சாப்பாட்டுக்கு சேதமில்ல…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 8,735 
 

நான்கு நாட்களாய் விடாது பெய்த மழையில் ஊரே தண்ணிரில் மிதந்தது. சாய்ங்காலம் லேசாய் ஒரு வெட்டாப்பு விட்டபோதுதான் அநத சேதி கிடைத்தது.

“என்ன செல்லா எண்ணையூத்தரானாக்கும்?” என்று யாரோ கூவியது யார் என்றுகூடநிமிர்ந்து பார்க்காத செல்லாவும் அவள் மகள் சின்னியும் ஆளுக்கு இரண்டு மண்ணெண்ணை டின்களை எடுத்துக் கொண்டு ஓடியபடியே,

“ஆமாமுங்கோய் எண்ணதா ஊத்தறானா. இநத ஊத்தாத மழையிலே இவனுக்கென்ன கொள்ளையோ?” பதில் சொன்னாள் செல்லா.

நல்லவேளை குட்டைமேட்டில் நின்ற ரேசன் கடையில் கூட்டம் குறைவாக இருந்தது.

“தேய், சட்டுன்னு டின்னுகளை லைன்லே வை. தோ நா பில்லு போட்டு வந்தர்றேன்.”

செல்லா மகளை லைனில் நிறுத்திவிட்டு பின்புறமாய் போய், அரிசியளக்கும் ரங்கப்பனிடம், “ரங்கண்ணோய்” என்று கெஞ்சும் பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டு கார்டுகளையும் பணத்தையும் நீட்டினாள்.

ரங்கப்பன் அவளை ஒரு பரிதாபத்தோடு பார்த்தான். கிள்ளி விடக் கூட சதையில்லாத மெல்லிய வரண்டதோலும் எலும்புமாய், கண்களை மட்டும் பெரிதாக வைத்துக் கொண்டு நின்றவளின் தலைக்கு எண்ணையே அவசியமில்லை. என்பது போல் பஞ்சு வெள்ளையாய் நரைத்திருந்தது.

பார்க்கப் பாவமாய் இருந்தாலும் ரங்கப்பன் தன் பிகுவை விடாமல், “உனக்கு வேற வேலையே இல்லே? ஏதோ தலைவர் ஊட்லே குடியிருக்கறயேன்னு பாத்தா இதே பொழப்பா அலையறயே”

“போகட்டும் ராஜா. ஊட்லே சோறக்கி ரெண்டு நாளாச்சு ஏதோ இதைக் கொண்டு போய்க் கொடுத்தா கெடைக்கற அஞசு ரூபாயில அரை வயிராவது சாப்பிடலாம் எனக்கில்லேனாலும் புள்ளைக மயங்கறதுக் கொசற மாச்சும் கொஞ்ம்…”

ரங்கப்பனால் அதுக்கு மேலும் ஒன்றும் பேசமுடியவில்லை.

“செரி செரி இப்பவே ஒண்ணும் முடியாது. அரைமணி நேரம் கழிச்சு வா பாக்கலாம் போ.”

செல்லாளுக்கு உயிர் கைக்குள் வந்த மாதிரி “மகராசந் தலைநாள்லே ஆம்பிளப் புள்ளயாவே பெத்துக்க சாமி” என்று வார்த்தைகளைச் சிந்திவிட்டு மகள் நின்ற வரிசைக்கு வந்த போது கூட்டம் இன்னும் சேர்ந்திருந்தது சட்டென கவனம் வந்தது போல,

“சின்னி இஞசினியருட்லே ஒண்ணும் கொடுக்கலையா புள்ள?”

தாயின் கேள்வி காதில் விழுந்ததும் தீயை மிதித்தவள் போல் “ஐய்யோ இரும்மா தா இன்னொருவாட்டி இஞ்சினியர் வீட்டுக்கு போகோணும்.”

“எதுக்கடி?”

“பழைய சோறு கொஞ்சம் மிச்சமிருக்குன்னு ஒரு போசிலே போட்டு கொடுத்தாங்க அத நா அங்கயே வச்சுப் போட்டு வந்துட்டேன் அந்த பாழாப் போன நாய்கான தின்னுடுமோ என்னவோ?”

பயந்து ஓடினாள் மழையில் நனைந்து களிமண் நிலம் வசக் வசக் என்று காலைப் பிடித்தது.

பாத்துப்போடி எங்கியாவது உளுந்துகான தொலைக்காதே காலையிலே வேலைக்குப் போக முடியாது. சம்பாதிக்கற லடசணம் மாத்துதுணிக்கு கூட வழியில்லை. என்று உரக்கக் கூவியவள் அக்கம்பக்கம் தன்னையாராவது பார்க்கிறார்களா என்று ஒருமுறை பார்த்துக் கொண்டாள். அதற்குள் எண்ணை வாங்க பணம் கொடுதத காலனிக்காரி சீதாவும் தோட்டத்து பொன்னியும்

“எனன் செல்லா எண்ணெ கிடைக்குமா?”

“வாங்கீர்லாம்மா.”

“பில் போட்டாச்சா?” என்று தங்கள் பணத்துக்கு பாதுகாப்பு தேடினார்கள்.

“ம் பணம் கொடுத்துட்டேன இப்ப ரங்கப்பன் கொண்டாந்து தந்துருவான்.” அவள் சொல்லிக் கெண்டிருந்த போதே நடையின் பின்பக்கம் நின்ற ரங்கப்பன்

“இந்தா செல்லம்மா” அதட்டலுடன் கூவினான்.

“ தோ வந்துட்டேன்” என்றவள் அவர்களைப் பார்த்து

“பில் போட்டாச்சும்மா. பத்து நிமிஷத்திலே எண்ணை வாங்கிடலாம்” எனறபடியே ரஙகப்பனைப் பார்க்கப் போனாள்.

பில்லையும் மிச்சப் பணத்தையும் வாங்கிக் கொண்டு வந்த போது சின்னி தன் வற்றல் உடம்பில் பெரிதாய் தெரிந்த பற்களை மட்டும் காட்டியபடி கெசுவாங்க ’புஸ்புஸ்’ என்று மூச்சைவிட்டு,

“நல்லவேளைம்மா அந்தப் பாட்டி எடுத்து உள்ளே வச்சிருந்தாங்க. இல்லேன்னா இந்நேரம் நாய்தான் சாப்பிட்டிருக்கும்.”

“செரிசெரி என்ன பழையசோறு மட்டும்தானா ஊத்திக்க என்ன?” தாழ்ந்த குரலில் கேட்டாள்.

“ஊத்திக்கெல்லாம் ஒண்ணும் கொடுக்கல்ல” சாப்பாடு சேதமில்லாமல் போன சந்தோசத்தில் கொஞசம் சிணுங்கியபடி சொன்னாள்.

“நீ இங்கே நில்லு நா வீட்டுக்குப்போய் தம்பிக்கு கொஞ்சம் போட்டுட்டு அடம் புடிக்காம தண்ணியெடுத்து அடுப்பப்பத்தவச்சு உலையவை. அதுக்குள்ள எண்ணயக் கொடுத்துட்டு அரிசிய வாங்கிட்டு வந்தர்றேன். இல்லேன்னா எல்லோரும் இன்னிக்கு பட்னிதான் கெடக்கணும்.”

தன் சாப்பாட்டு ஆற்றாமையை மகள் கையிலிருந்த போசியை வாங்கிக் கொண்டு போனாள்.

தூரத்தில் வீட்டுக்கு பக்கம் போகும் போதே கூட்டமாய் நாலைந்து பேர் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர் வேரென்ன எவனாவது தண்ணியப் போட்டுட்டு ரகளை பண்ணுவானுக.. வேடிக்கை பாக்கறதுக்கு சொல்லவா வேணும். மனதில் வைத்தவளாய் நிமிர்ந்து பார்க்காமல் விடுவிடு வென்று வீட்டுக்குள் நுழைந்தாள்.

சாப்பாட்டுப் போசியை அடுப்புத் திண்ணை மேல் வைத்துவிட்டு “இவனெங்க போனா“ அடேய் மருது என்று சத்தம் போட்டு குரல் கொடுத்தாள்.

தாயின் குரலைக் கேட்டதும் முன்னாலிருந்த கூட்டத்திலிருந்து வெளியே வந்தான் மருது. பத்து வயசிருக்கலாம்.

“அங்கென்னடா பண்ணீட்டிருக்கே?”

“சத்தமேம்மா போடறே நம்ம ஊட்டுக்கார தாத்தா செத்து போயிட்டாரம்மா” செல்லாளுக்கு பகீரென்றது.

“நீ என்னடா சொல்றே” என்று அவள் கேட்டதற்குக் கூட பதில்தராமல்.

“ என்னம்மாது போசியிலே சோறா?”. போசியை திறந்து சோற்றை அள்ள முயன்றான்.

அவன் பதில் சொல்லாமல் போனாலும் ஊர் பெண்களின் ஒப்பாரி ஓலம். அந்தப் பகுதியையே நிறைத்தது.

சோற்றை அள்ளப் போனவனின் கையைப் பிடித்து இழுத்து வந்தாள்.

வேண்டான்டா எழஊட்லே சாப்பிடக்கூடாது. உனக்கு என்னமாச்சும் வாங்கிதர்றேன். வாப்பா.”

“எனக்கென்னும் வேண்டாம் சோறுதான் வேணும் மூணுநாளா இப்படித்தா சொல்லிட்டிருக்கே நா சாப்பிட்டுதா வருவம் போ.” அழுதபடி அவள் பிடியிலிருந்து திமிறினான் உள்ளே ஓடிய வேகத்தில் கால் இடறி போசியிலிருந்த சோறு முச்சூடும் கீழே சிந்தி மண்ணுக்கிரையானது.

“வாடா பேசாம” இழுத்துக் கொண்டு தெருவில் இறங்கினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *