குமார், சேகர் இருவரும் உள்ளூர் நாலகத்தில் சந்தித்தபோது ”வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு குமார். சொந்தமா ஜெராக்ஸ் கடை வைக்கலாம்னு பார்க்கிறேன். நீ பாதி பணம் போடறதா இருந்தா உன்னையும் பார்ட்னரா சேர்த்துக்கறேன்” என்றான் சேகர்.
சரி என்றான் குமார்.
சேகர் ஆர்வத்துடன் ஒரு வார இதழை எடுத்து அதில் வந்திருந்த ஜெராக்ஸ் மிஷின் விற்பனை செய்யும் கம்பெனியின் விளம்பரத்தைக் காட்டினான்.
அந்தக் கம்பெனியின் விலாசத்தை எழுத பேனாவை எடுத்தான் குமார்.
அதற்குள் சேகர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு விளம்பரம் வந்த பக்கத்தை அப்படியே கிழித்து பாக்கெட்டில் திணித்துக் கொண்டான்.
”வா, வெளியே போய் பேசலாம்”
குமாருக்கு மனசு உறுத்தியது. பலர் படிக்க வேண்டிய நூலகப் புத்தகத்தில் இருந்து சின்னத்தனமாய் கிழிக்கிறானே, இவனை நம்பி பணம் போட்டு பார்ட்னராய் சேர்ந்தால்…?
வெளியே வந்ததும், ”சாரி, நான் பார்ட்னர்ஷிப் சேரலை” என்றான் குமார்
– சந்திரா தனபால் (5-5-10)