போடா பைத்தியக்காரா…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 6,431 
 

பஸ்ஸிலிருந்து கண்ணீருடன் இறங்கிய கண்ணன் பஸ் நகrந்ததும் ‘ஹா..ஹா..” வென்று உரத்த குரலில் வாய் விட்டுச் சிரித்தான்.

‘டேய்… டேய்… என்னாச்சுடா உனக்கு? இப்பத்தான் பஸ்ல செல்போனை யாரோ அடிச்சிட்டதாச் சொல்லிக் கத்திக் களேபரம் பண்ணி… ஆர்ப்பாட்டம் பண்ணி அழுதே… இப்பக் கீழே இறங்கியதும் சிரிக்கறே… உனக்கென்ன பைத்தியமா?” உடனிருந்த நண்பன் சூர்யப் பிரகாஷ் கேட்க,

‘பைத்தியக்காரனா? யாரு நானா?… ம்ஹூம்… பைத்தியக்காரன் நானில்லை… அந்த பஸ்ல இருந்த அத்தனை பேரும்தான் பைத்தியக்காரர்கள்…” சொல்லிவிட்டு அவன் மீண்டும் சிரிக்க,

‘என்னடா உளர்றே?”

‘உளறலை மச்சான்… உண்மையைச் சொல்றேன்… ஆக்சுவலா இன்னிக்கு என் செல்போனை மறந்து வீட்டுல வெச்சிட்டு வந்திட்டேன்… சரி… சும்மா ஒரு சீன் கிரியேட் பண்ணி எல்லோரையம் கலாய்க்கலாம்ன்னு எண்ணம் வந்திச்சு… அதான் சும்மா ஜாலியா கத்திக் களேபரம் பண்ணினேன்… எப்படி என் நடிப்பு?”

‘ச்சை… இதிலென்னடா லாபம் உனக்கு?”

‘என்ன மச்சான் அப்படிக் கேட்டுட்டே?… பஸ்ல இருந்த மொத்த ஜனங்களும் என் மேல் பரிதாபப்பட்டாங்களே கவனிச்சியா?… முக்கியமா… அதிலிருந்த காலேஜ் பொண்ணுங்க எல்லாரும் என்னையே பார்த்திட்டிருந்தாங்க… நானும் பாவமா முகத்தை வெச்சுக்கிட்டு அவங்களையேப் பார்த்திட்டிருந்தேன்… அதுல ஒண்ணு ரெண்டு பேரு லேசாய்ச் சிரிச்ச மாதிரி இருந்திச்சு… சொல்ல முடியாது… நாளைக்கு நான் இதே பஸ்ல வரும் போது ‘என்ன சார், உங்க செல்போன் கெடைச்சுதா?” ன்னு கேட்டாலும் கேட்பாங்க… அப்படியே அது தொடர்ந்து காதலா மாறினாலும் மாறும்… ஆச்சரியப்படுவதற்கில்லை… ஏன்னா அனுதாபத்துல கூடக் காதல் பொறக்குமாம்..”

சூர்யப் பிரகாசுக்குக் கண்ணனைப் பார்த்து அழுவதா?… சிரிப்பதா…? என்று புரியவில்லை ‘ஹூம்…இப்படியும் ஒரு கேரக்டரா?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ‘சரிடா கண்ணா… நான் கௌம்பறேன்… நாளைக்குப் பார்ப்போம்” சொல்லிவிட்டு எதிர்த் திசையில் நடந்தான் அவன்.

அடுத்த அரை மணி நேரத்தில் வீடு திரும்பிய கண்ணன் வீடே ஒரு வித இறுக்கத்தில் இருக்க சமையலறைக்குள் சென்று தாயிடம் கேட்டான் ‘என்னாச்சும்மா… ஏன் அப்பாவும் சுகன்யாவும் இப்படிக் கப்பல் கவுந்து போன மாதிரி உட்கார்ந்திட்டிருக்காங்க?”

‘ம்… நீயே போயி… உன் அருமைத் தங்கச்சி கிட்டக் கேளு”

சுகன்யாவிடம் சென்று கேட்டான்.

எடுத்த எடுப்பில் ‘கோ”… வென்று அழுதவள் பிறகு அழுகையை நிறுத்தி விட்டு, ‘அண்ணா… நீ… உன் செல்போனை இன்னிக்கு மறந்து வெச்சிட்டுப் போனதைப் பார்த்தேன்… சரி… இன்னிக்கு ஒரு நாளைக்கு நாம காலேஜூக்குக் கொண்டு போகலாமேன்னு நெனச்சு எடுத்திட்டுப் போனேன்… பஸ்ல… பஸ்ல… ”

‘பஸ்ல,”

‘யாரோ அதை அடிச்சிட்டுப் போயிட்டாங்கண்ணா…” சொல்லிவிட்டு அவள் அழுகையை மீண்டும் தொடர,

தன்னுடன் பஸ்ஸில் பயணித்த அனைவரும் தன்னைப் பார்த்துக் கோரஸாய் ‘போடா பைத்தியக்காரா…!!” என்று கத்துவது போலிருந்தது கண்ணனுக்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *