முத்துவின் உள்ளக் குமுறல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 28, 2021
பார்வையிட்டோர்: 3,149 
 

விரட்டிய நாயின் பிடியில் சிக்காத ஒருவனின் இதயத் துடிப்புடனும் பதட்டத்துடனும், முகத்தில் வழக்கமாய் இருப்பதைப் போல நடித்துக் கொண்டே சாதாரணமாய் வீட்டினுள் நுழைந்தான் முத்துக்குமார். தன் பேக்கை ஓரம் போட்டுவிட்டு, காஃபி கேட்போமா என்ற சிந்தனையில் இருந்தவனிடம் இந்தா காஃபி என்று கோப்பையை நீட்டினாள் தாய் பைரவி. ஒன்றும் கூறாமல் அதை வாங்கிக் குடித்துவிட்டு, உடைகளை மாற்றிக் கொண்டு டியூசன் புறப்பட்டான் முத்து.

வழக்கம் போல டியூசன் முடித்துவிட்டு இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்தவனின் உள்ளம் “எப்பொழுது நம் கண்ணை மூடி படுக்கைக்கு செல்லலாம்” என்றே எண்ணிக் கொண்டிருந்தது. மிச்சம் இருப்பது இரவு உணவு தான், அதை எப்படியாவது முடித்துவிட்டு தன் தாயிடம் எந்த உரையாடலையும் தொடராமல் எப்படியாவது படுக்கைக்கு சென்றுவிட வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தான். இதை மட்டும் நாம் சரிவர முடித்துவிட்டால் இன்றைய இரவு, நாளை பள்ளிக்கு கிளம்புவது மற்றும் நாளைய பள்ளி நாளையும் சேர்த்து ஒரு பதினாறு மணி நேரம் நிம்மதியாக இருக்கலாம் என்று தனக்குள்ளே பேசிக்கொண்டான்.

தன் உள்ளக் கணக்கை பிழையின்றி முடித்து, பாலை அருந்திவிட்டு படுக்கையை அடைந்தான். இமைகள் மூடியும் உள்ளம் என்னவோ “அடுத்த பதினாறு மணி நேரத்தையும் தாண்டி என்னவெல்லாம் நடக்கலாம் என்ற மோசமான கற்பனைகளை கட்டவிழ்த்துக் கொண்டிருந்தது” . இப்படிப் பலவாறு சிந்தித்த பதின்மூன்று வயது நிரம்பிய அந்த உள்ளம் அடுத்த பத்து நிமிடங்களில் கண்ணுரங்கியது. காலையில் எழுந்தவன் நேற்றைய இரவை அப்படியே பின்பற்றியவனாய், எவ்வளவு வேகமாக பள்ளிக்குப் புறப்பட முடியுமோ அவ்வளவு வேகமாக புறப்பட்டு மின்னல் வேகத்தில் பறந்தான்.

வீட்டிலிருந்து வெளியே வந்ததும் நிம்மதி பெருமூச்சுடன், பள்ளிக்கு நடந்து செல்லும் அந்த பதினைந்து நிமிடங்களையும் விட்டுவைக்காமல் தன் உள்ளக் குமுறலைத் தொடங்கினான் முத்து.” ஏன் இந்த சவீதா என் பள்ளியில் சேர்ந்தால்? சரி சேர்ந்து தொலையட்டும் அதுவும் என் வகுப்பிலா வந்து சேர வேண்டும், அட அதையும் கூட ஏற்றுக் கொள்கிறேன் இந்த ராகு காலத்தின் வீடு என் வீட்டுக்கு பின் வீடாகவா அமைய வேண்டும். இன்றைய பள்ளி நாளெல்லாம் நமக்கு ஒரு விஷயமே இல்லை, ஆனால் இந்த மாலைப் பொழுது மட்டும் ஒரு வாரத்திற்கு தள்ளிப் போகக் கூடாதா” என்று புலம்பியவனாய் பள்ளியை அடைந்தான்.

படிப்பில் படு கெட்டி என்பதால் பள்ளி நாளெல்லாம் அவனுக்கு ஒரு பாரமே இல்லை. அன்றைய தினமும் பஞ்சாய் பறந்து அவன் எதிர்பாராத கொடிய மாலை விரைவில் அவனைப் பற்றிக் கொண்டது. ஐயோ வீட்டுக்குப் போய் தான் ஆகனுமா. அந்த பாழாய் போன பத்மினி இந்நேரம் என்னவெல்லாம் பற்றவைத்தாலோ. நமக்கு பள்ளி கொடுத்த கால அவகாசம் இன்னும் 48 மணிநேரம் உள்ளது, அந்த 48 மணி நேரத்தையும் முழுமையாய் உபயோகப்படுத்திக் கொண்டு பிறகு நம் தலையே போனாலும் சரி. “அப்பனே கருப்பா என் குலதெய்வமே! நேற்றைப் போலவே இன்றைய நாளையும் நிம்மதியாய் நீட்டித்தர நீயே துணை புரிய வேண்டுமென” வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள கருப்பணசாமி கோவிலில் வேண்டிக் கொண்டே சென்றான்.

இரவில் இந்த வழியில் சென்றவர்கள் கருப்பணை நேரில் கண்டதெல்லாம் சொல்லியிருக்கிறார்களே, இந்த ஒரு நாளைக் கூடவா நம் கருப்பண் நமக்காக நீட்டித்தர மாட்டான் என்றவாறே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வீட்டை அடைந்தான். அவன் பேக்கை வழக்கமாய் கீழே போடும் சத்தத்தைக் கேட்டு சமயலறையில் இருந்து வெளியே வந்தாள் பைரவி. டேய் என்ன நேற்றே ரேங்க் கார்டு குடுத்துட்டாங்கலாமே, சவீதா அம்மா பத்மினி தான் கூறினாள். சவீதா தான் முதல் ரேங்க் ஆமே, நீ எத்தனாவது ரேங்க்? எங்க உன் ரேங்க் கார்டை எடுவென்று கொதிக்கும் எண்ணெயில் போட்ட கடுகாய் பொரிந்து தள்ளினாள் பைரவி.

எதையும் சொல்ல முடியாமல் பேயடித்தவனாய், அமைதியாக பையில் வைத்திருந்த ரேங்க் கார்டை எடுத்துக் கொண்டு தலையைக் கவிழ்ந்து கொண்டே அழாத குறையாய் பைரவியை நோக்கி நடந்து சென்றான். கையில் இருந்த அட்டையை வாங்கிப் பார்த்த பைரவி எரிமலையாய் வெடித்து சிதறினாள், “அதானே பார்த்தேன் நீ தான் நல்ல ரேங்க் வாங்கிருந்தா நேத்தே வந்து நீட்டிருப்பியே, படிக்கிற புள்ள மூஞ்சிய பார்த்தே சொல்லிடலாம்டா.‌ நீ எங்க படிச்சா தானே. வர வர என்ன சொன்னாலும் செய்றது இல்லை, என்ன பேசினாலும் எதிர்த்து பேசுறது. நீ போய் படிக்கிற புள்ளயோட கழிவு நீரை வாங்கி குடிடா நல்லா படிப்பு வரும்” என்று கூற எதுவும் பேச முடியாமல் வாயடைத்தவனாய் கண்ணில் சிறு துளி நீருடன் தன் ரேங்க் கார்டை வாங்கி அதே பையில் வைத்துக் கொண்டு டியூசன் புறப்பட்டான் முத்து. ஒருபுறம் மிகுந்த வருத்தம் இருந்தாலும் மறுபுறம் ரேங்க் கார்டு குடுத்த விஷயம் ஒருவழியாக அம்மாவிற்கு தெரிந்தவிட்ட நிம்மதியில் இருந்தான். பிறகு டியூசன் முடிந்து வீட்டிற்கு வந்து, அம்மா வைத்த உணவை பேசாமல் அருந்திவிட்டு கனத்த நெஞ்சுடன் உறங்கினான். ஆம் தாய் என்றால் அலாதிப் பிரியம் அவனுக்கு, ஒரு நாளும் அம்மாவிடம் பேசாமல் இருப்பதில்லை.

பகலில் குளித்து முடித்துவிட்டு உணவருந்திய பின்னர், பால் சட்டியை நோட்டமிட்ட பூனை போல மெதுவாக தன் ரேங்க் கார்டை எடுத்துக் கொண்டு தாயிடம் சென்றான். என்னால் இதற்கெல்லாம் கையெழுத்து போடமுடியாது, போய் உன் அப்பாவிடமே வாங்கிக் கொள் என்று கறாராக கூறிவிட்டாள் பைரவி. அம்மா நான் நிஜமாக இரண்டாவது ரேங்க் தான் மா வந்திருக்கனும் ஆனால் தவறான வேலைகள் செய்து அதிக மதிப்பெண் வாங்கி இருவர் முந்திட்டாங்க மா என்றெல்லாம் கெஞ்சினான் முத்து, எதையும் கண்டுகொள்ளாமல் இந்த பொய்யெல்லாம் எனக்கு வேண்டாம், நீ கிளம்பி சென்று உன் அப்பாவிடம் வாங்கிக்கோ என்று கூறி தன் பாத்திரம் கழுவும் வேலையைத் தொடர்ந்தாள் பைரவி.

அம்மாவிடம் கெஞ்சுவது போல் பாவனை செய்த முத்து வீட்டைவிட்டு கிளம்பியதும் துள்ளலாய் தந்தையின் கடையை நோக்கி விரைந்தான். அப்பா ரேங்க் கார்டு ல சைன் வேணும்பா என்றான். ஏன் டா அம்மா போடலையா என்றார் வேலு. இல்லப்பா உங்ககிட்ட வாங்கிக்க சொல்லிட்டாங்கப்பா என்றான் முத்து. எத்தனாவது ரேங்க் பா என்று கேட்டார் வேலு. நான்காவது ரேங்க் பா என்றான் முத்து. சரி பா என்று ஒன்றும் கூறாமல் கையெழுத்து போட்ட அப்பாவிடம், அடுத்தமுறை நான் நல்ல ரேங்க் எடுப்பேன் பா என்று கூறிவிட்டு அப்பாவிடம் 1 ரூபாய் பெற்றுக் கொண்டு உல்லாசமாய் பள்ளிக்கு புறப்பட்டான்.

முத்து அவன் அம்மாவிடம் கையெழுத்து வாங்க கெஞ்சியது பொய் அல்ல முற்றிலும் உண்மையே, முத்து சற்று நேரிய சிந்தனை உடையவன், அவனுக்கு எந்த குறுக்கு வழியும் பிடிப்பதில்லை, மேலும் கள்ளத்தனம், பொய், பித்தலாட்டம் போன்ற விஷயங்களை பள்ளியிலும் கல்வி முறையிலும் ஒரு போதும் கடைபிடிப்பதில்லை முத்து. சவீதாவும் அதே வழியை பின்பற்றுபவள் தான். புத்தகத்திற்கும் சவீதாவின் விடைத்தாளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இருக்காது. மேலும் புத்தகப் பிரதியைப் போலவே அவளது எழுத்துக்களும் அச்சிட்டாற் போலிருக்கும். விடைத்தாளை திருத்த கட்டை அவிழ்க்கும் அனைத்து ஆசிரியரின் முதல் தேர்வும் சவீதாவின் விடைத்தாள் தான். அதற்காக நம் முத்துவும் சளைத்தவன் அல்ல, படிப்பிற்கென்று அவன் மிகவும் மெனக்கெடுபவனும் அல்ல. அவனால் முடிந்ததை படிப்பான் நினைவில் வருவதை அவன் நடையிலே தான் எழுதுவான், புத்தகத்தில் உள்ளவாரெல்லாம் அப்படியே எழுதுபவன் அல்ல முத்து. ஆனால் கணிதத்தில் அவன் வகுப்பில் அவனை மிஞ்ச எவரும் இல்லை.

வகுப்பில் இருவரின் போட்டிக்கும் இடையில் குள்ள நரியாய், மேலும் ஒரு சகுனியாய் விளங்கியவன் மணியரசன். ஒரு ஐந்து மதிப்பெண் வினாவிற்கு விடை தெரியாவிட்டால் இரண்டு மூன்று மதிப்பெண் வினாக்களுக்கு கூடுதலாக விடை அளிப்பான். சிவப்பு பேனாவில் வித்தையெல்லாம் காட்டி கூட்டுத் தொகையில் தவறு உள்ளது என்று கூறி அதிக மதிப்பெண்கள் பெறுவான். அவனுக்கு அவனது செயலில் நாம் மிகவும் புத்திசாலி என்ற நம்பிக்கை. இவையெல்லாம் முத்துவிற்கு தன் நண்பர்கள் வாயிலாக தெரியவந்தாலும் அப்படிப் பெரும் மதிப்பெண்கள் கழிவை உண்பதற்கு சமானம் என்று நினைப்பவன் முத்து. இதுமட்டுமல்ல சில சமயங்களில் தன் நண்பனுக்கும் இதே திருட்டு வேலைகளை செய்து முத்துவைப் பின்தள்ளுவதில் அப்படி மணியரசனுக்கு என்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை.

இருப்பினும் முத்து பெற்ற நான்காவது மதிப்பெண் என்பது குறைவும் அல்ல, தன் தாய் பைரவி முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்றாலே ரேங்க் கார்டில் கையெழுத்திடுவார் என்பதையும் அவன் முன்பே அறிவான். இந்த குள்ளநரி கூட்டத்தையும் தாண்டி அவன் எளிதில் இரண்டாவது மதிப்பெண் பெறக்கூடியவன் தான். சில நேரங்களில் கணிதத்தில் அபார மதிப்பெண் பெற்று சவீதாவையும் முந்தி முதல் மதிப்பெண்ணும் பெறுவதுண்டு. இருப்பினும் சில நேரங்களில் மணியரசன் செய்யும் அதிகப்படியான தவறுகளால் மூன்றாம் இடத்திற்கும், நான்காம் இடத்திற்கும் தள்ளப்படுவான். அதற்காக நெறிபிறழாது தன் தாயின் நேரிய வழியைப் பின்பற்றுபவன் முத்து.

முத்து பத்து வயதிலிருந்தே இந்த குள்ளநரி கூட்டத்தின் நடுவே சிக்கி மிகவும் துன்புற்றவன். அவனுடைய ஒரே ஆறுதலெல்லாம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இது போன்ற தவறுகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்பது தான். ஒரு வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்று மற்றொரு வகுப்பிற்கு செல்லும்போது அனைவரும் நல்ல குணமுடைய மென்மையான ஆசிரியர்கள் வரவேண்டுமென நினைப்பார்கள், ஆனால் முத்து மிகவும் கடினமான ஆசிரியர்களையே விரும்புவான், அப்போது தான் அந்த குள்ளநரி கூட்டம் அடங்கி ஒடுங்கி இருக்கும் என்பதற்காக. இப்படியே காலங்கள் செல்ல அந்த பொதுத் தேர்வும் வந்தது. முடிவில் சவீதா முதல் மதிப்பெண் பெற்றால் 454, முத்து இரண்டாம் மதிப்பெண் பெற்றான் 449, மணியரசன் நான்காவது இடம் 439.

அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையவே இருந்ததால், பதினொன்றாம் வகுப்பிற்கு மூவரும் வேறொரு பள்ளியில் சேர்ந்தனர். மீண்டும் மூவரும் ஒரே வகுப்பு. ஆனால் முன்பு போல் அது சிறிய பள்ளி அல்ல, மாவட்டத்தின் ஒட்டுமொத்த அதிமேதாவிகளும் அங்கு தான் இருந்தனர். அந்த பள்ளியில் சவீதாவே 10 வது ரேங்க் தான் எடுத்தாள், முத்துவோ 20க்கு மேல் எடுப்பான். முத்துவின் குடும்பம் முன்பு போல் இல்லாமல் சவீதாவின் வீட்டிலிருந்து சற்று தள்ளி வேறு ஒரு சிறிய வீட்டில் குடியேறினர். இதற்கு காரணம் 13 வயதில் தன் தந்தையை இழந்திருந்தான் முத்து. தனது தாயின் மன ஆறுதலுக்காக ஒரு தனி ரேங்க் கார்டை ஏற்பாடு செய்து அதில் வழக்கம் போல இரண்டாவது ரேங்க் போட்டுக் கொள்வான். உண்மையான ரேங்க் கார்டில் அவனே கையொப்பமிட்டு பள்ளியில் ஒப்படைத்து விடுவான். இறுதியாக பன்னிரெண்டாம் வகுப்பில் அவன் பெற்ற மதிப்பெண் 1049. தன் தாயை ஏமாற்றி அவன் ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை. சவீதா 1084 மதிப்பெண்கள் பெற்றிருந்தால். இருப்பினும் முத்து சவீதாவை விட பொறியியலுக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணில் 5 மதிப்பெண்கள் அதிகம் பெற்றிருந்தான். மேலும் முத்து மாவட்ட அளவில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்று மாவட்ட தமிழ் சங்கத்தில் ஒரு பரிசையும் பெற்றான். மணியரசன் 11 ஆம் வகுப்பிலேயே பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் செய்தான். அவனைப் பற்றி வெகுவாக தெரிந்துகொள்ள முத்து ஒருபோதும் முற்படவில்லை. சுமார் 6 ஆண்டுகள் அவனால் பாதிக்கப்பட்டவன் அல்லவா எப்படி அவனைப் பற்றி தெரிந்துகொள்ள முயல்வான்.

முத்து ஒரு போதும் தான் பெற்ற இரண்டாவது மதிப்பெண்ணிற்காக தன் பெற்றோரிடம் பாராட்டைப் பெற்றதில்லை. மாறாக கடைசி வரையிலும் சவீதாவுடனே ஒப்பிடப்பட்டு அவமானப் படுத்தப்பட்டான். அவன் பள்ளியில் அந்த குள்ளநரி கூட்டத்தினால் வந்த இன்னல்களை தன் பெற்றோரிடம் கூற முற்பட்டபோது கூட அவனுடைய பெற்றோர்கள் அதைப் புரிந்துகொள்ளவோ அல்லது நம்புவதற்கோ தயாராக இல்லை. பத்து வயதிலிருந்தே பெற்றோரால் ஊக்குவிக்கப்படாமலும், மேலும் நடுவிலே தன் தந்தையை இழந்து வாடிய முத்து எத்தனை இன்னல்களை சந்தித்தாலும் தன் தாய் மீது கொண்ட பேரன்பினாலும், தன் தாய் பின்பற்றிய அறவழியைப் பின்பற்றியமையாலும் எந்த ஒரு சூழலிலும் தவறான வழியில் செல்லாமல் தொடர்ந்து நேர்மையான வழியைக் கடைபிடித்தான்.

பெற்றோர்கள் தங்கள் இரத்தத்தை சிந்தி படிக்க வைத்தாலும், குழந்தைகள் எதிர்பார்ப்பது என்னவோ உங்களுடைய அன்பும், ஊக்குவிப்பும் தான். அதற்காக அன்பும் ஊக்குவிப்பும் கிடைத்தால் தான் நான் படிப்பேன் என்று அடம்பிடிக்காமல், குடும்ப சூழ்நிலை அறிந்து முத்துவைப் போல எத்தனை இக்கட்டுகள் வந்தாலும் தொடர்ந்து முன்னேறுங்கள், முத்துவின் காலத்தைப் போல இன்றைய பெற்றோர்கள் அவ்வளவு கடினமானவர்களாக இல்லை. இன்று பெரும்பாலான பெற்றோர்கள் நண்பர்களைப் போல தான் பழகுகிறார்கள். உங்கள் பெற்றோர்களிடம் உண்மையாக இருங்கள், உங்கள் எதிர்பார்ப்பை வெளிப்படையாக பெற்றோர்களிடம் எடுத்துக் கூறுங்கள். காதல் என்ற அத்தியாயத்தை பள்ளிக் காலத்தே தொடங்காமல், படிப்பு என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு சிறப்பாக செயல்படுங்கள். உங்கள் வாழ்க்கை இனிமையாக அமையும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *