ஆடுதுறையில் ஒரு நடுத்தர உணவகம், காலை நேர பரபரப்புடனும் , இறைப் பக்தி பாடலுடன் உணவு பரிமாறிக்கொண்டு இருந்தார்கள். பாதிக்கு மேல் இருக்கைகள் வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு காலத்தில் உட்கார இடம் கிடைக்காமல் காத்து இருந்து சாப்பிட்டு, பாராட்டி விட்டுச் சென்றவர்கள் சமீப காலமாக வருவது குறைந்தே போன உணவகத்தில் இதுவும் ஒன்று.
கல்லாவில் அமர்ந்து இருந்தவரிடம் ஒரு வயதானவர் வந்து, இங்கே ரமணி சார் யாருங்க?
ஏன்? நான்தான். என்ன? என எரிந்து விழுந்தார்.
முதலாளி கடிதம் கொடுத்தார்.
வேலைக்கா!?
இங்கே இருக்கிறவனுக்கே வேலை இல்லே! இதிலே நீ வேறு!
என்ன வேலை தெரியும்? உனக்கு.
நீங்க சொல்றதைச் செய்யறேன். என்றார்.
அப்படியா! சர்வர் வேலைதான் இருக்கு , அதைப் பாருங்க!
அவருக்கு தேவை ஒரு இடத்தில் வேலை. இரு வேளை உணவு.
அவ்வளவுதான்.
2,4,6, ஆகிய மூன்று டேபிள் நீங்க பாருங்க! ஒழுங்கா கவனமா செய்யனும் தெரியுதா? எனக் கூறிவிட்டு வேறு வேலைக்குத் திரும்பினார்.
அதிலிருந்து அந்த டேபிளையே பார்த்தபடி முதன் முதலா கஸ்டமர் யாராவது உட்காருகிறார்களா? எனப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் சர்வர் சீனு என்கிற சீனுவாசன்.
இவரின் அனுசரனையான,
இன்முகப்பேச்சாலும்,கவனித்து பறிமாறும் திறமையாளும் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்து, எளிமையாகச் சாப்பிட்டு, எங்கோ சென்று உறங்கிவிட்டு சரியான நேரத்திற்கு வந்து வேலைகளை பகிர்ந்து செய்வார்.வாங்கும் சம்பளத்தினை விடவும் அதிக வேலை செய்து அனைவரின் அன்பையும் பெற்றிருந்தார்.
சாப்பிட வருபவர்கள் இவரின் இடம் தேடி உட்காரும் படி செய்ய ஆரம்பித்து இருந்தார்.
ஒரு நாள், காலை நேரம்..
தனது டேபிளில் வந்து அமர்ந்தவரைப் பார்த்து
என்னப்பா? நல்லா இருக்கியா? என்றார்.
அவரும் அதிர்ச்சியாக பார்த்து, அப்பா! நீங்க என்ன பண்றிங்க? இங்க!
அமைதியாக இரு.
வீட்டுக்கு கூட வராம. என்ன அப்பா இது. நீங்க சென்னையில் தானே ஏதோ வேலைன்னு சொன்னீங்க!
சாப்பிடு ,சொல்றேன்.
சாப்பிடறோம், முதல்லே நீ சொல்லு என்றான் அவரின் மகன் அருகில் கும்பகோணத்தில் வசிக்கும் ரவி.
சென்னை தனியார் காப்பகத்தில்,
சீனு , நீ ஏன்டா இங்க வந்து கஷ்டப் படறே? என்றார்.
ராம பவன் ஓட்டல்களின் முதலாளியும், வெளிநாட்டில் இருக்கும் மகனின் வற்புறுத்தலால் காப்பகத்தில் தனது கடைசி காலத்தை கழித்துக்கொண்டு இருக்கும் நாராயணன்.
எனக்குத்தான் தலையெழுத்து, வாரிசும் இல்லை, உடம்புன்னா பார்த்துக்க யாரும் இல்லை, இங்கே வந்து உட்கார்ந்துட்டேன்.
உனக்கு பையன் இருக்கான். வங்கி வேலை ரிடையர்டு ஆகிப் பென்ஷன் வருது, அப்புறம் ஏன்டா இங்க வந்து சமையல் வேலை பார்க்கிற? வீட்டிலே அமைதியா ஓய்வு எடுத்து வாழ்க்கையை அனுபவிடா.
இருவரும் ஒரே ஊரிலே படிச்சது, பழகினதாலே வாடா , போடா னு பேசிக்கிறது சகஜம்.
திருப்தியா சமைச்சு போடறதே பெரிய சேவைதானே அதான் இங்கேயே செஞ்சுன்டு, என் வாழ்க்கையையும் ஓட்டுறேன்.
அதுக்குத்தான் இங்க நிறைய பேர் இருக்காங்க, காசும் எக்கச்சக்கமா வாங்குறா! அப்புறம் என்ன?
நீ உன் பையன்கிட்டே போறதுதான் பெஸ்ட் என்றார்.
அதுவும் சரிதான், ஏதோ யோசித்து,ஆமாம், இங்கே இருக்கிறவங்க எல்லாம் வசிதியானவங்க, பார்த்துக்கிற ஆள் நிறைய பேர் இருக்கா இல்ல!
அப்போ ஆளே இல்லாத வேற இடம்தான் போகனும்.
சரிப்பா , நான் ஆடுதுறைக்கே போறேன். என்றார்.
நீ விருப்பப் பட்டா எங்க ஓட்டலிலே வேலையைப் பாரு. என்றார். முதலாளி.
அதான் இங்கேயே வந்து சேர்ந்து விட்டேன், என மகனிடம் நடந்தவற்றைக் கூறினார்.
அதுவும் இல்லாம, சாப்பாட்டுக்காக சம்பளத்தில் இருந்து ஆறாயிரம் ரூபாய் பிடித்தம் செய்தனர்.அதான் நான் கிளம்பி வந்துட்டேன்.
இங்கே சர்வரா வேலை செஞ்சா அந்த காசும் மிச்சமாகுது. சம்பள பணத்தை நான் அனுப்பறதுக்கு உதவுமேன்னுதான்.
அதுக்கு வீட்டுக்கே வந்துடலாமே அப்பா! என்றான் ரவி.
இல்லை, நான் வெளியலே இருந்து அனுபவிச்சாத்தான் மக்களோட கஷ்டம் புரியும். நான் இப்படியே இருந்திடுறேன். என்னை விட்டு விடு எனக் கெஞ்சினார்.
மெத்த ரிடையர்மென்ட் பெனிபிட் பணத்தையும் மகனுக்கு வழங்கிவிட்டு வெறுங்கையோடு வெளியேறிய மாமனிதரை நினைத்து பெருமையாக, சாஷ்டாங்கமாக காலில் விழுந்தான்.
மொத்த ஓட்டல் பணியாளர்களும் காலில் விழ முற்பட்டனர். தடுத்து நிறுத்தி விட்டு ஆர்டர் எடுக்க அடுத்த டேபிளுக்கு சென்றார்.
கேன்சர் இன்ஸ்டிட்யூட் அலுவலகத்திலிருந்து அந்த காப்பகத்திற்கு வந்து இருந்தார் டாக்டர்.சாய்ராம்.
மிஸ்டர். சீனுவாசன்? பார்க்கனும் என்று கேட்டார்.
விபரம் கூறினார் காப்பக நிர்வாகி.
சார் நீங்க வருவீங்க! வந்தா ! இந்த கவரை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்.
அதில் ஒரு டெபிட்கார்டும், லெட்டரும் இருந்தது.
லெட்டரில்..
டாக்டர் ஐயா அவர்களுக்கு,
நான் என் ஊருக்குச் செல்கிறேன். கார்டைப் பயன் படுத்தி தாங்களே தொகையை எடுத்துக் கொள்ளவும். இங்கு எனக்கான செலவுகள் அதிகமாக உள்ளதால் நான் வேறு ஊருக்குச் செல்கிறேன்.
இப்படிக்கு
சீனு.
என எழுதியிருந்ததை படித்த டாக்டர் கண் கலங்கி..
இப்படி ஒரு ஆத்மாவை இதுநாள் வரை நான் கண்டதில்லை! இனி காணப்போவதும் இல்லை!
அவரின் மொத்த பிரதி மாத பென்ஷன் 33681/-ரூபாயையும், இங்கே வாங்கும் சம்பளம் முழுவதையும் எங்கள் கேன்சர் ஆஸ்பிட்டலுக்கு கொடுத்து உதவிக் கொண்டு இருந்தார்.
இன்றைக்கு வரச்சொன்னதால் வந்தேன் , தனது கார்டையே கொடுப்பார் என சற்றுக்கூட நினைக்கவில்லை என்றார்.
முதலாளி , நிர்வாகி உட்பட அனைவரும் அவர் சென்ற திசை நோக்கி வணங்கி நின்றனர்.