தம்பிமார்கள் பட்சணங்களைக் கொண்டு போய்க் கொடுப்பார்கள். அது அம்மா வுக்குப் போதும். இதையும் நாமே தின்று விடலாம்’ என்று எடுத்து வைத்ததையும் தின்று விட்டான்.

வாயுதேவனும் முதலில் தன்னுடைய பட்சணங் களைத் தாய்க்காக எடுத்து வைத்தான். ஆனால் அவனுக்கும் சபலம் தாங்க முடிய வில்லை . பாதி சாப்பிட்டு விடலாம் என்று பாதியைச் சாப்பிட் டான். மறுபடியும் அவனுக்கு ஆவல் எழவே, மீதிப் . பாதியையும் தானே தின்று தீர்த்தான்.

சந்திரன் தனக்குப் போட்ட பட்சணங்கள் எல்லாவற்றையும் எடுத்துத் தனியே வைத்துவிட்டு. மற்றவற்றைச் சாப்பிட்டான். எல்லோரும் சாப்பிட்ட பிறகு அவரவர்கள் தங்கள் தங்கள் வீடு நோக்கிப் போனார்கள். சூரியனும் அவனது தம்பி மூவரும் ஆக நால்வருமாக தங்கள் வீட்டை அடைந்தனர்.

தாய் அவர்களை நோக்கி, ‘எனக்குப்பட்சணம் கொண்டு வந்தீர்களா?” என்று கேட்டாள்.

சூரியன் ஒரு பதிலும் பேசவில்லை . வாயு தேவ னும் வருணனும் தலையைக் குனிந்து கொண்டார்கள். சந்திரன் மட்டும், “அம்மா உனக்காக நான் எல்லாப் பட்சணங்களையும் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லி அவற்றைத் தன் தாயிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கி தான் ஒரு பாதியை வைத்துக் கொண்டு மறுபாதியைச் சந்திரனிடம் கொடுத்து. அவனை உண்ணுமாறு பணித்தாள். தன்னிடமுள்ள பட்சணங்களை நன்றாகச் சுவைத்துத் தின்றாள். சந்திரனும் அம்மா கொடுத்ததை உண்டு மகிழ்ச்சியடைந்தான்.

அப்பொழுது அந்தத் தாய் தன்னுடைய பிள்ளைகளைப் பார்த்து. “நீங்கள் நான்கு பேரும் என்னுடைய வயிற்றில் பிறந்திருந்தாலும், சந்திர னைத் தவிர மற்ற மூன்று பேர்களும் தங்களுடைய வழிறே பெரிதென்று எண்ணி விட்டீர்கள், நான் ஒருத்தி இருப்பதை நீங்கள் மூவரும் எண்ண வில்லை . சந்திரன் ஒருவன் தான் என் மனதுக்கு உகந்த பிள்ளையாக இருக்கிறான். சூரியனே உன்னுடைய வெய்யிலில் காய்ந்தவர்கள் நாக மாய்ப் பேரகிற இந்தச் சூரியன் என்ன கொளுத்து கொளுத்துகிறான்” என்று உன்னைத் திட்டட்டும். ஏ வாயுதேவா, நீ வீசியடிக்கும் பொழுது, “இது என்ன. பேய்க்காற்றாக இருக்கிறதே, இது நின்று தொலைக்காதா” என்று உன்னைத் திட்டட்டும். வருணனே நீ அடா மழை பெய்யும் பொழுது “என்ன பிரளய காலத்து மழையாக இருக்கிறதே! இதற்கு என்ன இப்பொழுது கேடு வந்துவிட்டது? நீ நாசமாகப் போக” என்று திட்டட்டும். ஆனால் சந்திரனை சிறு குழந்தைகளும், பெரியவர்களும், காதர்களும் மகிழ்ந்து வரவேற்று. எல்லோரும் நிலவில் விளையாடி மகிழ்ந்து உன்னை வாழ்த்துவார்களாக! மற்றவர்களுக்கு எல்லாம் திட்டுக் கிடைத்தாலும், உனக்கு வாழ்த்தே கிடைக்கட்டும் என்று கூறினாள்.

தாயினிடம் அன்பும் விசுவாசமும் கொண்ட சந்திரனை எல்லோரும் புகழ்கின்றனர். இராமபிரானைக்கூட ராமச்சந்திர மூர்த்தி’ என்றும் கண்ணனை “கிருஷ்ண சந்திரன்” என்றும் பாராட்டுகிறார்கள்.

தாயிடம் உள்ள பக்தி சந்திரனுக்கு எல்லோரும் பாராட்டும் நிலையை வாங்கித் தந்தது.

– கிழவியின் தந்திரம் (சிறுகதைத் தொகுப்பு),முதற் பதிப்பு: ஜூலை 1988, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *