நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 15,401 
 

நாற்பது வருஷம் ஆச்சு… இந்தாத்துக்கு மாட்டுப் பொண்ணா வந்து… கை நெறைய ஒரு கூடைச் சொப்பை வச்சுண்டு… அப்பா தூக்கிண்டு வந்து விட்டாளே… அப்போ அம்மா, – அவர்தான் எங்க மாமியார் இருந்தார்… மாமியாருக்கு மாமியாரா அம்மாவுக்கு அம்மாவா… பெத்த தாய்க்கு மகளாயிருந்தது அஞ்சு வருஷ காலந்தானே!… மிச்ச காலத்துக்கும் மாமியாருக்கு… மாட்டுப் பொண்தானே… கூடத்துலே என்னை இறக்கி விட்டுட்டு மேல் துண்டாலே முகத்தை மூடிண்டு அப்பா என்னத்துக்கு அழுதார்னு இப்பவும் நேக்குப் புரியலை… இதோ இந்த முற்றத்துலே – அப்பவே அடத்துக்குக் குறைச்சலில்லே. அந்தச் செங்கல் தரையிலேதான் பம்பரம் விட்டாகணும்னு நாக்கைத் துருத்திக் கடிச்சுண்டு சொடுக்கிச் சொடுக்கிப் பம்பரம் விட்டுண்டு நிக்கறாரே, இவர் நேக்கு ஆத்துக்காரர்னு, புரியறதுக்கே ரொம்ப நாளாச்சே… அதுக்காக ‘நறுக் நறுக்’ குனு வந்து தலையிலே குட்டறதோ?… ‘போடா’ன்னு ஒரு நாள் நன்னா வெசுட்டேன்… சமையலுள்ளே காரியமா இருந்த அவர், ஓடி வந்தார். “ஐயையோ… என்னடீது? அவன்… இவன்னு… அவனை.” “அவன் மட்டும் என்னைக் குட்டலாமோ?”… அம்மாவுக்கு ஒரு பக்கம் சிரிப்பா வரது… என்னைக் கட்டி அணைச்சுண்டு எங்க உறவைப் பத்தி விளக்கிச் சொல்றார்… ஆனால், எல்லாம் புரியும் காலம் வரச்ச தானே புரியறது…. நெனைச்சுப் பார்த்தா, எல்லாமே ஆச்சரியமா இருக்கு… இவர் கிட்டே நேக்கு எப்படி இத்தனை பயம் வந்தது! பயம்னா, அது சந்தோஷமான பயம்… மரியாதையான பயம், பயம்ங்கறதைகூடச் சரியில்லே… அது ஒரு பக்தின்னு தோண்றது… எப்படியோ வந்துடுத்தே… ம்..ம்!… நாற்பது வருஷத்துக்கு மேலே ஆச்சு…

‘இந்த மனுசனைக் கட்டிண்டு நான் என்னத்தைக் கண்டேன். ஒரு அது உண்டா, ஒரு இது உண்டா’ன்னு குளத்தங்கரைலேயிருந்து கோயில் பிரகாரம் வரைக்கும் அலுத்துண்டு அழுதுண்டு சில பேர் அழிச்சாட்டியம் பண்ணிண்டு திரியறாளே, அவாளெல்லாம் என்ன ஜன்மங்களோ அம்மா!

நேக்கு ஒரு குறையும் இல்லை… ஆமாம்… எந்தக் கோயிலிலே வந்து வேணாலும் நின்னு ஈரத் துணியைக் கட்டிண்டு சொல்வேன் – எனக்கு ஒரு குறையும் இல்லை… பாக்கறவா சொல்லுவா… நேக்கு குழந்தை இல்லைங்கறதைப் பெரிய குறையாச் சொல்லுவா… சொல்றா… நானே கேட்டிருக்கேன். எதுக்கு… பொய் சொல்லுவானேன்… நேக்கும் அப்படி ஒரு குறை கொஞ்ச நாள் இருந்திருக்கு. அது எவ்வளவு அஞ்ஞானம்னு அப்பறமாத்தான் புரிஞ்சது… நேக்கே சொந்தமா ஒண்ணும் புரிஞ்சுடலை… அவர் புரிய வச்சார். அவராலேதான் அது முடியும். பேச ஆரம்பிச்சார்னா எங்கேருந்துதான் அந்தச் சூத்திரங்களெல்லாம் கையைக் கட்டிண்டு வந்து நிக்குமோ! சாஸ்திரங்களிலேருந்தும் வேதங்களிலேருந்தும் நிரூபணங்கள் எடுத்துக் காட்டி… எப்பேர்ப்பட்ட சந்தேகங்களானாலும் சரி, என்ன மாதிரியான அஞ்ஞானக் கவலைகளானாலும் சரி, அவரோட பேச்சினாலேயே அடிச்சு ஓட்டற சாமார்த்தியம்… அப்படி ஒரு வாக்கு பலம்… அப்படி ஒரு ஞானம்… அது அவருக்கு மட்டுந்தான் வரும்… ஏதோ, எங்க ஆத்துக்காரர்ங்கறதுக்காக ஒரேயடியாப் புகழ்ந்துடறேன்னு நெனைச்சுக்காதேங்கோ… அவரைப் புகழற அளவுக்கு நேக்கு ஞானம் போறாது. அப்பேர்ப்பட்ட வித்துவானுக்குச் சரியான நிரட்சரகுஷி வந்து சகதர்மிணியா வாச்சிருக்கேன் பாருங்கோ. இதைப் பத்தி நானே ஒரு தடவை அவர் கிட்டே சொன்னேன். பெரிய பிரசங்கமே பண்ணிட்டார். அவருக்கு நான் சகதர்மிணியா இருக்கறது எவ்வளவு பாந்தம்கிறதைப் பத்தி… அவருக்கு… அதுலே எவ்வளவு சந்தோஷம்கிறதைப் பத்தி. அவர் என்கிட்டே சொன்னதெல்லாம் நான் எப்படிச் சொல்றது? அவருக்குச் சகதர்மிணியாக இருக்கறதுக்கு நேக்குத் தகுதி இருக்குங்கறது வாஸ்தவமாகவே இருக்கட்டுமே! அதனாலே அவரைப் புகழற தகுதி நேக்கு வந்துடுத்துன்னு அர்த்தமாயிட
ுமா?

மகா வித்துவான் ஸரீாமான்..னு சொன்னா இந்த ராஜதானி பூராத் தெரியும். இவரோட பிரக்கியாதி சென்னைப் பட்டணம் என்ன, காசி வரைக்கும் பரவி இருந்தது…

இவர்கிட்டே படிச்சவாள், இந்தாத்துலே நேக்குக் கூடமாட வேலை செஞ்சவாள் எத்தனை பேர் கலெக்டராகவும் பெரிய பெரிய உத்தியோகத்திலேயும் இருக்கா தெரியுமோ?

நாமே பெத்து, நாமே வளத்து, நாயும் பூனையுமா நின்னிண்டிருந்தாத்தானா?

“இதோ, இப்பவும் சங்கர மடத்துத் திண்ணையிலே, எதிரே வரிசையாக் குழந்தைகளை உட்கார்த்தி வச்சுண்டு அவர் வித்தியாப்பியாசம் பண்ணி வச்சிண்டிருக்கார்… அவர் குரல் மட்டும் தனியா, ஒத்தையா, கனமா, நாபிலேருந்து கிளம்பி ஒலிக்கறதைக் கேக்கறச்சே, உடம்பெல்லாம் சிலிர்க்கறது. அப்புறம் இந்த வாண்டுப் ‘படை’ களெல்லாம் கூடச் சேர்ந்துண்டு முழங்கறதே… அந்தக் குழந்தைகள் அத்தனை சிரத்தையோட, பக்தியோட மெல்லீசுக் குரலிலே அவர் மாதிரியே சொல்லணும்னு பிரயாசைப் பட்டு, அந்தக் கனம் இல்லாம அந்த ஸ்தாயியை மட்டும் எட்டறதுக்கு வயத்தை எக்கிண்டு, மார்மேலே கையையும் கட்டிண்டு உச்சாடனம் பண்றாளே… அது வந்து காதிலே விழறச்சே, வயத்தை என்னமோ செய்யறதே, அது பெத்தவாளுக்கு மட்டுந்தான் வருமோ?…”

அவர்தான் சொல்லுவார்… ‘குழந்தையைப் பெத்துக்கறது ஒண்ணும் பெரிய காரியமில்லை; அதுக்கு வயத்தை அடைச்சு வளத்துடறதும் ஒண்ணும் பெரிய காரியமில்லை. அறிவையும் ஒழுக்கத்தையும் தந்து அவனை ஞானஸ்தனாக்கறதுதான் பெரிய காரியம். நாமெல்லாம் சாதாரணக் குழந்தைகளைப் பெத்தவாள்ங்கற பெயரைவிட இந்த மாதிரி ஞானஸ்தர்களை உற்பத்தி பண்ணினவாள்ங்கற பேருதான் சிரேஷ்டமானது…’ இன்னும் என்னென்னமோ சொல்லுவார். நேக்கு எங்கே அதெல்லாம் திருப்பிச் சொல்ல வரது?… ஆனா, அது எவ்வளவு சத்தியம்னு மனசுக்குப் புரியறது.

இவர்ட்டே படிச்சுட்டு இப்போ பட்டணத்துலே ஏதோ காலேஜிலே ஸம்ஸ்கிருத புரபசரா இருக்கானே சீமாச்சு… இப்போ பண்டித ஸரீனிவாச ஸாஸ்திரிகள்னு பேராம்… கேக்கறச்சே என்னமா மனசுக்குக் குளிர்ச்சியா இருக்கு… பெத்தாத்தான் வருமோ… பெத்தவள் இங்கேதான் இருக்காள்… தன் பிள்ளை தன்னைச் சரியாகக் கவனிக்கலேன்னு காலத்துக்கும் சபிச்சிண்டு…

ஒண்ணொண்ணும் அவர் சொல்றச்சே, என்னமோ சமத்காரமா தர்க்கம் பண்ணிச் சாதிக்கற மாதிரித் தோணும். திடீர்னு, அன்னிக்கே அவர் எவ்வளவு சரியாச் சொன்னார்னு நெனச்சு நெனச்சு ஆச்சர்யப்படற மாதிரி ஒண்ணொண்ணும் நடக்கும்.

அன்னிக்குக் கோயிலுக்குப் போயிட்டு வரச்சே சீமாச்சுவோட அம்மா, ஒரு நாழி நிறுத்தி வச்சு, அந்தச் சீமாச்சு இவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமே மாமியார் வீடே கதின்னு போய்ட்டதையும், அவனை வளக்கறதுக்கும் படிக்க வைக்கறதுக்கும் அவள் பட்ட கஷ்டத்தையெல்லாம் கொஞ்சங்கூட நன்றியில்லாமல் அவன் மறந்துட்டதையும் சொல்லிப் புலம்பிண்டு, அழுதுண்டு அவனைச் சபிச்சாளே… அப்போ நேக்குத் தோணித்து… இப்படிப் பெக்கவும் வேண்டாம், இப்படிச் சபிக்கவும் வேண்டாம்னு… ஏதோ அவள் மனசு சமாதானத்துக்காக நானும் தலையைத் தலையை ஆட்டிண்டிருந்தேனே ஒழிய, நேக்குப் புரிஞ்சது; இந்தக் கிழவி பொறாமையாலே கிடந்து எரிஞ்சுண்டிருக்காள்னு… கிழவிக்கு இங்கே ஒரு குறைச்சலும் இல்லே… நன்னா சௌக்கியமாத்தான் இருக்காள்… இருந்தாலும் தான் பெத்த பிள்ளையினாலெ மத்தவா இன்னும் சுகப்பட்டுடுவாளோங்கற ஆத்திரம், கிழவி மனசை அலக்கழிக்கறது… பாத்யதை கொண்டாடறவாளாலே எப்படிப் பாசம் கொண்டாட முடியறதே இல்லேன்னு—

எல்லாம் இவர் சொல்லித்தான் நேக்கும் புரியறது… இல்லேன்னா இந்தக் கிழவியோட சேந்துண்டு நானும் சீமாச்சுவை ஒரு பாட்டம் பாடிட்டுத்தானே வந்திருப்பேன்.

இவர் எல்லாத்தையும் எப்பட��
�த்தான் கறாரா, தீர்க்கமா அலசி அலசிப் பாத்துடறாரோ? தனக்கு அதனாலே நஷ்டமா லாபமானுகூட யோசிக்க மாட்டார். எத்தனை பேர் அதை ஒத்துக்கறா, எத்தனை பேர் ஒத்துக்கலேங்கறதெப் பத்தியும் கவலைப்பட மாட்டார். அவரோட சாஸ்திரத்துக்கு, தர்க்கத்துக்கு ஒத்துவராத ஒரு காரியத்தை லோகமே அவர் மேலே திணிச்சாலும், ‘தூ’னு தள்ளி எறிஞ்சுடுவார் – அப்படி அதைத் தூர எறிஞ்சது எவ்வளவு நியாயம்னு, லோகத்தையே இழுத்து வச்சுண்டு வாதம் பண்ணவும் தயாரா இருப்பார். நானும் இத்தனை காலமா பாத்துண்டிருக்கேனே… ஒத்தராவது, ‘அதென்னமோ, நீங்க சொல்றது சரியில்லை ஸ்வாமி’ன்னு சொல்லிண்டு போனதில்லை. அப்படிச் சொல்லிண்டு வருவா.

அவாளோடெல்லாம் திண்ணையிலே உக்காந்து இவர் பேசிண்டிருக்கறச்சே, நான் அவர் முதுகுக்குப் பின்னாலே அறையிலே உட்கார்ந்து கேட்டுண்டிருப்பேன். அவர் பேசறதிலே ரொம்ப விஷயங்கள் எனக்குப் புரியறதே இல்லை. அவர் என்னமா இங்கிலிஷ் பேசறார். நேக்குத் தெரிஞ்சு இருபது வயசுக்கு மேலே இவர் இங்கிலீஷ் படிச்சார். ஒத்தருக்கு ஸம்ஸ்கிருத பாடம் சொல்லிக் கொடுத்துண்டு – அவருக்கு இவரைவிட வயசு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் – அவர்கிட்டே இவர் இங்கிலீஷ் கத்துண்டார். இங்கேருந்து கும்பகோணத்துக்குப் போயிப் போயி என்னென்னமோ பரீட்சையெல்லாம் எழுதினார்.

இப்போ, இவர் எழுதின புஸ்தகங்களை அங்கெல்லாம் படிக்கிறவாளுக்குப் பாடமா வெச்சிருக்காளாம்.

பத்து வருஷத்துக்கு முன்னே காசியிலே ஏதோ மகாநாடுனு இவர் போறச்சே, நானும் கூடப் போனேன். இவருக்கு என்னென்னமோ பட்டம் எல்லாம் குடுத்தா… நேக்கு ரொம்பப் பெருமையா இருந்தது. நான் வெள்ளிக் குடத்து நிறைய கங்கா தீர்த்தம் எடுத்துண்டு வந்து, ஊர்லே இருக்கிறவாளுக்கெல்லாம் குடுத்தேன். நேக்கென்ன குறைச்சல்?

அப்போதான் காசிலேருந்து திரும்பி வரச்சே சென்னப் பட்டணத்துலே சீமாச்சு ஆத்திலே தங்கினோம். பட்டணத்துப் பெரிய ரயிலடிக்கு, சீமாச்சு மோட்டார் காரோட வந்திருக்கான். ரயிலடியிலேயே எங்களை நிறுத்தி வச்சு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிண்டான். சமுத்திரக் கரையை எல்லாம் சுத்திக் காட்டினான். சென்னப் பட்டணத்துலே மோட்டார் கார் இல்லாமே ஒண்ணும் முடியாதாம். அப்பவும் முன்னே மாதிரியே இவர்கிட்டே வந்து கையைக் கட்டிண்டு நின்னுண்டு ஏதேதோ சந்தேகமெல்லாம் கேட்டுண்டான். ஆனால், அவன் காலேஜீக்குப் போறச்சே அவனைப் பாக்கறதுக்கு நேக்கே பயமாயிருந்தது. துரை மாதிரி என்னென்னத்தையோ மாட்டிண்டிருக்கான். இவர் என்னடான்னா அதைப் பார்த்துட்டு ‘ஓ’ன்னு சிரிக்கிறார்.

அதுக்கு அப்பறந்தான் ஒரு நாள் இந்தாத்துக்கு முன்னாடி ஒரு பெரிய கார் வந்து நின்றது. யார் யாரோ பெரிய மனுஷாள் – சீமாச்சு புரபசரா இருக்கானே அந்தக் காலேஜை சேர்ந்தவாளாம் – எல்லாம் வந்து – இந்தாத்துத் திண்ணையிலேதான் உட்கார்ந்துண்டா… சீமாச்சு மட்டும் சொந்தமா அடுக்களை வரைக்கும் வந்துட்டான். நான் அவன்ட்டே அடிக்கடி ஒரு நடை வந்து தாயாரைப் பார்த்துட்டுப் போகப்படாதோன்னு கேட்டேன்… ‘எனக்கெங்கே முடியறது… என்னோட வந்துடுனு கூப்பிட்டாலும் வரமாட்டேங்கறாளே’ன்னு சொல்லி வருத்தப்பட்டுண்டான். அப்பறமா அவன் வந்திருக்கிற காரியத்தைச் சொன்னான்.

அவன் வேலை பாக்கற காலேஜிலே இவரை ஏதோ பெரிய உத்தியோகத்துலே வச்சுக்கறதுக்குத் தவம் கெடக்கறாளாம். ஆனால், இவரைக் கேக்கறதுக்குப் பயப்படறாளாம். ‘நான் கேட்டு அவரைச் சம்மதிக்க வெக்கறேன்’னு தைரியம் குடுத்து இவன் அழைச்சிண்டு வந்திருக்கானாம்… இன்னும் என்னென்னமோ சொன்னான்… நேக்குக் கூட ரொம்ப ஆசையாத்தான் இருந்தது.

இவர் வந்ததும், எல்லாரும் திண்ணையிலே உக்காந்துண்டு பேசினா, பேசினா அப்பிடிப் பேசினா. நா�
��் அறைக்குள்ளே உக்காந்து கேட்டுண்டே இருந்தேன். நேக்கு அவர் பேசினது ஒண்ணும் புரியலை. ஆனால், ஒண்ணு புரிஞ்சது… அவா ஜம்பம் இவாகிட்டே சாயலைன்னு…

கடைசியிலே அன்னிக்கு அவாள்ளாம் போனப்பறம் நானே கேட்டுட்டேன்:

“உங்களுக்கு இந்த உத்தியோகத்தெ ஒத்துண்டா என்ன? அங்கே படிக்கிறவாளும் மாணவர்கள்தானே?… உங்களுக்கு என்ன இப்படி ஒரு பிடிவாதம்? பாவம்! சீமாச்சு ரொம்ப ஆசை ஆசையா நம்பிக்கையோட வந்தான்!” – நான் சொன்னதெக் கேட்டு அவர் சிரித்தார்.

இவருக்கு இது ஒண்ணு. உடம்போடயே பொறந்தது அந்தச் சிரிப்பு. அதுவும் இந்தச் சிரிப்பு இருக்கே என்கிட்டே மாத்திரம்தான்.

சிரிச்சுண்டே சொன்னார்:

“சீமாச்சு கட்டிண்டு திரியறானே அந்த மாதிரி என்னை வேஷம் கட்டிப் பாக்கணும்னு நோக்கு ஆசையா இருக்காக்கும்… வித்தியாப்பியாசம் பண்ணி வெக்கறதுக்கு கூலி வாங்கப் படாதுங்கறது உனக்குத் தெரியாதா? ஆசிரியனுக்குக் கூலி கொடுத்துட்டப்பறம் மாணாக்கனுக்கு அவர் கிட்டே என்ன மரியாதை இருக்கும்? எப்படி மரியாதை இருக்கும்? இவன் கூலி வாங்கறவன் ஆயிடறானே… கூலி பத்தாதுன்னு கொடி புடுச்சிண்டு கொஷம் போட்டுண்டு – என்னைக் கொடி புடிக்கவும் கோஷம் போடவும் கூப்பிட மாட்டான்னாலும் – அந்தக் கும்பலுக்குத் தலைவரா வாங்கோம்பா… எனக்கு இதெல்லாம் ஆகிற காரியமா? நீயே சொல்லு”ன்னார்.

நான் என்னத்தைச் சொல்றது?… பேசாம அவர் பேசிண்டிருந்ததெ வாயை மூடிண்டு கேட்டுண்டு இருந்தேன்.

இவர் உடம்பிலே ஒரு சட்டையெப் போட்டுண்டு நிக்கற மாதிரி நெனச்சுப் பாக்கிறப்பவே நேக்குச் சிரிப்புச் சிரிப்பா வரது? அந்த நெனப்பே ஒரு பாந்தமில்லாம இருக்கே… நானும் அவரோட சிரிச்சிட்டு, அந்த விஷயத்தை அதோட விட்டுட்டேன்.

அவரைப் பத்தி இவ்வளவு தெரிஞ்சிருந்தும் நான் போயி அவரைக் கேட்டதை நெனச்சித்தான் வெட்கப்பட்டேன். ஆனாலும், இந்த நாற்பது வருஷத்தில் அசடாவேதான் இருக்கேன்… புதுசு புதுசா ஏதாவது அசட்டுத்தனம் பண்ண வேண்டியது. அவர் சிரிக்க வேண்டியது – இப்படி ஒரு ஜன்மமாயிட்டேன்.

ஒரு பத்து நாளக்கி முன்னே பாருங்கோ… இப்படித்தான் – இவர்ட்டே படிக்கிற பையன் ஒருத்தன்… ஏதோ ஒரு சீட்டை எடுத்துண்டு வந்து, மாமி மாமி… இது கெவர்மண்ட் நடத்தற பரிசுச் சீட்டோ அதிர்ஷ்டச் சீட்டோ… என்னமோ சொல்லி, ஒரு ரூபாதான் வாங்கிக்கோங்க… கெடைக்கறதே கஷ்டம்… உங்களுக்காகச் சேத்து நான் வாங்கிண்டு வந்தேன்னு தந்தான்… நானும் அதெப் பத்தி ஒண்ணும் பிரமாதமா நெனச்சுக்காம, ஏதோ கொழந்தை நம்மை நெனச்சிண்டு அக்கறையோட வாங்கி வந்திருக்கேன்னு ஒரு ரூபாயைக் கொடுத்து வாங்கிட்டேன்.

அந்தக் கொழந்தை அதெப்பத்தி பெரிய பிரசங்கமே பண்ணினான்…. எத்தனையோ பேர் அதிலே பிரைஸ் வந்து லட்சாதிபதியா ஆயிட்டாளாம்… ஏழைகளுக்குத்தான் அதுவும் விழறதாம்… இன்னும் என்னென்னவோ சொன்னான்…. நான் சும்மா ஒரு வெளையாட்டுக்குத்தான் வாங்கினேன்… ஆனாக்க அன்னிக்கி சாயந்திரமே இவர் திண்ணையிலே உக்காந்துண்டு ஒரு அஞ்சாறு பேர்கிட்டே இந்தப் பரிசுச் சீட்டைக் கிழிச்சிக் கட்டிண்டிருந்தாரே பார்க்கலாம்.

அறையிலே உக்காந்து கேட்டுண்டு இருக்கறப்ப – என்னை அப்படியே செவுள்லே ‘பளார் பளார்’னு பிடிச்சிண்டு அறையற மாதிரி இருந்தது.

அதுவும் அன்னிக்கி அவர் பேசறச்சே, அது சாதாரணமா எப்பவுமே பண்ணுவாரே அந்த மாதிரி நிதானமா வாதம் மாதிரி இல்லே. இந்த லோகத்தையே சபிக்கப் பொறப்பட்டவர் மாதிரி ஆவேசமா கத்தினார்.

என்னத்துக்கு இவருக்கு இதிலே இவ்வளவு கோபம்னு நேக்குப் புரியவே இல்லே.

“இந்த தேசத்திலே இது நடக்கலாமாங்காணும்… சூதாடி சூதாடட்டும். சோரம் போறவா சோரம் போகட்டும்… ராஜரீகம் பண்றவா, லோக பரிபாலனம் பண்றவா இ�
��ைச் செய்யலாமாங்காணும்… கலி முத்தி, நாம அழியப் போறொம்கறத்துக்கு இதாங்காணும் அத்தாட்சி. நெறி தவறாம ராஜபரிபாலனம் பண்ணின தருமன் எப்பிடி அழிஞ்சான்?… யோசிச்சுப் பாரும்… தருமனே சூதினாலேதானே அழிஞ்சான்…. சூதிலே ஜெயிச்சவனும் வாழறதில்லே, தோத்தவனும் வாழறதில்லேங்கற சத்யத்தைத்தானே ஐயா, மகாபாரதம் பேசறது… சூதாட்டத்துக்கும் ஒரு தர்மம் இருக்கு, கேளும்…. சம அந்தஸ்திலே இருக்கிறவாதான் சூது ஆடலாம்… அதுவே பாவம்தான்… அந்தப் பாவத்துக்கும் ஓர் அத்து வெச்சிருக்கா… ராஜரீகம் பண்றவா, ராஜ்ய பரிபாலனம் செய்யறவா பாமர மக்களை எல்லாம் இப்படி மாயாஜாலம் பண்ணி சூது ஆடறாளே, இது அடுக்குமா? போச்சு… எல்லாம் போச்சு… இனிமே இந்த ஜன சமூகத்திலே எந்த விவஸ்தையும் இருக்காது… ஓய வறுமையினாலே அழியறதைவிட சூதினாலேதான் ஜன சமூகமே அழிஞ்சு போயிடும். திருவள்ளுவருக்குத் தெருத் தெருவா சிலை வெச்சு பிரதிஷ்டை பண்ணாப் போறுமா… அவர் சூதுன்னு பொருள்பால்லே ஓர் அதிகாரமே எழுதி வெச்சிருக்காரே…”ன்னு அந்தப் பத்துப்பாட்டையும் எடுத்தெடுத்துச் சொன்னார். அர்த்தம் சொன்னார்… மகாபாரதத்திலேருந்து ஸ்லோகங்கள் பாடினார். ‘உருப்படமாட்டேள்… உருப்படமாட்டேள்’னு தலையிலே அடிச்சிண்டார்…

எனக்கு வயத்திலே புளி கரைக்க ஆரம்பிச்சுடுத்து… ஏண்டா, இந்தச் சனியனை ஒரு ரூபா குடுத்து வாங்கினோம்னு இருந்தது. ஆனாலும், என்னத்துக்கு இவர் இதுக்காகப் போயி இவ்வளவு ஆவேசம் காட்டறார்னும் புரியலை. இவர் சட்டை போட்டுக்கறதில்லே; லோகமே அதுக்காக இவர் மாதிரி சட்டையில்லாம, குடுமியும் வெச்சுண்டு, பஞ்சாங்கம் பாத்து க்ஷவரம் பண்ணிண்டு இருக்கணும்னு சொல்வாரோன்னு நான் பண்ணின காரியத்துக்கு வசதியாக மனசுக்குள்ளே, எதிர்வாதம் பண்ணிண்டேன்.

அந்தச் சீட்டை வாங்கி வச்சுண்டதனாலேயே இப்ப என்ன கெட்டுப் போயிட்டுதுன்னு சமாதானப்பட்டுண்டாலும், திடீர்னு நம்ம போறாத வேளை ஒரு நூறு ரூபா விழுந்து வெக்கறதுன்னு வெச்சுக்கோங்கோ… ஊரு பூரா இதுன்னா ஒரே அக்கப்போராயிடும்!…

அதுவும் இவர் இந்த மாதிரிப் பேசிண்டு இருக்கறச்சே… நான் வாங்கி அது பரசியமா ஆயிடுத்துன்னா, இவரோட நாணயத்தைன்னா, எல்லாரும் சந்தேகப்படுவான்னு நேக்கு மனசைக் கொழப்பிண்டே இருந்தது…

அந்தக் கொழந்தை – அவன்தான் சீட்டுக் குடுத்தவன் – சொல்லித்து. பத்திரிகைக்காரா எல்லாம் போட்டோ பிடிக்கறவனையும் அழைச்சிண்டு எந்தப் பட்டிக்காடா இருந்தாலும் தேடிண்டு வந்துடறாளாம்… சென்னப் பட்டணத்திலே இதுக்காகப் பெரிய திருவிழா நடத்தி, ரொம்பப் பெரிய பெரிய மனுஷாள் கையாலேதான் இதெத் த்ருவாளாம்…அட கஷ்ட காலமே!…

சரி, என்னமோ வாங்கிட்டேன்; இதெல்லாம் என்ன வீண் கற்பனைன்னு அவர்கிட்டே இது விஷயமா நான் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கலே…

வேணும்னே அன்னிக்கு அவருக்கு சாதம் போடறச்சே நானே பேச்சைக் கிளப்பினேன்…

“என்ன அது? என்னமோ பிரைஸ் சீட்டாம்… ஒரு ரூபா குடுத்து வாங்கினவாளுக்கு ஒரு லட்சம் ரூபாய் கெடைக்கறதாம் – கெவர்மெண்டாரே நடத்தறதனாலே பொய், மோசடி ஒண்ணும் கெடையாதாம். நாணயமா நடக்கறதாம். பக்கத்தாத்துப் பொண்ணு பத்து ரூபாய்க்கு ஒரேயடியா வாங்கி இருக்காளாம். அது என்ன அது?…”ன்னு கேட்டு வெச்சேன்.

“அது நம்மாத்து அடுக்களை வரைக்கும் வந்தாச்சா? அது ராஜாங்கம் நடத்தற சூதாட்டம் – அவ்வளவுதான். வாந்தி பேதி மாதிரி ஜனங்களை வெரட்டி வெரட்டிப் புடிக்கறது இது. வாந்தி பேதி, வைசூரி வராம தடுக்கிற காரியத்தைச் செய்யற கெவர்மெண்டார் தான் இதையும் செய்யறா. அதனாலே அவாளுக்குப் பணம் கெடைக்கறதாம். ஏழைகள் லட்சாதிபதியாறாளாம்… எப்படியும் போகட்டும். நீயும் நானும் லட்சாதிபதியாகலேன்னா அழறோம்? நமக்கென்ன அதை��
�்பத்தி”ன்னார்.

“ஒரு லட்சத்தைக் கொண்டு வந்து உங்களண்ட கொடுத்தா, வேணாம்னு சொல்லிடுவேளா?”ன்னேன்.

இவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். எனக்கு அவமானமா இருந்தது… உடம்பு கூசித்து.

“நாற்பது வருஷம் என்னோடே வாழ்ந்த உனக்கா, இப்படி ஒரு சந்தேகம் வந்தது”ன்னு கேக்கற மாதிரி இருந்தது அந்தச் சிரிப்பு… நான் தலையைக் குனிஞ்சிண்டேன்.

“நீங்க வேணாம்னு சொல்லுவேள்; அது எனக்குத் தெரியும். ஏன் அப்படிச் சொல்லணும்னு கேக்கறேன்?… உங்க கொள்ளூப் பாட்டனாருக்கு மானியமா கெடச்ச இந்த வீட்டுக்கு, அந்த மேற்கு மூலையிலே மூணுவருஷமா சுவத்திலே விரிசல் கண்டு, மழை பேயறச்சே ஒரே தெப்பமா ஆறதே – அதெ சரி பண்றதுக்கு வழி இல்லாம இருக்கோமே – நமக்கும் பணம் அவசியமாத்தானே இருக்கு… எதுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை அலட்சியம் பண்ணணும்னு யோசிக்கிறேன். அது தப்பா?”ன்னு கேட்டேன்.

“ஓ! நீ பேசறதெப் பாத்தா உனக்கு அந்தச் சீட்டு வாங்க ஒரு ஆசை; அப்படித்தானே?”ன்னு கேட்டார்.

நான் பேசாம இருந்தேன்.

“அசடே… அசடே… ஆசைதான் மானத்துக்குச் சத்ரு. அதிலே பரிசு வராதுங்கறதினாலே நான் அது தப்புன்னு சொல்லலே. வந்தாலும் அது அதர்மமா வந்த, பலபேரை வயிறெரிய வச்சு சம்பாதிக்கிற பணம்னு சொல்றேன். தரும வழியில் சம்பாதிக்காம வர்ற செல்வம், பாப மூட்டைன்னா… நீ சொன்னயே எங்க கொள்ளுப் பாட்டனாரைப் பத்தி… அவாள்ளாம் உஞ்சவிருத்தி பண்ணித்தான் மகா மேதைகளா இருந்தா… நேக்கு நன்னா ஞாபகமிருக்கு… அப்பா, இதே சங்கர மடத்திலே பகலெல்லாம் வித்தியாப்பியாசம் பண்ணி வைப்பார்… சாயங்காலம் காலக்ஷேபம் பண்ணுவார். காலையிலே உஞ்சவிருத்திக்கிப் போவார்… மறுவேளைக்கு மீதி இல்லாம சேருகிற அளவுதான் அந்தப் பாத்திரம் இருக்கும். ஸ்லோகத்தெச் சொல்லிண்டு அவர் நடு வீதியிலேதான் நடப்பார்… வீட்டுக்குள்ளேயிருந்து அந்தாத்துக் கொழந்தை கையினாலே ஒரு பிடி அரிசி அளவா எடுத்துண்டு நடு வீதியிலே வந்து அவருக்கு பிக்ஷை தருவா… எதுக்குத் தெரியுமா கொழந்தையின் கையை அளவா வெச்சா… பெரியவா கை அளவானா நாலு வீட்டோட பாத்திரம் நெறைஞ்சி போயிடும்… மத்தவா வீட்டிலே வெச்சுண்டு காத்திருப்பாளே, அந்தப் பிக்ஷயைத் தடுத்த பாவம், அதிகமா போட்டவாளுக்கு வந்துடாதோ?… அதுக்காகத்தான். அந்த மாதிரிப் பாத்திரம் நெறைஞ்சப்புறமும் யாராவது கொண்டு வந்தா, அதெ வாங்க மாட்டார் – பிக்ஷை போட வந்தவா தலையிலே ரெண்டு அட்சதையை இவர் பாத்திரத்திலேருந்து போட்டு ஆசிர்வாதம் பண்ணிட்டு வருவார்… அந்த வம்சத்திலே வந்த புண்ணியம்தான் இந்த ஞானம் பிடிச்சிருக்கு. இதைவிட அதிர்ஷ்டம் என்னன்னு எனக்குத் தெரியலே… இந்த நிம்மதியை இந்த மனஸ் ஆரோக்கியத்தை எத்தனை லட்சம் தரும்?… சூதாட்டத்துலே, பணத்தாலே லட்சாதிபதிகளை இந்த அரசாங்கம் உருவாக்கலாம். ஒரு ஞானஸ்தனை, ஒரு சதுர்வேத பண்டிதனை உருவாக்கச் சொல்லேன், பார்க்கலாம்”னு அன்னிக்குப் பூரா, போய் வந்து போய் வந்து என்னண்ட பேசிக் கொண்டிருந்தார்.

இதெல்லாம் நடந்து பத்து நாளைக்கு மேலே ஆயிடுத்து… அந்தச் சீட்டுச் சமாசாரத்தையே நான் மறந்துட்டேன்…

நேத்து அந்தக் கொழந்தை – சீட்டு கொண்டு வந்து குடுத்தானே – ஒரு பேப்பரை எடுத்துண்டு வந்து ‘பரிசு கெடைச்சவா நம்பரெல்லாம் வந்திருக்கு… உங்க சீட்டைக் கொண்டு வாங்கோ பார்க்கலாம்’னு உற்சாகமாக் கத்திண்டு ஓடி வந்தான். நல்ல வேளை! அந்தச் சமயம் அவர் ஆத்துலே இல்லை…

எனக்கு வயத்தை என்னமோ பண்ணித்து.

‘ஈஸ்வரா, என்னைக் காட்டிக் குடுத்துடாதே’ன்னு வேண்டிண்டப்ப, ஒரு யுக்தி தோணித்து.

‘அதெ எங்கே வெச்சேனோ காணோம்டா அப்பா’ன்னு அவனண்ட பொய் சொல்லிட்டேன்… அதிலே ஏதாவது நம்பர் வந்து தொலைஞ்சிருந்தா, ஊரே வந்து இங்கே கூடிடாதோ?’

அந்தக் கொழந்தெக்கு அப்பிடியே மொகம் வாடிப் போயிடுத்து.

கோவிச்சுக்கற மாதிரி பாத்துட்டு அந்தப் பேப்பரையும் போட்டுட்டுப் போயிட்டான்.

அவன் போனப்பறம் நான் அந்தப் பேப்பரை எடுத்துண்டு அறைக்குள்ளே போயி, தனியா வெச்சிண்டு பார்த்தேன்.

நேக்குப் படிக்கத் தெரியாதுன்னாலும் எண்கள் தெரியும். அந்த எண்களுக்கு முன்னாலே ஏதோ எழுத்துப் போட்டிருக்கு… அது என்னன்னு தெரியலை. ஆனா, அதே மாதிரி இந்தச் சீட்டிலே இருக்கான்னு தேடிப் பார்த்தேன்.

தெய்வமே! எடுத்தவுடனே மொதல் மொதல்லே அதே மாதிரி ரெண்டு எழுத்து… அப்பறம் அதே மாதிரி மூணு…ஏழு, சுன்னம்… ஒண்ணு… ஒண்ணு… ஆறு!…

அப்படீன்னா, ஒரு லட்ச ரூபாய் எனக்கே அதிர்ஷ்டம் அடிச்சிருக்கா?… ஐயையோ… இப்ப நான் என்ன செய்வேன்?

மத்தியானம் அவர் வந்தப்ப, சீட்டைக் கொண்டு போயி அவர் காலடியிலே வெச்சு ‘ என்னை மன்னிச்சுடுங்கோ’ன்னு அழுதேன்.

“நான் வெளையாட்டா அந்தக் கொழந்தை வற்புறுத்தினானேன்னு வாங்கிட்டேன். இதெப்பத்தி நீங்க இவ்வளவு கோவமா இருக்கேள்ன்னு அப்பறம்தான் தெரிஞ்சது… நமக்கு எங்கே விழப்போறதுன்னு அசட்டையா இருந்துட்டேன்… பிரைஸ் விழப்படாதுன்னு ஸ்வாமிய வேண்டிட்டேன்…. இப்போ இப்படி ஆயிடுத்தே… மன்னிச்சு இதையும் என்னையும் ஏத்துண்டே ஆகணும்”னு அழுதேன்.

அவர் அதே மாதிரி சிரிச்சார். சிரிச்சிண்டே என்னெத் தூக்கி நிறுத்தினார். முகத்திலே அந்தச் சிரிப்பு மாறாமலே சொன்னார்:

“அடியே!… நீ இப்ப லட்சாதிபதியாய்ட்டே… சபாஷ்…! இது நான் சம்பந்தப்படாம நீயே தேடிண்ட சம்பத்து. என்னத்துக்கு என் காலண்டை கொண்டு வந்து வச்சு இந்தப் பாவத்தை என் தலையில் கட்டப் பாக்கறே! நேக்கு லட்சம் வேண்டாம்னு சொன்னது வெளையாட்டுக்கு இல்லே. நெஜமாவே நேக்கு வேண்டாம். நேக்கு இருக்கற கவலையெல்லாம் முன்னே மாதிரி… இப்ப வர வர வேதாப்பியாசம் பண்றவா கொறைஞ்சிண்டு வராளேங்கறதுதான்… இன்னும் ஒரு பத்துப்பிள்ளைகள் இதுக்குக் கெடைச்சாப் போதும்… பணத்தாலே அவா வரப்படாது… பணத்துக்காகவும் வரப்படாது… இது உனக்குப் புரியாது. சரி, இது உன்னோட பிரச்னை. நான் எப்பவுமே உஞ்சவிருத்தி பிராமணன்தான். என் தோப்பன், பாட்டன் – எல்லோரும் வந்த வழி அதுதான். லட்சாதிபதிக்கு புருஷனா இருக்கற அந்தஸ்து, கொணம் எதுவும் எனக்குக் கெடையாது…”ன்னு பேசிண்டே போனாரே அவர்.

“ஏன் இப்படி யெல்லாம் பிரிச்சுப் பிரிச்சுப் பேசறேள்?… இப்ப நான் இதுக்கு என்ன செய்யணும்னு சொல்லுங்கோ… நான் செய்யறேன்… நான் இப்படி ஆகும்னு எதிர்பார்க்காதது; நடந்துடுத்து… இனிமே நான் என்ன செய்யணும்”னு அவரைத் திரும்ப திரும்ப நான் கேக்கறேன்…

கொஞ்சம்கூட மனசிலே பசை இல்லாம என்னைப் பார்த்து அவர் சிரிக்கிறார்.

கடைசிலே அவருக்குப் பாடசாலைக்குப் போக நேரமாயிடுத்தாம்… போகும்போது அதே மாதிரி சிரிச்சுண்டே சொல்லிட்டுப் போனார்:

“இந்த அதிர்ஷ்டச் சீட்டைப் பயன்படுத்திக்கறதுன்னு முடிவு பண்ணினா அது உன் இஷ்டம். நேராப் போயி படம் புடிச்சுண்டு பத்திரிகையிலே போட்டோ போட்டுண்டு ஜம்னு நீ வாழலாம்… நான் இன்னார் சகதர்மிணின்னு சொல்லிக்கப்படாது… ம், உன் திருப்திக்கு அந்தப் பொய்யைச் சொல்லிண்டு காலம் தள்ளிக்கோ. இல்லேன்னா ‘இந்த மாயை வலையிலே நான் மாட்டிக்கலே; எனக்கு இது வேண்டாம்’னு அந்தத் தரித்திரச் சீட்டைக் கிழிச்சு எறி. ஆமாம் கிழிச்சு எறிஞ்சுடு. வேறே யார் கிட்டேயாவது குடுத்து அதுக்கு வட்டி வாங்கிண்டாலும் ஒண்ணுதான், நன்றியை வாங்கிண்டாலும் ஒண்ணுதான். சூது மனசுக்கு அதெல்லாம் தோணும். அதுக்கெல்லாம் பலியாகாம எந்த விதத்திலயும் அந்தச் சூதுக்கு ஆட்படாமே அதை கிழிச்சு எறிஞ்சுடு. இரண்டும் உன்னோட இஷ்டம். அது பாவமா
, பாக்கியமான்னு முடிவு பண்ண வேண்டியது நீ; எனக்கு நாழியாறது!”ன்னு சொல்லிட்டுப் போயிண்டே இருக்காரே!

இதுக்கு நான் என்ன செய்யலாம் சொல்லுங்கோ. தெய்வமே! ஒரு லட்சம்! இந்த ஒரு லட்சத்தை, அதிர்ஷ்ட லட்சுமியை நிர்த்தாட்சணியமா கிழிச்சு எறியறதா? அவர் கையிலே குடுத்தா, கிழிச்சு எறிஞ்சுடுவார். அவர் மாதிரி ஞானிகளுக்கு அது சுலபம்.

நம்பளை மாதிரி அஞ்ஞானிகளுக்கு அது ஆகற காரியமா, சொல்லுங்கோ?

எத்தனை லட்சத்தையும் விட இவர் உசந்தவர்தான். நான் இல்லேங்கலே. அந்த லட்சத்தைக் கால்தூசா மதிக்கிறாரே இந்த மகா புருஷர். உஞ்சவிருத்தி பண்ணினார்னா இவருக்கு ஒரு குறையும் வந்துடாது. இப்பேர்ப்பட்டவரோட சம்சாரம் பண்ணினா, அந்த உஞ்சவிருத்தி வாழ்க்கையிலேயும் நேக்குப் பெருமை உண்டு.

பணம் பெரிசா, ஞானம் பெரிசாங்கிறதெல்லாம் நேக்குத் தெரியாது. ஆனால், பணம் – அது எவ்வளவு அதிகம்னாலும் எப்படி நிலையில்லையோ அதே மாதிரி மனுஷாளும் எவ்வளவு பெரிய ஞானியாயிருந்தாலும் வாழ்க்கை சாசுவதமில்லையே!

அப்படி நினைக்கிறதோ சொல்றதோ மகா பாவம். ஆனால் இந்தக் காலத்திலே எப்பேர்ப்பட்ட பதிவிரதையும் உடன்கட்டை ஏறிடுறதில்லையே! இவருக்கு அப்புறம் ஒருவேளை நான் இருக்க வேண்டி வந்ததுன்னா… சிவ! சிவா!…

உஞ்சவிருத்தி பண்றதிலே எனக்கென்ன பெருமை! எல்லோரும் பிச்சைக்காரின்னு சொல்லுவா. கட்டினவளைப் பிச்சைக்காரியா விட்டுட்டான்னு இந்த மகா ஞானியைப் பத்தியும் பேசுவா.

அவர் கிழிச்சு எறியலாம். நான் அதைச் செய்யலாமா? ஆனால், அவர் அப்படிச் சொல்லிட்டுப் போயிட்டார்.

நான் கையிலே சீட்டை வச்சுண்டு நிக்கறேன். கனக்கறது. இதுக்கு நான் என்ன செய்யட்டும் – சொல்லுங்கோ?

– ஜெயகாந்தன் சிறுகதைகள் – முதற்பதிப்பு 1973 – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *