குதிரைக்காரன் குறிப்புகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 13,284 
 

‘வீழாதே என் தெய்வமே

வீழ்ந்துவிடாதே

வீழ்ந்தவர் எவரும்

எழுந்ததில்லையே! ’

– song of giant of the first age.

”ப்ளூ மவுன்டெய்னை விக்கப்போறேன் அசோக்… திஸ் வில் பி ஹெர் லாஸ்ட் ரேஸ்…’

குதிரைக்காரன் குறிப்புகள்1முதலாளியிடம் இருந்து இந்த வார்த்தைகளை அசோக் கேட்டபோது, அந்த நாளுக்கான சூரிய வெளிச்சம் அடிவானத்தில் இருந்து எழத் தொடங்கியது. இன்னும் பனி விலகாத புல்வெளி. பந்தயச் சாலையை ஒருமுறை பார்த்தவன், அந்தக் குதிரையின் மீது முதல்முறையாக ஏறிய நாளை நினைத்துக்கொண்டான்.

அன்றைய பயிற்சிகளுக்காக ப்ளூ மவுன்டெய்ன் தயாராக இருந்தது. அசோக்கின் எல்லா சமிக்ஞைகளையும் புரிந்துகொள்ளக்கூடிய குதிரை. ‘இந்த வருடத்தில் நீ கடைசியாக ஓடப்போவது இன்றுதான் என்பதைச் சொல்லிவிடலாமா?’ என யோசித்தபடி அதன் கழுத்தின் இடது பக்கத்தைத் தடவிக்கொடுத்தான். தலையை உற்சாகமாகக் குலுக்கிக்கொண்டது குதிரை.

‘இது ஒரு வேலைனு போறியேடா… அப்படி என்ன இருக்கு இந்த ரேஸ்ல?’ – பயிற்சி முடிந்து, சில வெற்றிகளுக்குப் பின்னால் அப்பா கேட்டதற்கு, ‘ரேஸ்ல கலந்துக்கிறது எப்படி இருக்குனு சொல்லத் தெரியலை. ஆனா, உலகத்துல வேகமான, சாகசமான, அபாயகரமான ரோலர்கோஸ்டர்ல போற மாதிரி இருக்கும் ஒவ்வொரு ரேஸும்!’ என்றான் சிரித்துக்கொண்டே.

அப்படியாகத்தானே இந்தக் குதிரைக்கும் இருக்க வேண்டும். அந்தக் களிப்பு, கொண்டாட்டம் எல்லாம் இனியும் இருக்குமா? ட்ரெய்னர், ‘நேரத்தை வீணாக்க வேண்டாம்’ என இவனை அவசரப்படுத்திக்கொண்டிருக்க, ‘இன்று ஏன் இவன் இவ்வளவு தாமதப்படுத்துகிறான்?’ என ஓடும் ஆர்வத்துடன் குதிரைகூட அடிக்கொரு தரம் கால்களை வாரிக்கொண்டிருந்தது.

ஏழெட்டு வருடங்களாக குதிரைகளோடு குதிரையாக வாழும் அசோக்கின் உடலும் ஒரு குதிரைக்குட்டியைப்போல் இருந்தது. தொடர் ஓட்டங்களால் அவனுடைய உடல் மெலிந்து, தசைகள் வலுவேறி இருந்தன. பந்தயத்தின்போது குதிரையின் மீது உட்காராமல் பயணித்ததால், அவன் உடல் காற்றைப்போல் லேசாகக் காணப்பட்டது.

இந்த ரேஸ் மைதானம், நம்பிக்கைகளையும் அவநம்பிக்கைகளையும் ஒரே நேரத்தில் இரக்கம் இல்லாமல் மனிதர்களுக்குத் தரும் குணம்கொண்டது. 10 ரூபாய் போட்டு 1,000 ரூபாய் எடுப்பவன், பிறிதொரு நாளில் லட்ச ரூபாய் போட்டு வெறும் கையோடு போவதும் உண்டு. குதிரைகளை வளர்ப்பவர்களும் ஜாக்கிகளும் குதிரைகளும்கூட இதில் விதிவிலக்கு அல்ல. வெற்றிகள் இல்லாத காலங்களில் ஒரு ஜாக்கி உணரும் வெறுமை மிகக் கொடூரமானது. அவனுடைய தோல்வி, அவனது உணவில் பாதியைக் குறைக்கும்; அத்தனை நாட்கள் அவனோடு ஓடிய குதிரையை அவனிடம் இருந்து பிரிக்கும்; அல்லது குதிரைக்குப் பதிலாக இவன் விற்கப்படுவான். இரண்டுமே சகிக்க முடியாத அவஸ்தைகள்.

தன் மீது பந்தயம் கட்டிய எத்தனையோ ஆட்களை லட்சாதிபதிகளாக மாற்றியிருக்கிறது அசோக்கின் குதிரை. பந்தயத்தில் வெற்றிபெற்ற எவரும் அந்தக் குதிரைக்கு இதுவரை ஒரு நன்றிகூடச் சொன்னது இல்லை. பணத்தின் மீதான மோகத்தால், அந்த ரேஸில் சம்பாதித்ததை இன்னொன்றில் முன்பணமாகக் கட்டக் காத்துக்கொண்டிருப்பார்கள்.

வெற்றிக்குப் பிறகு, குதிரையின் கடிவாளத்தை வெறுமனே பிடித்துக்கொண்டு சுற்றுப்பாதையில் கொஞ்ச தூரம் நடப்பது அவனுக்குப் பிடித்தமான விஷயம். கேலரியில் இருக்கும் ஆட்களின் ஆரவாரங்கள் எல்லாம் தனக்கானது என்ற கர்வத்தில் குதிரையும் சில நிமிடங்கள் தலையைச் சிலுப்பியபடி நடக்கும்.

குதிரைக்காரன் குறிப்புகள்2அசோக், இதற்கு முன்னும் சில குதிரைகளை ஓட்டியிருக்கிறான். ஆனால், இந்தக் குதிரையிடம் இருக்கும் அன்னியோன்னியம் மற்ற குதிரைகளிடம் இல்லை. ஒரு குதிரையைப் பழக்குவது அத்தனை எளிது அல்ல. பந்தயத்துக்காகப் பழக்கப்படும் குதிரைகளுக்கு எப்போதும் தனித்துவமான குணங்கள் உண்டு. நீண்ட பனிக் காலத்தில் வேட்டைக்குப் பழக்கும் ஓநாய்களைவிடவும், கவனமாகப் பழக்கப்படுத்தப்பட வேண்டியவை அந்தக் குதிரைகள்.

குதிரை ஓடும்போது அதன் மேல் இருப்பவனின் சுமை தெரியக் கூடாது. காற்றைச் சுமந்துசெல்கிற மனநிலை அதற்கு இருக்க வேண்டும். ஒரு ஜாக்கிக்கும் குதிரைக்குமான உறவு பந்தயத்தோடு முடிந்துபோவது அல்ல. ப்ளூ மவுன்டெய்ன் எனும் இந்தக் குதிரையோடு இன்று அசோக் போக இருப்பது 13-வது பந்தயம். அதில்

10 வெற்றிகள்… அதுவும் ஒரே சீசனில். இன்றைய பந்தயம் அவனைப் பொறுத்தவரை வெறுமனே பணத்துக்கானது மட்டுமல்ல; இந்த நாளும் அத்தனை சாதாரணமானதும் அல்ல.

பந்தயத்துக்குத் தயாராகும் ஒவ்வொரு நொடியும் இறுக்கமானதாக இருந்ததுடன், ‘புதிய குதிரையை எப்படிப் பழக்கப்படுத்துவது?’ எனக் குழம்பிக்கொண்டு இருந்தான். சில நாட்களுக்கு முன்பாக ஆஷா வாங்கித் தந்திருந்த புது ஸ்கின்னியை அன்று அணிந்துகொண்டான்.

”இன்று ப்ளூவின் கடைசி ரேஸ்’ என அலைபேசியில் ஆஷாவிடம் சொன்னதும் அவள் கலங்கிப்போனாள். இன்னும் சில நிமிடங்களில் அவள் வரக்கூடும். இவனைப்போலவே அவளுக்கும் ‘ப்ளூ’வின் மீது அபரிமிதமான காதல். அன்றைய ரேஸை, மனதுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் ஓட்டிப்பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய மன ஓட்டம், பெரும்பாலும் சரியாகவே இருக்கும். இந்த மன ஓட்டமானது, ஓடப்போகும் ட்ராக், அன்றைய தினம் வரும் சக ஜாக்கிகள், குதிரைகள் எல்லாம் என்ன மாதிரி இருக்கும் என எல்லாவற்றையும் அடிப்படையாகக்கொண்டு அமையும்.

எந்த மைதானத்தில் ஓடினாலும் அவனுக்கு நான்காவது ட்ராக்தான் ராசி. அதில் ஓடிய பெரும்பாலான பந்தயங்களிலும் அவனே முதலில் வந்திருக்கிறான். பரிசுப் பணத்தில் 10 சதவிகித வருமானம் என்பதன் சந்தோஷம் என்ன என்பது பந்தயத்தில் முதலில் வரும் நாட்களில்தான் அவனுக்குத் தெரியும். ‘இவ்ளோ பணத்தை எடுத்துட்டுப் போயி என்னடா செய்யப்போற?’ – அசோக்கை, சக ஜாக்கிகள் விளையாட்டாகக் கேட்பதாகக் காட்டிக்கொள்ளும் முகபாவனைகளுக்குப் பின்னால், தாங்கள் தவறவிட்டுவிட்ட ஏமாற்றம் இருப்பதை இவன் கவனித்திருக்கிறான்.

குதிரைக்காரன் குறிப்புகள்3”ரெண்டே ரெண்டு கிலோ சதை போட்டாலும் முதலாளி நம்மள வீட்டுக்கு அனுப்பிருவாரு. நம்ம ஆயுள்காலம் ரொம்பக் கம்மி ப்ரோ! இருக்கிற நாள்ல ஸ்பிரிட்டா இருந்தாத்தான நாலு காசு சேர்க்க முடியும்?” எனச் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டுப் போவான்.

பிற்பகலுக்கு முந்தைய இளம் சூரிய வெளிச்சத்தில், ப்ளூ மவுன்டெய்ன் தனது பிரகாசமான கண்களுடன் பந்தய மைதானத்துக்கு வந்திருந்தது. அசோக்கின் கைகளை இறுக்கமாகப் பற்றியிருந்த ஆஷா, சமாதானம் சொல்வதற்கான வார்த்தைகள் இன்றி தவித்தாள். அசோக்குக்கு ப்ளூதான் முதல் காதலி. அவளின் பிரிவை எந்த வார்த்தைகளால் ஆறுதல் சொல்லிச் சமாதானப்படுத்த இயலும்?

”சியர் அப் அசோக்! இது ஃபேர்வெல். நாமதான் சந்தோஷமா அனுப்பிவெக்கணும்’ என்று ஆஷா சொன்னவுடன், அவன் தன் கண்களை உயர்த்தி அவளைப் பார்த்து ‘ஆம்’ என்பதுபோல் தலையை ஆட்டினான்.

டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து வந்தான் அசோக். அவன் ஓடி முடிக்கவேண்டிய தூரம் அசைவற்ற ஒரு நிழலைப்போல் கண்களுக்குள் ஊன்றிக்கிடக்க, நீளமான இரண்டு வெள்ளிக் கம்பிகளைப்போல் அவன் குதிரையின் வாயில் இருந்து எச்சில் ஒழுகியது. தனது கடைசிப் பந்தயத்துக்கு நிற்கும் எந்த அவசரங்களும் இல்லாமல் வழக்கமான உற்சாகம் அதன் உடலில். இனி ஒருபோதும் பந்தயத்தில் ஓடப்போவது இல்லை என்ற உண்மை குதிரைக்கு மேலே உட்கார்ந்து இருப்பவனுக்கு மட்டும்தானே தெரியும். பந்தயத்தில் ஓடிய இத்தனை நாட்களும் ப்ளூவை தன்னுடைய குதிரையாகத்தான் நினைத்திருக்கிறான். இந்தப் பந்தயம் முடியும் அடுத்த நொடியில் தன்னில் இருந்து பிரியப்போகும் அந்த ஜீவன், ஏதாவது ஒரு கணத்தில் தனது அருகாமையை எண்ணி ஏங்கினால் என்ன செய்வது? உரிமையாளனைவிட, வளர்க்கிறவனிடம்தான் அனைத்து விலங்குகளும் நெருக்கமாக இருக்கின்றன. இந்த நாளுக்குப் பிறகு இந்தக் குதிரை என்ன வேண்டுமானாலும் ஆகலாம். விற்கவோ, கொல்லவோ, பரிசளிக்கவோ நிறைய சாத்தியங்கள் உள்ளன. கடைசியாக, அதை வெற்றியுடன் அனுப்பிவைக்க வேண்டும் என்பதுதான் அவனின் விருப்பம். அது, ஒரு நண்பனுக்கு நடக்கும் கௌரவமான வழியனுப்புதலாக இருக்க வேண்டும்.

அடைக்கப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் ஆறு குதிரைகளும் தயாராக இருந்தன. அசோக்குக்கு இரண்டாவது ட்ராக் கொடுத்ததில் கொஞ்சம் சங்கடப்பட்டான். அதைக் காட்டிக்கொள்ளாமல் இருந்தவனின் உடல் முழுவதும் வழக்கமற்ற பதற்றம். வரிசையில் இருந்த குதிரைகளின் கால்களில் அக்னி சுழன்றுகொண்டிருக்க, வழக்கமாக சக ஜாக்கிகளைப் பார்த்து புன்னகை செய்வதைக்கூட இன்று அவன் செய்யவில்லை. சமயங்களில் பந்தயங்களின் முடிவு முன் தினமே தீர்மானிக்கப்படுவது உண்டு. பந்தயங்களின் வெற்றி-தோல்விகளைத் தீர்மானிக்கும் சூதாட்ட முதலாளிகள், குதிரைகள் ஓடத் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்னால் கேலரியில் இருக்கும் மீடியேட்டர் ஒருவன் மூலமாக ‘எந்த நம்பர்’ என சைகை மட்டும் செய்வார்கள். சம்பந்தப்பட்ட ஜாக்கியோடு மற்ற ஜாக்கிகளுக்கும் அந்த சைகை ஓர் உத்தரவு. இன்று ஒருவேளை முடிவு முன்பே தீர்மானிக்கப்பட்டு இருந்தாலும் இவன் ஜெயித்துதான் ஆக வேண்டும். குதிரையில் ஏறுவது இதுவே கடைசி முறையானாலும்கூட அவனுக்குச் சம்மதம்தான்.

கேலரியில் எப்போதும் இல்லாத கூட்டம். பாதிக்கும் மேல் பெரும் முதலாளிகள். வார இறுதியில் இது அவர்களுக்கு சுவாரஸ்யமான விளையாட்டு. ஆனால், பெரும் லாபம் இருப்பதால், இதை வெறும் விளையாட்டாக மட்டும் அவர்கள் நினைப்பது இல்லை.

ப்ளூ மவுன்டெய்னைப் போலவே அவனுக்கும் பந்தயத்தில் இருந்து விலகிக்கொள்ளும் நேரம். வெற்றிகள் சலித்துப்போய் சராசரி மனிதர்களில் ஒருவனாக வாழ விரும்பினான். இந்த வெற்றிகளை எல்லாம் அழித்துவிட்டு, புத்தம் புதிய மனிதனாக சூரியனைப்போல் தன்னை மாற்றிக்கொள்ள நினைத்தான். குதிரை அடிக்கு ஒரு தரம் தும்மியது. கண்களை மூடி சில நொடிகள் பிரார்த்தித்தான்.

குதிரைக்காரன் குறிப்புகள்4துப்பாக்கியின் வெடிச் சத்தத்துக்காகக் காத்திருக்கும் நொடி. ஒரு ஜாக்கியும் குதிரையும் முதலில் பழகவேண்டியது இந்தச் சத்தத்துக்குத்தான். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் உடலில் ஏற்படும் சின்ன அதிர்ச்சி, ஒரு ரேஸின் முடிவையே மாற்றக்கூடும். ஆக, ட்ரிக்கரில் விரல் பதிந்திருக்கும்போதே, குதிரையின் கால்களை ஓடுவதற்குத் தயார்படுத்தி வைத்துவிடுவார்கள். நல்ல ஜாக்கி, குதிரையை வழிநடத்துவதோடு அதன் வழியில் தானும் போக நினைப்பான். அசோக் தன் குதிரையின் கழுத்தில் முத்தமிட்டான், ‘நீ ஓடப்போற கடைசி ரேஸ் இது. உலகம் உன்னையும் என்னையும் மறந்துட்டாலும் இந்த ரேஸை யாரும் மறக்கக் கூடாது. எங்கே நம்பிக்கை இருக்கோ,அங்கேதான் எப்பவும் அற்புதங்கள் நடக்கும். நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையிலயும் இது அற்புதமான நாள்’ என அதன் வயிற்றில் தட்டிக்கொடுத்தவன், தன்னைச் சுற்றி இருந்த எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத் தொடங்கினான். முடிவுப்புள்ளி ஒரு நெருப்பு ஜுவாலை என அவனுக்குள் பிரதிபலிக்க, அதைக் கடந்துவிடும் நொடிக்காகப் பரபரத்தது மனம்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் ஆறு குதிரைகளும் தடுப்பை விலக்கிப் பாய்ந்து வந்தன. அசோக்கின் கைகள், குதிரையின் கழுத்து வார்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடி விலக்கின. தான் ஓடவில்லை மிதக்கிறோம் என்கிற உணர்வு குதிரைக்கு வரவேண்டும். அதன் மூர்க்கத்தைக் காலால் வயிற்றில் உதைத்து அதிகப்படுத்தினான். மூர்க்கம்கொண்டு வேகம் அதிகரிக்க, வார்களை இறுகப் பிடித்தான். அந்தக் கணமே அந்தக் குதிரையின் கால்கள் எண்ணிக்கையில் அதிகமாகிவிட்டதுபோல் இருந்தன. வரவர அவற்றின் எண்ணிக்கை மிகுந்துகொண்டே போயிற்று. முடிவில் கால்களே இல்லாதுபோய்விட்டன. இயக்கம் மட்டுமே எஞ்சி இருந்தது. இந்த இயக்கம் கால்களின் உதவியின்றி ஏதோ ஒரு வகையில் செய்யப்பட்டது. பூமியின் மேற்பரப்பில் இப்போது

தீ ஜுவாலையைப்போல் பறந்து சென்றது ப்ளூ மவுன்டெய்ன். கேலரியில் இருந்த எல்லோரும், தகிக்கும் நெருப்பு உருவம் ஒன்று ஓடி வருதைத்தான் பார்த்தார்கள்.

‘என் அன்பே, நீ மகத்தானவள். இந்த வெற்றியின் சந்தோஷம் உனக்கு என்றென்றைக்கும் நிலைத்திருக்கட்டும்’ என அவன் மனம் நினைத்துக்கொண்டிருந்த நொடியில் மூன்றாவது ட்ராக்கில் ஓடிவந்துகொண்டிருந்த குதிரை, லேசாக உடலைச் சிலுப்பியது. அந்தக் குதிரையின் ஜாக்கி மூர்க்கம்கொண்டு குதிரையை அடிக்க, பந்தயத்துக்குப் புதிதாகப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் அது சமாளிக்க முடியாமல் தலையைச் சிலுப்பியதில் முன்னால் ஓடிக்கொண்டிருந்த ப்ளூவின் பின்புறத்தை உரசித் தள்ளியது. எதிர்பாராத இந்த உரசலால் ப்ளூ லேசாகத் தடுமாறியதுடன் ஓடிக்கொண்டிருந்த ட்ராக்கில் இருந்து அதன் முன்னங்கால்கள் இடறி, அடுத்த ட்ராக்குக்குள் தடுமாறி விழுந்தன. முழுக்க வேகப்படுத்தியதில் கவனம் கொண்டிருந்த அசோக்கால், ப்ளூவின் தடுமாற்றத்தைக் கையாள முடியவில்லை. முன்னால் விழப்போகிறோம் என்ற அச்சத்தில் இரண்டு முறை குதிரை குதித்தது. முதல் முறை குதிரையின் உடலை இறுகப் பிடித்தபடி படுத்துக்கொண்டவன், அடுத்த முறை குதிக்கும்போது நிலைகுலைந்துபோனான். எவ்வளவு முயன்றும் தன் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் கயிறுகளை விட்டுவிட்டான். முன்னங்கால்கள் நிலத்தில் ஊன்ற முடியாமல் தடுமாறிக் கீழே விழுந்த குதிரை, அசோக்கை ட்ராக்குக்கு வெளியே தூக்கி எறிந்தது. அவனிடம் இருந்த அலறலுக்கு அப்பால், எந்தச் சலனமும் இல்லை; அசைவும் இல்லை. தான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்கிற நினைப்பில் கீழே விழுந்தும் குதிரை ஆவேசமாக கால்களை ஆட்டிக்கொண்டிருந்தது. தன் மேல் இருந்தவனைத் தேடும் பிரயாசையோடு தலையைச் சிலுப்பி எழ முயன்ற ப்ளூ, சுற்றிலும் திரும்பிப் பார்த்தது. அசோக், அடிபட்டு சுருண்டுகிடக்கும் புறாக்குஞ்சைப்போல் உடல் சுருங்கி அசைவற்றுக்கிடந்தான். அவனுடைய ட்ரெய்னர், ஆஷா, இன்னும் சிலரும் வேகமாக ஓடிவந்து அவனைத் தூக்கியபோது நினைவு தப்பிப்போயிருந்தது. பந்தயம் முடிந்து எல்லோரும் களைந்த பின்னும்கூட தன்னை ஒருவரும் வந்து கூட்டிச் செல்லாத ஏமாற்றத்தில் ப்ளூ, அசோக்கைத் தேடி மைதானத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

ஒருபோதும் குதிரையேற முடியாதவனாக மருத்துவமனையில் இருந்து திரும்பியவனை அதிகம் அச்சுறுத்தியது வீட்டின் வெறுமைதான். ரேஸ்கோர்ஸ் பக்கம் போகவே கூடாது எனச் சொல்லியிருந்தனர். தன் மார்பில் இருந்து ரத்தம் பொங்கி வழிந்ததைப் போன்ற வேதனை அவனுக்கு. முதலாளி இரண்டொரு முறை வந்து பார்த்துவிட்டுப் போனார். விசுவாசமான வேலைக்காரனை இழுந்துவிட்ட துயரம் அவரின் குரலில். ”அந்தக் குதிரையால எந்த அதிர்ஷ்டமும் இல்லடா. பத்து ரேஸ்ல ஜெயிச்சதை ஒரு நாள்ல அழிக்கவெச்சிடுச்சே! உயிருக்கு ஒண்ணுன்னா என்ன ஆகி இருக்கும்?’ அவரைப்போலவே குதிரையைப் பற்றி யார் சொன்னதற்கும் எந்தப் பதிலையும் அவன் சொல்ல விரும்பியதே இல்லை. தனித்துவிடப்பட்ட அவனுக்குள் குதிரைகள் சதா ஓடிக்கொண்டே இருந்ததை அவன் மட்டுமே அறிவான். முதுகு எலும்பிலும், கழுத்துக்குக் கீழுமாகப் பலத்த எலும்பு முறிவு என்பதால், உடல் சரியானாலும்கூட அவன் மீண்டும் ரேஸில் குதிரை ஏறக் கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை.

குதிரையைத் தவிர்த்து வேறு எதையும் யோசிக்க முடியாதவனாக, ஆள் இல்லாத நேரங்களில் குதிரையின் மீது உட்கார்ந்திருப்பதுபோல் கற்பனை செய்துகொண்டு ஜன்னலுக்கு வெளியில் இருக்கும் தெருவைப் பார்ப்பான். இரவுகளில் அவன் அறையில் இருந்து குதிரைகளின் கனைப்பொலியும், ரேஸில் ஓடும் சத்தமும் எதிரொலிப்பதாக ஆஷாவிடம் அம்மா குறைப்பட்டுக்கொண்டாள். அசோக்கின் கண்களை ஊடுருவி உண்மையை அறிந்துகொள்ள நினைத்த ஆஷாவுக்கு, அவன் கண்கள் குதிரையின் கண்களைப்போல் மாறிக்கொண்டு இருப்பதாகத் தோன்றியது. ”நைட்ல தூங்கு அசோக். நீ முழிச்சு உன்னை வருத்திக்கிறதோட பெரியவங்களும் வருந்தணுமா? ஹம்ம்ம்…’ – அவனை அணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள். அவன் சிரித்தான்.

‘அப்போ எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா? என்னோட பழைய ரேஸ் வீடியோஸ் என் ட்ரெய்னர்கிட்ட இருக்கும்… வாங்கித் தர்றியா?’ அவன் கண்களுக்குள் தேடியதன் விடையைத் தெரிந்துகொண்ட ஆஷா, இதை மறுப்பதன் மூலம் அவன் தன்னையே குதிரையாக மாற்றிக்கொள்ளும் சாத்தியம் இருப்பதால் வாங்கித் தரச் சம்மதித்தாள்.

இரவு-பகல் என, நேர வித்தியாசம் இன்றி தொலைக்காட்சியில் ரேஸ் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருந்தவன், பழையவெற்றிகளில் இருந்து தன் சந்தோஷங்களை மீட்டுக்கொண்டான். சேமித்துவைத்திருந்த பணமும் காதலும் ஆறுதலாக இருக்க, பயிற்சிகள் உணவுக்கட்டுப்பாடு எதுவும் இல்லாத சராசரி மனிதனாக வாழப் பழகினான். பல வருடங்களுக்குப் பின் 50 கிலோவைத் தாண்டிய உடல் எடை, முகத்தையும் உடலையும் கொஞ்சம் பூசினாற்போல் மாற்றியிருப்பது பார்க்க அவனுக்கே சிரிப்பு வந்தது. எல்லாவற்றுக்கும் பின்னால், இனி ஒருபோதும் திரும்பவும் பார்க்க வாய்ப்பே இல்லாத தன் குதிரையின் நினைவு மட்டும் என்ன செய்தும் அவனில் இருந்து அகல்வதாக இல்லை. அதை முத்தமிட்டு வழியனுப்பக்கூட முடியாத துரதிர்ஷ்டம்.

”யார் வாங்கினாங்கனு தெரியாதா ஆஷா?’

அவள் பதில் சொல்வதற்குப் பதிலாகக் கோபப்படவே செய்தாள். ‘தெரிஞ்சு என்ன செய்யப்போற? வருஷம் முழுக்க அந்தக் குதிரையோடதான் இருந்திருக்க. ஜெயிக்காட்டியும் உன்னைப் பத்திரமாத் தூக்கிட்டு ஓடியிருக்கலாம்ல! என்ன இருந்தாலும் அது மிருகம்தான் அசோக். அதுக்கு நம்மளோட எந்த உணர்ச்சிகளும் புரியாது. லீவ் இட்!’

‘புரியாமப் பேசாத ஆஷா. ரொம்பப் பதற்றத்துல இருந்ததால நான் செஞ்ச தப்பு அது. அதுக்கு குதிரை என்ன செய்யும்? என்னோட எல்லா உணர்ச்சிகளையும் அதுக்குப் புரியும் ஆஷா. கடைசியா நான் கழுத்துல முத்தம் கொடுத்தப்போ சின்னதா சிலுத்துக்கிட்டு ஒருதடவை தலையை ஆட்டுச்சே… அது அன்பு இல்லாம வேற என்ன?’

குதிரையின் அந்தக் கடைசித் தலையாட்டல் இன்னும் அவன் நினைவில் இருந்தது.

”என்னவோ போ..! பட், இனிமே நமக்கு ரேஸ் வேணாம்; குதிரை வேணாம்; ஒண்ணும் வேணாம்’ – ஆஷாவின் கண்களில், அவன் பார்த்த அச்சத்தை தன் வீட்டில் எல்லோரிடமும் பார்த்தான். தன் மீது அவர்கள் கொண்டிருக்கும் கரிசனமும் அன்பும் வாஸ்தவம்தான். ஆனால், குதிரைகளைத் தவிர எதுவுமே தெரியாத ஒருவன், இனி என்ன செய்ய இயலும்? வீட்டைச் சுற்றி வாக்கிங் போகும் சதைப்பிண்டமாகத் தன்னைப் பார்க்க அவனுக்கு விருப்பம் இல்லை. மனித உடலின் ஆற்றல்கள், என்றுமே வற்றுவது இல்லை; சில சமயங்களில் தடுக்க முடியாதவையாக தோன்றும் நோய்களைக்கூட நெருங்கவிடாமல் செய்யும் வலிமை வாய்ந்தவை. அந்த ஆற்றலை, தான் வீணாக்கிவிடக் கூடாது என உறுதியாக இருந்தான்.

கொஞ்சம் எழுந்து நடக்க முடிந்த பின்பு, பழைய முதலாளியிடமே மீண்டும் போய் நின்றான். ‘நான் கொஞ்ச நாள் ட்ரெய்னரா இருக்கேன் சார். சம்பளம்… நீங்க பாத்துக் குடுங்க. ரேஸை விட்டா எனக்கு என்ன தெரியும்?’ என்ற அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், இப்போது அவன் இருக்கும் உடல் நிலையில் எங்ஙனம் குதிரையையும் ஜாக்கியையும் அவனால் ட்ரெய்ன் பண்ண முடியும் எனச் சங்கடப்பட்டார். அவனை கைவிடும் எண்ணம் இல்லை அவருக்கு. ”ஒண்ணு பண்ணலாம் அசோக். புதுசா கொஞ்சம் குதிரைங்க வாங்கியிருக்கேன். கொஞ்ச நாளைக்கு அதுங்க எல்லாத்தையும் ட்ரெய்ன் பண்ணு. உனக்கு உடம்பு இன்னும் கொஞ்சம் செட் ஆனதும் நம்மகிட்ட இருக்கும் ஜாக்கிகளையும் சேர்த்து ட்ரெய்ன் பண்ணலாம்’ என உற்சாகமாகச் சொன்னார்.

அசோக், அதற்கு சந்தோஷமாக சம்மதம் தெரிவித்தான். தனக்கும் குதிரைகளுக்குமான உறவு, அத்தனை எளிதல் முடியக்கூடியது அல்ல. குதிரையின் ரோம வாசனையும், தும்மும் சத்தமும் அவனைச் சுற்றி நிறைந்து வர, புதிய குதிரைகளின் மீதான ஆர்வம் அவனுக்குள் பரிபூர்ணமாக நிரம்பியது.

சரியாக, 180 நாட்களுக்குப் பின் பழைய மனிதனாக முதலாளியின் பண்ணைக்கு ஜீப்பில் வந்து சேர்ந்தான். அவனோடு இன்னும் இரண்டு பேர் அந்தப் பண்ணையில் இருந்தாலும் அசோக் மீது இருந்த மரியாதை காரணமாக அவர்கள் இவனை எந்த வேலையையும் செய்யவிடுவது இல்லை.

”என்ன செய்யணும்னு நீங்க சொல்லுங்க தம்பி… நாங்க பாத்துக்குறோம்’ என்று சொன்னவர்களுக்கு நன்றி சொன்னவன், குதிரைகளைப் பார்க்கப் போனான். எல்லாமே திருத்தமானவை. பந்தயத்துக்கு என்றே வளர்க்கப்பட்ட திமிர் அவற்றின் உடலெங்கும் பொங்கி ஒளி வீசியது. புதிய குதிரைகளோடு தொடங்கிய அந்த நாள், அவனைப் புது மனிதனாக மாற்றியிருந்தது. ப்ளூவின் நிறத்தில் அதைப்போலவே ஒரு குதிரை இந்தக் கூட்டத்திலும் இருந்தது. அன்று குதிரைகளைக் குளிக்கக் கூட்டிச் சென்ற நேரத்தில் இளமையான அதன் உருவம் நீரின் விளிம்பில் அசைவற்று நின்றிருப்பதை சந்தோஷமாகப் பார்த்தான். சோப்பைக் கடிப்பதற்காக வரும் சிறிய மீன்களுக்கு மத்தியில், ஆற்றின் மணல் நிறைந்த அடிப்பரப்பில் பிரதிபலிக்கும் குதிரையின் பிம்பத்தையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு, ஒருவேளை இது ‘ப்ளூ’வின் ஆன்மாவாகக்கூட இருக்கலாம் எனத் தோன்றியது.

குதிரைகள் பந்தயத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்த நாட்களில் அவன் ஆன்மா மட்டும் மைதானத்தையே சுற்றிக்கொண்டிருந்தது. அந்த மைதானத்தை விட்டு எங்கு செல்ல முடியும் அவனால்? பந்தயத்துக்காக மட்டுமே மைதானத்துக்குப் போனவனுக்கு வெறுமனே போய் நின்று வேடிக்கை பார்க்க விருப்பம் இல்லை. தான் பராமரிக்கும் குதிரைகளை சிரத்தையோடு பார்த்துக்கொண்டான். ஆஷாவுக்கு ஒதுக்கிய நேரங்களைவிடவும் அதிகமான நேரம் அவன் பண்ணையில் ஒதுக்கியதில் முதல் சில நாட்கள் அவளுக்கு வருத்தம்தான். பின்பு அவளுமே பழகிவிட்டாள். தன்னை முத்தமிட வரும்போது ‘குதிரைக்காரா… உன் மேல ஒரே குதிரை வாசனை. என் பக்கத்துல வராத.நீ மனுஷனா… குதிரையானு சந்தேகமா இருக்கு” என விளையாட்டாக மல்லுக்கட்டுவாள்.

இன்னொரு முறை அவன் ரேஸ் கோர்ஸுக்குள் இறங்கி நின்ற நாளில், அவன் பராமரித்த குதிரை தனது முதல் வெற்றியின் மூலம் மீண்டும் எல்லோரையும் இவன் பெயரை உச்சரிக்கவைத்தது. யாரோ ஒருவரின் வெற்றியில்கூட தன் உழைப்பும் இருக்க முடியும் என்ற நிறைவு அவனுக்கு. புதிய எதிர்காலத்தின் மீதான அவனின் கள்ளம்கபடமற்ற ஆர்வத்துக்குக் கிடைத்த வெற்றி. அந்த நாளைக் கொண்டாடினான். ஆஷா அவனுக்கு விருப்பமான ஸ்காட்ச் வாங்கிக் கொடுத்தாள். முன்பெல்லாம் உணவுக்கட்டுப்பாடு கருதி மிகக் குறைவாகக் குடித்தவன், இப்போது தனது ஆவி குளிரக் குடிக்கிறான். மூன்றாவது ரவுண்டு விஸ்கியைக் குடித்த பின், தவிர்க்க முடியாமல் அவனுக்குள் ப்ளூவின் நினைவு வந்தது. குடிக்கிற நாளில் எல்லாம் அதன் நினைவு வரத் தவறுவது இல்லை. தான் இல்லாத வெறுமையை எங்ஙனம் அந்த ஜீவன் கடந்திருக்கும்? தனது வெற்றிகள், சந்தோஷங்கள், வலி, தனிமை எல்லாவற்றையும் கேட்க ஆஷா இருக்கிறாள். மனிதர்களால் தனது வாழ்க்கையைப் பற்றி எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க முடியாது. அந்தக் குதிரை யாரிடம் சொல்லும்?

சில மாதங்கள் போனது. முதலாளிக்கு இப்போது எல்லாமும் அவன்தான். குதிரைகள், ஜாக்கிகள், குதிரைகளின் மீது கட்டப்படும் பெட்டிங்… என எல்லாவற்றையும் அவர் இடத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தான். ரேஸ்கோர்ஸில் சரிபாதி ஆட்கள் இவனை ‘சின்ன முதலாளி’ என்றுதான் அழைத்தனர். பெங்களூரில் அதிகமான ரேஸ்களில் வென்ற ஒரு ஜாக்கியை, தனக்காகப் பேசி அழைத்துவரும்படி முதலாளி அவனை அனுப்பி வைத்தார். நீண்ட நாட்களுக்குப் பின் செல்லும் வெளியூர் பயணம் என்பதால், ஆஷாவுடன் கிளம்பிப் போனான். ரேஸுக்காக எத்தனையோ தடவை வந்த இந்த ஊருக்கு இப்போது சாதாரணமாக வந்திருப்பதில் சின்னதொரு வருத்தம் அவனுக்கு.அறையில் இருக்கப் பிடிக்காமல் ஆஷாவுடன் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றுக்குப் போனான். வாழ்க்கையில் அவன் பார்க்கும் முதல் சர்க்கஸ் நிகழ்ச்சி. அவனே இப்போது ஒரு செப்படி வித்தைக்காரன்தான். சில வித்தைகள் முடிந்து திடீரென ஒரு குதிரை மையமாக வந்து நிற்க, அவனுக்கு அந்தக் குதிரையை எங்கோ பார்த்திருக்கிறோமே எனப் பொறி தட்டியது. அது ப்ளூ மவுன்டெய்ன் என்பதைக் கண்டுகொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. அடர்த்தியான பிடரி மயிர்கள் கத்தரிக்கப்பட்டு நன்றாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. முன்னிலும் கொஞ்சம் பருத்து இருந்தது. ஓடுவதற்கான அவசியம் இல்லாதுபோனதால் ஏற்பட்ட பெருக்கமாக இருக்கலாம். ஆனாலும் இப்போது அதற்கு இருந்த லட்சணம் வேறு எந்தக் குதிரையிடமும் காண முடியாதது. அது வால்ட்ஸ் நடனம் ஆடியபோது அதன் பருத்த உடலின் அங்கங்கள், கால்கள், காதுகள், முகம், முதுகு என அனைத்து பாகங்களும் அதற்குக் கீழ்ப்படிந்தன. அதற்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ, ஏதேனும் குழப்பம் ஏற்பட்டுவிடுமோ என ஓயாமல் பயந்துகொண்டிருந்தான். ஒன்றும் நேரவில்லை. தன் குதிரையை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சியடைவதா வருத்தம் அடைவதா என்றே அவனுக்குத் தெரியவில்லை. கடைசியில் மகிழ்ச்சியடைந்தவன்போல் காட்டிக்கொண்டதன் மூலம் தனது வருத்தத்தை அவனால் மறைத்துக்கொள்ள முடிந்தது. அது நடனம் ஆடி முடிக்க, மக்கள் கைதட்டிப் பாராட்டினார்கள். அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க அது மறுபடி நடனம் ஆடிக் காட்டியது. பிறகு, அரங்கின் நடுவில் நின்று நாலாபுறங்களிலும் திரும்பி, பார்வையாளர்களுக்கு வணக்கம் வைத்தது. மக்கள், மறுபடியும் உற்சாகமாகக் கைதட்டினார்கள். மீண்டும் ஆடுமாறு கோரினர். ஆனால், அது மேலும் நடனமாட விரும்பவில்லை. இசைக் குழுவுக்கு, தலை வணங்கிற்று. இசைக் குழுவினர், அதற்கு பதில் வணக்கம் தெரிவித்தனர். இயக்குநன், அரங்கைவிட்டுப் போகும்படி அதற்குத் தலை அசைப்பால் சைகை செய்தான். பின்பு, புன்னகையுடன் அதன் பின்னால் நடந்தான். அசோக் சத்தமாக அதைக் கூப்பிட முயன்றான். மக்களின் ஆரவாரத்துக்கு இடையில் அதற்குக் கேட்க வாய்ப்பும் இல்லை. ‘ப்ளூ’ அவன் குரல் சின்னப் பிசிறாகக் கேட்டிருக்கலாம். சில நொடிகள் அது அவனைத் திரும்பிப் பார்த்தது. அவனைப் பார்த்த அந்த சில நொடிகள், பழைய ப்ளூவாக அதன் காபி நிறக் கண்கள் பரவசத்தோடு ஒளிர்ந்தன. அவனைப் பார்த்து சில முறை உடலைச் சிலுப்பி முன்னும் பின்னுமாகக் குலுக்கியது.

அசோக் உற்சாகத்தில் கைதட்டி சந்தோஷமாக அதைப் பார்த்துக் கத்தினான். தன் கட்டளையை மீறிவிட்ட குதிரையை, ‘உள்ளே போ’ எனப் பயிற்சியாளன் கடுமையாகக் கத்தினான். சிதைந்த அசோக்கின் பிம்பத்தை தன் நினைவுக்குள் இருந்து எறிந்துவிட்டு, தான் பார்த்த புதிய மனிதனின் பிம்பத்தைச் சேகரித்துக்கொண்டு ப்ளூ தன் பாதையில் திரும்பி நடந்தது. அவனுக்கு முன்பாகவும் பின்பாகவும் நிறையப் பேர் அதைப் பராமரித்திருப்பார்கள். எப்படி எல்லோருக்கும் அது உரிமை ஆகிவிட முடியும்? தன் புதிய எஜமானனின் கட்டளைக்குக் கொஞ்சமும் பிசிறு இல்லாமல் கீழ்ப்பணிந்து நடந்த அதன் அழகை இப்போதும் வியந்து பார்த்துக்கொண்டிருந்தான். ‘இன்னொரு முறை கூப்பிடலாமா..?’ என யோசித்து அந்த முயற்சியைக் கைவிட்டவன், ஆஷாவோடு அங்கிருந்து வேகவேகமாக வெளியேறினான்!

– டிசம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *