செருப்படி…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 9,001 
 

“இன்னைக்கு இலக்கணத்த முடிச்சாதான், அடுத்த வாரத்துக்குள்ள செய்யுளை முடிக்கமுடியும்… தேர்வும் நெருங்கிடுச்சு, பசங்கள ஒருமாசத்துக்கு முன்னமே தயார்படுத்தணும்” நினைத்தபடியே சாப்பிட்டு முடிப்பதற்கும், வகுப்பிற்கான மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது… தன் கடிகாரத்தை கவனித்தார், மூன்று நிமிடத்திற்கு முன்னதாகவே மணி அடித்துவிட்டதை பொருட்படுத்த விரும்பாமல் சாப்பாட்டை நிறைவுசெய்தார் தமிழ்… பெயரில் மட்டுமல்ல, படிப்பு, தொழில் என எல்லாவற்றிலுமே இவர் தமிழ்தான்…அறிவியல் அப்பளத்தை கடித்தபடியே, கணக்கிடம் கடலை போட்டுக்கொண்டிருந்தது… மனதிற்குள் சிரித்தபடியே மெள்ள எழுந்து வெளியே சென்று கைகழுவிக் கொண்டிருந்தபோதுதான், அந்த நாற்பது வயது மதிக்கத்தக்க நபரை கவனித்தார் தமிழ்…

எங்கோ பார்த்து பரிச்சயமான முகம் போலவே தோன்றியது… ஆனாலும், அந்த முகத்தில் குடிகொண்டிருக்கும் கலவரமும், பதற்றமும் தமிழை சட்டென இறுக்கமுற செய்தது… தமிழை கடந்துபோனபோது மட்டும், அந்த கவலையை மறைத்து சிரிப்பதை போல பாவனை செய்தபடி நகர்ந்தார்… அந்த நபர் விளையாட்டு திடலை தாண்டி, நுழைவு வாயிலை கடக்கும்வரை வைத்த கண் விலகாமல் உற்றுநோக்கியபடியே பார்த்தும் பயனில்லை, யாரென்று பிடிபடவே இல்லை… மீண்டும் ஆசிரியர்கள் அறைக்குள் நுழைந்தார் தமிழ்… கடலை தீய்ந்தபோதிலும் வறுப்பதை நிறுத்திடாத இருவரையும் தொந்தரவு செய்ய மனமில்லாமல் மெல்ல அடியெடுத்துவைத்து, தன் பன்னிரெண்டாம் வகுப்பு புத்தகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு வகுப்பறையை நோக்கி நகர்ந்தார்..

வகுப்பறைக்குள் நுழைந்தபிறகும் அந்த முகம் மின்னல்போல தோன்றி மறைந்து மனதை படுத்தியது… சில நிமிட ஆசுவாசம் தேவைப்பட்டதால் இருக்கையில் அமர்ந்து, மூச்சை ஆழமாக இழுத்துவிட்டார்… மாணவர்கள் தமிழையே நோக்கிக்கொண்டிருந்ததால், மேற்கொண்டு தன் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்த விரும்பாமல், எழுந்து கரும்பலகையை நோக்கி நகர்ந்தார்…

கரும்பலகையில் ‘திணை’ என்று எழுதிவிட்டு, மாணவர்களை நோக்கி திரும்பி,

“இன்னிக்கு திணைகள் பற்றி பார்ப்போம்… திணைகள் பன்னிரண்டு வகைப்படும்… அவை..” என்று இழுத்தபடி மாணவர்களுக்கு மத்தியில் யாரையோ அவர் கண்கள் தேடியது… இரண்டாம் வரிசையின் மூன்றாம் நபருக்கான இடம் காலியாக இருந்தது… ரகுவை அந்த இடத்தில் காணவில்லை… அவன் இருந்திருந்தால், தமிழ் வாக்கியத்தை நிறைப்பதற்கு முன்பே, வெட்சி, கரந்தை தொடங்கி பெருந்திணை வரைக்கும் சொல்லி முடித்திருப்பான்…

“ரகு இன்னிக்கும் வரலையா?” மாணவர்கள் அருகில் வந்துநின்று கேட்டார்…

“இல்ல சார்…”

“நாலஞ்சு நாளா வரலையே, லீவ் லெட்டர் எதுவும் கொடுத்தானா?”

“இல்ல சார்.. இனி வரமாட்டான்… அவங்க அப்பா இப்பதான் டிசி வாங்கிட்டு போறாரு…”

“என்னது?… ஏன்?” அதிர்ச்சி, கேள்விக்குறியை தாண்டியும் சிதறியது…

மாணவர்கள் அவரவருக்குள் கிசுகிசுத்தபடி பேசிக்கொண்டு சிரித்தனர், இதுவரை பதில் சொல்லிக்கொண்டிருந்த மாணவன், எதை சொல்வதென்று புரியாமல் தடுமாறினான்…

“சரி சரி… உட்காரு…. பாடத்துக்கு வரலாம்… வெட்சித்திணை என்றால் ஆநிரை கவர்தல்… அதாவது ஒருநாட்டின் கள்ளர்கள் பகைநாட்டு பசுக்கூட்டங்களை திருடிக்கொண்டு வருவது… இதை அந்த நாட்டினர் மிகப்பெரிய அவமானமாக கருதுவார்கள்… ஒரு போர், தொடங்கும் புள்ளி இதுதான்… அப்படி பசுக்களை களவாடப்போகும் கள்ளர்கள், வெட்சிப்பூவை மாலையாக சூடிக்கொண்டு போவார்கள்…” இதை சொல்லிமுடிப்பதற்குள் தமிழுக்கு மூச்சு வாங்கியது, வார்த்தைகள் கூட கோர்வையாக வரமறுத்தது… தண்ணீர் புட்டியை எடுத்து, சிறிது குடித்துக்கொண்டார்… அடுத்து என்ன?… கரந்தைத்திணை… ஆனால், அதை விளக்குவதற்கான வலு உடலில் இல்லை…

“நேத்து நடத்தின செய்யுளை படிச்சுகிட்டு இருங்க பசங்களா, தலை வலிக்கிற மாதிரி இருக்கு” சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்துகொண்டார்…

தன்னை நினைத்து தமிழுக்கே எரிச்சலாக தோன்றியது… இதென்ன முட்டாள்த்தனம்?.. ரகு இங்கிருக்கும் அறுபது மாணவர்களில் ஒருவன்தான்…

இதுவரை ஏழாண்டுகள் அனுபவத்தில் ரகுவை போன்று ஆயிரக்கணக்கான மாணவர்களை கடந்துவந்தவர்தான் தமிழ்.. இப்படி பள்ளியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட பலமாணவர்களை பார்த்து வந்திருந்தும், ரகு பள்ளியை விட்டு விலக்கப்பட்டது கொஞ்சமும் எதிர்பாராதது என்பதால் தமிழுக்கு கூடுதல் கவலையாக இருக்கலாம்… அதற்காக பாடத்தை இடைநிறுத்தி கவலை கொள்ளும் அளவிற்கு போவது தன் மீதே கோபத்தை ஏற்படுத்தியது… இன்னுமே இதயம் அதிவேக பாய்ச்சலில் துடித்துக்கொண்டுதான் இருக்கிறது…

ரகு மிகச்சிறந்த அறிவாளிதான்… அறிவாளி என்றால், மெக்காலே கல்வியில் படித்ததை சிறப்பாக வாந்தி எடுத்து, நூறு மதிப்பெண்கள் பெறுபவன் இல்லை…

பாடங்களை தாண்டிய பல்துறை அறிவு பெற்றவன்… எல்லோரிடத்திலும் இயல்பாக பழகுவான், சக மாணவர்களுக்கு நிறைய உதுவுவான், கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமானவன் என்று ரகுவை தரம் உயர்த்த ஆயிரம் விஷயங்கள் உண்டு…

அப்படி பாராட்டியே பழக்கப்பட்ட ஒருவனை, அதே வாய்களால் அவ்வளவு எளிதாக தூற்றவும் முடியும் என்பதை கடந்த மாதத்தின் ஒருநாளில்தான் உணர்ந்தார் தமிழ்…

பள்ளி முழுவதிலும் எங்குபார்த்தாலும், ரகுவைப்பற்றிய பேச்சுகள்…

கிசுகிசுப்பாகவும், ரகசியங்களாகவும், சந்தேகங்களாகவும் பேச்சுகள் பல ரூபங்களில் ஒலித்துக்கொண்டிருந்தன…

ஆசிரியர்கள் அறையிலும் அதே பேச்சு, மெல்லிய அதிர்ச்சி, அதனை தொடர்ந்த சிரிப்பலைகள்…

“என்ன சார் விஷயம்?… நம்ம ப்ளஸ் டூ ரகு பற்றி என்னென்னமோ பேசிக்கறாங்க… என்னாச்சு?” ஆர்வத்தில்தான் கேட்டார் தமிழ்…

கணக்கு ஆசிரியையின் காதில் விழாதபடி தமிழின் காதருகே வந்த ஆங்கில ஆசிரியர், “நம்ம ரகு ஹோமோசெக்ஸ் பையனாம்ங்க…” என்றார்…

“என்னது?” முகம் சுளித்து அதிர்ச்சியாக கேட்டார் தமிழ்…

“அட ஆமா சார்.. ஆம்பளையும் ஆம்பளையும் ஒன்னு சேருவாங்கள்ல அதாங்க ஹோமோசெக்ஸ்”

“அது தெரியும் சார்… அவன் அப்டி பையன்குறது வெளில எப்டி தெரிஞ்சுது?”

“அவனே நம்ம பயாலாஜி சார் கிட்ட சொல்லிருக்கான்… அதுக்கு சயின்ஸ் ரீதியா என்ன காரணம்னு துணிச்சலா கேட்ருக்கான் சார்…”

இந்த நாள் தொடங்கி இன்றுவரையான ஒருமாத காலமும், அந்த பள்ளியின் பிரதான பேச்சே ரகுவின் பாலீர்ப்பு பற்றிதான்…

அதற்குமேல் வகுப்பறையில் அமர்ந்துகொண்டு இதைப்பற்றி சிந்திக்க மனமில்லாமல், எழுந்து ஆசிரியர்களின் ஓய்வறைக்கு சென்றார்… ஏற்கனவே அங்கு அறிவியல் ஆசிரியர் விடைத்தாள்களை திருத்திக்கொண்டிருந்தார்…
தமிழின் துவண்ட நடயைக்கண்டு, “என்ன தமிழ் சார், தள்ளாடி வர்ற மாதிரி இருக்கு?” நலம் விசாரித்தார்…

“தமிழைத்தான் எல்லாம் சேர்ந்து தடுமாற வச்சிட்டிங்களே!” சிலேடையாக பதில் சொல்ல, அறிவியல் சிரித்துக்கொண்டார்…

“ஒண்ணுமில்ல சார், இன்னும் மூணு மாசத்துல எக்ஸாம்… தமிழுக்குன்னு இருந்த வகுப்பெல்லாம் கட் ஆப் மார்க்கை காரணம் காட்டி, நீங்கல்லாம் புடுங்கிட்டிங்க… அதான் கடைசி நேரத்துல சிலபஸ் முடிக்கிற டென்ஷன்,
அதனால லேசா தலை வலிக்குற மாதிரி இருக்கு…” காரணத்தையும் சில நொடிகள் இடைவெளியில் தமிழே சொல்லிவிட்டார்…

“விடுங்க சார், இதுக்கல்லாம் எதுக்கு டென்ஷன்? கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க சார்… ப்ளஸ் டூ பசங்கன்னாலே தலைவலிதான்… இன்னிக்குதான் ஒரு தலைவலிய தலைமுழுகியாச்சே, இனி நமக்கும் டென்ஷன் குறையும்” மீண்டும் விடைத்தாள்களில் சிவப்பு மையால் மதிப்பெண்ணிட்டபடியே சொன்னார் அறிவியல்…

“யாரை சொல்றீங்க?”

“அந்த ரகுன்னு ஒரு பையன் இருந்தான்ல, அவன்தான்…”

“நம்ம ரகுவரனா?”

“அந்த ஹோமோசெக்ஸ் பார்ட்டி சார், அவன்தான்… இப்போதான் அவனுக்கு டிசி கொடுத்து அனுப்பிருக்கார் நம்ம பிரின்சிபால்…” சிரித்தார்…

“நிறுத்துங்க சார்… அதென்ன சார் ஹோமோசெக்ஸ் பார்ட்டி?.. அவனை அடையாளப்படுத்த உங்களுக்கு வேற விஷயமே இல்லையா?… பயாலாஜி டீச்சரா இருந்துட்டு, எப்டி சார் உங்களால இப்டியல்லாம் பேசமுடியுது?” பேச்சில் கொஞ்சம் கடுமை வெளிப்பட்டது…

“என்ன தமிழ் ஓவரா பேசுறீங்க?… இல்லாத விஷயத்தை ஒன்னும் நான் சொல்லலையே?… அவன் ஹோமோசெக்ஸ்’னு அவனே என்கிட்டே சொன்னதுதானே சார்…”

“எதுக்கு சார் சொன்னான்?… அவனுக்கு ஏதோ குழப்பம் இருந்ததால சொன்னான், நியாயமா என்ன பண்ணிருக்கணும் நீங்க?… அவன்கிட்ட பேசி, என்ன பிரச்சினைன்னு விசாரிச்சு தீர்த்திருக்கணும்…. ஆனா நீங்க பண்ணது என்ன?… அவன் சொன்ன அந்த விஷயத்த அப்டியே ஸ்கூல் முழுக்க பரவவிட்டிங்க, இன்னிக்கு அவன் வாழ்க்கையே நிர்மூலமா ஆகுற அளவுக்கு ஆனதுக்கு நீங்கதான் காரணம்…”

“அவன் ஒழுக்கமான ஆளா இருந்தா நான் ஏன் வெளில சொல்லப்போறேன்?… அந்த கருமத்த எல்லார்கிட்டயும் சொன்னது தப்பில்ல சார்…”

“அவன் ஒழுக்கமில்லாதவனா?… ஏன், உங்க கைய புடிச்சு இழுத்தானா?… யாரும் இல்லாதப்பா கணக்கு டீச்சரை கண்ட இடத்துல தொட்டு விளையாடுறீங்களே, அந்த மாதிரி எதாச்சும் பண்ணானா?… முதல்ல உங்க அழுக்க கழுவிட்டு, அடுத்தவன குற்றம் சொல்லுங்க சார்…” தமிழின் கண்கள் நெருப்பை கக்கின….

“இதான் சார் உங்க லிமிட்…. இதுக்கு மேல எதாச்சும் பேசுனா, உங்க மேல கம்ப்ளெயின்ட் கொடுக்குற மாதிரி ஆகிடும்” அறிவியல் பதற்றமும் கோபமும் கலந்த பாவனையை வெளிப்படுத்தினார்…

“புகார் கொடுங்க சார்… என்னையும் வேலைய விட்டு துரத்துங்க…. நீங்களும், இப்டி அடுத்தவங்க மனசை புரிஞ்சுக்காம கஷ்டப்படுத்துறவங்களும் மட்டும் நிம்மதியா இருங்க…”

“ஹலோ தமிழ்… அந்த பையனை நான் ஒன்னும் டிசி கொடுத்து அனுப்பல, மேற்கொண்டு அதைப்பற்றி கேட்க, துணிச்சலிருந்தா பிரின்சிபல போய் பாருங்க…” சொல்லிவிட்டு சட்டென எழுந்து கோபமாக அந்த அறையைவிட்டு வெளியேறினார் அறிவியல்…

தமிழ் கோபத்தின் உச்சியில் இருந்தார்… கோபம் மட்டுமல்லாது அதன் வழித்துணைக்கு ஆற்றாமையும், கவலையும் இணைந்துகொண்டது… ஓய்வெடுக்க விருப்பமில்லை, எவரிடத்திலாவது கோபத்தை வெளிப்படுத்தணும்… அதுதான் சரி, ஏன் ப்ரின்சிப்பால்’இடம் இதைப்பற்றி கேட்கக்கூடாது… பள்ளியை விட்டு
விலக்கிய அவரிடமே, அந்த செயலுக்கான நியாயத்தை கேட்பதுதான் முறை…

சட்டென முதல்வர் அறையை நோக்கி விரைந்தார்.. வாசலில் பள்ளி முதல்வரின் உதவியாளர் நின்றிருந்தார்…

“உள்ள மீட்டிங்ல சார் இருக்கார்… கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க சார்” என்று கனிவோடு கூற, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார் தமிழ்…

நினைவுகள் ரகுவை சுற்றியே சுழன்றுகொண்டிருந்தன…

பல நாட்கள் ரகு வகுப்பறையில் தனியே அமர்ந்து அழுதுகொண்டிருப்பதை எதேச்சையாக தமிழ் பார்த்ததுண்டு… ஆனால், இதைப்பற்றி அவனிடம் நேரில் கேட்டிட தயக்கம், நாட்கள் நகர இந்த பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற
நம்பிக்கையும் கூட தமிழை பேசவிடாமல் தடுத்தது…

அன்றொருநாள் பள்ளி வகுப்பின் இடைவெளியில் கூட, மாணவர்கள் சிலர் ரெஸ்ட் ரூம் உள்ளே செல்லாமல், வாசலிலேயே நின்று பேசிக்கொண்டிருப்பதை கவனித்தார் தமிழ்… தமிழை பார்த்ததும் பேச்சை நிறுத்திவிட்டு, வணக்கம் வைத்தனர்…

“என்னடா டாய்லட் போகாம வெளில நின்னு பேசிட்டு இருக்கீங்க?..”

“உள்ள ரகு இருக்கான் சார்…” சிரித்துக்கொண்டே சொன்னான் ஒரு மாணவன்…

“அவன் இருந்தா என்ன?… நீங்கபாட்டுக்கு போயிட்டு வரவேண்டியதுதான?”

“ஐயோ பயமா இருக்கு சார்…”

தமிழ் இடிந்துபோனார்… எப்படி இப்படியல்லாம் இவர்களால் கற்பனை செய்திட முடிகிறது?.. இந்த வயதிலேயே இவ்வளவு குரூரமாக சிந்திக்க முடிகிறது…

இந்த கற்பனைகள் பள்ளியில் பலநாட்களாக கட்டுக்கதைகளாக கூட வெளிவருவதுண்டு…

“ப்ளஸ் டூ ரகுவரன், யாரோ டென்த் பையன்கிட்ட என்னமோ அசிங்கமா பண்ணானாம்!”

“ரகு நம்ம ஸ்கூல் பஸ் டிரைவர் கூட ரூம்குள்ள தனியா போனான்!”

“ரகு பக்கத்துல யார் உக்காந்தாலும், கைய வச்சு தடவுறானாம்!”

இந்த கதைகளில் சம்மந்தப்பட்ட டென்த் பையன், பஸ் டிரைவர் எல்லாமும் கூட கற்பனையாகத்தான் இருக்கும்… ஆனால், உண்மையைவிட அதிவேகமாக பள்ளிக்குள் பவனி வந்தன இந்த கதைகள்… ரகுவின் தனிமை அழுகைகள் கூட இதன் தொடர்ச்சிதான் என்று எனக்கு தெரியும்… சில நேரங்களில் வகுப்பறை
கரும்பலகை முதல் கழிவறை வரை ‘ரகு ஹோமோ’ என்ற வாசகம் எழுதப்பட்டிருப்பதுண்டு… இதை செய்வதல்லாம் யார்? ஒரு தனி மனிதனை கஷ்டப்படுத்தி, அதன்மூலம் அவங்க அடையப்போகும் லாபம் என்ன? எந்த கேள்விக்கும் விடையில்லை…

“தமிழ் சார்… பிரின்சிபால் சார் உங்கள கூப்பிடுறார்!” உதவியாளர் அழைக்க, நினைவை மீட்டார்…

அறையின் கதவை திறக்கும்முன்பே அவசரமாக வெளியேறிய ஏசி குளிர்க்காற்று, தமிழை சில்லிட்டது… அந்த அறைக்குள் அபூர்வமாகத்தான் தமிழ் நுழைந்ததுண்டு… நுழையும்போதே ஒருவித பதற்றம் இயல்பாகவே அவரை தொற்றிக்கொண்டது… குஷன் இருக்கையில் அமர்ந்து ஏதோ கோப்பு ஒன்றை புரட்டிக்கொண்டிருந்தார் முதல்வர்… மிகவும் கண்டிப்பானவர், நேர்மையானவர், பொறுப்பானவர் என்று ‘பாசிட்டிவ்’ இமேஜ்களை மட்டுமே சுமக்கும் அதிசய மனிதர்களுள் ஒருவர்… தும்பைப்பூ வெள்ளை நிற சட்டையும், பழுப்பு நிற பேன்ட்டும், பாக்கெட்டில் சொருகியிருக்கும் பார்க்கர் பேனா, லேசான முன்வழுக்கை… கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருந்தார், அந்த பலவருடங்களாக நாற்பது வயது மதிக்கத்தக்க பள்ளி முதல்வர்…

“வாங்க தமிழ்…. என்ன விஷயம்?.. க்லாஸ் நேரத்துல பொதுவா வரமாட்டிங்களே?” கைக்கடிகாரத்தை பார்த்தபடி கேட்டார் முதல்வர்…

“ஒண்ணுமில்ல சார்.. ஒரு விஷயம் கேட்கணும்…” தயங்கினார் தமிழ்…

“என்ன விஷயம்?… ஏன் தயங்குறீங்க?… பொங்கல் போனஸ் பத்தி எதுவுமா?…

அதல்லாம் கேட்காம கவர் உங்கள தேடி வரும் சார்…”

“ஐயோ அதல்லாம் ஒண்ணுமில்ல சார்… இது நம்ம ப்ளஸ் டூ ஸ்டூடன்ட் பத்தி…”

“சொல்லுங்க… எந்த ஸ்டூடன்ட்?”

“ரகுவரன்னு ஒரு பையன்…”

“ஓஹ்… இப்பதான் அவங்க அப்பாகிட்ட டிசி கொடுத்துவிட்டேன், அவனைப்பத்தியா?…”

“ஆமா சார்…”

“அவனப்பத்தி பேச என்ன இருக்கு?.. அதான் ஒரு மாசமா நம்ம ஸ்கூலே பேசவேண்டிய அளவு பேசிடுச்சே?”

“அதுக்கில்ல சார்… இன்னும் மூணு மாசத்துல எக்ஸாம் வரப்போகுது, இந்த நேரத்துல டிசி கொடுத்திட்டா அவன் வாழ்க்கை ஸ்பாயில் ஆகிடும்!”

வார்த்தைகளை மென்று விழுங்கினார் தமிழ்..

“லுக் மிஸ்டர் தமிழ்… அவன் இன்னும் ஒரு மாசம் இங்கிருந்திருந்தா நம்ம ஸ்கூல் பேரு ஸ்பாயில் ஆகிருக்கும்… உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்ல, இப்போ சிட்டிய பொருத்தவரைக்கும் நாமதான் நம்பர் ஒன்… நம்ம காலை வாரிவிட எதாச்சும் சான்ஸ் கிடைக்காதா?ன்னு பல ஸ்கூல்ஸ் காத்திட்டு இருக்காங்க…இந்த நேரத்துல நம்ம ஸ்கூல் பேரு ஒரு அசிங்கமான விஷயத்துல வெளில பேசப்பட்டா, அது நம்ம எதிர்காலத்த ரொம்ப பாதிக்கும்… நாலஞ்சு பேரன்ட்ஸ் கூட இதுபற்றி என்கிட்டே சொல்லிட்டாங்க… அவ்வளவு ஏன், நம்ம டீச்சர்ஸ் பலரே கூட சொன்னபிறகுதான் இந்த முடிவை நான் எடுத்தேன்…” மிகத்தெளிவாக தன் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தினார் முதல்வர்…

சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு தமிழ், “எல்லாம் எனக்கு புரியாம இல்ல சார்… அவன் கே’ன்ற ஒரு காரணத்துக்காக ஸ்கூலை விட்டு நீக்குறது சரியா?” கேட்டார்…

“அவனைப்பத்தி நிறைய விஷயங்கள் நம்ம டீச்சர்ஸ் சொன்னாங்க தமிழ்”

“எதுக்காவது அவங்ககிட்ட ஆதாரம் இருந்துச்சா?… சம்மந்தப்பட்ட வேற யாராச்சும் புகார் கொடுத்தாங்களா?”

“இல்ல தமிழ்… ரீசண்ட்டா நம்ம தமிழ்நாட்லகூட ஒரு ஹோமோசெக்சுவல் பையன் ஸ்கூல்லயே இன்னொரு ஸ்டூடண்ட்ட கொலை பண்ணினத எல்லாரும் ஸ்ட்ரெஸ் பண்ணி சொல்றாங்க… அந்த மாதிரி எதுவும் நடந்தா…” இழுத்தார்…

“தினமும் நம்ம தமிழ்நாட்ல பொண்ணுகள ரேப் பண்ற ஆண்கள் பத்தி செய்தி பார்த்துட்டுதானே இருக்கோம்… அதனால, ஹெட்ரோசெக்சுவல்ஸ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரையும் அனுப்பிட முடியுமா சார்?”

“உங்க லாஜிக் சரி தமிழ்… ஆனாலும், இதைப்பத்தி என் ஒருத்தனால முடிவு எடுக்க முடியாது… எனக்கும் கூட அந்த பையனை அனுப்புறதுக்கு மனசு இல்ல…அனேகமா நம்ம ரெண்டு பேர் மட்டும்தான் இந்த விஷயத்தில அந்த பையன் தரப்புல இருக்கோம், மத்த எல்லாருமே எதிர்தரப்புல இருக்காங்க… ரொம்ப சாரி…”

எழுந்து வந்து தமிழின் முதுகில் கைவைத்தபடி தன் இயலாமையை வெளிப்படுத்தினார் முதல்வர்…

“அந்த பையன் பாவம் சார்… இதுவரைக்கும் ஒரு தப்பும் பண்ணாமலேயே நிறைய தண்டனை கெடச்சிடுச்சு…”

“ஒருவேள இன்னொரு தடவை தப்பு நடந்திருந்தா, தண்டனை நமக்குதான் கிடைச்சிருக்கும் தமிழ்”

“நீங்க சொல்றபடி நாளைக்கு அப்டி எதாச்சும் தப்பு நடந்துச்சுன்னா, நம்ம ஸ்கூல் ஆடிட்டோரியம்ல நிக்க வச்சு தப்பு செஞ்சவனை செருப்பால அடிக்கிறேன் சார்… அந்த அளவுக்கு எனக்கு அவன்மேல நம்பிக்கை இருக்கு, அவனுக்கா உங்ககிட்ட நான் பொறுப்பு ஏத்துக்கறேன் சார்…” உணர்ச்சி பெருக்கோடு சொன்னார் தமிழ்…

“ஓகே ஓகே கூல் தமிழ்… நீங்க இவ்வளவு கேட்பதால என்னால முடிஞ்ச அதிகபட்ச உதவி ஒன்னு பண்றேன்… அவன்கிட்டேந்து ஒரு அபாலாஜி லெட்டர் வாங்கிட்டுவாங்க, மறுபடியும் சேத்துக்கறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்…

அந்த மன்னிப்புக்கடிதம் கூட, நம்ம மத்த டீச்சர்ஸ்’ஐ கன்வின்ஸ் பண்ணத்தான்… ஓகேதான தமிழ்?” சிரித்துக்கொண்டே சொன்னார் முதல்வர்…

முதல்வரின் கையைப்பிடித்து அழுத்தி, கண்கள் கலங்க நெகிழ்ந்துபோய் நன்றி சொன்னபடி அங்கிருந்து வெளியேறினார் தமிழ்… இன்னும் ஒருமணி நேரத்தில் பள்ளி முடிந்தபிறகு ரகுவின் வீட்டுக்கு செல்வதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்… அதைநினைத்தபோது ஒருபுறம் தான் சாதித்துவிட்டதை போன்ற மகிழ்ச்சியும், மறுபுறமோ இதைப்பற்றி ரகுவிடம் பேசப்போவதை எண்ணி பதற்றமும் ஒருசேர உதறல் உண்டாக்கியது….
ஒருவழியாக மணியும் அடிக்க, பள்ளி மாணவர்களை காட்டிலும் அதிவேக பாய்ச்சலில் நடக்கத்தொடங்கினார்… அருகிலிருக்கும் குடியிருப்பிலிருந்துதான் ரகு பள்ளிக்கு வருவதை பார்த்ததுண்டு, மதிய சாப்பாட்டிற்கு கூட தினமும் கேட்டை தாண்டி செல்வதை தமிழ் கவனித்திருக்கிறார்….

ஆனால், குறிப்பாக யாரிடம் விலாசம் கேட்பது?.. தயங்கி நின்றபோது அவரைக்கடந்த ஒரு எட்டாம் வகுப்பு மாணவன் வணக்கம் வைத்து நகர்ந்தான்…

“ஏய் தம்பி, இங்க ரகுவரன் வீடு எங்க இருக்கு?”

“அந்த பிளஸ் டூ படிக்குறவரா சார்?” கேள்வியை முடிக்கும் முன்பே ஒரு அனத்தல் சிரிப்பு..

“ஹ்ம்ம்…”

“அந்த பச்சை கலர் பெயின்ட் அடிச்சிருக்குற வீடு, ஆனா இப்போ அங்க இருக்கமாட்டார்… அந்த காலனிக்கு பின்னாடி கிரவுண்ட் இருக்கு சார், அங்கதான் வேடிக்கை பார்த்துட்டு இருப்பார்” சொல்லிவிட்டு நகர்ந்தான்…
வீட்டுக்குபோய் பெற்றோரை பார்த்து மேலும் குழப்ப தமிழுக்கு விருப்பமில்லை, ரகுவிடமே இதுபற்றி பேசிப்பார்க்கலாம்…

விளையாட்டுத்திடலை நோக்கி நடந்தார்…

பள்ளி மாணவர்கள் பலரும் வீட்டிற்கு செல்லாமல் அங்கு பலதரப்பட்ட விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருந்தனர்… அருகிலிருக்கும் கல்லூரியில் பயிலும் மாணவர்களும் தனித்தனி இடங்களில் விளையாடினர்… வானத்தை நோக்கி பறந்த பந்துகள் எந்த குழுவினுடையது? என்ற சலசலப்பு அடிக்கடி
எழுந்துகொண்டுதான் இருந்தது…

இந்த கூட்டத்தில் ரகுவை எங்கிருந்து தேடுவது? களைப்பாக போய் அங்கிருந்த மரத்தினடியில் அமர்ந்தார்.. பனிக்காலம் என்பதால் ஐந்து மணிக்கே சூரியன் அஸ்தமிக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தது… “அங்கதான் வேடிக்கை பார்த்திட்டு இருப்பார்!” எட்டாம் வகுப்பு மாணவன் சொன்னது தமிழின் காதுகளுக்குள் மீண்டும் ஒலித்தது…

திடலின் சுற்றுப்புறத்தை கண்களால் அளவெடுத்தார்… மெல்ல எழுந்து திடல் ஓரத்திலேயே நடக்கத்தொடங்கினார்… அங்கிருந்த வாகை மரம் ஒன்றின் அடியில் தனியாக ஒரு உருவம் அமர்ந்து நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது… அந்த மரத்தை நோக்கி தன் நடையை வேகப்படுத்தினார்… மரத்தின் அருகே சென்றபோது, அமர்ந்திருப்பது ரகுதான் என்பதை ஊர்சிதப்படுத்திக்கொண்டார்…

தமிழை பார்த்ததும் சட்டென எழுந்தான்.. வணக்கம் வைத்த கைகள் தடுமாறியது, கண்கள் தமிழை நேரப்பார்க்க தயங்கி அலைபாய்ந்தது…

“ரகு, எப்டி இருக்க?” தோள் தட்டி இயல்பாக பேச்சை தொடங்கினார் தமிழ்…

“இருக்கேன் சார்… என்ன இங்க?” இழுத்தான்…

புன்முறுவல் உதிர்த்தபடி அந்த நிழலில் அமர்ந்தார் தமிழ், தன் அருகில் அமருமாறு ரகுவையும் சைகை செய்தார்… ஒருசில அடிகள் தள்ளி ரகு அமர்ந்துகொண்டான், அந்த தூரத்தில் ‘புதிய கட்டுக்கதை உருவாகிவிடக்கூடாது!’ என்கிற எச்சரிக்கை உணர்வு பளிச்சென விளங்கியது…

“ஒண்ணுமில்ல சும்மாதான்… ஏன் நான் விளயாடக்கூடாதா?” சிரித்தார் தமிழ்… சூழலின் இறுக்கத்தை தளர்த்த முயன்ற தமிழின் அஸ்திரம் வீணாகிப்போனது…ரகு இன்னும் அதே இறுக்கம் கலையாமல் அமர்ந்திருந்தான்…

“நான் ஸ்கூல்ல பேசிட்டேன் ரகு… நீ ஒரு மன்னிப்புக்கடிதம் மட்டும் கொடுத்திட்டா, மறுபடியும் சேர்ந்திடலாம்” சுற்றிவளைக்க விரும்பாமல் நேரடியாகவே விஷயத்தை போட்டு உடைத்தார் தமிழ்…

“எதுக்கு சார் மன்னிப்பு? நான் என்ன தப்பு பண்ணினேன்?”

“இந்த லாஜிக் பத்தி எவ்வளவோ பேசிட்டேன் ரகு, வேற வழியில்ல… மூணு மாசம் நீ பல்லை கடிச்சுகிட்டு சகிச்சுக்கனும்… எக்ஸாம் முடிஞ்சதும், போங்கடா!ன்னு போய்கிட்டே இருடா”

“இன்னும் ஒருநாள் அங்க இருந்திருந்தா கூட எல்லாரும் சேர்ந்து என்ன கொன்னிருப்பாங்க சார்… அப்பாவையும் இன்னிக்கு விடல, என்னென்னமோ சொல்லி அழவச்சிட்டாங்க… உடைஞ்சு போய் வீட்ல படுத்திருக்கார் சார்”
சொல்லும்போதே அவன் கண்கள் கலங்கியது…

“புரியுது ரகு.. நீ ஒரு தப்பும் பண்ணலைன்னு அப்பாகிட்ட நான் பேசுறேன்…”

“இது அப்பா ஒருத்தருக்கு மட்டும் புரியவைக்குற விஷயம் இல்ல சார்”

“எக்ஸாம்ஸ் முக்கியம் ரகு, அதை நினச்சுப்பாரு”

“அடுத்த வருஷம் ப்ரைவேட்ல எழுதிக்கறேன் சார், ஒரு வருஷத்துல ஒன்னும் உலகம் அழிஞ்சிடாது”

“இப்டி விதண்டாவாதம் பேசுறது அர்த்தமில்லாததுடா… நீ இப்போ வரலைன்னா, உன்னப்பத்தி இவ்ளோ நாள் தப்பா பேசுனவங்க ஜெய்ச்ச மாதிரி ஆகிடும்!”

“இல்ல சார்… அவங்கள எல்லாம் சகிச்சுகிட்டு இன்னும் உயிரோட நிக்குறதே, அவங்க தோத்துட்டாங்கன்னுதான் அர்த்தம்… ஒரு புழுவைப்போல பார்த்தாங்க, வாய்ப்பு கிடச்சா நசுக்கி கொல்லலாம்னு காத்துகிட்டு இருந்தாங்க…
அவங்ககிட்டேந்து தப்பிச்சு வந்ததா நினச்சுக்கறேன் சார்” வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டான்…

“சயின்ஸ் சார் மாதிரி ஆளுங்கதான் அப்டி ரகு, உன் நல்லதை நினச்சு பிரின்சிபால் மாதிரி சிலரும் அங்க இருக்கோம்டா…”

“ஹ ஹ ஹா… நல்லத நினச்சா? அந்த பிரின்சிபாலா?” சலிப்போடு சிரித்தான்…

“ஆமா ரகு… அவ்ளோ பேரோட எதிர்ப்பையும் மீறி உன்ன சேர்த்துக்கிறதா உத்தரவாதம் கொடுத்திருக்கார்”

“அந்த உத்திரவாதம் கொடுத்த உத்தமப்புத்திரன் அதைமட்டும்தான் சொன்னாரா?”

“உனக்கு கோபத்துல பாரைப்பத்தி பேசுறோம்னு புரியாம பேசுற!”

“புரியுது சார்… உங்களுக்குதான் அவரைப்பத்தி முழுசா புரியல…அந்தாளுனாலதான் நான் ஸ்கூலுக்கு வாராமலே நின்னது”

தமிழுக்கு குழப்பம் தலைக்கு மேல் நிரம்பி வழிந்தது… “என்ன சொல்ற?..அவரென்ன பண்ணாரு?”

“ஆமா சார்… என்மேல நிறைய கம்ப்ளைன்ட் வந்திருக்கதாவும், அதுக்கு வார்ன் பண்றதுக்காக ரூம்க்கு வர சொல்லி, அந்தாளு என்னைய சக் பண்ண சொன்னார் சார்…” கொஞ்சமும் சலனமில்லாமல் சொல்லிமுடித்தான்…

“என்னது?… என்ன சொன்னார்?” தமிழ் அதிர்ந்தார்… ஒருவேளை வார்த்தை உச்சரிப்புகளில் ஏதேனும் பிழை இருக்குமோ? என்று மீண்டும் கேட்டார்…

“மண்டி போட்டு சப்புடா’ன்னு சொன்னார் சார்… முடியாதுன்னு புடிச்சு தள்ளிவிட்டு வீட்டுக்கு ஓடிட்டேன் சார்… அப்புறம் ஸ்கூல் பக்கமே வரல..எங்க நான் உண்மைய யாருக்கும் சொல்லிருவனோன்னு பயந்து இப்போ தூது
விட்டிருக்கான்…. அவன் எனக்கு மன்னிப்பு கொடுக்குறானா? வேடிக்கையா இருக்கு சார்!” சொன்னபடி வழிந்த கண்ணீரை பொருட்படுத்தாமல் அங்கிருந்து நகர்ந்தான் ரகு…

வெகுநேரம், தன் கண்களை விட்டு மறைந்தபிறகும் ரகு சென்ற வழியை வைத்த கண் விலகாமல் பார்த்தபடியே நின்றார் தமிழ்… அவருடைய கண்களும் அவரறியாமல் கண்ணீர் சுரந்திருப்பதை சில நிமிடங்கள் கழித்துதான் உணர்ந்தார்…

மறுநாள் காலை,

பள்ளி மாணவர்கள் அணிவகுத்து காலை ப்ரேயருக்காக ஆயத்தமாகினர்…

ஆடிட்டோரியம் நடுவில் நின்றபடி மாணவர்கள் சிலரை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார் முதல்வர்…

“நேரா நில்லுங்க பசங்களா… எங்க அந்த பிடி சார்?… நேரமாகுது, சீக்கிரம் அரேஞ் பண்ண சொல்லுங்க!” சத்தமிட்டபடி ஒழுங்குபடுத்தினார்…

“சார்….” யாரோ அழைக்க, திரும்பிப்பார்த்தார் முதல்வர்…

தமிழ்தான் அது… “என்ன தமிழ், அப்பாலஜி லெட்டர்…” வார்த்தைகளை சொல்லி முடிப்பதற்குள், தன வலது கையால் ஓங்கி அவர் கன்னத்தில் அறைந்தார் தமிழ்….

‘பளார்’ சத்தத்தால் ஆடிட்டோரியம் சில நொடிகள் நிசப்தமாகியது, எல்லோர் கண்களும் முதல்வரின் கன்னத்தை கவனித்துக்கொடிருந்தன…

முதல்வரின் காதருகே வந்த தமிழ், “சாரி சார், இன்னிக்கு செருப்பு போட்டுட்டு வரல!” சொன்னபடி அங்கிருந்து விலகினார்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *