கல்யாண வீட்டிலே முதல் பந்தியிலே உட்கார்ந்து சாப்பிடற மாதிரி சாப்பாடு ஆனதும் முதலிலே உட்கார்ந்து இவ ஒரு புடி புடிச்சிடறா…முட்டையைக் கூட விட்டு வைக்கிறதில்லே!
எனக்கே பார்க்க அசிங்கமாயிருக்கு!
அந்தப் பள்ளிக்கூடத்தில் வேலை செய்யும் பெண்கள் சத்துணவைக் கவனிக்கும் தன் தோழி மாலதியைப் பற்றிப் பேசிச் சிரிப்பதைக் கேட்ட மல்லிகாவுக்குப் பொறுக்க முடியவில்லை!
மாலதியிடமே கேட்டு விட்டாள்.
‘ஏண்டி! …இப்படி பேரைக் கெடுத்துக்கிறே…? நீயே தினசரி முதலிலே சாப்பிடறதைப் பார்த்து… எல்லோரும் அசிங்கமா பேசறாங்கடி!
போடி…பைத்தியக்காரி…சமைச்சவங்களுக்குத்தான் அதிலிருக்கும் குறை நிறை நல்லாத் தெரியும்! முட்டையை ஏன் சாப்பிடறேன்னா…வர வர பழைய முட்டைகளை சப்ளை பண்ணிடறாங்க…அதை சாப்பிடும் பொழுதுதான் நமக்கே தெரியும்! பாவம் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு என்ன தெரியும்?
இங்கே சாப்பிடற நூறு குழந்தைகளின் தாய்மார்கள் சார்பாகதான் நல்லது கெட்டதைப் பார்த்து பரிமாறுகிறேன்!
மாலதி சொன்னதைக் கேட்டு மல்லிகா அசந்து போய் விட்டாள்!
– ரகுநாதன் (ஆகஸ்ட் 2013)