சுந்தரம் தாத்தா

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 22, 2020
பார்வையிட்டோர்: 7,209 
 

சென்னையில் செயல்பட்டு வருகிற ஆண்கள் விடுதி அது, சுமார் 100 ஆண்கள் தங்கியுள்ளனர், இதில் பெரும்பாலும் வேலைக்கு செல்கிற 20-50 வயது வரை உள்ள பலதரப்பட்ட வயதினர் தங்கி இருந்தனர், இதன் காவலாளி சுந்தரம் தாத்தா,

67 வயதான சுந்தரம் திண்டிவனத்தை சேர்ந்தவர், அங்கிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து தன் குடும்பத்தோடு அந்த விடுதியின் அருகில் வசிக்கிறார், அவரது மனைவி கற்பகமும் அதே விடுதியில் சுத்தம் செய்யும் பணி செய்கிறார், சுந்தரம் நல்ல வேலைக்காரர், மென்மையானவர், நன்கு பழகக்கூடியவர் அனைவரையும் அனுசரித்து செல்பவர் ஆனால் இவை அனைத்தும் காலை முதல் இரவு 8 மணி வரை மட்டுமே,, அதற்கு மேல் டாஸ்மாக் பக்தனாக மாறி தாமதமாக இரவு விடுதிக்கு வருபவர்களை கடிந்து கொண்டும் திட்டிக்கொண்டும் தான் இருப்பார். அவரது நற்குணம் அறிந்தவர்கள் இதை பெரிதுபடுத்தாமல் கடந்து சென்று விடுவர்,, இளம் தலைமுறை பதிலுக்கு சண்டை இடும் சில நேரங்களில் அடி உதையும் சுந்தரத்திற்கு பரிசாக கிடைக்கும்.

அவ்விடுதியில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் மகேசும் தங்கியிருந்தான், 25 வயதான மகேஷ் கைநிறைய சம்பாதிக்கும் இளைஞன்,, மூன்று வருடங்களாக உடன் பணிபுரிகிற ஒரு பெண்ணை காதலித்து வருகிறான்,, பல நாட்களாக வீட்டார் சம்மதத்திற்காக போராடியவனுக்கு அன்று தான் இரண்டு வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் கிடைத்தது, சம்மதம் கிடைத்த மகிழ்ச்சியில் தன் நண்பர்களுக்கு மது விருந்து அளித்து விட்டு தானும் மது போதையில் இரவு வெகு தாமதமாக 11 மணிக்கு மேல் விடுதிக்கு வருகிறான்.

அப்போது விடுதியின் கேட் மூடியிருந்தது, மகேஷ் வெகுநேரம் கதவை தட்டியும் சுந்தரம் கதவை திறக்கவில்லை, ஆத்திரமடைந்த மகேஷ் சுவர் ஏறி குதித்து உள்ளே வர இதை சுந்தரம் தாத்தா பார்த்து விடுகிறார், அப்புறம் என்ன களபேரம் தான்

“இது என்ன உன் அப்பன் வீடா? கண்ட நேரத்தில கதவை தட்டுற?”னு சுந்தரம் தாத்தா தனது ஸ்டைலில் திட்ட பதிலுக்கு மகேஷ், “யோவ் உன் வேலை கேட் திறக்குறது அதோட இரு, நான் எத்தனை மணிக்கு வந்தால் உனக்கென்ன?” என ஒருமையில் பேசுகிறான்

சுந்தரம் தாத்தாவிற்கும் மகேசுக்கும் வார்த்தை போர் முற்றி கைகலப்பாகிறது, குடி போதையில் சுந்தரம் அருகில் இருந்த கம்பை எடுத்து மகேசை தாக்கிவிடுகிறார் ஆத்திரம் அடைந்த மகேஷ் திருப்பி தாக்க பாய்ந்தபோது விடுதியில் தங்கும் மற்றவர்கள் ஓடி வந்து மகேசை தடுத்து அவனை அழைத்து சென்று விடுகின்றனர்.

மகேசுக்கோ நெஞ்சு பொறுக்கவில்லை போயும் போயும் ஒரு கிழவனிடம் அடி வாங்கி விட்டோமே அவனை சும்மா விடக்கூடாது நாளை இரவு வேண்டும் என்றே தாமதமாக வந்து அடித்து துவைத்து விட வேண்டும் என்கிற ஆத்திரத்துடன் உறங்க செல்கிறான்.

மறுநாள் திட்டமிட்டபடியே தாமதமாக போதையில் வருகிறான் மகேஷ் அப்போது நுழைவு வாயிலில் சுந்தரம் தாத்தாவை தவிர வேறு யாரும் இல்லை, நினைத்தது போலவே அவரிடம் வம்பிழுக்கிறான், அவரும் பதிலுக்கு சண்டையிட ஓங்கி ஒரு அறை அறைந்து அவரை கீழே தள்ளி விட்டுவிட்டு வேகமாக தனது அறைக்கு சென்று விடுகிறான். உள்ளுக்குள் பழி தீர்த்து கொண்ட ஆனந்தம் அவனுக்கு, மகிழ்ச்சியோடு உறங்க செல்கிறான்.

மறுநாள் அதிகாலையில்

“டொக், டொக் டொக்” மகேஷ் உறக்கத்தில் இருந்தபோது அவன் ரூம் கதவை யாரோ தட்டிய சத்தம் கேட்டு கண் விழித்து கதவை திறந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி, “போலீஸ்” ஆம் காவலர்கள் வந்திருந்தனர், அவனை கைது செய்து இழுத்து சென்றனர், விசாரணையில் மகேஷ் தாக்கியதால் தான் சுந்தரம் மரணம் அடைந்து விட்டார் என்கிற தகவல் வந்தது.

மகேஷ் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். கூடவே கொலைக்குற்றவாளி என்கிற பட்டமும் கிடைத்தது, குற்ற வழக்கில் சிறைக்கு சென்றதால் அவனது வேலை பறிபோனது, அவனது காதல் திருமணப்பேச்சும் நின்று போனது, அவசரத்தாலும்,பக்குவமின்மையாலும் அவனது வாழ்க்கை சின்னாபின்னமானது. சிறையில் தன் வாழ்க்கையை நினைத்து கண்ணீர் விட்டபடியே கதறி அழ துவங்கினான், அருகில் இருந்தவர் தட்டி எழுப்பும்போது தான் தெரிந்தது இவை அனைத்தும் கனவு என்று.

அவசரப்படுவதாலும் தன் கோபத்தாலும் என்னென்ன பின்விளைவுகள் வரும் என்பதை உணர்ந்தான். சுந்தரத்திற்கும் மகேசிற்கும் அந்த விடுதியை வைத்து மட்டுமே சம்பந்தம். நாளைக்கே மகேஷ் அந்த விடுதியை விட்டு சென்று விட்டால் சுந்தரம் யாரோ, மகேஷ் யாரோ தான். இது போல தான் நமது வாழ்க்கையும். சாலையில் செல்லும்போதோ,பணிபுரியும் இடத்திலோ, பயணத்திலோ, வரிசையில் நிற்கும்போதோ நாம் காரணம் புரியாமலேயே மற்றவர்களுடன் சண்டை இட்டு, நம்மை நாமே மன அழுத்தத்திற்கும் இது போன்ற பிரச்சினைகளுக்கும் உள்ளாக்கி நிம்மதியை தொலைக்கிறோம். உண்மையில் கொஞ்சம் பொறுமையுடன் சிரித்தபடியே நகர்ந்தால் பிரச்சினைக்கும் மனக்கஷ்டத்திற்கும் வேலையே இல்லை,

இதை உணர்ந்த மகேஷ் காலையில் அலுவலகம் செல்லும்போது சிரித்த முகத்துடன் சுந்தரத்திடம் “நைட்டு என் மேல தான் தாத்தா தப்பு, வயசுக்கு மரியாதை இல்லாமல் பேசிட்டேன் சாரி”னு சொன்னதும் சுந்தரம் நெகிழ்ந்தபடியே, “இல்ல தம்பி உனக்கு என் பேரன் வயது, நானும் அப்படி பேசியிருக்க கூடாது” என்று சொல்லி மன்னிப்பும் கேட்கிறார், இருவரும் சமாதானம் ஆகிறார்கள்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “சுந்தரம் தாத்தா

  1. கதையில் ஆர்வம் அதிகமாகி படிக்க தோன்றுகிறது நல்லவேலை கனவாகி போனது இப்போது உள்ள தலைமுறைகள் நிஜமாக செய்து விடுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *