கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 11,532 
 

‘கட்டக் …கடக்…கட்டக்…கடக்…’

கலவை மெஷின் சீராக ஒடிக்கொண்டிருந்தது. குடம் கவிழ்ந்து கலவை பொலபொலவென்று தரையில் கொட்டியது.

“முனுசாமி , ஜல்தியா அள்ளிவிடுப்பா . வானம் மூடுது . மழை வந்தாலும் வரும் . “ பொன்னுசாமி மேஸ்திரி குரல் பின்னால் கேட்டது.

முனுசாமி குனிந்து கலவையை அள்ளி காத்திருந்த சட்டிகளில் கொட்டினான். கொட்டிய கலவை அத்தனையையும் அள்ளி விட்டுவிட்டு நிமிர்ந்து வானம் பார்த்தான்.

மழைக்கான அடையாளங்கள் நிறைய இருந்தன . அடுக்கி வைத்திருந்த மூட்டைகளைப் பார்த்தான் . ஆறு மூட்டைகள்தான் இருந்தன. அரை மணி நேரத்தில் முடிந்து விடும். அதற்குள் மழை வராது.

கோவிந்தன் அடுத்த லோடைக் கவிழ்த்தான் . மேஸ்திரி சாரத்தில் நின்று கொண்டிருந்தவர்களை விரட்டினான் . புகையிலை போட சட்டியை நிறுத்திய அம்ஸாவைத் திட்டினான். அம்ஸா உதட்டைச் சுழித்து தோள்களைக் குலுக்கினாள் . மேஸ்திரியின் சப்தம் வேகத்தைக் கூட்டியது.

அரை மணி நேரத்தில் கடைசி லோடு கவிழ்க்கப் பட்டது. சிதறிக் கிடந்த கலவையை வழித்து வாரி விட்டான் முனுசாமி . கடைசி சட்டி நகர்ந்ததும் , மெஷினில் சாய்ந்து பீடி பற்ற வைத்துக் கொண்டான்.

“சட்டியைக் கழுவி வச்சிட்டு வரிசைக்கு வாங்க . சுருக்கா கூலியை வாங்கிட்டு மழைக்கு முன்னாடி போயிடலாம்”. பொன்னுசாமி தாவித் தாவி சாரத்தில் ஏறி மேலே போனான்.

சனிக்கிழமை . கூலிநாள் . முனுசாமி பீடியை எறிந்து விட்டு கைகால் கழுவும் போது முதுகில் முதல் தூறல் விழுந்தது .ஒன்றிரண்டாக விழத் தொடங்கிய தூறல் சிறிது நேரத்தில் பலமாகி விட்டது . கூலி வாங்க நின்ற கூட்டம் கலைந்து போன வாரம் கூரை போட்டிருந்த அடுத்த கட்டிடத்திற்குள் நுழைந்தது .

முனுசாமியும் உள்ளே போனான். பிரிக்கப்படாத முட்டுகளுக்கு நடுவே நுழைந்து தோதான இடம் பார்த்து நின்றான் . வெளியே தூறல் பலமாக விழுந்தது . அம்ஸாவும் கிட்டப்பாவும் உரக்கச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். கோவிந்தன் மழையில் நனைந்தவாறே மெஷினை தார்பாய் போட்டு மூடிக் கொண்டிருந்தான் .

மேஸ்திரி முனுசாமிக்கு எதிரில் வந்து நின்றார் . நோட்டைப் பார்த்து பணத்தை எண்ணிக் கொடுத்தார் . இருநூற்று எண்பது .

வெளியே தூறல் நின்று போயிருந்தது .கூட்டம் வெளியேறி வானம் பார்த்தது . மீண்டும் மழை வருவதற்கான அறிகுறிகள் கண்டு வேகமாகக் கலைந்தது .

முனுசாமியும் வெளியே வந்தான் . டவுன் பஸ் எட்டு மணிக்குத்தான் . கால்மணி நேர நடை தூரத்தில் பஸ் நிலையம் . போய் விட்டால் இடம் பிடித்து உட்காரலாம் . நடையை வேகமாக்கினான் .

கடைவீதியில் நுழைந்து காந்தி சிலை அருகில் வரும் போது சடசடவென்று மழைத்தூறல் விழுந்தது. மறு விநாடியே பெரும் மழை பிடித்துக் கொண்டது . பக்கத்தில் இருந்த கடையின் தட்டியடியில் ஒதுங்கி நிற்பதற்குள் இலேசாக நனைந்துவிட்டான்.

கடைவீதியில் பஸ் நிற்குமிடம் நூறடி தூரத்தில் இருந்தது . தட்டியடியிலேயே நடந்து நனையாமல் போய் விடலாம் . கூட்டம் பிதுங்கி வழியத்தான் செய்யும் . நின்று கொண்டுதான் போக வேண்டும் . வேறு வழியில்லை.

மழை சடசடவென்று கொட்டியது. கடை வீதி காலியாய்ப் போய் அத்தனைக் கூட்டமும் கடை வாசல்களில் ஒதுங்கியது .

“மழ வரும்னு நெனைச்சேன். ஆனா இப்படிப் பேய் மழையா வரும்னு நெனைக்கலை”. பக்கத்தில் யாரோ பேசினார்கள்.

மழையினால் சீக்கிரமாகவே இருள் பரவியது. கடை வீதியின் அத்தனை விளக்குகளும் சிறிய இடைவெளிகளில் ஒளிர ஆரம்பித்தன .

நின்ற இடத்தில் நின்றவாறே மழையையும், மனிதர்களையும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினான் முனுசாமி . அவ்வளவு கூட்டத்திற்கு இடையில், நனையாமல் பஸ் நிற்குமிடத்திற்குப் போக முடியாது.

கடைவீதியில் ஓடிய மழை நீரை இரு பக்கமும் இறைத்தவாறு அவ்வப்போது விரையும் கார்களைத் தவிர வீதியில் வேறு நடமாட்டம் இல்லை.

முனுசாமி கடைகள் பக்கம் பார்வையை ஓடவிட்டான் . ஒதுங்கி நின்றவர்களில் சிலர் கடைகளுக்குள் புகுந்து கொண்டிருந்தார்கள் . அவர்களின் உண்மை நோக்கம் மழையில் இருந்து தப்புவதுதான் என்றாலும், கண்ணில் படும் பொருட்கள் அவர்களிடம் வாங்கும் ஆவலைத் தூண்டினாலும் தூண்டும் என்ற எதிர்பார்ப்பில் கடைக்காரர்களும் அவர்களைத் தடுக்கவில்லை .

முனுசாமி நின்று கொண்டிருந்த கடை பெரியதாகவே இருந்தது . பளபளவென்ற அடுக்குகளில் டப்பாக்கள் , பாட்டில்கள் , பொம்மைகள்… தொங்கும் வாளிகள் , கூடைகள் , பைகள் , பந்துகள் … தினசரி அந்த வழியாகவே போய்வந்தும் கூட அவன் உள்ளே நுழைந்தது கிடையாது . சும்மா உள்ளே போய் பார்க்கலாமா என்று தோன்றியது . ஏற்கனவே உள்ளே நுழைந்தவர்கள் அணிந்திருக்கும் பொய்ப் பார்வை தனக்குச் சாத்தியமாகாது என்று தோன்றியது .

‘கிர்ர்ச் …’

திடீரென்று போடப்பட்ட காரின் பிரேக் சப்தம் அவனைத் திரும்ப வைத்தது . நடமாட்டமே இல்லாமல் இருந்த வீதி பரபரப்பாக மாறிப் போயிருந்தது . மழை குறையாது என்பது தெரிந்து விரித்த குடையுடன் நடமாட்டம் ஆர்ம்பமாகியிருந்தது.

அப்படி விரித்த குடையுடன் சாலையைக் கடந்த ஒருவன் மீது மோதலைத் தவிர்க்கவே அந்தக் கார் அவ்வளவு வேகமாக நிறுத்தப் பட்டிருந்தது . காரின் மூடிய கண்ணாடிக்குள் காரை ஓட்டியவர் கையை ஆட்டி ஏதோ திட்ட அடிபட இருந்தவனும் பதிலுக்குக் கையை ஆட்டித் திட்டினான் . கார் கிளம்பிவிட்டது .

முனுசாமி சாலையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் . விரித்த குடையுடன் மழையை வென்றுவிட்ட கூட்டம் . இத்தனை பேருக்கும் மழை வரும் என்று எப்படி தெரியும் ? குடை மழைக்கு மட்டுமில்லை வெயிலுக்கும்தான் என்பது புரிபட சந்தேகம் அகன்றது .

கீழே விழும் மழைத் துளிகளைத் தன்மீது தாங்கி அவற்றின் திசையைத் திருப்பி , தன் கீழுள்ளவர்களைக் காப்பாற்றும் குடைகளை வேடிக்கை பார்த்தான் . ஒரு குடை போல இன்னொரு குடை இல்லாத விபரம் கவனித்தான் .

எத்தனை வகைக் குடைகள்! கறுத்த பூதம் தலை விரித்தாடுவது போன்ற தாத்தாக் குடைகள்தான் நிறைய . சில புதிது . சில பழசிலும் பழசு. அங்கங்கே ஓட்டைகள் . ஒட்டல்கள் . சிறிய குடைகள் . பெரிய குடைகள். நடுத்தரம். முரட்டுத்துணி. பளபளவென்ற மென்மைத் துணி.

கறுப்பர்களுக்கு நடுவே வெள்ளையர்களாக வித வித வர்ணங்களில் , விதவித மாதிரிகளில் புதுவகைக் குடைகள் . சிறிதென்றாலும் அழகாக இருந்தன . மழைத் துளிகள் கூட அவற்றின் மீது விழும் போது , அவற்றின் மென்மை கண்டு உக்கிரம் குறைந்து விடுவதாகத் தோன்றியது .சிவப்பு , பச்சை , நீலம் , மஞ்சள் , வட்டங்கள் , பூக்கள் , பட்டைக் கோடுகள் , மெல்லிய கோடுகள் , எத்தனை விதக் குடைகள் !

குடைகளின் அழகில் லயிதிருந்தபோதுதான் தோன்றியது . ஒரு குடை வாங்கினால் என்ன?

குடை வாங்கிவிட்டால் நனையாமல் பஸ் நிற்கும் இடம் வரை , ஏன் பஸ் நிலையத்திற்கே போய்விடலாம் . மழை நேரத்தில் கடைக்குப் போய்வரலாம் . அவனைவிட மல்லிகாவுக்கு குடை அதிகம் பயன்படும் . மழை இல்லாத நேரங்களில் கூட மத்தியான வெயிலில் காயாமல் இருக்கலாம் . வெயிலோ , மழையோ கவலைப்படாமல் அவசர வேலைகளுக்கு வெளியே போய் வரலாம் .

மனம் அடுக்கடுக்காய் காரணங்களை உருவாக்கியது . ஒரு முடிவுக்கு வந்தவனாக கடைக்குள் பார்த்தான் . விதவிதமான குடைகள் தொங்கிக் கொண்டிருந்தன . விலை பற்றிய பயம் சட்டென வந்தது .நூறு ரூபாய்க்குள் இருந்தால் வாங்கி விடுவது என்று உள்ளே நுழைந்தான் .

”வாங்க … என்ன வேணும் ?”. கல்லாவில் இருந்தவர் குரல் மிகவும் அந்நியோன்யமாக வெளிவந்தது.

“குடை வேணும் பாய்.”

“பாருங்க நெறைய இருக்கு … ஸெய்யது ! சாருக்கு குடை காட்டு.”

பையன் விதவிதமான குடைகளைக் காட்டினான் . விலை சொன்னான் . முனுசாமி எதை வாங்குவது என்று குழ்ம்பினான் .

“இதா இத வாங்கிக்குங்க . நாலு பேரு தாராளமாப் போகலாம் . ஃபஸ்ட் கிளாஸ் துணி . கம்பி ஜாயிண்டெல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கும் . கம்பெனி அந்த மாதிரி . இதே கம்பெனி குடை ஒண்ணு நம்ம வீட்ல பதினஞ்சு வருஷமா இருக்கு . “ அவன் குழப்பத்தை உணர்ந்த கடைக்காரர் கையில் விரித்த குடையுடன் சொன்னார் . முனுசாமியின் பார்வை மீண்டும் மேலே தொங்கிய வர்ணக் குடைகளிடம் சென்றது .

“அதெல்லாம் பார்க்க நல்லா இருக்கும் . ஒரு ஆள்தான் போகலாம். கொஞ்சம் காத்து பலமா வீசினா வானம் பார்க்க மடங்கிக்கும். இதய வாங்கிக்க. தொன்னூறு விலை. எண்பத்தஞ்சு கொடு”.

முனுசாமி குடையை வாங்கிக் கொண்டான் . பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான் . மழையின் தீவிரம் குறையவில்லை.

குடையை விரித்தான் . கடைவீதியில் இறங்கி நடந்தான் . தலைக்கு மேல் மழை குடையில் விழுந்து தடதடத்தது.மழையை வென்றுவிட்ட பெருமிதத்தில் நடை வேகமாக விழுந்தது .

பஸ் நிலையத்தில் புறப்பட தயாராக, எல்லா ஜன்னல்களும் மூடப்பட்ட பஸ் நின்று கொண்டிருந்தது . ஏறினான். காலியாக இருந்த இடத்தில் உட்கார்ந்து மடக்கிய குடையை கால்களுக்கு இடையே வைத்துக் கொண்டான் .

ஐந்து நிமிடத்தில் பஸ் நிரம்பிவிட்டது. பஸ் முழுவதும் சொதசொதவென்று ஈரம் . அநேகமாக பாதி பேர் முழுக்க நனைந்திருந்தார்கள் . குடை இல்லாதவர்கள் .

நடத்துனர் விசிலடிக்க பஸ் புறப்பட்டது. ஓடும் பஸ்ஸின் மேலும், பக்கவாட்டிலும் மழையின் தடதட ஓசை . ஓட்டுநர் பஸ்ஸை மெதுவாகத்தான் ஓட்டினார் . முன் கண்ணாடியில் அடர்த்தியான மழைத் தாரை . போகப் போகக் கூட்டம் அதிகமானது .

ஆற்றுப்பாலம் தாண்டி மூலக்கடையில் பஸ் நின்றதும், முனுசாமி கூட்டத்தில் நுழைந்து வெளியேறி இறங்கினான் . மழை பலமாகப் பெய்து கொண்டிருந்தது . குடையை விரித்துப் பிடித்தான் . பிரிவு பாதையில் நடந்தான். ஒரு மைல் போக வேண்டும். வழியில் வேறு யாருமில்லை . நல்ல இருட்டு . மழையின் தடதடப்பும், மழை நீர் ஓடும் சலசலப்பும் , தவளைகளின் கொணகொணப்பும் காதை அடைத்தது.

குடையின் உதவியால் முழங்காலுக்கு மேல் நனையவில்லை. குடை இல்லாமல் இருந்தால் சுத்தமாக நனைந்திருப்போம் என்று நினைத்துக்கொண்டான். சட்டைப் பையில் இருந்து பீடியை எடுத்து , நின்று பற்ற வைத்துக்கொண்டு மீண்டும் நடந்தான்.

வெகு தூரத்தில் இருந்தே முனியப்பன் கோவிலருகே காணப்பட்ட பரபரப்பு தெரிந்தது . அந்த நேரத்தில் கோவிலில் ஏன் அவ்வளவு கூட்டம் . பண்டிகை தினம் இல்லை . பாதி வழியில் மழையில் சிக்கிக் கொண்டவர்களா ? சிம்னி விளக்குகளின் ‘ முணுக் முணுக் ‘ மழைக்குள்ளாகத் தெரிந்தது . பீடியைத் தூர எறிந்து விட்டு நடையைத் துரிதப்படுத்தினான் .

முனியப்பன் கோவிலின் கூரை வேய்ந்த பகுதியில் கூட்டம் நிரம்பி வழிந்தது . முனியப்பன் முன்னால் தொங்கிய பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெளிச்சம் ‘ பளீர் ‘ என்று மிதந்து கொண்டிருந்தது .

அத்தனையும் அவன் ஊர் ஆட்கள்தான். ஏன் இங்கே நிற்கிறார்கள்?

“முனுசாமியா ? “ ஊர்ப் பெரியவர் வேலுச்சாமி கண்களை, கைகளால் இடுக்கிப் பார்த்தார் .

“ஆமாண்ணே ! … ஏன் எல்லோரும் இங்கே நிக்கீங்க?”

“அத ஏன் கேட்கறே . தெக்க மலையில காலையில இருந்தே பேய் மழை . திடீர்னு காட்டாறு ரொம்பி கரையெல்லாம் ஓடுது . நம்ம இடத்தில எல்லாம் ஓராளு உயரத்துக்கு தண்ணி . இந்நேரம் அதையும் தாண்டியிருக்கும் . நல்லவேளை முதல்லய கையில கெடச்சதை எடுத்துக்கிட்டு ஓடியாந்துட்டோம் . “

“ஆளுங்க யாருக்கும் … “ முனுசாமி பதறினான் .

“நல்லவேளையா முனியப்பன் புண்ணியத்தில எல்லாரும் தப்பிச்சாச்சு . ஆடு , கோழிங்களைக்கூட ஓட்டியாந்துட்டோம் . குடிசைங்களும் , விட்டுவிட்டு வந்த சாமான்களும்தான் போச்சு . சரி சரி முதல்ல போய் உம் பொஞ்சாதியப் பாரு . அந்தா அந்தக் கொட்டகையில பொம்பளைக எல்லாம் ஒதுங்கியிருக்காளுக . உன்னைக் காணமேன்னு விசனத்தோட இருக்கு . அட்டே !… குடை வாங்கினியா ? … அதான் நனையாம வந்திருக்கே . “

முனுசாமி பதில் கூறாமல் குடையை மடக்கினான் . வேலுச்சாமி அருகில் அதைச் சாய்த்து வைத்துவிட்டு வெளியே வந்து நனைந்தவாறே பக்கத்து கொட்டகை நோக்கி நடந்தான் .

“குடையை வச்சுட்டு நனைஞ்சுக்கிட்டு போறியே!”

நிரந்தரக் கூரையை இழந்துவிட்ட சோகத்திலும், மீண்டும் அதை உருவாக்க, பட வேண்டிய கஷ்டத்தைப் பற்றிய சிந்தனையிலும், முனுசாமி தற்காலிகமாக மழையில் நனைவதைப் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டிருந்தான் .

“பைத்தியக்காரனா இருக்கானே! புதுக் குடையை வச்சுகிட்டு இப்படி நனையறானே”. வேலுச்சாமி குடையை விரித்துப் பிடித்தவாறே வெளியே வந்து நின்று மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

– 1993 அக்டோபர் சுபமங்களாவில் வெளியாகி , அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக இலக்கிய சிந்தனை அமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது .

தேர்ந்தெடுத்தவர்: எஸ்.ராமகிருஷ்ணன்.

“ உருவ கட்டுப்பாட்டில், அழகில், கவிதையின் தரத்தைத் தொடும் கதை இது” – எஸ்.ராமகிருஷ்ணன் .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *