கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 11,322 
 

இவன் வீட்டின் வாசற்படியை அடைந்தபோது, வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ஷே உரையாற்றிக்கொண்டு இருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு, தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான்.

‘உங்களைக் கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் வாழவைப்பது, என்னுடைய பொறுப்பு. நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன்’ என ராஜபக்ஷே தமிழில் பேசிக்கொண்டு இருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்ஷேவின் முகம் நிறைத்து இருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும், நவீனமாகவும், துல்லியமான ஒலி அமைப்புடனும், அது இருந்தது. வீட்டுக்காரரின் மகன் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியை, சவூதியில் இருந்து அனுப்பி இருக்கலாம். இவன் முகத்தைத் திருப்பி வீதியைப் பார்த்தான். வீதியில் இருள் மண்டிக்கிடந்தது.

இவன் சிறுவனாக இருந்தபோது, அம்மாவிடம் ஒரு தொலைக்காட்சி வாங்கும்படி இடைவிடாமல் நச்சரித்து இருக்கிறான். இறந்துபோன அப்பாவின் சொற்ப பென்ஷன் பணம் மட்டுமே இவர்களுக்கு வருமானம். அந்தப் பணத்தில்தான், அம்மா இவனையும் இவனது அக்காவையும் பட்டினி இல்லாமல், பள்ளிக்கூடம் அனுப்பிக்கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சி இருந்தது. இவனும் அக்காவும் இரவு நேரத்தில் இங்கே தொலைக்காட்சி பார்க்க வருவார்கள். அக்காவுக்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏனோ ஆர்வம் இல்லை. ஆனால், இருளில் தனியாக வருவதற்கு இவன் பயப்படுவான். அதனால், அக்காவைத் துணைக்கு அழைத்து வருவான். தரையில் அமர்ந்து இவன் கண் கொட்டாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு இருப்பான். சிறிது நேரமானதுமே அக்கா ‘வீட்ட போகலாமா?’ என முணுமுணுப்பாள். அது இவனது காதில் விழாது. அக்கா பொறுக்க முடியாமல் ரகசியமாக இவனது தொடையைக் கிள்ளும்போது, இன்னும் கொஞ்ச நேரம் என இவன் அக்காவிடம் மன்றாடுவான். வீட்டுக்காரர்கள் தேநீரும் அவித்த பனங் கிழங்கும் தருவார்கள். அக்கா வெட்கப்படுவாள். அவற்றை வாங்காவிட்டால், தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்க மாட்டார்களோ என்ற பதற்றத்திலேயே இவன் அவற்றை வாங்கிக்கொள்வான்.

இவன் வீட்டில் வெறும் தீப்பெட்டியின் மீது வெள்ளைத் தாளை ஒட்டி, நடுவே கத்தரித்து, பக்கவாட்டில் வர்ணம் தீட்டித் தொலைக்காட்சிப் பெட்டி செய்து விளையாடிக்கொண்டு இருப்பான். பள்ளிக்கூடம் எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் சில தீப்பெட்டித் தொலைக்காட்சிகள் இருக்கும். கொஞ்சம் வளர்ந்ததும், தொலைக்காட்சி பார்ப்பதற்காக இவன் கிராமத்துக் கடைத் தெருவுக்குப் போகத் தொடங்கினான். அங்கே இருந்த ‘மீனா கபே’யில் எப்போதும் வண்ணத் தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருக்கும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, இவன் வசியத்தில் விழுந்தவன்போல் இருப்பான். அந்த நேரங்களில் இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். எந்த நிகழ்ச்சியும் அவனுக்கு அலுப்பூட்டியதே இல்லை. அலைவரிசைக் குழப்பத்தால் அடிக்கடி தொலைக்காட்சியில் வெறும் புள்ளிகள் மட்டுமே தோன்றும். அந்தப் புள்ளிகளை, ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஓடி வந்துகொண்டு இருப்பதுபோல கற்பனை செய்துகொள்வான். தொலைக்காட்சியில் சில சமயங்களில் படம் மட்டும் வரும், ஒலி வராது. படத்துக்கு ஏற்ற ஒலிகளை இவனாகவே கற்பனை செய்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருப்பான். ஒலி மட்டும் வந்தாலும், படக் காட்சிகளை இவனால் கற்பனையில் உருவாக்கிக்கொள்ள முடியும். மின்சாரம் துண்டிக்கப்படும்போது வெறுமனே இவனால் தொலைக்காட்சியைக் கண் இமைக்காமல் பல நிமிடங்கள் பார்த்துக்கொண்டு இருக்கவும் முடியும். தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றுதான் இவனுக்குத் தேவையானது. அதில் இருந்து படங்களையும் ஒலிகளையும் இவனால் உருவாக்கிக்கொள்ள முடியும். கடை மூடப்படும்போதுதான் இவன் வீட்டுக்குத் திரும்பி வருவான்.

பக்கத்து வீட்டுக்கு இவன் தொலைக்காட்சி பார்க்கப் போவது குறைந்து இருந்தது. இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இவனின் கிராமம் அமைந்து இருந்தது. அந்த நெடுஞ்சாலையை ஒட்டித்தான் கடைத் தெரு இருந்தது. அந்த நெடுஞ்சாலையில் ராணுவம் ரோந்து செல்லும் நாட்களில் கடைத் தெரு வெறிச்சோடிவிடும். ராணுவ வாகனங்கள் தூரத்தில் வரும் ஒலி கேட்ட உடனேயே, கடைகள் சடுதியில் மூடப்படும். கடைத் தெரு மனிதர்கள் நெடுஞ்சாலையில் இருந்து விலகி ஓடிவிடுவார்கள். ராணுவம் கடை வீதியைக் கடந்து செல்லும்போது, சில வேட்டுக்களைத் தீர்க்காமல் செல்வது இல்லை. அது வெறுமனே எச்சரிக்கைவெடி யாகத்தான் இருக்கும். ராணுவம் ஒரு போதும் நெடுஞ்சாலையில் இருந்து விலகி, கிராமத்துக்குள் நுழைந்தது இல்லை.

கடைத் தெரு மூடிக்கிடக்கும் நாட்களில் இவன் பக்கத்து வீட்டுக்குத்தான் தொலைக்காட்சி பார்க்கப் போவான். அவர்கள் இப்போது ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சியை வாங்கி இருந்தார்கள். இவன் ஆள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால், இப்போது இவனை நாற்காலியில் உட்காரு மாறு வற்புறுத்துவார்கள். நொறுக்குத் தீனிகளும் தேநீரும் கொடுப்பார்கள். அவற்றை வாங்கத்தான் இவன் கொஞ்சம் வெட்கப்படுவான். இவ்வளவுக்கும் இவனது தாயாரும் இந்த வீட்டுக்காரியும் நெருங்கிய சிநேகிதிகள்தான். அவசரத்துக்கு, சீனி, தேயிலை என இரு பக்கமும் கைமாற்றும் நடப்பது உண்டு. ஆனால், இவனுக்குத்தான் யாரிடமும் எதுவும் வாங்கிக்கொள்வது என்றால், கூச்சமாக இருக்கும். தொலைக்காட்சி விஷயத்தில் மட்டும் தான் இவன் கூச்சத்தையும் மீறி நடந்துகொண்டான்.

தீப்பெட்டித் தொலைக்காட்சி வைத்து விளையாடும் வயது கடந்து போனபோது, உண்மையாகவே இவனது வீட்டுக்கு ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அக்கா, ஆசிரியப் பணியில் சேர்ந்து பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன், கையில் இருந்த சேமிப்புப் பணத்தையும் போட்டு அம்மா, இவனுக்கு அதை வாங்கிக் கொடுத்தார். இவன் அக்காவிடம் கேட்டு, ஓர் அழகிய துணி உறையைத் தைக்கச் செய்து, அதனைக்கொண்டு தொலைக்காட்சியைப் பத்திரம் செய்தான். பள்ளிக்கூடத்துப் பைக்குள் இப்போது தீப்பெட்டி கள் இல்லை. அதற்குப் பதிலாகத் தொலைக் காட்சியை இயக்க வழிகாட்டும் விபரக் கொத்தை இவன் பைக்குள் எப்போதும் வைத்து இருந்தான்.

பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்துவிடுவான். ஆட அசைய மாட்டான். சிலைபோல தொலைக்காட்சியைப் பார்த்தவாறே உட்கார்ந்து இருப்பான். சாப்பிடுவதற்கு அம்மா 10 தடவைகள் கூப்பிட்ட பின்பு, குசினிக்குள் ஓடிச் சென்று தட்டை எடுத்துக்கொண்டு வந்து, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்துவிடுவான். இதனால் ஒன்றும் இவனது படிப்பு பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வகுப்பில் எப்போதும் இவன் முன்னணி மாணவனாகவே இருந்தான். அக்காவிடம் ஒருநாள் தொலைக்காட்சியைச் சுட்டிக்காட்டி, ‘எங்கிட வாத்திமாரவிட இது பிரயோசனமானது’ என்றான்.

பல்கலைக்கழக அனுமதி, சொற்ப மதிப்பெண்களால் தவறிப்போனது. கொஞ்சம் மனம் சோர்ந்துபோனான். பகல் முழுவதும் தீவிரமாகப் படித்தான். இரவானதும், அறையில் இருந்த விளக்கை அணைத்துவிட்டு, இருளில் நடுநிசி வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருப்பான். அம்மா அவ்வப்போது வந்து ‘இருட்டுக்குள்ளயிருந்து பார்க்காத தம்பி, கண் பழுதாப்போகும்’ என்பார். அது இவனின் காதில் ஏறாது.

இவனுக்கு 20 வயதானபோது அந்தக் கிராமத்துக்குள் ராணுவம் முதல் தடவையாக நுழைந்தது. ராணுவம் வரும் செய்தி கேட்டு, சனங்கள் வீடுகளில் இருந்து கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு, உயிர் தப்பச் சிதறி ஓடினார்கள். அக்கா, அப்போது நகரத்தில் அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்து, நகரத்துப் பாடசாலையில் வேலை செய்ததால், இவனும் அம்மாவும் நகரத்துக்குப் போவது என்று முடிவு எடுத்தார்கள். இவர்களது உடமைகள் இரு பெட்டிகளுக்குள் அடங்கிவிட்டன. சைக்கிளின் பின்னால் தொலைக்காட்சியை வைத்துக் கட்டிக்கொண்டான். நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று, நகரத்துக்குச் செல்லும் வாகனம் ஒன்றில் அம்மாவையும் பெட்டிகளையும் ஏற்றிவிட்டு, இவன் வாகனத்தை சைக்கிளில் பின் தொடர்ந்தான்.

நகரத்துக்கு வந்ததும் கிடைத்த விலைக்கு தொலைக்காட்சியை விற்றான். மிகச் சொற்பமான பணமே கிடைத்தது. நகரத்தில் இருந்த உறவினரின் கடை ஒன்றுக்குச் சென்று அங்கே சைக்கிளை நிறுத்திவிட்டு, சற்று நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு, நடந்து பஸ் நிலையம் வந்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். 4 மணி நேரப் பயணத்தில் 20 சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருந்தது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறங்கியவன், அங்கு இருந்து வயல் வெளிகளுக்குள்ளால் காட்டை நோக்கி நடந்தான். இடையிடையே எதிர்ப்பட்டவர்களிடம் வழியை விசாரித்துக்கொண்டான்.

இரவாகிக்கொண்டு இருந்தாலும் காட்டின் மீது நிலவு வெளிச்சம் போட்டது. இரவு முழுவதும் காட்டுப் பாதையில் நடந்து ஒரு கிராமத்தை அடைந்தான். அங்கே விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது.

இவன் காட்டுக்குள்ளால் நடந்து வந்து இயக்கத்தில் சேர்ந்ததாலோ என்னவோ, இவனுக்குக் ‘கானகன்’ என்று இயக்கத்தில் பெயர் வைத்தார்கள். ஆனால், தோழர்கள் இவனை ‘யங்கிள்’ என்றே அழைத்தார்கள். தாக்குதலின் முன்னணி அணியில் யங்கிள் நின்றால், அந்தத் தாக்குதல் வெற்றிதான் என்று இயக்கத்துக்குள் கதை இருந்தது.

போரிடவே பிறந்தவன்போல இவன் இருந்தான். இவனது இடது கண்ணுக்குத் திட்டமிடல் என்றும், வலது கண்ணுக்குத் துணிச்சல் என்றும் பெயர். இவனது இடது காலுக்கு நிதானம் என்றும், வலது காலுக்கு வேகம் என்றும் பெயர். எத்தனையோ முற்றுகைகளை முன்னணியில் நின்று முறியடித்து இருக்கிறான். இவனது அணி முழுவதுமாகச் சிதைக்கப்பட்ட நிலையிலும், தனி ஆளாகப் போராடித் தளம் திரும்பி இருக்கிறான். கடைசியில், விமானக் குண்டு வீச்சு ஒன்றில் வேகம் எனப் பெயரிடப்பட்ட கால் துண்டிக்கப்பட்டது. நிதானம் எனப் பெயரிடப்பட்ட கால் எஞ்சியிருந்தது.

ஊன்றுகோலின் உதவியுடன் இவன் முகாமில் நிதானமாக நடந்து திரிந்தான். அம்மாவுக்கோ அக்காவுக்கோ தான் கால் இழந்த செய்தி தெரியா மல் பார்த்துக்கொண்டான். யுத்த நிறுத்தம் வந்தபோதுகூட இவன் அம்மாவைப் பார்க்கப் போக வில்லை. இவன் இருக்கும் இடமும் அம்மாவுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான்.

ஒரு வருடத்துக்குப் பின்பு, புலிகளின் தொலைக்காட்சியில்தான் அம்மா இவனைப் பார்த்தார். அடுத்த வாரமே அம்மாவும் அக்காவும் இவனைத் தேடி வந்தார்கள். இவன் பயந்ததுபோல எதுவும் நடக்கவில்லை. அம்மா இவனது கால் துண்டிக்கப் பட்ட பகுதியை மட்டும் தடவிக்கொடுத்தார். உற்சாகமாகப் பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.

புலிகளின் தொலைக்காட்சியில் இவன் மூன்று நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராக இருந்தான். அவற்றில் ‘விடுதலை கீதங்கள்’ என்ற அரை மணி நேர நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சாந்தன், தேனிசை செல்லப்பா, சுகுமார், சிட்டு போன்றோரின் புகழ்பெற்ற பாடல்களை இவன் தொலைக்காட்சி யில் தொகுத்து வழங்குவான். பாடல்களுக்கு முன்பு இவன் சொல்லும் கவிதை வரிகளும் இவனது உணர்ச்சி துள்ளும் ஏற்ற இறக்கமான கம்பீரமான குரலும் மக்களைச் சொக்கச் செய்தன.

சாந்தன் ஒருமுறை இவனிடம் ‘என்னைவிட உங்களுக்குத்தான் கனக்க ரசிகர்கள்’ எனச் சொல்லிச் சிரித்தார்.

வழித் தெருவில் இவனை மக்கள் காணும்போது இவனைச் சூழ்ந்துகொண்டார்கள். இவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றும்போது உட்கார்ந்துகொண்டு இருப்பதால், இவனுக்கு ஒரு கால் இல்லை என்பது பலருக்குத் தெரியாது. அந்தக் கம்பீரக் குரல் ஊன்றுகோலோடு தடுமாறி நடந்து வருவதை அவர்கள் நேரில் பார்த்தபோது, அவர்களது கண்கள் இருண்டுபோயின. சில தாய்மார்கள் இவனை அணைத்து உச்சி முகர்ந்தார்கள். இழந்துபோன குழந்தைகள் அவர்களுக்கு ஞாபகம் வந்திருக்கலாம்.

இவனுக்கு ஏராளமான நேயர் கடிதங்கள் வந்தன. அவற்றில் காதல் கடிதங்களும் இருந்தன. அந்தக் கடிதங்களை இவன் தனிமையில் புன்னகையோடு படித்துவிட்டுக் கிழித்துப் போடுவான். ‘இயக்கத்துக்கே காதல் கடிதம் எழுத எங்கிடப் பெட்டையள் துணிஞ்சிற்றாளவ’ என இவனது உதடுகள் முணுமுணுக்கும்.

சமாதானக் காலத்தில் வன்னியில் இருந்து இசைக் குழு ஒன்று அய்ரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இசை நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றபோது, நிகழ்ச்சித் தொகுப்பாளராக இவனும் அவர்களுடன் சென்றான். இவன்தான் அவசியம் வர வேண்டும் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டிருந்தனர். விமானத்தில் மது வழங்கப்பட்டபோது, இவனுக்கு அருகில் இருந்த பாடகன் ‘கன நாளாப் போச்சுது, ஒண்டு எடுக்கவா?’ என இவனிடம் பகடி மாதிரிக் கேட்டான். இவன் முறைத்த முறைப்பில், பாடகன், ‘குடிக்கிறதில ஒண்டுமில்ல… ஆனால்,குரலுக் குக் கூடாதெல்லா…’ என முனகிவிட்டு, இருக்கையில் சாய்ந்துகொண்டான்.

அய்ரோப்பிய நகரங்களில் பெருந்தீனியால் இவனுக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. தங்களது வீட்டுக்குச் சாப்பிட வர வேண்டும் என மக்கள் அடிக்காத குறையாக, இவனைத் தங்களது வீட்டுக்கு முறை வைத்துக் கடத்திச் சென்றார்கள். நிகழ்ச்சிகளில் இவன் மேடைகளில் தோன்றும்போது எல்லாம் இளைஞர்கள் ஆரவாரித்துக் கூக்குரல் இட்டார்கள்.

அங்கு இருந்து திரும்பும்போது விலை உயர்ந்த பரிசுப் பொருட்களால் இவனது பெட்டி நிரம்பி வழிந்தது. கொழும்பு விமான நிலையத்தில் சோதனையின்போது பரிசுப் பொருட்களில் ஒன்றைக் கையில் எடுத்து, ‘இதை எனக்குத் தருவாயா?’ என அதிகாரி கேட்டபோது, அதை அதிகாரியே எடுத்துக்கொள்ளுமாறு புன்னகையுடன் கைகாட்டினான்.

முகாமுக்குத் திரும்பியவுடனேயே எல்லாப் பரிசுப் பொருட்களையும் தோழர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான். இவனுக்கு என்று எஞ்சியவை காதலைத் தெரிவிக்கும் மூன்று வாழ்த்து அட்டைகள் மட்டுமே. பாரீஸ் நகரத்தில் இரண்டு அட்டைகளும் சுவிஸ்ஸில் ஓர் அட்டையும் கிடைத்து இருந்தன. பாரீஸ் அட்டைகள் இரண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தன. சுவிஸ் அட்டையில் மழலைத் தமிழில் ஒரு மட்டமான காதல் கவிதை எழுதப்பட்டு இருந்தது. அவற்றில் எழுதப்பட்டு இருந்தவற்றுக்காக அல்லாமல், அந்த அட்டைகளின் அழகுக்காக அவற்றைக் கிழித்துப் போட மனம் அற்றவனாய் எடுத்து வந்திருந்தான். முகாமில் வைத்து அவற்றையும் கிழித்துப் போட்டான்.

முகாமில் இருந்த தோழர்களுக்கு விடிய விடிய அய்ரோப்பியப் பயணக் கதைகளைச் சொன்னான். புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் வரை போராட்டத்தை எவராலும் அழித்துவிட முடியாது என நம்பினான்.

நந்திக் கடலின் ஓரத்தில் இவனது அணி சரண் அடையும் முடிவை எடுத்தபோது, இவன் அந்த இடத்திலேயே சயனைட் குடித்துவிடலாம் என்றான். சாவதால் ஆகப்போவது எதுவும் இல்லை எனப் பொறுப்பாளர் சொன்னார். துப்பாக்கிகள், சீருடைகள், இலக்கத் தகடுகள், சயனைட் குப்பிகள் எல்லாம் மணலில் புதைக்கப்பட்டதும், அணி சிதறி மக்களுக்குள் கரைந்துபோனது. இவனுக்கு சயனைட் குப்பியைப் புதைக்க விருப்பம் இல்லை. அதை மடியில் செருகிக்கொண்டு, நந்திக் கடல் ஓரமாக நடந்து வந்தான். கடல் நீரேரியைக் கடந்து ராணுவத் தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் செல்ல, ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக, ஒரு படகில் 20 பேர் வரை தயாராக இருந்தார்கள். ராணுவத்திடம் இருந்து வரும் ஷெல் வீச்சுகள் குறையும்போது படகு புறப்படுவதாகத் திட்டம்.

இவன் செயற்கைக் காலைக் கழற்றிக் கரையிலேயே வைத்துவிட்டு, ஊன்றுகோலுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டான். ஷெல் வீச்சு நின்று இருந்த ஒரு தருணத்தில் படகு புறப்பட்டது. இவன் சயனைட் குப்பியைக் கடல் நீரில் எறிந்தான்.

படகு கரையை அடையும்போதுதான், கரையிலேயே வரிசையாக ராணுவ வீரர்கள் படகை எதிர் நோக்கித் துப்பாக்கிகளைக் குறிவைத்துக் கரையோடு கரையாகப் படுத்துக்கிடந்தது தெரிந்தது. இவர்கள் படகை விட்டு இறங்கியதும், ‘ஆடைகளைக் களைந்து விட்டு வாருங்கள்!’ என்ற உத்தரவு வந்தது. இவர்கள், ‘அய்யா, நாங்கள் பொதுமக்கள்’ எனக் கூக்குரலிட்டார்கள். ஆடைகளைக் களையுமாறு மறுபடியும் உத்தரவு வந்தது. இவர்கள் தயங்கி நின்றபோது, கரையில் இருந்து சரமாரியாக வெடிகள் கிளம்பின. கடல் நீர் துடித்துச் சிதறியது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே ஆடைகள் முற்றாகக் களையப்பட்டு, அவர்களது உடல்களிலே வெடி பொருட்கள் கட்டப்பட்டு இருக்கின்றனவா எனப் பரிசோதிக்கப்பட்டனர். அந்த மனிதர்களை முழு நிர்வாணமாகவே ஒரு கிலோ மீற்றர் நடத்திச் சென்ற ராணுவம், அங்கு இருந்த பஸ்ஸில் ஏற்றியதன் பின்பாகத்தான் அவர் களை ஆடைகள் அணிந்துகொள்ள அனுமதித்தது.

இவன் தலையைக் குனிந்தவாறே இருந் தான். எவரையும் ஏறிட்டுப் பார்க்க இவன் விரும்பவில்லை. மணிக்கணக்காக பஸ் ஓடிக்கொண்டு இருந்தது. குழந்தைகள் தாகத்தாலும், பசியாலும், வெப்பத்தாலும் அழுதபோது, அவர்களது தாய்மார்களால் ‘பளாரென’ அறையப்பட்டு அடக்கப்பட்டன.

வவுனியா தடுப்பு முகாமில் பஸ் நின்றபோது, இவன் தலையைக் கவிழ்ந்தவாறே இறங்கினான். பூமியைத் தவிர, இவனது கண்கள் எதையும் பார்க்கவில்லை. வரிசையில் உட்கார்ந்து இருந்தபோது, இவனது தோளைத் தொட்டு ஒரு ரகசியக் குரல் ‘கானகன்’ என அழைத்தது.

சடுதியில் இவன் தலை நிமிர்த்திப் பார்த்தபோது, ஒரு ராணுவ அதிகாரி இவனைப் பார்த்து இளித்துக்கொண்டு நின்றான். தரையில்கிடந்த ஊன்றுகோலைக் கையில் எடுத்தவாறே, மறு கையால் இவன் எழுந்திருக்க அதிகாரி உதவினான். இவன் எழுந்ததும் ஊன்றுகோலைக் கொடுத்து விட்டு, இவனது தோள் பற்றி அதிகாரி அழைத்துச் சென்றான்.

தகரங்களால் அடைக்கப்பட்டு இருந்த அந்தச் சிறிய அறைக்குள்தான் விசாரணை தொடங்கியது. இவனது உண்மையான பெயரைக் கேட்டபோது, ரவிக்குமார் என்றான். இயக்கப் பெயர் கானகன் என்றான். ‘உனக்கு யங்கிள் என்று இன்னொரு பெயரும் இருக்கிறதே’ எனச் சொல்லி அதிகாரி சிரித்தான். எந்த உண்மையை மறைத்தும் பலன் இல்லை என்பது இவனுக்குத் தெரிந்தது. ஆனால், முடிந்த வரை உண்மைகளைப் பேசிவிடாமல் இருப்பது தனது கடமை என்று இவன் நினைத்தான். ஆனால், விசாரணையின் போக்கில் மறைப்பதற்கு எந்தத் தகவல்களும் இவனிடம் இல்லாமற்போயின.

விசாரணை ஒரு பேரேட்டில் பதிவாகிக்கொண்டு இருந்தது. சுற்றி நின்ற ராணுவத்தினர் சிலர், இவனை செல்போன் வீடியோவில் பதிவு செய்தவாறு இருந்தார்கள். இவன் தலையைக் குனிந்தபோது எல்லாம், ஒரு சிங்கள வசைச் சொல்லுடன் இவனது தலை அவர்களால் தூக்கி நிறுத்தப்பட்டது. ‘கானகன்தான் சங்கடப்படுகிறாரே, படம் பிடிப்பதை நிறுத்துங்கள்’ என ஓர் அதிகாரி புன்னகையுடன் உத்தரவிட்டதும், படம் பிடிப்பது நிறுத்தப்பட்டது. இவன் எதிர்பார்த்த மாதிரியே பிறகு சம்பவங்கள் நிகழ்ந்தன.

தரையோடு தரையாக நகர முடியாதுகிடக்கும் ஒரு முயலை அடிப்பதுபோலச் சுற்றி நின்று, தடிகளாலும் துப்பாக்கியின் பின்புறங்களாலும் இவனை அடித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது கேள்விகளுக்கு இவனுக்கு உண்மையிலேயே பதில் தெரியாது. இவனை உட்காரவைத்துவிட்டு, அசையவிடாமல் பிடித்துக்கொண்டே, இவனது துண்டிக்கப்பட்ட காலின் தொடைப் பகுதியில் இருந்து மிக நிதானமாகவும் திருத்தமாகவும் ஒரு துண்டுத் தசையை ‘கேக்’ போல கத்தியால் வெட்டி எடுத்து, இவனது கையில் கொடுத்து, அதைச் சாப்பிடச் சொன்னார்கள். இவன் மயங்குவதுபோல பாவனை செய்து கண்களைச் சுழற்றிக் கீழே சரிந்தான். இவனின் வாய்க்குள் அந்தச் சதைத் துண்டு ரத்தம் வடிய… அப்படியே திணிக்கப்பட்டது. அது தொண்டைக்குள் வழுக்கிக்கொண்டு போனது.

அடுத்த மூன்று நாட்களும் இவன் வாந்தி எடுத்தபடியே இருந்தான். உடலில் இருந்த ரத்தம் வாந்தியாக வெளியேறிக்கொண்டு இருந்தது. இவன் புனர் வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்ட பின்பும் அடிக்கடி வாந்தி எடுத்தவாறே இருந்தான். இந்தப் புனர் வாழ்வு முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட 200 சரண் அடைந்த போராளிகள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். நோயால் இறந்த ஆறு பேருக்கும், தற்கொலை செய்துகொண்ட இருவருக்கும் பதிலாக, புதியவர்கள் முகாமில் சேர்க்கப்பட்டார்கள். 200 என்ற எண்ணிக்கை குறையாமல் ராணுவத்தினர் பார்த்துக்கொண்டார்கள்.

இவன் எப்போதும் மனச் சோர்வுடனேயே காணப்பட்டான். முகாமில் இருவருக்கு மனநிலை முற்றாகச் சரிந்திருந்தது. அவர்களில் ஒருவன் தனது ஆடைகளைக் கழற்றி வீசுவதிலேயே குறியாக இருந்தான். அதற்காக ராணுவத்தினரிடம் ஒவ்வொரு நாளும் உதைபட்டான். அவன் அங்கு இருந்து விடுதலையாவதற்காக நாடகம் போடுகிறான் என ராணுவ அதிகாரி சொன்னான்.

இவர்களில் தெரிவு செய்யப்பட்ட 50 பேர்களுக்குப் பயிற்சி அளிக்க ஒரு மன நல மருத்துவர் வந்தார். அவர் மனச் சோர்வில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பது எவ்வாறு என உரை யாற்றிக்கொண்டு இருக்கும்போதே இவன் குறுக்கிட்டு, ‘இங்கிருந்து விடுதலையாகி வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சியாயிருப்போம் என நினைக்கிறேன்’ என்றான். மருத்துவர் எது சொன்னாலும் இவன் விட்டேற்றியாக அவரைத் தட்டிக் கழித்தான். கடைசியில் மருத்துவர் மனச் சோர்வுக்கு ஆளாகிவிட்டார். அடுத்த பயிற்சி வகுப்பை ராணுவத்தினருக்கு எடுக்கவிருப்பதால், முன்னாள் போராளிகளுக்கான முதல் நாள் பயிற்சி வகுப்பை இத்துடன் முடித்துக்கொள் ளலாம் என்று மருத்துவர் சொன்னார்.

சரியாக ஒன்றரை வருடங்கள் கழித்து அங்கு இருந்து விடுதலையான முதலாவது அணியில் இவனும் இருந்தான். அந்த அணியில் அவயங்களை இழந்தவர்கள் மட்டுமே இருந்தனர். புதிய வேட்டியும் சட்டையும் ராணுவத்தினரால் வழங்கப்பட்டன. முகாமில் விழா நடத்தி, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முன்னாள் போராளிகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவனை அழைத்துச் செல்ல அம்மா வந்திருந்தார். அம்மாவின் முகம் முழுவதும் சிரிப்புத் தொற்றியிருந்தது.

அக்காவுக்குக் கல்யாணமாகி அவள் நகரத்தில் குடியிருந்தாள். இவ்வளவு நாட்களும் அம்மா, அக்காவுடனேயே தங்கியிருந்தாள். அம்மா, தன்னை அக்காவின் வீட்டுக்குத்தான் அழைத்துச் செல்வதாக இவன் எண்ணினான். ஆனால், அம்மா இவனைக் கிராமத்து வீட்டுக்கு அழைத்து வந்தாள்.

வீடு உருக்குலைந்து இருந்தது. கதவுகளையும் நிலைகளையும்கூடத் திருடிச் சென்று இருந்தார்கள். வாசலுக்கும் ஜன்னலுக்கும் அம்மா துணியால் திரை செய்துபோட்டார். இவனது அறைக்குள் ஒரு மேசையும், நாற்காலியும், படுக்கையும் வாங்கிப் போட்டார். இவன் அந்த அறைக்குள்ளேயே அடைந்துகிடந்தான். வீட்டுக்குப் போனால், மகிழ்ச்சி உருவாகும் என மனநல மருத்துவரிடம் சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்த்தான்.

கடைத் தெருவே மாறியிருந்தது. முன்பு இவன் தொலைக்காட்சி பார்க்கச் செல்லும் ‘மீனா கபே’, இப்போது ‘லங்கா கபே’ ஆகியிருந்தது. அதை ராணுவத்தினர் நடத்திக்கொண்டு இருந்தனர். இப்போதும் அங்கே இடையறாது தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. இவன் தலையைக் கவிழ்ந்தவாறே அதைக் கடந்து சென்றான். கடைத் தெருவில் எல்லோருமே தன்னைப்போலவே தலையைக் குனிந்தவாறே நடந்துகொண்டு இருப்பதாக இவனுக்குத் தோன்றியது. தற்செயலாகச் சந்தித்த கண்களில் அச்சத்தை மட்டுமே இவன் பார்த்தான்.

அம்மா இவனுக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்காகப் பணம் திரட்டிக்கொண்டு இருந்தார். காலைப் பொருத்தி நான் எங்கே போகப் போகிறேன். அந்தப் பணத்தில் ஒரு தொலைக்காட்சி வாங்கினாலாவது, அறைக்குள் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கலாம் என நினைத்தான். ஆனால், அவ்வாறு கேட்பது அம்மாவைப் புண்படுத்தக்கூடும் என்பதால், இவன் வெறுமனே அறைக்குள் அடைந்துகிடந்தான். வாரம் ஒருமுறை ராணுவச் சாவடிக்குச் சென்று கையெழுத்திட வேண்டியிருந்தது. அந்த நாட்களில் மட்டுமே வெளியே போனான்.

அன்று மாலையில் பக்கத்து வீட்டில் இருந்து பாட்டுச் சத்தம் வந்துகொண்டு இருந்தது. மகிழ்ச்சி என்பது நாம் உருவாக்கிக்கொள்வதே என மன நல மருத்துவர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. கண்களை மூடிக்கொண்டு படுத்து இருந்தான். பொழுது பட்டதும் ஊன்று கோலை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான். அவன் பக்கத்து வீட்டு வாசற்படியில் தட்டுத் தடுமாறி ஏறிய போது, உள்ளே இருந்த தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ஷே உரையாற்றிக்கொண்டு இருந்தார். சற்று நேரத்தில் தொலைக்காட்சி திடீர் என நிறுத்தப்பட்டது.

வீட்டுக்காரர் வாசலுக்கு வந்து இவனைப் பார்த்தார். இவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக வந்ததாகச் சொன்னான். வீட்டுக்காரர் தலையைக் குனிந்து நிலத்தைப் பார்த்தவாறே, அவர்கள் சாப்பிடப் போவதாகச் சொல்லிவிட்டு வாசலிலேயே நின்றார். இவன் கையை வாசற்படியில் ஊன்றித் தட்டுத் தடுமாறி எழுந்து சுவரில் சாய்த்துவைத்திருந்த ஊன்றுகோலையும் எடுத்துக்கொண்டு படி இறங்கும்போது, வீட்டுக்காரர், ‘கானகன், நீ இஞ்ச வந்து போனால், ஆமியால எங்களுக்கும் பிரச்னை வரும்’ என்று முணுமுணுத்தது இவனுக்குத் தெளிவாகக் கேட்டது.

வீதியில் நின்று சட்டைப் பையில் இருந்து பீடியை எடுத்துப் பற்றவைக்க முயன்றான். கை நடுங்கிக்கொண்டு இருந்தது. நான்காவது தீக்குச்சியிலேயே பற்றவைக்க முடிந்தது. இந்தப் பழக்கம் தடுப்பு முகாமில் இருந்தபோது வந்திருந்தது. அம்மா காலையில் ஒரு கட்டு பீடி வாங்கிக் கொடுப்பார்.

வாயில் பீடியை வைத்தவாறே நடந்தான். இவனது ரவி என்ற பெயரை வீட்டுக்காரர் மறந்து, இவனைக் கானகன் என அவர் அழைத்தது இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பீடியை இழுத்துக்கொண்டே நடந்தான். விடுதலையாகி வந்து இவ்வளவு நாளாகியும், அக்காவோ, அத்தானோ, தன்னை இதுவரை வந்து பார்க்காதது திடீர் என இவனுக்கு உறைத்தது.

நடுநிசியில் அம்மா எழுந்து கை விளக்கை எடுத்துக்கொண்டு மெதுவாக நடந்து, இவனது அறையை நோக்கிப் போனார். ஒவ்வொரு நாளும் அம்மா இவ்வாறு சென்று பார்ப்பார். இவன் தூங்கிக்கொண்டு இருப்பது அவருக்கு நிம்மதியாக இருக்கும்.

அம்மா இவனது அறையின் வாசலில் நின்று இவனது படுக்கை இருந்த திசையில் விளக்கைப் பிடித்தபோது, படுக்கை காலியாக இருந்தது.

அம்மா பதற்றத்துடன் அறையின் மூலை ஒன்றுக்கு வெளிச்சத்தைத் திருப்பினார். அங்கே அவன் சுவரோடு சாய்ந்து தரையில் ஆடாமல் அசையாமல், சிலைபோல உட்கார்ந்து இருந்தான். அம்மா, அவனது முகத்துக்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது, அவனது கண்கள் மேசையையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்த்தார்.

அம்மா மேசைக்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது, மேசையில் ஒரு தீப்பெட்டி நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அம்மா திடீர் என வெடித்துப் பெருங் குரலெடுத்து அழத் தொடங்கினார். இவன் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து இருந்தான். இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டு இருந்தன!

– மே 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *