கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 5, 2022
பார்வையிட்டோர்: 3,612 
 

சுமார் நூறு பணியாளர்கள் பணி புரிந்து கொண்டிருந்த கம்பெனி அது. பத்து மணி இருக்கலாம். வேலை செய்து கொண்டிருந்த வேலப்பனை பர்சனல் டிபார்ட்மெண்டில் கூப்பிடுவதாக ஆள் வந்து சொல்லவும் பகீர் என்றது. எதற்கு கூப்பிடுகிறார்கள்? காலையில் உள்ளே நுழையும்போது காவலரிடம் சண்டை போட்டதாலா?

அவனாகத்தான் நம்மை கிண்டலடித்தான், அதற்குத்தானே அவனிடம் வாக்குவாதம் செய்தோம்? போய் வத்தி வைத்து விட்டானா?

கடவுளே! இனி அங்கு போனால் அவ்வளவுதான், நான்கைந்து பேரை பார்க்க சொல்வார்கள். இது ஒரு மாதிரியான பழி வாங்குதால். போய் ஒரு மணி நேரம் காக்க வைத்தல், அதன் பின் ஒருவர் பார்த்து நீங்க எதுக்கும் அந்த மேனேஜரை பார்த்துட்டு வந்துடுங்க. நழுவிக்கொள்வார்.

அடுத்த மேனேஜரை பார்க்க அரை மணி நேரம் காக்க வைப்பார்கள். அதற்குள் போவோர் வருவோர் பார்க்கும் பரிதாப பார்வைக்கு பேசாமல் சண்டையிட்டவன் கூடவே சகஜமாகிவிடலாம் என்று தோன்றும். பேசாமல் போயிருக்கலாம், இப்பொழுது தோன்றுகிறது, அப்பொழுது தோன்றவில்லையே? .

எதிர்பார்த்த்து போலவே நாற்பது நிமிடம் காக்க வைத்து விட்டார்கள், அதன் பின் விசாரணை.இவன் நடந்ததை சொன்னான். ஆனால் அவர்கள் சொன்னது நீங்கள் செக்யூரியிட்டின் வேலைக்கு இடைஞ்சல் செய்து விட்டீர்கள் என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். ஏன் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க கூடாது.

இவனுக்கு ஆத்திரம் தலை தூக்கியது. உண்மையில் அவன் தேமே என்று உள்ளே வந்து கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு பெண் பணியாளரிடம் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்த காவலர் இவனை கண்டவுடன் ஏதோ சொல்லி சிரிக்க அந்த பெண் பணியாளியும் பெரிய நகைச்சுவை சொல்லிவிட்ட்து போல் சிரித்தாள்

இவன் சத்தமில்லாமல் போயிருக்கலாம், அவர்களிடம் போய் உங்கள் வேலை என்னவோ அதை மட்டும் செய்யுங்கள், இப்படி போவோர் வருவோரை எல்லாம் கிண்டல் செய்து கொண்டிருக்க வேண்டாம்.

இவன் இப்படி சொல்வான் என்று எதிர்பார்க்காத இருவரும், சட்டென ஒரு நிமிடம் மெளனமாகிவிட்டாலும், அடுத்த நிமிடம் காவலர் பெண் பணியாளரை கண்ணை காட்டி போக செல்லிவிட்டு இவனுடன் வார்த்தையாட ஆரம்பித்து விட்டான். பேசி பேசி சண்டையாக மாற இருந்தது. பக்கத்தில் இருந்தவர்களால் சமாதானம் செய்யப்பட்டு உள்ளே வந்து விட்டான்.

சார் நான் எதுவுமே செய்யலை சார், சொன்னவனை மேலாளர் ஒண்ணுமே செய்யலையின்னு ஏன் பொய் சொல்றீங்க, நீங்கதான் சண்டைக்கு போனீங்கன்னு அந்த செக்யூரிட்டி ஆதாரத்தோட சொல்றாரு. நீங்கதான் அவங்கிட்ட வம்பு இழுத்தீங்கன்னு நம்ம லேடீஸ் ஸ்டாப்பு சொல்றாங்க.

இவனுக்கு திக்கென்றது. அப்படியானால் இவன் கண்ணை காட்டி அனுப்பிய பெண்தான் சாட்சி சொல்லி இருக்க வேண்டும்..

சார் இப்ப நான் என்ன செய்யணும்? ஒரு எக்ஸ்பிளேசன் எழுதி இனிமேல் இப்படி நடக்க மாட்டேன்னு எழுதியும் கொடுக்கணும், சொல்லிவிட்டு சட்டென எழுந்து சென்று விட்டார்.

யாருகிட்ட சார் எழுதி கொடுக்கணும்? அவர் யாரையோ பேர் சொல்லி கூப்பிட்டு இந்தாப்பா இவர்கிட்ட ஒரு எக்ஸ்பிளனேசன் லெட்டர் வாங்கிக்குங்க. சொல்லிவிட்டு சென்று விட்டார்.

இவனுக்கு அவமானமாய் இருந்தது, செய்யாத தவறுக்கு இதென்ன தண்டனை?

அவர் இவனை கூப்பிட்டு என்ன விசயம் என்று விலாவாரியாக விவரம் கேட்டார். இந்தாளுகிட்ட வேறே இதை சொல்லணுமா? மனதுக்குள் கேட்டுக்கொண்டாலும் நடந்ததை சொன்னான்.

அவர் ஏதோ சிரத்தையாய் கேட்பது போல் உட்கார்ந்திருந்தாலும், நீங்க இப்படி எழுதுங்க என்று சொல்லி ஏதோ இவனே தவறு செய்து விட்டவன் போலவும், இனிமேல் இந்த தவறு செய்யாமல் பார்த்துக்கொள்வேன் என்றும் எழுத சொன்னார்.

மனம் திகு திகுவென எரிந்தாலும் கடித்ததை அவர் சொன்னது போல் எழுதி கொடுத்துவிட்டு வந்தான். மனம் முழுக்க வெறுப்புத்தான் வந்தது.

சே என்ன உலகம், நம்மால் கோபப்படத்தான் முடியும், போயா உன் வேலையாச்சு, அப்படி என்று உதறி விட்டு போக முடியுமா? கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வேலை பார்த்து பாதி கிழமாகி விட்டோம். வெளியே போனால், அனுபவம் இருந்தாலும் மீண்டும் ஆரம்ப நிலையில் இருந்துதான் வரவேண்டும்.

மாலை சோர்ந்து வீட்டுக்குள் நுழையும்போது குழந்தைகள் படிப்பில் மூழ்கியிருந்தாலும், மனைவி ஒரு அதிர்ச்சியை தூக்கி போட்டாள். அடுத்த மாசத்துல இருந்து ஐநூறு ரூபாய் வாடகை சேர்த்து கொடுக்கணுமாம்.

இப்பத்தானே வாடகையை ஏத்துனாரு? கேள்வி கேட்க நினைத்தவன், கம்பெனியில் ஏற்பட்ட அனுபவத்தில் சட்டென வாயை மூடிக்கொண்டான். வேண்டாம், இந்த உலகம் உண்மையை உரக்க சொன்னால் நம்மை பைத்தியமாக்கி விடும் முடிவு செய்தவன், அப்படியா! வெறுமனே சொல்லி விட்டு உட்கார்ந்தான். மனைவி வினோதமாய் பார்த்துக்கொண்டு காப்பி போட்டு வர உள்ளே சென்றாள்.

இரவு நல்ல தூக்கத்தில் இருந்த பொழுது சட்டென வீட்டு மின் இணைப்பு போய்விட்டது. ஏற்கனவே காற்றாடிகளின் சுழற்சியால்தான் கொசுவிடம் இருந்தும், வெப்பத்திடமிருந்தும் நிம்மதியாய் தூங்க முடிகிறது. காற்றாடி சுழற்சியை நிறுத்தியதும் எங்கிருந்துதான் கொசுப்படை பாய்ந்து வந்தது என்று தெரியவில்லை. படுத்திருந்த எல்லோரையும் எழுப்பி விட்டது. அப்புறம் என்ன விடிய விடிய உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டிருந்தனர்.

காலை கிளம்பும்போதே கரண்ட் ஆபிஸ் போய் எழுதி விட்டு செல்லலாம், நினைத்தவன், அரை கிலோ மீட்டர் நடந்து அலுவலகத்தை அடைந்தான். இன்னும் அலுவலகம் திறக்கவில்லை, எப்பொழுதும் வெளியில் ஒரு நோட்டு வைத்திருப்பார்கள்,

அதை தேடினான், கிடைக்கவில்லை. யாரோ பணியாளர், இன்று இரவு இந்திய குடிமகன் எவனுக்கும் மின்சார பிரச்சினை வராது என்ற தைரியத்தில் நோட்டை உள்ளே எடுத்து வைத்து விட்டு பூட்டிவிட்டு சென்றிருக்க வேண்டும். காத்திருந்தான்.

ஒரு வழியாக அலுவலகம் திறக்கப்பட்டு, அடித்து பிடித்து நோட்டை கண்டு பிடித்து எழுதி வைத்து விட்டு சென்றான். இனி எப்பொழுது போய் மின் இணைப்பை சரி செய்வார்களோ?

கம்பெனிக்குள் நுழைந்தவன், வழக்கம்போல் செக்யூரிட்டி அந்த பெண் பணியாளரிடம் பேசிக்கொண்டிருந்தான். நேற்று ஏற்பட்ட அனுபவத்தால், பல்லை கடித்து அந்த பக்கம் திரும்பாமல் உள்ளே சென்றான்.

இரவு ஓவர் நைட் வேலை இருப்பதாக சொன்னார்கள். கணக்கு போட்டு பார்த்தான், வீட்டுக்கு போய் ஒன்றும் ஆகப்போவதில்லை. சரி என்று ஒத்துக்கொண்டான்.

இரவு பனிரெண்டுக்கு மேல் இருக்கும், வெளியே செக்யூரிட்டி வேறு ஒருவர் இருந்தார், இப்பொழுதுதான் டியூட்டி மாறியிருக்க வேண்டும். இவனிடம் சிநேகமாய் சிரிக்க இவனும் சிரித்து விட்டு வெளியே வந்தான். நல்ல இருளாய் இருந்தது, கொஞ்ச தூரம் கூட நடந்திருக்க மாட்டான், ஐயோ, ஐயோ குரல் கேட்டது, திடுக்கிட்டு பார்த்தான், சற்று தூரத்தில் ஒருவனை இருவர் சேர்ந்து அடித்து கொண்டிருந்தார்கள். பயமாய் இருந்தாலும், கம்பெனி பக்கத்தில் இருப்பதால், யாராவது வருவார்கள் என்ற தைரியத்தில் சத்தம் போட்டுக்கொண்டே அவர்களை நோக்கி ஓடினான்.

சத்தம் கேட்டதும், அடித்துக்கொண்டிருந்தவர்கள் அப்படியே காட்டுக்குள் புகுந்து ஓடினார்கள். இவன் அருகே சென்று பார்க்க, அந்த காவலர் சட்டை எல்லாம் கிழிந்து அங்கங்கு இரந்த்தம் வடிய நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்ததும், இவனுக்கு கோபம் தலைதூக்கினாலும், மனம் பரிதாப்ப்பட்டு, அவனை கம்பெனி வாசலுக்கு அழைத்து வந்தான். அங்கு அவனை முகம் கை கால் கழுவ வைத்து அப்படியே படுக்க வைத்தான். காலையில் எழுந்து ஆஸ்பத்திரிக்கு போய்க்கோங்க, சொல்லி விட்டு வெளியே வந்தான்.

வானம் இருளாய் இருந்தாலும், மனசு இலேசானமாதிரி இருந்தது. வீடு சற்று தூரத்தில்தான். பொடி நடையாய் நடந்தான்.

காலையில் பர்சனல் டிபார்ட்மெண்டில் செக்யூரிட்டியை பெண் பணியாளரின் கணவன் தாக்கிவிட்டதாகவும், இவனை சாட்சியாக கூப்பிட்டு விசாரித்த பொழுது இவன் எனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்து விட்டான். சமூகத்தை பழி வாங்கிய திருப்தி மனதிற்குள் வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *