கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 5,968 
 

கி.பி. 2030

வியாஸின் இன்பமான பொழுதுகள், தன் ஏழு வயது மகள் சுஹாவிடம் மாலை நேரங்களில் விளையாடுவதுதான்.

ஒரு சிவில் எஞ்சினியரான வியாஸ் தன் அலுவலக டென்ஷன் முழுவதும் மறந்து அவளுடன் விளையடுவதும், கேள்விகளுக்கு பதில் சொல்வதிலும், கிண்டல் செய்வதும், பார்ப்பவர்களை கூட வசீகா¢க்கும். அவள் கேள்விகள் சில நேரங்களில் குழந்தைத் தனமாகவும் சில நேரங்களில் புதிராகவும், சில நேரங்களில் புதிதாகவும், புலப்படும்.

அன்று, அலுவலகத்திலிருந்து வந்து உடை மாற்றிக்கொண்டு, மெதுவாக சோபாவில் அமர்ந்த்து சுஹாவைப் பார்த்து, “சுஹா இன்னிக்கி ஸ்மார்ட் க்லாஸ்ல என்ன சொல்லித்தந்தாங்க?” என்றான்.

சுஹா சுவாதீனமாக அவன் மீது ஏறி அமர்ந்து கொண்டு “டாடி இன்னிக்கி ரெய்ன் பத்தி சொல்லித்தந்தாங்க, சூப்பரா இருந்துச்சு” என்றாள் குதூகலத்துடன்

ஏறக்குறைய பத்தாண்டுகளாக மழையே இல்லாததால், வியாசுக்கே மழையைப் பற்றிய அவளிடம் கேட்க வேண்டும் போலிருந்தது. “நிஜம்மாவா எங்கே என்ன சொலித்தந்தாங்க சொல்லு? ” என்றான் சுவரசியத்துடன்.

மேகம் (க்ளவுட்), இடி, மின்னல், வெள்ளம், என இரு கைகளையும் தூக்கி ஸ்மார்ட் டீச்சர் சொல்லித்தந்ததை அப்படியே அபினயித்துக்கொண்டிருந்தாள். கொஞ்சம் யோசித்து ஏதோ கேட்க நினைத்தாள். அதற்குள்,

சமையலரையிலிருந்து வந்த அவன் மனைவி நிலா, ”திரும்ப அப்பா கிட்ட ஆரம்பிச்சுட்டியா உன் மழை புராணத்தை, மொதல்ல கீழ ஏறங்கு, அப்பா டிபன் சாப்பிடட்டும் ” என்றாள்.

வியாஸ், மனைவியிடமிருந்த தட்டை வாங்கிக்கொண்டு , “கொஞ்சம் இரு, அவ எதோ சொல்ல வரா, சொல்லட்டும்” என்று சுஹாவை அருகில் அமர்த்திக்கொண்டு “ம் மேல சொல்லு ” என்றான்.

மீண்டும் சிறிது நேரம் யோசித்து ” டாடி மழைல்லாம் நிஜமா டாடி?” என்றாள்.

நிலா, “இன்னும் கொஞ்ச நாள் போனா எங்களுக்கே அந்த டவுட் வந்துரும் போலிருக்கு” என்று அலுத்துக்கொண்டாள்.

வியாஸ், “ஏய் கொழந்தைங்க கேள்வி கேட்டா ஒழுங்கா பதில் சொல்லணும்,” என்று சுஹாவிடம் திரும்பி “முன்னாடில்லாம் மழை நிஜம்மாவே வந்ததுச்சும்மா, இப்ப தான் ‘க்லோபல் வார்மிங்’ காரணமா மழை வரதே நின்னுபோச்சு, ஆமா உனக்கு ஏன் இந்த டவுட் வந்துச்சு?” என்றான் அவளைப் பார்த்து.

சுஹா, “பக்கத்து வீட்டு ‘வர்ஷா’ இல்ல அவதான், மழைல்லாம் சும்மா டூப்புன்னும், மேல வானத்துல தான் ஓண்ணுமே இல்லயே அங்கேந்து எப்புடி தண்ணி வரும்னு, அதுவும் க்ளவுட்லேர்ந்து, க்ளவுட்னா ஸ்டோரேஜ் தானேன்னு?” கேக்கறா

வ்யாஸ், “இல்ல சுஹா, இந்த கிளவுட் வேற, அந்த காலத்தில நானு அம்மால்லாம் மழைல நனைஞ்சிருக்கோம், இப்ப தான் கொஞ்ச வருஷமா மழை பெய்ரதில்லை”

சுஹா, “அப்ப ரெய்ன் எப்படி பெய்யும்னு காட்டமுடியுமா டாடி?”

“முடியுமே!” என்றான் .

“இப்பவே டாடி, ப்ளீஸ் ” என்றாள் ஆவலுடன்.

“இப்ப முடியாது சண்டே உனக்கு கட்டாயம் ரெய்னை வரவெச்சி காமிக்கிறேன்” என்று அவளிடம் உறுதியளித்தான்.

“ஹையா ஜாலி” என்று வர்ஷாவிடம் விஷயத்தை சொல்ல அவன் மடியில் இருந்து இறங்கி வெளியே ஓடினாள்.

எத்தனையோ பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளை வடிவமைப்பவன், செயற்கை மழையை உருவாகமுடியாதா என்ன? என்று யோசித்தான், அலுவலகத்தில் ‘ஃபயர் சேஃப்டி ட்ரில்லில்’ ஃபயர் எங்ஜினை இயக்கியபோது, அது ஒரு ஆங்கிளில் மழைத்துளிகளாக விழுந்தது ஞாபகத்திற்கு வந்தது. சினிமாவில் கூட வருமே அதுபோல் செய்து காட்டவேண்டியதுதான் என்று நினைத்து விடுவிடுவென காரியத்தில் இறங்கினான்

ஞாயிற்றுக்கிழமை

அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடம் அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் திறந்த வெளியில் கூடியிருந்தனர்.

ஒரு ஓரத்தில் வியாஸ் நின்று கொண்டிருந்தான். அவனருகே நிலாவும், கையைபிடித்துக்கொண்டு மிகுந்த ஆவலுடன் சுஹாவும், வர்ஷாவும் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்

வியாஸ் சைகை செய்தவுடன், ஃபயர் எஞ்சினிலிருந்து ஒரு சிரு துளையின் மூலம் மிகுந்த அழுத்தத்துடன் நீர் வானை நோக்கி செலுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மெல்லிய சாரலாக வானிலிருந்து விழுந்தது.

அப்போது சூரியனின் கதிர் கழே விழுந்த நீர்த்துளியில் பட்டு தோன்றிய வானவில் மறைய நெடு நேரமாகியது.

வர்ஷா கேட்டாள் சுஹாவிடம், “இதான் ரெய்னா?” என்று.

“இல்லை வர்ஷா, இது ரெய்ன் இல்லை, ரெய்ன் மாதிரி” என்று அவளுக்கு விளக்கமளித்தான், வியாஸ்

அந்த குடியிருப்பிலிருந்த அனைவரும் அன்று மழையை ரசித்தனர். கடந்த சில ஆண்டுகளாக அங்கிருந்த யாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காத்தால், அனைவரும் மழையில் நனைந்து மகிழ்ந்தனர்.

அன்று மதியம்..

திடீரென்று நிலா, அந்த பேப்பரை காட்டி, “ஏங்க, கடவுள் பற்றி சத்யானந்தாவோட சொற்பொழிவாம், போலாமா?”

வியாஸ¤ம் நிலாவும் திருமணாமான இந்த எட்டு வருடங்களில் சண்டையிட்டுக்கொள்வது கடவுள் விஷயத்தில் மட்டுமே.

“வேற எதாவது உருப்படியா சொல்லு”

“பெரிய ஞானிங்க அவரு”.

“ஆமா சர்டி·பிகேட் குடுக்கும் போது நீ தான் பக்கத்தில இருந்த?”

“டாடி ப்ளீஸ் போலாம்,” என்றாள் சுஹா,

“போரடிச்சா எந்திரிச்சு வந்துடலாங்க” என்றாள் நிலா

சுஹாவின் வற்புறுத்தலுக்கிணங்க வியாஸ் சொற்பொழிவுக்கு வர சம்மத்தித்தான்.

மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது அந்த மேடை. சத்யாநந்தாவை பார்ப்பதற்கும், அவர் உரையை கேட்பதற்க்கும் அந்த எசி. ஹாலில். பக்தர்கள் கூட்டம் திரண்டிருந்தது.

திடீரென கூட்டத்தினிடையே மெல்லிதான சலசலப்பு.

மெல்ல சத்யானந்தா மேடையில் தோன்றி பின்னர் மெல்ல தன் சொர்பொழிவைத் தொடங்கினார்.

“இந்துமதம், கிறித்துவம், இசுலாம் போன்ற மதங்களில் கடவுள் பற்றி குறிப்பிட்டுள்ள அனைத்தும் ஒன்றே என்று சிறிது நேரம் விளக்கினார். பின்பு, கங்கை, ஜம்ஜம் என்று நீர் எல்லாவற்றிலும் பிரதானமாக இருப்பதை சுட்டிக்காட்டினார். பேர் வேற வேறயா இருந்தாலும் பொதுவா எல்லாமே தண்ணிதான, அதே மாதிரி தான் கடவுளும். இன்னும் சொல்லபோனா கடவுளை நீங்க தனியா தேடிப்போகவேண்டியதே இல்லை” என்று சொன்னபோது,

வியாஸ் கூட்டதிலிருந்து திடீரென்று எழுந்து “அப்ப கடவுள் நமக்குள்ளேயே இருக்கார்னு சொல்றிங்களா?”என்று கேட்டான்.

இதை எதிர்பார்க்காத அவர் சற்று சுதாரித்து “இல்லை, கடவுள் நமக்குள் இல்லை, உண்மையில் நாம எல்லாருமே கடவுளோட பிரதி பிம்பங்கள்தான், நாம் தான் அதை சில நேரங்களில ஏன் பல நேரங்கள்ல உணர்றதில்லை.” என்று அவனுக்கு பதிலளித்தார்

“கொஞ்சம் புரியறா மாதிரி சொல்ல முடியுமா?” என்றான் வியாஸ்

“நாம எல்லாருமே கடவுளுடைய பிரதி பிம்பங்கள் தான். இந்த கடவுள் தன்மை சில நேரங்களில, பிரதி பலன் எதிர்பார்க்காம நம செலுத்துற அன்பு மூலம் வெளிப்படும். தாயன்பு, பெற்றவர் மீது உள்ள பாசம், கற்பு, ஏன் ஆண் பெண்ணுகிடையே வர்ற காதல் கூட நம்முடைய கடவுள் தன்மையுடைய வெளிப்பாடுதான், அதனால தானே தெய்வீகக் காதல்னு சொல்றோம், கற்புக்கு கடவுள்னு கண்ணகியை கடவுளா ஏத்துக்கறோம், புராணத்தில வர்ற கதைகள்ல கூட, ஏதோ ஒண்ணை எதிர்ப்பர்த்து தவம் செய்வாங்க, கடவுள் தோன்றி வரம் கொடுப்பார், வரம் கொடுக்கிற அந்த கருணை, அன்பு இல்லைன்னா கடவுள் ஏது?. பொதுவா வரம் கொடுக்காத யாரையுமே நாம கடவுளா ஏத்துகிறதில்லையே!, கரெக்ட் தனே? நம்மோட வாழ்ந்தவங்க பலபேர் கடவுளா போற்றப்பட்டிருக்காங்கன்றதை “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்”னு வள்ளுவர் கூட அழகா சொல்லியிருக்கார்.

வியாஸ் இடைமறித்து “இதெல்லாம் எல்லாரும் சொல்ற பொதுவான விளக்கம் தானே?, புத்தர், ஏசுநாதர், நபிகள் போன்றவர்களெல்லாம் ஒத்துகிட்டா கூட நம்ம மதத்துல இருக்கிற சில கடவுளெல்லம்தானே ஏத்துக்க முடியலை” என்றன்

“ஏன்” என்றார் சத்யானந்தா அவனிடம் விளக்கத்தை எதிர்பார்த்து

“கோவில்ல இருக்குற சிலைகளெல்லாம் பார்த்தா, கொஞ்சமாவது ஏத்துக்கிற மாதிரியா இருக்கு மிருகத் தலை மனித உடல்னு” என்றான் சற்று ஏளனத்துடன்

“இது மாதிரி விஷயங்கள் நம்ம மதத்தில மட்டும்னு இல்ல, எல்லா நாட்டிலேயும், எல்லா மதத்திலேயும் இருக்கு, பண்டைய கிரேக்கத்தில கூட மனித உடல் சிங்கத் தலைன்னு ஸ்பின்க்ஸ் பற்றி குறிப்புகள் இருக்கு, என்ன நம்ம நாட்டுல இதெல்லாம் போற்றி பாதுகாத்துட்டு வ்ர்றோம். மேலும் ஒரு சில விஷயங்களை நாம புரிஞ்ஜிக்கணும்னா நமக்கு திறந்த மனம் வேணும், ஒபன் மைன்டட்னெஸ்னு சொல்வாங்க, இன்னமும் ஒரு படி மேலே போய் சொல்லணும்னா இதுபோன்ற விஷயத்தில் சில வெளி நாட்டவருக்கு இருக்கும் திறந்த மனம் கூட நம்மவர்களிடம் இல்லை, உதாரணத்துக்கு இதே மாதிரி ஒரு கடவுளான நரசிம்ம அவதாரத்தைப் பற்றி ஜெர்மன் அறிஞ்ர் மேக்ஸ் முல்லர் குறிப்பிடும் போது அது ஏன் ஒரு ‘மின் நிகழ்வா’ இருக்கக் கூடாதுன்னு கேட்கிறார்”

“நம்ம முன்னோர்களும் அப்படியே சொல்லிருக்கலாம், எதை நாம பார்த்ததே இல்லையோ அதை எப்படி ஏத்துக்க முடியும்?” அவரை மட்க்குவதாக நினைத்துக் கேட்டான் வியாஸ்

சிறிது நேரம் அவனை உற்றுப் பார்த்தவர் “உண்மை, நாம எதை பாக்கலையோ அதை நம்மால ஏத்துக்க முடியாது, நம்பவும் முடியாது அதுக்காக அதெல்லாம் இல்லவே இல்லைன்னு சொல்லிட முடியுமா என்ன? இப்ப உதாரணத்துக்கு நம்ம ஜனரேஷன்ல எல்லாரும் மழையைப் பார்த்திருக்கோம், நமக்கு அடுத்த ஜனரேஷனுக்கு நாம சொல்றோம், அவங்களும் நம்புவாங்க, சரி ரெண்டு, மூணு ஜனஷனுக்கு பின்னாடி, இதே மாதிரி போச்சுன்னா கொஞ்சம் யோசிச்சு பாருங்க மழைன்னு ஒண்ணு இல்லவே இல்லை கற்பனைன்னு சொன்னாலும் சொல்வாங்க, அதனால நாம என்ன செய்வோம், செயற்கையாகவாவது மழையை உருவாக்க முடியுமான்னு முயற்சி செய்வோம். அது மாதிரிதான் நம்ம முன்னோர்களும் அவங்க பார்த்த, பேசின, தெரிந்த கடவுள்களை அவங்களுக்கு புலபட்ட, புரிந்த வகைல சிலைகளாக செய்து கோவில்களில் நிறுவினாங்க, இதெல்லாம் நடந்தது ஆயிரக்கணக்கன வருஷங்களுக்கு முன், இதை நாம் முதலில் உணரவேண்டும்” என்று அவர் கூறியபோது, கைத்தட்டல் அடங்க வெகு நேரமாகியது.

வேறு ஏதேனும் கேள்விகள் உண்டா?என்று வியாஸைப் பார்த்தவர் அவன் மேலும் கேள்விகள் கேட்காத நிலையில் தன் சொற்பொழிவை தொடர்ந்து தடங்கலின்றி நிகழ்த்தி முடித்தார்.

பின்பு அங்கிருந்த கூட்டம் மெல்ல வெளியேறத்துவங்கியது. வியாஸ் ஆழ்ந்த சிந்தனையுடன் நிலாவுடன், சுஹாவை கையில் பிடித்தபடி நடந்துகொண்டிருந்தான்.

அப்போது அவன் கவனம் கலைத்த சுஹா ”டாடி, மம்மி கடவுளைபத்தி ‘ஸ்பீச்’ன்னாங்க, எங்க ஸ்மார்ட் க்லாஸ்ல வர்ற மாதிரி ரெய்ன் பத்தில்லாம் சொல்றார்?” என்றாள்

“அவர் ரெய்ன் பத்தி சொன்னது நமக்காக“ என்றான் வியாஸ் தன்னையறியாமல்.

அவர்களை கடந்து சென்று கொண்டிருந்த சத்யானந்தா ‘இல்லை உனக்காக’ என்பது போல் அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *