சுபா நிமிடக் கதைகள்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 19,665 
 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

ரொம்ப வருடங்கள் கழித்து நாக்பூர் சித்தப்பா வரப்போவதாக போன் செய்தார். அம்மாவிடம் சொன்னதும்,,,

“அவரோட கொள்ளிக் கண் பட்டா துளசிச் செடியே பட்டுப்போயிடுமேடா! இதப் பாரு… குரோம்பேட்டையில வீடு கட்டியிருக்கேன்… பிரமோஷனுக்கப்புறம் 40,000 சம்பளம்னு எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காதே!” என்று எச்சரித்தாள்.

ரயில்வே ஸ்டேஷனில்…

ரயிலிலிருந்து எல்லாரும் இறங்கி விட்டிருந்தார்கள். சித்தப்பா மட்டும் இறங்காமல் உட்கார்ந்திருந்தார்.

என் குரல் கேட்டதும், என் கைகளை ஆசையுடன் பற்றினார். உடலெங்கும் தடவினார். “நல்லா இருக்கியா நாகு? உன் முகம்கூடத் தெரியலைடா..! கண்ல ஏதோ கோளாறு. பார்வை மங்கிட்டே வந்து இப்ப சுத்தமா ஒண்ணும் தெரி யலை. அம்மா எப்படியிருக்கா?”

இந்தக் கண்களா கொள்ளிக் கண்கள்?

கல்லுளி மங்கன்

“அம்மா செத்துக் கிடக்கா… கண்ல ஒரு பொட்டுத் தண்ணி வருதா பாரு… சரியான கல்லுளி மங்கன்!”

“வீடு பூரா அழுகைச் சத்தம்… ஆனா, இவன் மட்டும் ஐஸ் வந்தாச்சா, ஐயர் வந்தாச்சா, சுடுகாட்டுக்குச் சொல்லியாச் சான்னு மெஷின் மாதிரி நடந்துக்கறானே, என்ன ஜென்மமோ?”

உறவினர்கள் சேதுவின் காதுபடப் பேசினர்.

எல்லாம் முடிந்து, எல்லோரும் கலைந்து போன பின், அம்மாவின் படத்தின் முன் சேது மண்டியிட்டு, குமுறிக் குமுறி அழுதான்… “ஒத்தையாப் பொறந்தவனுக்கு உதவி செய்ய யாருமில்லம்மா..! உனக்குச் செய்ய வேண்டியதைக் குறையில்லாம செஞ்சு முடிக்கிற வரைக்கும் எனக்கு அழக்கூட நேரமில்லம்மா..!”

துரத்தாதே!

மஞ்சுளாவுக்கு அச்சத்தில் மிக வியர்த்திருந்தது. புத்தகங்களை நெஞ்சோடு அணைத்தபடி திரும்பிப் பார்த்தாள். அந்த இளைஞன் அதே இடைவெளி விட்டுத் தொடர்ந்துகொண்டு இருந்தான்.

நடையைத் துரிதப்படுத்தினாள்.அவன் நடையிலும் வேகம் கூடியது.

நிற்கச் சொல்லி சைகை வேறு செய்கிறான், ராஸ்கல்..! பயந்து நடுங்கி னால், வீடு வரை வந்துவிடுவான்.

நின்றாள். திரும்பினாள். “ஏய்.. யார்றா நீ? பஸ்ல பக்கத்துல நின்னு வந்தாப் போதுமே… பின்னாலேயே துரத்திட்டு வருவீங்களே! ரெண்டே நாள்ல லவ் லெட்டர் கொடுப்பீங்க… அப்படித்தானே! செருப்பு பிஞ்சிடும்!”

அவன் நடுங்கியபடி சொன்னான்… “ஸாரி சிஸ்டர்..! பஸ்ல நீங்க நிக்கும் போது புக்ஸைக் கொடுத்திருந்தீங்களே, அதே அம்மாகிட்டதான் நானும் கொடுத்திருந்தேன். அவசரத்துல என் புக்ஸையும் சேர்த்து வாங்கிட்டு இறங் கிட்டீங்க..! அதைத் திருப்பிக் கொடுத்தா போதும்!”

தப்புதான்

‘‘ஐயா… இப்படித் தடால்னு என் புருஷனை வேலையை விட்டு எடுத்துட்டா, எங்கேய்யா போவோம்? கொஞ்சம் கருணை வையுங்க ஐயா!” & கணவனின் முதலாளி முன் தேவகி தலை குனிந்தபடி அழுது இறைஞ்சினாள்.

“இதோ பார், எதை வேணும்னாலும் பொறுத்துப்பேன்.. ஆனா, ஒழுக்கமில்லாம நடந்துக்கிட்டா பொறுக்க மாட்டேன். உன் புருஷனை நம்பிக் கொடுத்த பணத்தை பேங்க்ல கட்டாம ஏமாத்திட்டான்..!’’

“தப்புதான்யா! பசங்க ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்காக எடுத்துட்டாருங்க. அந்தப் பணத்தை நான் கொண்டுவந்திருக்கேன்!’‘

“பணம் இருக்கட்டும். அவனுக்கு பதிலா உனக்கு வேலை தரேன். சம்பளம் கூடவே போட்டுத் தரேன். என்ன சொல்றே?” & முதலாளியின் கை தேவகி யின் தோளில் பதிந்தது.

“யாரை வேணும்னாலும் பொறுத் துப்பேன்… ஆனா, பேச்சுல மட்டும் ஒழுக் கத்தை வெச்சிருக்கிறவங்களைப் பொறுத் துக்க மாட்டேன். எடுரா, கையை!”

தலை நிமிர்ந்து வெளியே வந்தாள் தேவகி.

வெளியான தேதி: 27 டிசம்பர் 2006

Print Friendly, PDF & Email

1 thought on “சுபா நிமிடக் கதைகள்!

  1. வழக்கம் போல சுபாவின் கை வண்ணத்தில் நிமிட கதைகள் நன்றாக இருந்தது பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *