பள்ளிக்கூடத்திற்கு குழந்தையை விடும் ஆட்டோவிற்கு அட்வான்ஸ் தொகை ரூபாய் ஐநூறு கேட்டவுடன் பிரதீப்பிற்கு கோபம் தலைக்கேறியது.
இதுக்கெல்லாமா அட்வான்ஸ்? ஒரு வேளை அட்வான்ஸ பணத்தை வாங்கிவிட்டு ஆட்டோகாரர் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வரவில்லை என்றால்…
இரவு முழுவதும் மன உளைச்சலுடன் பருண்டு புரண்டு படுத்த பிரதீப் காலையில் ஆட்டோகாரரிடமே கேட்டு விடுவது என்ற தீர்மானத்துடன் படுத்தார்.
காலையில் ஆட்டோகாரரிடம் வாதம் புரியச் சென்ற பிரதீப் சத்தமில்லாமல் ஆட்டோகாரர் கேட்ட அட்வான்ஸ் தொகையைத் தந்துவிட்டுத் திரும்பியதை அவர் மனைவி தேவி ஆச்சர்யத்துடன் பார்த்து கேட்டே விட்டாள்.
‘ஆட்டோகாரர்ட்ட என்ன பேசினீங்க..அவரு கேட்ட பணத்தை ஏன் கொடுத்துட்டு வந்தீங்க?’
’என்ன சார் உங்க குழந்தையையே என்னை நம்பி ஒப்படைக்கிறீங்க, கேவலம் அட்வான்ஸ் தொகையை ஒப்படைக்கப் பயப்படுறீங்களேன்னு சொன்னார்’ என பிரதீப் சொன்னதும், தேவியும் வாயடைத்து நின்றாள்.
– ச.ஜான் பிரிட்டோ (பெப்ரவரி 2013)