சங்கு சுட்டாலும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 4,924 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொன்னுத்துரை மாஸ்டர் தமிழ்ப் பாடசாலைக்கு மாற்றலாகி வந்த பின்னர் எங்களது கிராமத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

நான் சிறுவனாக இருந்தபோது விளையாடித்திரிந்த செம்மண் புழுதி நிறைந்த பிள்ளையார் கோவில் வீதி, இப்போது அழகான தேரோடும் வீதியாக மாறி விட்டது. கோவிலின் வலதுபுறத்தில் இருந்த பனை வடலிகளை அழித்து, தூர்ந்துபோயிருந்த கேணியையும் நிரப்பிய பின்பு, அப்பகுதி இப்போது வெட்டை வெளியாக அழகாகத் தெரிகிறது.

கோவிலின் முன் புறத்தில் தெருவோரமாக அடர்த்தியாக வளர்ந்திருந்த சவுக்க மரங்களையும் மகிழ மரங்களையும் தழுவிவரும் இதமான காற்று, பெயர் பெற்ற யாழ்ப்பாண வெயிலின் தகிப்பைத் தாங்க முடியாது தவித்துக்கொண்டிருக்கும் கிராமத்து மக்களுக்கு, எவ்வளவோ இன்பத்தைக் கொடுக்கும், மின்சாரக் கம்பங்கள் நாட்டுவதற்காக, அந்த அருமையான மரங்களில் சிலவற்றை இப்போது வெட்டிச் சாய்த்து விட்டார்கள். ஆனாலும் அந்தச் சூழலில் தவழும் குளிர்மை இன்னும் குறையாமல் இருக்கிறது.

வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்காகக் கட்டப்பட்டிருந்த அந்த மடம், எப்போதோ வாசிகசாலையாக மாற்றப்பட்டிருந்த போதிலும், இப்போது இன்னும் விஸ்தரிக்கப்பட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது.

நான்கைந்து வருடங்களுக்குள்ளாக இவ்வளவு மாற்றங்களும் நிகழ்ந்துவிட்டன. கொழும்பில் வேலை பார்க்கும் நான், ஒவ்வொரு தடவையும் கிராமத்துக்கு வரும்போது இந்த மாற்றங்களைப் படிப்படியாக அனுபவித்து மகிழ்ந்திருக்கிறேன்.

பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் பொன்னுத்துரை மாஸ்டர் எங்கள் கிராமத்துத் தமிழ்ப் பாடசாலையில் எனக்குத் தமிழ்ப் பாடஞ் சொல்லித்தந்திருக்கிறார். அதன் பின்னர் அரசினரால் வெளி யிடங்கள் மாற்றஞ் செய்யப்பட்டு, அங்கெல்லாம் சேவை புரிந்து விட்டு, மீண்டும் எங்கள் கிராமத்துப் பாடசாலைக்கே மாற்றலாகி வந்து விட்டார். பொன்னுத்துரை மாஸ்டர் வெளியிடங்களுக்கு மாற்றலாகிப் போகாதிருந்திருந்தால் எங்களது கிராமம் இன்னும் எவ்வளவோ சிறப்பான மாற்றங்களை அடைந்திருக்கும்.

எங்களது கிராமத்தின் இளஞ் சந்ததியினர் எல்லோருக்குமே பொன்னுத்துரை மாஸ்டரிடம் தனி மரியாதையுண்டு. அதற்குக் காரணம், அநேக மாணவர்கள் அவரிடம் கல்வி கற்றோம். அவரது உயர்ந்த கருத்துக்களினால் கவரப்பட்டிருக்கிறோம். சமூக நலனுக்காக அவரது வாழ்வின் பெரும்பகுதி அர்ப்பணமாகி வருவதை உணர்ந்திருக்கிறோம்.

பொன்னுத்துரை மாஸ்டரின் எளிமையான தோற்றமே எல்லோரையும் இலகுவில் கவர்ந்துவிடும். பாடசாலைக்குப் போகும் நேரங்களைத் தவிர மற்ற நேரத்தில் அரையில் ஒரு நாலுமுழ வேட்டியுடனும் தோளில் ஒரு சால்வையுடனுந்தான் அவரைப் பார்க்கலாம். அவரது கரிய தோற்றத்தில் பளிச்சென்று தெரியும் திருநீற்றுப் பூச்சும், நெற்றியில் எப்போதும் துலங்கிக் கொண்டிருக்கும் சந்தனப் பொட்டும், எவரையும் வசீகரிக்கும் புன்னகையும், அவரை அறிந்து கொள்ளாதவர்களைக்கூட அவரிடம் பணிந்து நடக்க வைத்துவிடும்.

பொன்னுத்துரை மாஸ்டருக்கு வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். திருமணமாகவில்லை. தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். சமூக சேவையிலும், ஆன்மீகத்துறையிலும் தனது வாழ்வின் பெரும் பகுதியைச் செலவழித்ததனாலேதான் அவருக்குத் திருமணஞ் செய்வதில் நாட்டம் ஏற்படவில்லையோவென நான் அடிக்கடி எண்ணுவதுண்டு.

கிராமத்துக்கு வரும்போதெல்லாம் பொன்னுத்துரை மாஸ்டரைச் சந்திக்காமல் நான் கொழும்புக்குத் திரும்புவதில்லை. அவரைப் பார்த்துச் சிறிது நேரம் உரையாடாமல் இருந்துவிட்டால் என் மனதில் நிறைவு எற்படுவதில்லை.

பொன்னுத்துரை மாஸ்டரை மாலை வேளைகளில் அநேகமாக வாசிகசாலையில் அல்லது கோவிலின் சுற்றாடலில் பார்க்கலாம். இந்தத் தடவை நான் கிராமத்துக்கு வந்தபோது பொன்னுத்துரை மாஸ்டரைப் பல இடங்களில் தேடியும் சந்திக்க முடியவில்லை.

பிள்ளையார் கோவில் குருக்களிடம் பொன்னுத்துரை மாஸ்டரைப் பற்றி விசாரித்தபோது, அவர் வெறுப்போடு கூறிய பதில் என்னைத் திடுக்கிட வைத்து விட்டது.

பொன்னுத்துரை மாஸ்டர் சம்சாரியாகிவிட்டாராம். அவருக்குப் பொது விஷயங்களில் ஈடுபடுவதற்கு இப்போது நேரம் இருப்ப தில்லையாம். குருக்கள் ஏனோ பொன்னுத்துரை மாஸ்டரைப் பற்றிய விபரங்களை தொடர்ந்து கூறுவதற்கு விரும்பவில்லை.

என் மனதில் அந்தரம் புகுந்துகொண்டுவிட்டது. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பொன்னுத்துரை மாஸ்டருக்கு என்ன நடந்துவிட்டது?

வாசிகசாலையிலிருந்து சீட்டு விளையாடிக்கொண்டு, வாசிப்பவர் களுக்குத் தங்களால் கஷ்டம் ஏற்படுமே என்பதையும் நினைத்துப் பாராமல் பெரிதாகச் சத்தம் செய்துகொண்டு வாசிகசாலையின் ஒழுங்குகளையும் மீறிப் பீடி புகைத்துக்கொண்டு, சதா ஊர்வம்பு பேசி மற்றவர்களைக் கேலியும் கிண்டலுஞ் செய்துகொண்டு காலங் கடத்திவரும் கூட்டமொன்று எங்கள் ஊரில் இருக்கிறது.

நான் வாசிகசாலையை அடைந்தபோது, நானும் பொன்னுத்துரை மாஸ்டரிடம் நன்மதிப்பு வைத்திருப்பவன் என்ற காரணத்தினாலோ ஏனோ அவர்கள் பொன்னுத்துரை மாஸ்டரைப் பற்றிக் கதைக்கத் தொடங்கினார்கள்.

“கிழட்டு வயசிலும் பொன்னுத்துரை வாத்தியாருக்கு கலியாணம்!”

“ இந்த காலத்திலை யாரைத்தான் நம்புகிறது!”

“பென்ஷன் எடுக்கிற வயசிலும் ஒரு கலியாணமோ?”

“இதுவும் அவருடைய சோஷல்சேர்வீஸ் தான்…..”

பொன்னுத்துரை மாஸ்டரைப்பற்றி அவர்கள் தொடர்ந்தும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

தீப்பந்தம் ஒன்றை எடுத்து எனது உடலில் மாறிமாறிச் சுடுவதைப்போன்று அவர்கள் சொற்களால் என்னை வதைத்தார்கள். என்னால் தொடர்ந்து அவர்களது பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு இருக்க முடியவில்லை. எனது உடலெல்லாம் எரிச்சல் எடுப்பதைப் போலிருந்தது. உடனே எழுந்து வந்துவிட்டேன்.

பொன்னுத்துரை மாஸ்டரைச் சந்தித்து இப்படியெல்லாம் மற்றவர்கள் கேவலம் பண்ணும்படி ஏன் நடந்துகொண்டீர்கள்?’ என அவரிடம் கேட்க வேண்டுமென்ற வேகம் என்னுள் துளிர்த்தெழுந்தது.

பொன்னுத்துரை மாஸ்டரின் வீட்டை நான் அடைந்தபோது, வெளி விறாந்தையிலே கிடந்த, ‘ஈசிச்செயரில்’ அவர் சாய்ந்திருந்தார். என்னைக் கண்டதும் வழமையான புன்னகையோடு “வா தம்பி , இப்படி உட்கார் ” என வரவேற்றார்.

அவரை நான் கூர்ந்து கவனித்தேன். அவர் என்னைப் புன்னகையோடு வரவேற்றபோதும், அந்தப் புன்னகையில் நிறைவைக் காணமுடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு பார்த்ததைவிட, அவர் இந்தத் தடவை மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். அவரிடம் வழக்கமாக இருக்கும் கம்பீரமும் கலகலப்பும் எங்கோ மறைந்து விட்டன. நல்ல எண்ணங்களையும் நல்ல செயல்களையும் மனிதன் மறந்து விடும்போது எல்லாவற்றையுமே இழந்து விடுகிறானா?,

எப்படி பொன்னுத்துரை மாஸ்டரிடம் பேச்சைத் தொடங்குவது என யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அவராகவே கதைக்கத் தொடங்கினார்.

“ நான் திருமணம் செய்துவிட்டேன் என்பதைக் கேள்விப்பட்ட பின்புதான், நீ இங்கு வந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். இது எனது சொந்த விஷயம். இதில் தலையிடுவதற்கு யாருக்குமே உரிமை கிடையாது. மற்றவர்கள் எனது விஷயங்களில் தலையிடுவதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். ”

தொடக்கத்திலேயே எனக்கு வாய்ப்பூட்டுப் போடுகின்றாரா?

“ சொந்த விஷயமாக இருந்தாலும், சமூகம் ஏற்றுக் கொள்ளாத ஒரு செயலை புரியும்போது, பலமுறை சிந்திக்கவேண்டுமென நீங்கள் தானே அடிக்கடி கூறுவீர்கள்.”

அவர் செய்தது எனக்குப் பிடிக்கவில்லை என்பதனை நாசூக்காக அவர் அறியும்படி செய்தேன்.

அப்போது வீட்டின் உள்ளே இருந்து ஒரு பெண் எனக்கும், மாஸ்டருக்கும் தேநீர் கொண்டுவந்தாள்.

யாரது, தேவகியக்காளா? நான் அதிர்ந்துபோய் உட்கார்ந்து விட்டேன். தேவகியக்காளையா பொன்னுத்துரை மாஸ்டர் திருமணஞ் செய்திருக்கிறார்.?

தேவகியக்காள் புன்னகையுடன் தேநீரைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

நான் சிறுவனாக இருக்கும்போது எனது மனதிலே பெருந் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சியொன்று தேவகியக்காளைப் பார்த்ததும் எனது மனதில் உறுத்தத் தொடங்கியது.

எனக்கு அப்போது பத்து வயதுதான் இருக்கலாம். தேவகியக்காளின் வீடு எங்களது வீட்டிலிருந்து கொஞ்சத் தூரத்திலேதான் இருக்கிறது. நான் அடிக்கடி தேவகியக்காளிடம் செல்வதுண்டு. தேவகியக்காளும் அவளது தாயும் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். தேவகியக்காளின் தந்தை வெகு காலத்துக்கு முன்பே இறந்துவிட்டாராம். அவர்களுக்கு வேறு யாருமே துணையில்லை.

அப்போது தேவகியக்காளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. தேவகியக்காளின் சொந்த மச்சான் தேவகியக்காளைத் திருமணஞ் செய்வதாக இருந்தார். திருமணத்திற்கு ஒருமாதம் இருக்கையிலே அவர்கள் அதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தார்கள். தேவகியக்காளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தாள்.

ஆனால் சிறிது நாட்களில் நிலைமை மாறிவிட்டது. நான் தேவகியக்காளிடம் சென்றபோது அவள் அழுது கொண்டிருந்தாள். தேவகியக்காள் அழுவதைப் பார்த்தபோது நானும் கலங்கி விட்டேன்.

தேவகியக்காளைத் திருமணம் செய்வதாக இருந்த அவளது மச்சான், கடைசி நேரத்தில் மறுத்துவிட்டாராம். அவருக்கு வேறு இடத்தில் நல்ல சீதனம் கொடுக்க யாரோ முன்வந்ததினால், அத்திருமணம் தடைப்பட்டுவிட்டது. தேவகியக்காளுக்குச் சீதனம் கொடுப்பதற்கு அவர்களிடம் எதுவுமே இல்லை.

அதன் பின்னர் பல வருடங்களாக எத்தனையோ இடங்களில் தேவகியக்காளுக்குத் திருமணம் பேசினார்கள். அப்போதெல்லாம் சீதனம் ஒருபெரும் பிரச்சனையாக இருந்ததால், தேவகியக்காளுக்குத் திருமணம் நடக்காமல் போய்விட்டது.

தேவகியக்காளுக்கு வயது ஏறிக்கொண்டிருந்தது அவளது தாயும் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் சாய்ந்துவிட்டாள்.

எனக்கு உத்தியோகம் கிடைத்த பின்னர், நான் வெளியிடங்களிலேயே காலத்தைக் கழித்ததினால் தேவகியக்காளைப் பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை. அவளைப்பற்றிய நினைவுகளும் படிப்படியாக எனது நினைவிலிருந்து அகன்றுவிட்டன.

இன்றுதான் திடீரெனப் பொன்னுத்துரை மாஸ்டரின் வீட்டில், வெகுகாலத்துக்குப் பின் தேவகியக்காளை மீண்டும் பார்க்கிறேன்.

பொன்னுத்துரை மாஸ்டரின் செருமல் சத்தம் என் நினைவுகளைத் தடை செய்கிறது.

“தேவகிக்குத் துணையாக இருந்த அவளது தாயும் இறந்துவிட்டாள். அனாதையாகிவிட்ட ஒர் ஏழைக்கு இனிமேல் வாழ்வே கிடைக்கப்போவதில்லை என்றிருந்த ஒரு பெண்ணுக்கு நான் வாழ்வளித்திருக்கிறேன். இதை நீயும் தவறென்று சொல்லுகிறாயா?”

நான் ஒரு கணம் சிந்தித்தேன். எனது மனம் அவர் செய்ததைச் சரியென ஒப்புக்கொள்ள மறுத்தது.

“வயது சென்ற உங்களைத் திருமணம் செய்து கொள்வதால் ஒர் இளம் பெண் என்ன வாழ்க்கையை அனுபவித்து விடப்போகிறாள்?- ” என்னையும் மீறி நான் வார்த்தைகளைக் கொட்டிவிட்டேன்.

“என்னால் அவளுக்கு எவ்விதமான இன்ப வாழ்க்கையையும் கொடுக்கமுடியாது என்பது உண்மைதான். அவளை நான் பதிவுத் திருமணம் மட்டுந்தான் செய்திருக்கிறேன். சட்டத்தின்படி அவள் என் மனைவி சட்டத்தைத் தவிர்ந்த எவ்வகையிலும் அவள் எனக்கு மனைவியாகவில்லை எனக்கொரு துணையாகத்தான் இருக்கிறாள்.”

மென்மையான மலர்ச் செடியை நடுவில் வைத்து அதனைச் சுற்றிச் சட்டமென்ற தீப்பிழம்பினால் வட்டமாக வரம்பு கட்டியிருக்கிறாரா பொன்னத்துரை மாஸ்டர்? என்னால் எதுவும் பேசமுடியவில்லை.. தொடர்ந்தும் பொன்னுத்துரை மாஸ்டர்தான் பேசினார்.

“எனது வயிற்றில் வெகு காலமாக இருந்து வந்த நோயைச் சிறிது காலத்துக்கு முன்புதான் புற்றுநோய் எனக் கண்டிருக்கிறார்கள் வைத்தியர்கள். நோய் நன்றாக முற்றி உடலெங்கும் பரவி விட்டதாம். புற்று நோயைக் குணப்படுத்த முடியாது என்பது எனக்குத் தெரியும் ஆனாலும்……”

ஐயோ, எவ்வளவு கொடூரத்தனமாக ஒரு பெண்ணின் வாழ்வோடு இவர் விளையாடியிருக்கிறார்? வாழ்வின் இறுதிக் காலத்தில் திருமணஞ் செய்து ஒரு பெண்ணின் வாழ்வையே கருகச் செய்ய வேண்டுமா?

நான் இருந்த இடத்தில் ஆயிரம் ஈட்டிகள் ஒரே சமயத்தில் திடீரென முளைத்துக் கழுவாய்களாக என்னைத் துளைப்பதுபோல் இருந்தன. என்னால் அங்கு இருக்க முடியவில்லை. எழுந்துவிட்டேன்.

எனது தவிப்பைக் கண்டதும் பொன்னுத்துரை மாஸ்டர் என்னை அமைதியாக இருக்கும்படி கைகளினால் சைகை காட்டிவிட்டு மேசையில் இருந்த தேநீரை எடுத்து மிகவும் சாவதானமாகப் பருகினார்.

எனக்கு வைக்கப்பட்டிருந்த தேநீர் ஆறிக்கிடந்தது.

“நன்றாகச் சிந்தித்த பின்தான் நான் தேவகியைத் திருமணஞ் செய்திருக்கிறேன். இன்று நான் செய்ததைத் தவறெனக் கருதுபவர்கள் யாருமே ஏழ்மை நிலையில் அனாதரவாகிவிட்ட அவளது வாழ்வை மலரச் செய்ய எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. யாரும் எதையும் இலகுவாகக் கதைத்துவிடலாம். ஆனால் எதையும் சாதனையிற் காட்டுவதுதான் கடினமானது.

சட்டத்தின்படி தேவகி எனது மனைவி. நான் இறந்த பின்னர், அரசாங்கத்தினால் வழங்கப்படும் பென்ஷன் பணம் அவளுக்குக் கிடைத்துக்கொண்டேயிருக்கும். எனது வாழ்க்கை முடிந்த பின்னரும் அவள் சீவிப்பதற்கு வழியமைத்துக் கொடுப்பதற்காகத்தான் தேவகியைச் சட்டத்தினால் எனது மனைவியாக்கிக் கொண்டேன். வாழ வழியற்ற ஒர் இளம் பெண்ணுக்கு இந்த ஏழை வாத்தியாரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லையே ” பொன்னுத்துரை மாஸ்டரின் கண்களில் நீர் பளபளத்தது.

நான் பதில் ஏதும் கூறமுடியாமற் கண்களை மூடிக்கொண்டேன். திடீரெனப் பொன்னுத்துரை மாஸ்டரின் உருவம் பெரிது பெரிதாகிக் கொண்டே வந்து, அந்த அறை முழுவதும் நிறைந்து, அதற்கப்பாலும் பெருகி எங்கும் வியாபித்தது போன்று என் மனக்கண்களுக்குத் தோன்றியது.

– கலசம் 1972

– கால தரிசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஏப்ரல் 1973, கணேச சனசமூக நிலையம், புன்னாலைக்கட்டுவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *