கோகிலாவின் வருகைக்குப் பின்னால்…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 18,739 
 

மனிதர்களை எப்படி புரிந்து கொள்வது என்பது இறுதி வரை புலப்படாமல் போய்விடுமோ என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன். பொருளாதார அளவில் வாழ்க்கையில் மேலெழுவதும் கீலெழுவதும் மனிதர்களுக்கு நடந்திருக்கிறது என்பதில் அவ்வளவு வியப்புகள் ஏற்படுவதில்லை. அவை பற்றிய நிறைய கதைகளையும் அனுபவங்களையும் நேரில் கண்டதாலோ கேட்டதாலோ இருக்கலாம். ஆனால் உறவுகளில் ஏற்படும் முரண்களைப் பற்றிதான் புரிந்துகொள்ளவும் இயலவில்லை. அதிகமாக யோசிக்கவும் செய்கிறேன்.

நர்ஸ் கோகிலா கருவேலம்பாடு கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணிக்காக கோவையிலிருந்து வந்திருந்தாள். ஆரம்ப சுகாதார நிலையங்களையும் சரி, புதிதாகக் கட்டப்படும் அரசுத் திட்டங்கள் அனைத்தும் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவே வருவதேனோ? கருவேலம்பாட்டின் பாலர் பள்ளியும் சரி, ஆரம்ப சுகாதார நிலையமும் சரி, அவ்வாறே அமைந்திருந்தது. நர்ஸ் கோகிலாவின் கட்டுப்பாட்டிற்குள் கருவேலம்பாடு, பள்ளங்கிணறு, கொக்கித் தோப்பு, நொச்சிக்குளம் ஆகிய நான்கு கிராமங்களும் அடங்கும். ஒவ்வொரு வாரத்திற்கும் மற்ற கிராமங்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டாலோ கோரிக்கையின் அடிப்படையிலோ கோகிலா செல்வாள்.

நர்ஸ் கோகிலாவிற்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகி இருந்தன. குழந்தைகள் ஏதுமில்லை. அவளுடைய கணவன் கோவையில் வேலை பார்க்கிறார் என்று தெரியும். என்ன வேலை பார்க்கிறார் என்று தெரியாது. இரண்டு முறைதான் மனைவி இருக்கும் கிராமத்திற்கு வந்திருப்பார். நனைந்த பனை மரத்தைப் போல இருப்பார். ஆனால் நல்ல லட்சணம் தான். நர்ஸ் கோகிலாவைப் பார்த்தால் திருமணமானது போலத் தெரியாது. உயரம் நாலேமுக்கால் அடிதான். தலைமுடியை சேர நாட்டுப் பெண்களைப் போலத் தான் பெரும்பாலும் விரித்துப் போட்டிருப்பாள். அந்த கிராமத்தைப் பொறுத்தவரையில் படிச்ச பொண்ணு. பற்றாக்குறைக்கு அவள் மேக்கப் போடுவதால் கூடுதல் கவர்ச்சியாகவும் தோற்றமளித்தாள்.

அவளின் பேரழிகில் மயங்கி விடலையில் ஆரம்பித்து கிழம் வரைக்கும் காய்ச்சல், தொண்டை புகைச்சல், இருமல், சளி என ஏதாவது ஒன்றை சொல்லிக் கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அவளது நிலையத்திற்கே வந்துவிடுவார்கள். அவர்கள் செல்கிற நேரத்தில் கூட்டமிருந்தால் பிறகு வரலாம் என்று நைசாகக் கழண்டு போன கூட்டமும் உண்டு. தனியா இருக்கும் போது வந்தால்தான் பார்ட்டியிடம் பேச முடியும் என்பதே அவர்களின் கணக்கு.

அதற்கு ஒரே காரணம்தான். அவள் அங்கு தனியாய் தங்கி இருக்கிறாள். துணைக்கு யாருமில்லை. மேற்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமும் கூட. மிக அருகில் வீடுகள் ஏதும் கிடையாது. முன்னூறு மீட்டர் தள்ளியே கிராமத்திலுள்ள வீடுகள் இருந்தன. ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் வசதிக்காக அரசாங்கம் போட்டுக் கொடுத்த அடிபம்பும் உண்டு. அவ்வப்போது தண்ணீர் எடுக்கும் குரூப்பும், தாகம் எடுக்கிறது என்ற பெயரில் நர்ஸ் வீட்டில் என்ன செய்கிறாள் என்று சன்னல் வழியாக நோட்டமிடும் கூட்டமும் உண்டு.
மற்றவர்கள் வீட்டிற்குத் தெரிந்தால் என்னாவது என்று சற்றுக் கட்டுப்படுத்திக்கொண்டு சென்றதுண்டு. ஆனால் பழனி அவ்வாறு விடுவதாக இல்லை. காரணம் அவனது வயது. அவளை விட நாலைந்து வயது குறைவாக இருக்கும். அப்போது அவனுக்கு வயது 19 இருக்கும். பழனி ஒன்றும் அழகன் அல்ல. அவன் முகம் ஒடுங்கியும் பற்கள் சற்று உயர்ந்தும் இருக்கும். பருக்களும் கூட உண்டு. அவனது தந்தை பூ வியாபாரம் செய்து வந்தார். அவ்வப்போது பூவை நர்சுக்குக் கொண்டு போய் கொடுப்பான்.

ஆரம்பத்தில் அவன் பேசுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மெல்ல மெல்ல அவள் பக்கத்துக் கிராமத்திற்கு செல்வதாக இருந்தால் அவன்தான் துணைக்கு சென்றான். அதையும் பெரிதாக பலரும் கண்டுகொள்ளவில்லை. அவள் பக்கத்து நகரத்துக்குச் சென்றாலும் பழனி கூடவே செல்வதைச் சிலர் நேரில் பார்த்தார்கள். பின்னர் கண் காது மூக்கு வைத்து கதைகள் ஊரில் அரசல் புரசலாக இருவரையும் பற்றி பேச ஆரம்பித்தார்கள். கிராமத்தைப் பொறுத்தவரையில் வேற்று ஆள் அடிக்கடி ஆண்கள் இல்லாத போது அடுத்தவர் வீட்டில் தவம் கிடந்தாலே தவறாகப் பேச ஆரம்பிப்பார்கள். இந்தக் கதை ஊரறிய நடக்கிறது. கேட்கவா வேண்டும்.

பழனியின் அழகிலேயே கோகிலா விழுந்திருக்கிறாள் என்றால், நாமும் ஏன் அவளை மடக்கக் கூடாது என்ற எண்ணம் கண்ணனுக்கு வந்ததில் ஆச்சர்யமில்லை. கண்ணனின் புருவமுடி அடர்த்தியாக இருக்கும். இரு புருவ முடியும் நெற்றிப் பொட்டு வரையில் சேர்ந்திருக்கும். மாநிறம். உயரத்திற்கேற்ற எடையுடன் இருந்தான். கண்ணனுக்கு அடிக்கடி தோன்றியதெல்லாம் , நாம் முதலிலேயே களம் இறங்கி இருக்கலாமோ. ஆரம்பத்தில் தோன்றாதவனுக்கு பழனி மடக்கி விட்டான் என்று தெரிந்த போது ஆர்வப்பட்டான். எப்படி எப்படியெல்லாமோ கோகிலாவை மடக்கி விட பல வழிகளில் முயற்சித்தான்.

ஒருவேளை கண்ணன் அன்பாக அணுகவில்லையோ என்னவோ, அவள் அவனிடம் மயங்குவதாக இல்லை போல. ஒருமுறை அவளை நேரடியாகவே உடல் சுகத்திற்காகக் கூட சாடை மாடையாக சொல்லிப் பார்த்திருப்பான் போல. அவள் திட்டி அனுப்பி விட்டாள். அப்போதைக்கு கண்ணன் அவளிடமிருந்து ஒதுங்கி விட்டான். சவத்த, அவள் கல்யாணமானவள்தானே. இவள் பின்னால் நாம் ஏன் அலைய வேண்டும் என்று எண்ணியிருப்பான் போல. ஆனால் அவனுக்குள் வஞ்சம் குடி கொண்டிருந்தது என்பது பின்னர்தான் ஊருக்குத் தெரிய வந்தது.

பொங்கல் விடுமுறைக்காக நர்ஸ் தனது ஊருக்கு சென்று விட்டாள். அந்தக் கிராமத்தில் மாட்டுப் பொங்கலன்று டெக்கில் படம் பிரித்துப் போட்டார்கள். அப்போதெல்லாம் டிவியையும் டெக்கையும் (வீடியோ ரெகார்டரைத் தான் டெக் என்பார்கள்.) 150 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்தால் மூன்று படங்களோ நான்கு படங்களோ போடுவார்கள். சர்வ நிச்சயமாக ராமராஜன் படமுண்டு, விஜயகாந்த் படமும் உண்டு. மற்றவர்களின் படங்கள் ரீலாசாகி இருந்தால் அதுவும் உண்டு. நல்ல படமா இருந்தால், அதே படத்தைத் திருப்பியும் போடும்படி பெண்கள் கோரிக்கை வைப்பார்கள். வீட்டுப் பெண்களின் கோரிக்கையை ஏற்பதில் தானே ஆண்களுக்குச் சிக்கல். ஊர்ப் பெண்கள் கோரிக்கை வைத்தால் அதைச் செய்து முடிப்பதுதானே ஆண்களின் மட்டமான புத்தி. ஆகையால் பெண்கள் கோரிக்கை வைக்கும் படங்கள் நிச்சயம் இடம்பெறும். படத்திற்கு வீட்டுக்கு ஐந்து ரூபாயோ பத்து ரூபாயோ இளைஞர்களே பிரிப்பார்கள். பணம் சார்ட்டேஜ் ஆனால் மட்டும் அழகுவேல் சப்போர்ட் செய்வார். மீதிப் பணத்தை அவரே கொடுத்து விடுவார். சில நேரங்களில் அதிகமாக வசூலாகி விட்டால், மூன்று படங்களோடு நிறுத்தி விட்டு டைலர் கடையில் வைத்து சாமி படங்களைப் போட்டுப்பார்ப்பார்கள். எதை எதோடு ஒப்பிடுவது என்பதில் கூட ஒரு வடவர்த்தனை கிடையாது. அவையாவும் பூஜை படங்களாம்.

டெக்கில் படம் பார்ப்பது இங்கு முக்கியமில்லை. ஆனால் அந்த மாட்டுப் பொங்கலன்று நர்சின் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் யாரோ திருடிச் சென்று இருக்கிறார்கள் என்பது மறுநாள் காலைதான் தெரிய வந்தது. நர்ஸ் எப்பவுமே தாடியாசாரி வீட்டில்தான் கீயைக் கொடுத்துச் சென்றிருப்பாள். அவர் தாடி வைக்க ஆரம்பிச்ச பிறகு அவரின் பெயர் சுப்பையா என்பதை ஊரே மறந்து போயிற்று. யாரிடமும் போய்க் கேட்டால் தாடியாசாரி என்று மட்டுமே தெரியும். பலருக்கும் அடையாள பெயர்களே ஊரில் உண்டு. அடிபம்பில் தண்ணி எடுக்கச் சென்ற யாரோ தாடியாசாரியிடம் நர்ஸ் வீடு திறந்து கிடக்குதுன்னு சொல்ல, ஆசாரி பதறிப் போனார்.

அப்போது யார் வீட்டிலும் லேண்ட் லைன் வசதி கூட கிடையாது. ஆசாரி போஸ்ட் ஆபிஸுக்கு ஓடினார். தகவலை கோகிலாவுக்கு ஒரு வழியாகத் தெரிவித்து விட்டார். கோகிலாவும் கிராமத்திற்கு விரைந்து வந்தாள். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போவதாகச் சொல்ல, ஊர்ப் பெரியவர்கள் இரும்மா… ரெண்டு நாள் பொறுத்துக்கோ…. நாங்களே யாரு தப்பு பண்ணினார்கள் என்று சொல்கிறோம் என்றார்கள். ஆரம்பத்தில் தான் காவல் நிலையம் கட்டாயம் செல்வேன் என்று சொல்ல, ஒரே வார்த்தையில் மிரட்டி விட்டார்கள். நீ இந்த ஊர்ல ஒழுங்கா வேலை பாக்கணுமா வேண்டாமா? போலிஸ் ஸ்டேசனில் எல்லாரையும் எங்களுக்குத் தெரியும். போலிஸ் ஸ்டேசனுக்குப் போன, நடக்கிறதே வேறு என்று மிரட்டி விட்டார்கள்.

கிராமத்துப் பெரியவர்களுக்கு நன்றாகப் புரிந்து விட்டது, இது ஏதோ வயசுப் பயக பண்ணியிருக்கிற சேட்டைதான். போலிஸ் ஸ்டேசன் போய், நாளைப் பின்ன வேற எங்கே திருட்டு நடந்தாலும் பொய் கேசைப் போட்டு நம்மூர் பயலுகளை தேவையில்லாமல் மற்ற கேசிலையும் புக் பண்ணிருவானுக போலிஸ்காரனுக என்பதால் தான் அவளைப் போக விடாமல் தடுத்தார்கள். இறுதியில் கோகிலாவும் தனது வீட்டிலிருந்த டிவி பெட்டியில் ஆரம்பித்து உடைப் பெட்டி வரை காணாமல் போனது என்று வாசித்தாள். நகையையும் காணவில்லை என்று சொன்னாள்.

பெரும்பாலான அப்பாக்களே பல விஷயங்களில் ஒழுக்கமில்லாமல் நடக்கிற போது அவர்களுக்கு அவர்களின் பயலுக மேலேயே சந்தேகம் வந்தது. தலையாரி மெல்ல தன் பையனிடம் , ஏலே நீயுமுண்டா என்று சந்தேகத்தைப் போக்கிவிட்டு அவனிடமே மெல்ல யாரெல்லாம் இதுல உண்டு. இது ஒத்தை ஆளா பண்ணுன வேலை மாதிரி தெரியலையேன்னு சொல்லி விஷயத்தைக் கறந்ததை அவர் பையனே வெளியே சொன்னான். வெளியே சவுண்டு கொடுக்குறதுக்கு முன்னால் தன் பையன் உண்டா என்று கேட்டுக் கொண்டு விட்டுப் பின்னர் நெஞ்சை நிமிர்த்தி பேசுகிற பெரியார்தனமும் உண்டு. தன் பையன் இதில் ஈடுபடவில்லையென்று தெரிந்தவுடன், மறுநாள் டைலர் கடையில் வைத்து ஓரளவுக்கு யார் இதில் ஈடுபட்டுள்ளார்கள் எனத் தெரிந்தவுடன் மெல்ல சாடை மாடையாக கேட்க ஆரம்பித்தார் தலையாரி.

ஏலே… எவம்லாம் பண்ணுனதுன்னு எனக்குத் தெரியும். ஒழுங்கா உண்மையைச் சொல்லி இருங்க.. இல்லன்னா நாளாக்கழிச்சி நர்ஸ் போலிஸ் ஸ்டேசன் போனா யாரும் ஒண்ணும் பண்ண முடியாது. அவளை ரெண்டு நாள்தான் பொறுத்திருக்கச் சொல்லி இருக்கு என்று சொல்லிவிட்டு… ஏ…. கண்ணா உனக்குத் தெரியுமாடே, நீ இதுல உண்டா… என்றார். அவர் கேட்டதுக்கு முக்கியக் காரணம் நர்சை வளைக்க முயற்சித்தது, கண்ணன் நர்சை அசிங்க அசிங்கமாகத் திட்டியதை மனதில் கொண்டும் பையனிடம் கறந்ததன் அடிப்படையிலும் கேட்டார். ஆனால் கண்ணன் சற்றும் தயங்காமல் எவனாவது இதுல என்னை சொன்னான்னா… ஏகே 47 வச்சு சுட்டுத் தள்ளிப் போடுவேன்னு ஏதோ ஹீரோ போல அடிச்சு விட்டான்.

கண்ணனிடம் நான் கேட்டபோது கூட எனக்குத் தெரியாதுல என்று சொன்னதோடு பேச்சை நிறுத்திக் கொண்டான். ஆனால் மறுநாள் காலையில் பத்து மணி வாக்கில் மூணு பேரை பெரியவர்களே தங்களுக்குள் பேசி அதில் ஈடுபட்ட மற்ற ரெண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் கண்ணனையும் பிடித்து இழுத்து வந்தார்கள். அதற்கும் ஒரு காரணமுண்டு. பெரியவர்களுக்குள் விடலைப் பயலுக பண்ணுற சேட்டையால் தங்களுக்குள் சாதிச் சண்டை வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். ஆகையால் அந்தந்த சாதிப் பெரியவர்களே அவர்களை கிராமத்து பஞ்சாயத்துக்கு இழுத்து வந்தார்கள். இதைச் செய்தது கண்ணன், சங்கரன், முத்துராமலிங்கம். அங்கு நடந்ததைக் கட்டப் பஞ்சாயத்து என்றும் நீங்கள் சொல்லிக் கொள்ளலாம். பிரச்சினையை சுமூகமாக மற்ற இடங்களுக்குச் செல்லாமல் கையாளும் கிராமப் பஞ்சாயத்து என்றும் சொல்லிக் கொள்ளலாம். எப்படி வேண்டுமோ அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்.

ஏலே … களவாண்டத எங்கே வச்சிருக்கீய….. ஒழுங்கா சொல்லிருங்க. என்று பெரியவர்கள் சொல்ல…
டிவியை ரெண்டு கண் பாலத்துக்கு அடியில் வச்சிருக்கோம் என்றான் சங்கரனும் கண்ணனும். ரெண்டு பேரை உடனே அனுப்பி, இருக்கான்னு பாத்துட்டு வாங்கலன்னு சொல்லி அனுப்பினார்கள். பத்து நிமிஷத்தில் டிவியோடு வந்தார்கள். வேறேன்னலாம் எடுத்திய…. எங்கே வச்சிருக்கியேன்னு சொல்லுங்க…
நர்ஸ் சூட்கேஸ் பெட்டியை எங்கே போட்டோம்னு தெரியல. ஆனால் தெக்க பாத்து கொண்டு போனோம். குடியில செஞ்சதால் அது ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது என்றார்கள். டிவி பெட்டி வந்தவுடனேயே…. ஒருத்தர் நர்சை பார்த்து சொன்னார். பாத்தியாம்மா….களவாண்டு வித்து திங்கனும்னு நெனைச்சா நாலு நாளா வச்சிருப்பானுகளா?

உடனே ஆராயும் படையுடன் ஊர்ச் சிறுவர்களும் இளைஞர்களும் உடன் சென்றார்கள். முத்துராமலிங்கம் சொன்னது போல அவனுங்க சுய நினைவில் இல்லையென்பதை அனைவரும் உணர முடிந்தது. காரணம் சூட்கேசைத் தூக்காமல் இழுத்துச் சென்றதில் அவளின் ஜாக்கெட், பாவாடை என ஆங்காங்கே சில ஆடைகள் கிடந்ததும், இழுத்துச் சென்ற தடமும் தெரிந்தது. ஒரு வழியாக சக்தி நாடார் வயல் பக்கத்தில் சூட்கேஸ் கிடைப்பதை கண்டெடுத்து வந்தார்கள்.

வேற எதையும் எடுக்கவில்லை என்றார்கள். எதுக்குல இதைப் பண்ணினீர்கள் என்ற கேள்வியைத் தெரிந்தே பெரியவர்கள் கேட்ட போது, கார்கிலில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு பாலிடெக்னிக் படிக்கும் கண்ணன் பொய்யை அடித்து விட்டான் பாருங்க… அத்தனை பேருக்கும் உள்ளுக்குள் ஒரே சிரிப்பு. இந்த மொகரக்கட்டைகளா அதுக்காகச் செய்திருக்கும்னு. ஆனால் கேட்ட கேள்வியே எதையாவது அவனுககிட்டே கேட்கணும் என்ற அளவிலேயே இருந்தது.

மேற்கொண்டு பஞ்சாயத்தின் தீர்ப்பு இவ்வாறாக அமைந்தது. நர்சுக்கு ஆளுக்கு தலா ஆயிரம் அபராதமா கட்டணும். கோயில்ல தேங்காய் உடைச்சு இனி இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணனும். அவ்வளவுதான். களவில் ஈடுபட்ட பெற்றோர்களே… இந்தப் பயலுவளை பெத்ததுக்கு கட்டித் தொலைக்கோம்னு சொன்னார்கள். நர்ஸ் இன்னும் நிறைய காணவில்லை என்று சொல்ல…. அதுக்குத் தானேம்மா அவுங்களை மூவாயிரம் கட்டச் சொல்லி இருக்கு. பிரச்சினையை இத்தோட முடிச்சு விடும்மா என்று நர்சுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நர்சின் பேச்சை யாரும் பொருட்படுத்தத் தயாராக இல்லை. இந்தப் பயலுக பண்ணுன தப்புல அவள் ஏதோ நல்லவளா என்பதை கோகிலா காதுபடவே பெண்களே சாடைமாடையாகப் பேசினார்கள். சாடைமாடையாகப் பேசுதல் என்பது கிராமத்தில் சர்வ சாதாரணம். கோகிலா அந்த வீட்டைக் கடக்கும் போது, அங்கு நடந்து போகும் நாயைத் திட்டுவது போல, இந்த நாயை எத்தனை தடவை விரட்டி விட்டாலும் இந்த வழியாவே போவுது. இன்னும் எத்தனை நாய் பின்னால போக அலையுதோன்னு பேசுவார்கள் சில பெண்கள். அவர்களின் கோபமெல்லாம் கல்யாணம் ஆனவளுக்கு இங்கே வந்து எதுக்கு இன்னொருத்தனை வச்சுக்கிட்டு திரியனும் என்கிற கோபமும், நாளை நம்ம பிள்ளைகளும் கெட்டுப் போயிருமோ என்கிற பயமும் அதன் பின்னால் இருந்தது.

நர்சுக்கும் அவள் கணவனுக்கும் வேறு ஏதேனும் சண்டையா பிரிவா புரிதல் இல்லையா என்பதெல்லாம் அந்தக் கிராமத்தில் யாருக்கும் தெரியாது. மூன்று மாதத்தில் நர்ஸ் சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டாள், கூடவே பழனியையும் இழுத்துக் கொண்டு!

பழனியோட அப்பா அவனை ஊர்ப்பக்கம் வந்தாயென்றால் என்று மகனைத் திட்டி ஊருக்குள் சில வருடங்களுக்கு வரவிடவில்லை. கோகிலாவின் அடிப்பொடியாகவே அலைந்த பழனியை இரு வருடங்களுக்குப் பின்னால் கொகிலாவே திருமணம் செய்து கொண்டாள் என்ற தகவலும் கிடைத்தது. பழனி அவள் அழகில் மயங்கி அனுபவித்தவுடன் அவளை விட்டு விலகிச் செல்லவில்லை. அவளோடு வாழ ஆரம்பித்திருந்தான். குழந்தைகள் பிறந்து பள்ளிக்குச் சென்ற பிறகே கிராமத்திற்கு வந்தான். ஏறத்தாழ பத்து வருடங்கள் சென்று விட்டதால் யாரும் அவனைத் தவறாகக் கேள்வி கேட்கவில்லை. ஒருவேளை கோகிலாவை அழைத்து வந்திருந்தால் ஏற்றுக் கொள்ளாமல் ஊர் பேசி இருக்கலாம். அதன் பின்னர் இன்று வரையிலும் நர்ஸ் கோகிலா கருவேலம்பாட்டிற்கு வரவில்லை. பழனியின் பெற்றோர் தான் மற்ற பயலுக வீட்டுக்குப் போவது போல சென்னையில் சென்று பேரனையும், மகனையும் பார்த்து வந்தார்கள்.

கோகிலாவும், பழனியும் ஆரம்பத்தில் உடல் சுகத்தில் சுற்றித் திரிந்திருக்கலாம். ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் திக்குத் தெரியாமல் போய் விடுவோமா என்கிற அச்சத்தில் சேர்ந்திருக்கலாம். இருவரும் நல்ல புரிதலுக்குள் வந்திருக்கலாம். இதற்கு மேலும் சொல்ல வேண்டுமானால் கதையின் முதல் பாராவைத் தான் நீங்கள் படிக்க வேண்டும். முரணான உறவுகளால் அமைந்த கெட்டியான காதல் இதுதானோ என்னவோ? காதல் எது என்பதில் உள்ள ஐயங்கள் எப்போது தீரும் என்பதே இப்போது நான் யோசித்துக் கொண்டிருப்பது.

Print Friendly, PDF & Email

1 thought on “கோகிலாவின் வருகைக்குப் பின்னால்…

  1. நன்று, வாழ்த்துகள். நிறைய எழுதவும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *