கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 17,688 
 

பெஸீஹெட்(தென்னாபிரிக்கநாட்டுச்சிறுகதை)

ஜூலை மாதம் வேட்டைக்குரிய மாதம். பல காரணங்களுக்காக அக் காலநிலை வேட்டைக்கேற்ற பல அனுகூலங்களைக் கொண்டிருக்கிறது. ஜூன் மாத அறுவடைக் காலமானது அத் தறுவாயில் முடிந்திருக்கும் என்பதால் எல்லோரிடமுமே சோளம் இருக்கும். அச் சோளத்தோடு கலந்து சுவையான உணவாகக் கொள்ள ஏதேனும் தேவைப்படும். சாதாரணமாக இக் காலத்தில், அவ் வருடத்திற்கான மழை வீழ்ச்சி பெய்யுமெனில் கொடிய மிருகங்களைக் காணக் கிடைக்கும்.

பன்னிரண்டு மாதங்களிலும் மிக அதிகளவில் குளிரான மாதம் ஜூலை மாதம் என்பதனால் இறைச்சியைக் காய வைக்கையில் ஏனைய மாதங்களில் போல கெட்டுப் போகவோ புளுத்துப் போகவோ மாட்டாது. எனவே ஜூலை மாதத்தில் அனேக ஆண்கள் ஊரை விட்டுக் கிளம்பி விடுவார்கள். சிலர் வாரக் கணக்கிலும், சிலர் ஒரு மாதம் தாண்டியும் கூட ஊரைத் தாண்டி வெளியே இருப்பர். அவர்கள் அடர்ந்த வனாந்தரத்துக்குச் சென்று மிகக் கடினமாக வாழ்க்கையைக் கழிப்பர். மரங்களிலிருந்து கிளைகளை வெட்டியெடுத்து முக்கோண வடிவத்தில் நட்டு அதன் மேல் புற்களை கூரையாகப் பரப்பி கூடாரங்களையோ குடிசைகளையோ உருவாக்கிக் கொள்வர். இரவு நேரங்களில் ஓய்வெடுக்கவும் குளிரிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் அதற்குள் புகுந்துகொள்வர். சிங்கங்கள் நடமாடும் பகுதியொன்றுக்கு அவர்கள் வேட்டைக்காக வந்திருப்பின் சிங்கங்களை அச்சுருத்துவதற்காக தமது குடிசைக்கருகில் தீ மூட்டி விசாலமானதாக எரிய விட்டிருப்பர்.

அவர்களிடம் தமக்குச் சொந்தமான ரைபிள் துப்பாக்கிகள் இருந்தன. அதனைக் கொண்டு அவர்கள் ஆபிரிக்காவில் வசிக்கும் மான், மரை போன்ற விலங்குகளை வேட்டையாடி தமது குடும்பத்துக்கு மூன்று, நான்கு மாத காலங்களுக்குத் தேவையான இறைச்சியை சேகரித்துக் கொள்வர். பொதுவாக வேட்டைக் குழுவொன்று நான்கைந்து பேரைக் கொண்டதாக இருக்கும். இயன்றவரையில் சிறிய குழுக்களாக இருக்கவே அவர்கள் முயற்சிப்பர். மிருகங்கள் மனித வாடையை உணர்ந்தால் அவை தப்பிச் சென்று விடுமென அவர்கள் கதைத்துக் கொண்டனர்.

ராபுலா, டெபோகோ, லெசீட் மற்றும் கெலீபோன் ஆகிய நால்வரும் தோலோ என்பவனின் நடவடிக்கையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர். டிரக்டர் வண்டியொன்றும் அதனுடன் பொருத்தக் கூடிய ட்ரேலர் ஒன்றையும் சொந்தமாக வைத்திருக்கும் ஒருவன் அக் கிராமத்தில் தோலோ மட்டுமே. எனவே அவனுடன் வேட்டைக்குச் செல்ல எல்லோருமே ஆர்வம் காட்டினர். தோலோவின் டிரக்டர் வண்டியில் சென்றால் தேவையான அளவு இறைச்சியோடு இரண்டே நாட்களில் வீடு திரும்ப முடியும். அவற்றைத் தமது வீட்டு முற்றத்திலேயே காய வைக்கும் நடவடிக்கைகளில் ஓய்வு நேரங்களில் ஈடுபடலாம். அவர்களது மனைவிமார் அந்த இறைச்சியை சமைத்தெடுப்பர் என்பதனால் எதுவுமே வீணாகப் போய்விடாது.

இறுதியில் ராபுலாவாலும் டெபோகாவாலும் பொறுத்திருக்க முடியாமல் போயிற்று. அவர்கள் தோலோவின் முற்றத்துக்கு வந்தனர். தோலோ தனது டிரக்டரைத் திருத்தி, சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான். சோள அறுவடையை அந்த டிரக்டரில் ஏற்றிக் கொண்டு அப்பொழுதுதான் வந்திருந்தான்.

“நாங்க எப்ப போகலாம் தோலோ?” ராபுலா கேட்டான்.

தோலோ தனது வேலையைத் தொடர்ந்தவாறே அமைதியாக தலையை உயர்த்திப் பார்த்தான். அவன் அவர்களுடன் தனது விழிகளால் மட்டுமே புன்னகைத்தான். அவன் உயர்ந்து மெலிந்த உடலுடையவன்.

“இந்தத் தடவை என்னோட வருவியா?”

அவர்கள் நட்பாகப் புன்னகைத்து சாதாரணமாகக் கேட்டார்கள்.

“லெஸீட்டும் கெலீபோனும் கூட நம்மோட வருவாங்க.” ராபுலா கூறினான்.

தோலோ பூரண சம்மதத்துடன் தலையை அசைத்தான். ஒவ்வொரு முறையும் தன்னுடன் வரப் போவது யாரென்பது குறித்து தோலோ மிகவும் கவனமாக இருந்தான். டிரக்டரில் சென்று விலங்குகளை வேட்டையாடும் அதிர்ஷ்டம் தனது கிராமவாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

“நாளை விடிகாலையிலேயே எழும்பி காட்டுக்குப் போவோம்.” எனச் சொன்ன தோலோ தான் செய்து கொண்டிருந்த வேலையின் பக்கம் திரும்பினான். அது அவனது இயல்பு. வீண் அரட்டையடிப்பதோ ஊர் வம்பு கதைப்பதோ இல்லை.

இருவர் இருவராக திரும்பிச் செல்லத் திரும்பினர். தோலோவுக்குக் கேட்காத தொலைவுக்குச் சென்ற பிற்பாடும் குள்ளமாகவும் மிரட்டும்விதமாகவும் இருந்த ராபுலா தனக்குள் எழுந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிக் கொண்டிருந்தான்.

“என்னால தோலோவை புரிஞ்சுக்கவே முடியல.” என அவன் சொன்னான்.

“இவன் ஒரு பொம்பளையான்னு எனக்குத் தெரியல.” என கெலீபோன், தோலோவின் நற்குணத்தையும் நட்பாகப் பழகுவதையும் கிண்டலடித்தான். அவன் தலைவனைப் போன்ற ஒருவன். எனினும் நாம் கழிப்பதைப் போன்ற ஒரு சாதாரண வாழ்க்கையையே வாழ்கிறான்.

“தோலோ பற்றி கெலீபோன் சொன்னது நிஜம்தான்.” டெபோகோ கூறினான்.

“இந்த மாதிரியான மனுஷன்கிட்டத்தான் உண்மையான சக்தியொண்ணு இருக்கும்..இப்படியொரு நல்ல மனுஷன் நம்ம கூட இருக்குறது எங்க அதிர்ஷ்டம்னு முன்னாடி ஒரு நாள் அவன் சொல்லியிருக்கான்.”

தோலோ குறித்து எல்லோருமே அவன் ஒரு நல்ல மனிதனென்றே அறிந்திருந்தனர். அவனிடம் ஏதேனும் உதவி கேட்டுச் செல்லும்போது அவன் ஒருபோதும் அந்த வேண்டுகோளை நிராகரித்ததில்லை. அவனிடமிருக்கும் அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூட அவன் விருப்பத்துடனிருந்தான். எனினும் வாழ்க்கையின் அனைத்து சிக்கல்களிலிருந்தும் தப்பித்துச் செல்லும் பழக்கமொன்றும் அவனுக்குள்ளே இருப்பது தெரிந்தது. மனித வாழ்க்கையில் ஒழுங்குமுறையும் நன்மை மாத்திரமும் இருக்காது. எனினும் சுய கட்டுப்பாட்டுடன் வாழும் ஒழுங்குமுறையானது ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்க வேண்டும். அவன் தனது மனைவி மற்றும் தனது வேலைகள் குறித்து ஆழமாகச் சிந்தித்தே செயலாற்றினான்.

அவன் தனது மனைவியான தாட்டோவை மிகவும் கவனமாகவே தேர்ந்தெடுத்திருந்தான். நாகரிகத் தோற்றத்துடன் அவள் அமைதியானவளாகவும் குழப்பமடையாதவளாகவும் இருந்தாள். இந்தக் கணவனுக்கும் மனைவிக்குமிடையே இருந்த அன்னியோன்யத்தை எல்லாப் பெண்களுமே அறிந்திருந்தனர். தேவைக்கென கேட்டு வந்திருக்கும் எவர்க்கும் தன்னிடமிருக்கும் அனைத்தையுமே வழங்குவது தாட்டோவின் பழக்கம்.

தோலோ அவளை மணமுடித்துக் கூட்டி வருகையில், அவளைக் கைவிட்டுச் சென்ற அவளது முந்தைய கணவனுக்குப் பிறந்த மகளொருத்தியும் இருந்தாள். இக் காலத்தில் இது ஒரு சாதாரணமான விடயம். திருமணத்துக்கு முன்பே எவருடனாவது உறவைக் கொண்டு செல்வது அவசியம் என்றே இன்று அனேகர் எண்ணுகின்றனர். இதனால் இலவசமாகவே இந்த உறவைக் கொண்டு செல்ல முடிகிறது. அவர்களுக்கு பெண்கள் மேல் எவ்விதமான விஷேட ஈர்ப்பும் இல்லாததோடு உண்மையிலேயே பெண்களை மதிக்கவும் மாட்டார்கள். தம்மால் பெண்களுக்கு நிகழும் வன்முறைகளால் அப் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை. பெண் என்றால் பண்பற்ற, கசப்பான, எந்தப் பெறுமதியும் அற்றவள். அவளுக்கும் அன்பு செலுத்த வேண்டும் என அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.

தோலோவுடன் தொடர்பொன்று ஏற்பட்ட முதல் சந்தர்ப்பத்தில் அவனது அனுபவங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள தாட்டோ முயற்சித்தாள். குழந்தையொன்றைப் பெற்றுக் கொள்வதில் அவளுக்கு ஆட்சேபணை இல்லை. எவரும் குழந்தைகளை மறுக்க மாட்டார்கள். எனினும் ஆண்களின் நேர்மையற்ற தன்மையும் ஏமாற்றும் திறனும் அவளுக்குப் பிடிக்காதவை.

‘முட்டாள் பொம்பளைங்க’ அவள் கோபத்துடன் சொன்னாள். ‘ஆம்பளைங்களோட தேவைகளைப் பூர்த்தி செய்றதுக்காகப் பொம்பளைங்க இருக்காங்க. ஆனா படிச்ச பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் ஆம்பளைங்களுக்குத் தேவையா இருக்கு. ஆனா அவங்களையும் ரொம்ப மோசமாத்தான் கவனிக்கிறாங்க. பொம்பளைங்க அவங்களுக்காகவே வேலை செய்றாங்க. அவங்களுக்கு உபகாரம் பண்றாங்க. ஆனா கல்யாணத்தினால பொம்பளைங்களுக்கு எந்தவொரு சந்தோஷமும் கிடைக்குறதில்ல.”

சிறியதொரு இடைவெளி விட்டு ஏதொவொரு நிச்சயமற்ற தன்மையோடு அவள் தொடர்ந்தும் சொல்லிக் கொண்டே போனாள்.

“நான் ரொம்ப நாளா கல்யாணத்துக்காகக் காத்திருந்தேன். அதுக்கப்புறம்தான் குழந்தையொண்ணப் பெத்துக்கத் தீர்மானிச்சேன். எனக்கு வயசாகும்போது பிள்ளையில்லாத அம்மாவா இருக்குற நிலைமைக்கு என்னை ஆளாக்க வேணாம்.”

அவள் அடுப்பில் நெருப்பை மூட்டி களி கிண்டிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அங்கு வந்த மனிதனால் அவளது மனதில் உதித்த எண்ணங்கள் அனைத்தையும் அழித்து விட முடிந்தது.

தொடக்கத்தில் அவர்களது தொடர்பு ஆரம்பித்தது இவ்வாறுதான். முதலில் அவள் தனது மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் எண்ணங்களை அழித்து விட வேண்டும். ஆண் மகனொருவனைக் காதலிப்பதற்கு பெண்ணானவள் அதிக தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.

தோலோவின் டிரக்டர் வண்டியைப் பாவித்து தமது காணி நிலத்தைப் பண்படுத்திக் கொள்ள தாட்டோவின் தாய் நடவடிக்கைகளை மேற்கொண்டாள். டிரக்டர் வண்டியொன்று அவர்களது இடத்துக்கு வந்தது அதுதான் முதல் தடவை. வருடக் கணக்கில் அவர்களது நிலத்தை அவர்கள் எருமைகளைப் பயன்படுத்தியே செப்பனிட்டு வந்தார்கள். (அவர்களது காணியில் பெண்கள் மட்டுமே இருந்தனர். தாட்டோவின் தந்தை அவளது சிறு வயதிலேயே இறந்துவிட்டிருந்தார். அவள் தனது தாயோடும் சிறிய தங்கைகள் இருவரோடும் வசித்து வந்தாள்.)

டிரக்டர் வண்டியின் மூலம் நிலத்தைப் பண்படுத்துவதைப் பார்த்துக் கொண்டிருப்பதே புதிய அனுபவம். மழை பெய்திருந்ததால் புதிதாக ஈரலித்துப் போயிருந்த நிலத்தை, விவசாயக் கல்லூரியில் பெற்ற தொழில் அனுபவத்தைக் கொண்டு அவன் தோண்டிக் கொண்டிருந்தான். அவர் மிகச் சரியான முறையில் தனது வேலையைச் செய்துகொண்டிருந்தான். அன்று அந்தி சாயும் நேரமாகுகையில் அவர்களது நிலத்தைப் பண்படுத்துவதைப் பூர்த்தி செய்த அவன் வண்டியை வேறொரு வேலைக்காகக் கொண்டு சென்றான்.

இரவில் அவளது கனவு உலகத்தில் அசையாத உருவமொன்று நடமாடத் தொடங்கியது. அவள் அவனைத் தன்னோடு ஒப்பிட்டுப் பார்த்தாள். அவளது கஷ்டமான வாழ்க்கையை விடவும் அவன் தொலைதூரத்திலிருந்தான். அவளைப் போல இன்னும் பெண்கள் பலர் இருக்கக் கூடும். அவர்களுக்கும் அவளைப் போலவே எல்லா வேலைகளையும் செய்யக் கூடிய திறமைகளும் இருக்கக் கூடும். எனினும் அவர்களுக்கு வாழ்க்கையில் விஷேடமான மகிழ்ச்சி எதுவும் ஏற்பட்டிருக்காது.

அவர்கள் தொடர்ந்தும் புதியவர்களாக இருக்கவில்லை. அறுவடைக் காலம் முடிந்து விற்பனைச் சந்தைக்குச் சென்ற சந்தர்ப்பமொன்றில் அவள் அவனை மீண்டும் சந்தித்தாள். ‘காதல் என்பது விபத்துக்களை நோக்கிக் கையசைக்கும் பயங்கரமான ஒன்று’.

பெண்கள் இவ்வாறு சொல்லப் பழகியிருந்தார்கள். “எல்லா ஆம்பளைங்களுமே ஒண்ணு மாதிரித்தான். அவங்க ஒண்ணு ரெண்டு மாசம் ஒண்ணா சுத்திட்டு அப்புறம் நிரந்தரமாக் காணாமப் போயிடுவாங்க.”

எனினும் ‘ஏனையவர்களின் கதைகளை நான் கண்டுகொள்வதில்லை. அவன் இன்னும் பல பெண்களை அறிந்திருக்கக் கூடும். எனினும் எனக்கு அது ஒரு தடையல்ல.’ எனத் தீர்மானித்த தாட்டோ, தோலோவின் எதிர்காலம் குறித்து எந்தவொரு உறுதிப்பாடும் கிடைத்திராத நிலையிலேயே அவனுடனான தொடர்பினை வளர்த்துக் கொள்ளச் சம்மதித்தாள். இரு மாதங்கள் கழிந்த நிலையில் ஏதொவொரு தவறு நிகழ்ந்திருப்பதாகத் தென்பட்டது. அவன் காதல் குறித்து எந்த ஈடுபாட்டையும் காட்டவில்லை. அவள் மிகவும் கவலைக்குள்ளானாள். அவள் எந்தளவு வெறுப்புக்குள்ளானாளெனில், அவன் வருகை தரும் போது அவனை வரவேற்பதைக் கூட அவள் செய்யவில்லை.

“என்ன ஆகியிருக்கு உனக்கு?” என அவன் அமைதியாகக் கேட்டான். அவள் ஒரு கணம் எரியும் சுடர் போன்ற கூர்மையோடு அவனை நோக்கினாள். ஒரேயடியாக அவள் உடனடித் தீர்மானமொன்றை எடுத்தாள். அது அவனிடம் சொல்லியே ஆக வேண்டிய ஒரு பிரச்சினை. ‘ஆமாம். நான் குழந்தையை எதிர்பார்ப்பதாக அவனிடம் சொல்லி விடப் போகிறேன். எவ்வாறாயினும் நான் ஆண்களை வெறுக்கிறேன்’ எனத் தீர்மானித்த அவள் இறுதியில் உறுதியோடும் கோபத்தோடும் அவனிடம் அதனைச் சொல்லி விட்டாள். எனினும் அவன் அமைதியாகவே இருந்தான். அவள் கரிக் கட்டையொன்றை எடுத்து நிலத்தில் கோடு வரைந்தாள். அவளது நொந்து போயிருந்த மனதுக்குள் நேரடியாக ஊடுருவியபடி

“நாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்’ என அவன் அன்பாகக் கூறினான். “என்னால எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிடலாம்.”

எதிர்பாராத வகையில் அவனது அலங்காரமிக்க வாழ்க்கையுடன் தனது வாழ்க்கை இணையப் போவதை அவள் உணர்ந்தாள். பின்பு அமைதியாக லேசாய்ப் புன்னகைத்தாள். பண்டைய காலத்தைப் போல நிகழ்காலத்தில் திருமணத்தைத் திட்டமிடுவது பெற்றோர்களல்ல. ஆணும் பெண்ணும் தமது வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு கணவனும் மனைவியுமாக வாழ்க்கையை ஆரம்பித்து விடுகின்றனர்.

“என்னிடம் தர்றதுக்கு எதுவுமே இல்ல தோலோ’ அவள் மிகவும் கையாலாகாத நிலையில் சொன்னாள். “நாங்க ரொம்ப ஏழைங்கங்குறது உனக்குத் தெரிஞ்சிருக்கும். என்னால ரொம்ப நல்லா விவசாய வேலைகளைச் செய்ய முடியும்.”

அவன் அவளது முகத்தை வியப்போடு பார்த்தான். விழிகளால் புன்னகைத்தான். அச் சிரிப்பை உணர்ந்து கொள்ள அவளுக்குக் கொஞ்ச நேரம் பிடித்தது. அதன் அர்த்தம் அவன் இன்னுமொருவரது வாழ்க்கைக்குத் தடையாக இருப்பதைப் பார்க்க விரும்பவில்லை என்பதைப் போன்றது. ஆரம்பத்தில் அவள் அனைத்து விடயங்கள் குறித்தும் கவனமாக இருந்தாள். நிறைய நேரத்துக்குப் பிறகு அவர்களது உரையாடல் அறுவடை, விலங்கு வேளாண்மை, ஏனைய மனிதர்கள் போன்ற விடயங்களுக்குத் திரும்பியது. எனினும் அம் மாலை நேரத்தில் அவனுக்கு, அவளிடம் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்ல இயலாமல் போயிற்று. எதிர்பாராத அச் சுதந்திரத்தை அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான்.

அவனைப் போன்ற விவசாயிகளுக்கும் விலங்குப் பண்ணையாளர்களுக்கும் முக்கியமான இடமொன்று கிடைத்தது. அவனுக்கு அரச விவசாய தொழில் பயிற்சி நிலையத்தில் விஷேட இடமொன்று கிடைத்ததோடு, அவளது முந்தைய கணவனுடன் இணைந்து அவனது நிலத்தில் வேலை செய்யவும், விலங்குகளைப் பார்த்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவனுடன் இணைந்து அவ்வாறு திருமண வாழ்க்கையைக் கொண்டு செல்லக் கூடிய பெண்ணே அவனது தேவையாகவிருந்தது. இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்பிருந்த மக்களுக்கு இவ்வாறானதோர் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கவில்லை.

அவன் அவளைத் தனது குடும்பத்திடம் அறிமுகப்படுத்திய வேளையில் அவர்கள் தமது மறுப்பைத் தெரிவித்தனர். அவனது அத்தையொருத்தி எல்லாவற்றையும் சுருக்கமாக இவ்வாறு சொன்னாள். ‘அவள் வாழ்க்கைல நிறைய அனுபவங்களைப் பார்த்தவளொருத்தி. வயசானவள்.”

தாட்டோவின் முகத்தைப் பார்க்கையில், அவள் நன்கு யோசிக்கக் கூடியவளென அவர்களுக்குத் தென்பட்டது. ஆண் மகனொருவன் திறந்த மனதுடன் உள்ள, தன்னை விடவும் வயதில் பத்து வருடங்களாவது குறைந்த ஒருத்தியையே திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்களது திருமணம் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்துக்காவது நிலைத்திருக்கும்.

எவ்வாறாயினும் அவர்கள் மூன்று வருடங்களாக திருமண வாழ்க்கையில் இணைந்திருக்கின்றனர். வேலைகள் மற்றும் ஏனையவர்களின் தேவைகளுக்காகக் கலந்துகொள்ளச் செல்வதனால் அவர்களது திருமண பந்தத்திலிருந்த மகிழ்ச்சி மெதுவாக நீங்கிச் சென்றது. ராபுலாவும் டெபோகோவும் தமது முற்றத்திலிருந்து சென்ற உடனேயே தண்ணீர்க் குடமொன்றைத் தலையிலேந்தியபடி தாட்டோ வந்தாள். தனக்கு ஏதோவோர் தேவையிருப்பதை உணர்த்தும் விதத்தில் தோலோ அவளைப் பார்த்தான். அவள் அவனருகே சென்று டிரக்டர் வண்டியின் அருகே தண்ணீர்க் குடத்தை நிலத்தில் வைத்தாள்.

“ஏதாச்சும் கொண்டு போக ஏற்பாடு பண்றியா? நான் நாளைக்கு ராபுலாவோடும், டெபோகோ லேஸீட்டோடும், கெலீபோனோடும் வேட்டைக்குப் போக நினைச்சிருக்கேன்.”

அவள் டிரக்டர் வண்டியின் மீது தனது ஒரு கையை வைத்தாள். “இந்த வருஷத்துல மிருகங்கன்னா நல்லா வளர்ந்திருக்கு. ஆனா நம்ம தோட்டத்து வட்டக்கா, பூசணி, தர்ப்பூசணி எல்லாம் நோய் வந்தது மாதிரி சின்னதாப் போயிருக்கு.”

தீர்மானித்திருந்த படி அடுத்த நாள் விடிகாலையில் ஆண்கள் ஐந்து பேரும் தமது வேட்டைக்கான பயணத்தை ஆரம்பித்தனர். பெரிய மழைக்குப் பிற்பாடு மெல்லிய தென்றல் வீசுவதே வழமை. ஜூலை மாதமாகுகையில் எந்நாளும் வானம் நீல நிறத்தில் இருப்பதோடு குளிர்ந்த சூரியக் கீற்றுகளோடு மொத்த சூழலும் உறங்கச் செல்லத் தயாராவதைப் போன்றதொரு நிலையைக் காட்டும். தேனின் நிறத்தைக் கொண்ட புற்கள் குளிர்ந்த தென்றல் அலைகளில் சிக்கி அசைவது, ஆயிரக்கணக்கான சிறுமியர் தமது ஆடைகளை அசைத்து ஆடுவதைப் போன்றிருக்கும்.

இந்த அமைதியான சூழலுக்கே இந்த ஐவரும் வேட்டைக்காகச் சென்றிருந்தனர். அந் நாளின் மத்தியான வேளையாகும் போது அவர்களுக்கு, தமக்குத் தேவையான அளவு விலங்குகளை வேட்டையாட முடிந்ததோடு மாலையில் அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி விட்டனர். அன்றைய மாலைவேளை அனைத்து வீடுகளிலும் ஒரே களேபரம். பிள்ளைகள் சுட்ட இறைச்சியை தமது வயிறு வெடிக்குமளவுக்குச் சாப்பிட்டனர். அவர்கள் நீங்கிச் சென்ற பிற்பாடு பெரியவர்கள் முற்றங்களில் வெட்டவெளியில் நெருப்பை மூட்டி பெரிய இரும்புப் பாத்திரங்களில் இறைச்சியைச் சமைக்க ஆரம்பித்தனர். அடுத்த நாள் காலைவேளையில் அவர்களது வீட்டில் சமைக்கப்பட்ட இறைச்சியை உண்டு செல்ல விருந்தாளிகள் வருகை தரவிருக்கின்றனர்.

தோலோவுக்கு இந்த நாள் மிகவும் பிடிக்கும். இக் காட்சியை அவன் அநேகத் தடவைகள் கண்டிருக்கிறான். அவன் சிறியதொரு கதிரையில் அமர்ந்திருந்ததோடு அவனது மனைவி ஒரு காலை மடித்து நிலத்தில் அமர்ந்து நெருப்புச் சுடரைப் பார்த்தவாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

“என்ன சங்கதி?” ஒரு சந்தர்ப்பத்தில் அவன் கேட்டான்.

அவளால் எந்தவொரு கலவர நிலைக்கும் முகம் கொடுக்க முடியும். ஆனால் அவனால் முடியாது. ஏனைய பெண்களைப் போலவே அவளும் ஊர் விடயங்கள் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் ஈடுபாடு கொண்டிருந்தாள். எனவே அவளுக்கு ஊர் விடயங்கள் அனைத்தும் தெரிந்திருக்கும். எனினும் அதனை வெளிப்படுத்தும் போது தேர்ந்தெடுத்துச் சொல்வதில் அவள் தேர்ச்சி பெற்றிருந்தாள்.

அன்றைய மாலை நேரத்தில் அவனது ‘என்ன சங்கதி?’ எனும் கேள்விக்கு பதிலளிக்க அவள் தயாரானாள்.

‘மாட்டுக் கொட்டகையில ஒரு எருமை இன்னொரு வயதான எருமையோடு மோதிக் கொண்டதில பலத்த காயப்பட்டிருக்கு’

அவள் சிறியதொரு இடைவெளி விட்டுவிட்டு விழிகளைச் சுழற்றியபடி சொன்னாள்.

“ஊர்ல இன்னுமொரு பிரச்சினை. பிலீஷியாவுக்கும் அவளோட புருஷனுக்குமிடையில திரும்பவும் சண்டை. அவங்க சமீபத்துலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆனா பிலீஷியா கல்யாணம் முடிக்கிறதுக்கு முன்னாடியிருந்தே சாதாரணமாக நடந்து கொள்ளல. அதேபோல கல்யாணத்துக்கு அப்புறமும் எந்நாளும் புருஷனோட சண்டை போடத் தொடங்கினா. வெளி மனுஷங்களுக்கு அவங்களோட முற்றத்துல அவங்க சண்டை போடுற சத்தத்தத் தவிர வேறெதுவும் கேட்டிருக்காது.அவள் இந்த நாட்கள்ல விவசாய வேலைகள்ல ஈடுபட மாட்டேங்குறா. அவளோட புருஷன் ஏதோ நல்ல வேலையொண்ணுல இருக்குறதால அவ கொஞ்சம் ஓய்வெடுத்தா என்னன்னு கேட்குறாளாம். இப்ப புருஷனோட நிலைமையும் மாறியிருக்கு. அவன் இன்னிக்கு வேலையை விட்டு நின்னுட்டானாம். அவனும் கொஞ்சம் ஓய்வெடுக்கணும்னு சொல்றானாம். ஓய்வெடுக்குறதும், சும்மா காலங்கடத்துறதும் அவங்களுக்கு நல்ல பழக்கமான ஒண்ணுதான். இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்குறதுன்னு யாருக்குமே தெரியல. அவங்க பசியிலிருக்கையில பிற மனுஷங்கதான் உதவி செய்ய வேண்டியிருக்கும்.”

ஒவ்வொரு நாளும் மனிதர்களிடையே ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அவள் விபரிக்கத் தொடங்கினாள். சில காலத்துக்கு முன்பு ராபுலா கள்ளச்சாராயம் காய்ச்சும் இடமொன்றுக்குச் சென்று குடித்து விட்டு வந்து மனைவிக்கு அடித்த விடயத்தை அவன் தாட்டோவிடமிருந்து அறிந்து கொண்டான். அவள் அவனைத் திட்டுவதையும் கூட அறிந்து கொண்டான். இதற்கெல்லாம் என்ன செய்ய முடியும்? உலகில் எதையும் தேர்ந்தெடுத்துச் செய்ய இயலாது. அது எப்போதுமே வேதனையும் சிக்கலும் பின்னிப் பிணைந்தது. அவன், ராபுலா அங்கு வந்ததும் கருணையோடும் நட்போடும் புன்னகைத்தது அதனால்தான்.

– பெஸீஹெட்

எழுத்தாளர் பற்றி :

பெஸீ ஹெட் Bessie Head

தென்னாபிரிக்க பெண் எழுத்தாளரான பெஸீ ஹெட் 1937 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ஆறாம் திகதி பிறந்தவர். விருதுகள் பல பெற்ற பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புக்களையும் எழுதியுள்ள இவர் இன்றும் கூட ஆளுமை மிக்க எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

1950 களின் பின்னர் ஆசிரியையாகவும், ‘ட்ரம்’ எனும் சஞ்சிகையில் ஊடகவியலாளராகவும் கடமையாற்றிய இவர், அரசியல் நிலவரங்களின் காரணமாக 1964 ஆம் ஆண்டு பொஸ்த்வானாவிற்கு ஒரு அகதியாக புலம்பெயர்ந்தார். அங்கு 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி காலமான பெஸீ ஹெட்டின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பான ‘The Collector of Treasures’ எனும் தொகுப்பிலுள்ள ‘Hunting’ எனும் சிறுகதை இங்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

-மொ.பெ.

Print Friendly, PDF & Email

2 thoughts on “வேட்டை

  1. மொழிபெயர்ப்புக் கதைகளில் (கதைகளுக்கு முன்பு) கதாசிரியர் என்று மொழிபெயர்ப்பாளர் பெயரைக் குறிப்பிடுவது நியாயயமல்ல. மூல ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுவதே முறை!

    1. உங்கள் கருத்துக்கு நன்றி. கதையை மொழிபெயர்க்க அந்த ஆசிரியரின் முயற்சியை குறைத்து மதிப்படிய கூடாது என்பதால் இப்படி செய்து உள்ளோம். நிறைய பேர்க்கு மொழி பெயர்த்த ஆசிரியரின் பெயர் தெரியுமே ஒழிய உண்மையான ஆசியரின் பெயர் அறிமுகம் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *