கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 5,410 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூர்த்தி ஐயர்:-

என்னுடைய பெயர் மூர்த்தி ஐயர். எல்லோரும் என்னை மூர்த்தி என்றுதான் கூப்பிடுவார்கள். பள்ளிக் கூடத்திலை மாத்திரம் முழுப்பெயர் சொல்லிக் கூப்பிடுவினம். எங்களுடைய வகுப்பில் பரமகுருதான் அடிக்கடி சோதனையில் முதலாம் பிள்ளையாய் வருவான்; ஏனென்று எனக்குத் தெரியும். பரமகுருவினுடைய அப்பாதான் எங்களுடைய வகுப்பு வாத்தியார். அவர் தன்னுடைய மகனுக்கு நிறைய ‘மாக்ஸ்’ போடுகிறவர்.

பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலை இருக்கிற பிள்ளையார் கோயிலில் என்னுடைய அப்பா குருக்களாக இருக்கிறார். வாத்தியார் அடிக்கடி கோயில் கும்பிட வாறவர். பூசை முடிஞ்ச பிறகு அப்பாவும் வாத்தியாரும் கதைச்சுக் கொண்டிருப்பினம். சில நேரத்திலை வாத்தியார் என்னைப்பற்றி அப்பாவிடம் கோள் மூட்டிக் கொடுப்பார். ‘படிப்பிலை கவனமில்லை, விளையாட்டுப் புத்தி’ எண்டு சொல்லுவார். பள்ளிக் கூடத்திலை ஏதும் குழப்படி செய்தால் அதையும் அப்பாவிடம் சொல்லிப்போடுவார். அப்பா வாத்தியாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு என்னை ஏசுவார். அப்பாவும், வாத்தியாரும் கதைக்கிறதைக் கண்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும்.

எங்களுடைய வகுப்பிலை கடைசி வாங்கிலைதான் வழக்கமாக முத்து இருப்பான். அவனைக் கடைசி வாங்கிலை இருக்கச் சொல்லி வாத்தியார்தான் சொன்னார். முத்துவும் படிப்பில் வலு கெட்டிக்காரன், ஒவ்வொரு தவணையும் சோதனையில் என்னை முந்திவிடுவான்.

கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூட்டுப் பிரார்த்தனை நடக்கும். பள்ளிக்கூடப் பிள்ளைகள் எல்லோரும் கட்டாயம் கூட்டுப்பிரார்த்தனைக்கு வரவேண்டுமென வாத்தியார் சொல்லுவார். அதனால் நாங்கள் எல்லோரும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் கோயிலுக்குப் போவோம்.

முத்து கோயிலுக்குள்ளே வருவதில்லை. வெளியே நிண்டுதான் கூட்டுப்பிரார்த்தனை செய்வான். தான் சொல்லுவது எங்களுக்கும் வாத்தியாருக்கும் கேட்க வேண்டு மென்பதற்காக அவன் பலமாகக் கத்தி, கூட்டுப்பிரார்த்தனை செய்யிறதைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.

என்னுடைய அண்ணன் கொழும்பில் வேலை செய்கிறார். அண்ணனும் முந்தி நான் படிக்கிற தமிழ்ப்பள்ளிக்கூடத்திலைதான் படிச்சவர். பிறகு யாழ்ப்பாணத்திலை பெரிய பள்ளிக்கூடத்திலை சேர்ந்து படிச்சார். அண்ணன் பள்ளிக்கூடம் போகிற காலத்திலை குடுமி வைச் சிருந்தவர். அண்ணனுக்கு குடுமி முடியத்தெரியாது, அம்மாதான் அவருக்குத் தலைவாரி, குடுமி முடிஞ்சு விடுகிறவ. அண்ணன் அப்போது காதில் கடுக்கனும் போட்டிருந்தார். பள்ளிக்கூடம் போகும் போது சந்தனப் பொட்டுப் போட்டுக்கொண்டுதான் போவார்.

தன்னைப்போன்று அண்ணனையும் பெரிய குருக்களாக்கி விட வேண்டுமென்றுதான் அப்பா விரும்பினார். அதனாலேதான் அண்ணன் பள்ளிக்கூடத்திலை படிக்கிற காலத்திலேயே வீட்டில் சமஸ்கிருதமும் படிச்சார். கோயில் வேலைகளும் பழகினார். ஆனால் அப்பாவுடைய விருப்பம் நிறைவேறவில்லை. அண்ணனுக்கு அரசாங்கத்தில் வேலை கிடைத்தது. அண்ணன் குடுமியை வெட்டிவிட்டுச் சிலுப்பாத் தலையோடு வேலைக்குப் போய்விட்டார்.

அண்ணன் வேலைக்குப் போனது அப்பாவுக்குக் கொஞ்சங்கூட விருப்பமில்லை. ஆனால் அம்மாவுக்கு அண்ணன் வேலை பார்க் கிறதைப்பற்றி நல்ல சந்தோஷம்.

அண்ணன் குடுமியோடை இருந்தபோது இருந்த வடிவும் முகவெட்டும் இப்ப இல்லையெண்டு அம்மா சில வேளை சொல்லுவா. அதைக்கேட்க எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

அண்ணன் படிக்கிற காலத்திலை குடுமி வைச்சிருந்ததைப் போல் நான் குடுமி வைச்சிருக்கவில்லை. கடுக்கனும் போடுறதில்லை. பள்ளிக்கூடம் போறபோது சந்தனப் பொட்டு மாத்திரம் போடுவன். ஏனென்றால் பொட்டுப் போடாவிட்டால் அப்பா ஏசுவார்.

போன வெள்ளிக்கிழமை எங்களுடைய கோயிலில் பிரசங்கியார் வந்து கண்ணப்பநாயனாரைப்பற்றி பிரசங்கம் செய்தார். எல்லோரும் பிரசங்கத்தைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

“……… அறிவு, அருள், அடக்கம், தவம், சிவபக்தி எல்லாம் நிறைந்தொரு வடிவம் எடுத்தாற்போன்ற சிவகோசரியார் என்ற பிராமணர், சைவாகம விதிப்படி அருச்சித்த சிவலிங்கப் பெருமானுக்கு வேடுவத் தலைவனாகிய திண்ணன், தான் சுவைத்து உருசிபார்த்த இறைச்சிகளை நெய்வேத்தியமாகப் படைத்தான்…….”

இதைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு மனசிலே அருவருப்பு ஏற்பட்டது. நான் ஒரு வேடனுடைய தோற்றத்தை நினைத்துப் பார்த்தேன். கறுத்த உருவமும் பரட்டைத் தலையும் தாடி மீசையும் பெரிய பற்களுமாகக் கோவணத்துடன்…. சீ எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது.

அன்றிரவு படுக்கையில் படுத்திருந்தபொழுது அப்பாவுடைய தோற்றமும் ஒரு வேடனுடைய தோற்றமும் என் நினைவிலே மாறி மாறி வந்துகொண்டேயிருந்தன. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தேன். பூசை செய்வதற்குப் பக்திதான் மிகவும் முக்கியம்; வேறு எதுவும் முக்கியமில்லை என்பது இப்ப எனக்கு நன்றாக விளங்குகிறது.

‘கோயிலுக்குப் பூசை செய்வதில் இருக்கிற மதிப்பு எந்தத் தொழிலிலுமில்லை’ என்று அப்பா அடிக்கடி சொல்லுவார்.

அப்பா காலையில் எழுந்தவுடன் குளித்து, சந்தியாவந்தனம் செய்து, சிவபூசை பண்ணியபிறகுதான் சாப்பிடுவார். அவருடைய எண்ணம் முழுவதும் கோயிலைப்பற்றியும், கடவுளைப்பற்றியுந்தான் இருக்கும். அப்படி இருக்கிறவருக்கு அவருடைய தொழில் பெரிதாகத்தான் இருக்கும்.

“முந்தின காலத்திலை எங்களுடைய ஆக்கள் எல்லோரும் அப்பாவைப் போலத்தான் இருந்தார்கள். இந்தக்காலத்துச் சூழ்நிலையில் ஆசாரத்தோடும் கட்டுப்பாட்டோடும் இருக்கிறது மிகவும் கஷ்டம். காலம் மாறிப்போச்சுது.”என்று அம்மா அடிக்கடி சொல்லுவா. அம்மா சொல்லுறது சரிபோலத்தான் எனக்குத் தெரிகிறது.

முத்து:-

அப்பு காலமையும் பின்னேரத்திலையும் கள்ளு இறக்கப் போறவர். வாத்தியார் வீட்டுப் பனையளிலைதான் அப்பு கள்ளு இறக்கிறவர். எங்களுக்கும் குடியிருக்கிறதுக்கு வாத்தியார்தான் காணி தந்திருக்கிறார். வாத்தியார் வீட்டுக்குப் பின்னாலை இருக்கிற பெரிய காணியிலைதான் நாங்கள் குடியிருக்கிறம். வாத்தியாருக்கு நிறையக் காணியள் இருக்கு

வாத்தியாரை அப்பு ‘கமக்காறன்’ என்று மரியாதையோடு கூப்பிடுவார். நான் எப்பவும் வாத்தியார் என்று தான் கூப்பிடுறனான்

வாத்தியாரைக் கண்டால் அப்புவுக்குச் சரியான பயம். தலையில் கட்டியிருக்கும் துண்டை அவிழ்த்து கக்கத்துக்குள் வைத்து குழைந்துகொண்டுதான் வாத்தியாருடன் அவர் கதைப்பார். வாத்தியார் எதைச் சொன்னாலும் அப்பு அதைத் தட்டாமல் உடனே செய்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.

வாத்தியாருடைய வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தில் வாத்தியார் கமஞ்செய்கிறார். நிலத்தைக் கொத்திறது, வரம்பு கட்டுறது, கன்று நடுகிறது, இறைக்கிறது எல்லாம் அப்புதான் செய்யிறவர். வாத்தியார் மேற் பார்வை மட்டும் பார்ப்பார்.

வாத்தியாருடைய தோட்டத்திலை வேலை செய்து முடிஞ் சதுந்தான் அப்பு எங்கடை தோட்டத்திலை வேலை செய்வார்.

அப்பு வியர்வை வழிய வழிய வாத்தியாற்றை தோட்டத்திலை நின்று வேலை செய்யிறதைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் பின்னேரத்திலை வாத்தியாருக்கென்று அப்பு இரண்டு போத்தல் கள்ளு எடுத்துக் கொண்டுபோய் அவருடைய வீட்டிலை கொடுத்துவிட்டு வருவார். வெள்ளிக்கிழமையிலை மாத்திரம் வாத்தியார் கள்ளுக் குடிக்கமாட்டார். கோயிலுக்குப் போவார். வாத்தியாருக்கு அப்பு கலப்பில்லாத கள்ளுத்தான் கொடுப்பார்.

சில நாட்களில், அப்புவுக்கு நேரமில்லாவிட்டால் நான் தான் வாத்தியார் வீட்டுக்குக் கள்ளு எடுத்துக் கொண்டு போறனான்.

மதுபானம் அருந்தக்கூடாதென்று பாடப்புத்தகத்திலை எழுதியிருக்கு. ஒருநாள் வாத்தியார் அந்தப் பாடத்தை எங்களுக்குச் சொல்லித் தந்தார்.

அதுக்குப்பிறகு ஒருநாளும் நான் வாத்தியார் வீட்டுக்குக் கள்ளு எடுத்துக்கொண்டு போறதில்லை. மதுபானம் அருந்தக்கூடாதென்று படிப்பித்த வாத்தியாருக்கு நானே எப்படி மதுபானம் கொண்டுபோய்க் கொடுக்கிறது? எனக்குப் பயமாக இருக்கும்.

போன கிழமை கோயிலில் நடந்த பிரசங்கத்தை நானும் கவனமாகக் கேட்டன். கண்ணப்பநாயனாரின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, என்னுடைய உடம்பில் ஏதோ ஒரு புது வேகம் உண்டாகிறதைப் போல இருந்தது.

“…….. சிவலிங்கப் பெருமானின் வலக்கண்ணிலே இரத்தம் வடிந்தபோது பதைபதைத்து ஆவிசோர்ந்து தனது கண்ணைத் தோண்டி சுவாமியின் கண்ணிலே அப்பினான் வேடுவர் தலைவனாகிய திண்ணன். அப்போது சுவாமியின் இடக்கண்ணிலிருந்து இரத்தம் வடியத் தொடங்கியது.

சிவலிங்கப் பெருமானை மோந்து, முத்தமிட்டு, வாயிலே கொண்டுவந்த திருமஞ்சன நீரைத் தனது மனசிலுள்ள அன்பை உமிழ்வதுபோலத் திருமுடியின் மேல் உமிழ்ந்து, தனது தலையிலிருந்த பூக்களைச் சாத்தி வழிபட்ட திண்ணனார், இப்போது சுவாமியினுடைய கண்ணிலே அடையாளமாகச் செருப்பை வைத்துக்கொண்டு தனது மறுகண்ணையும் தோண்டுவதற்காக அம்பை வைத்தார்.

தயாநிதியாகிய எம்பிரான் ‘நில்லு கண்ணப்பா, நில்லு கண் ணப்பா,’எனத் திருவாய்மலர்ந்து கண்ணைத் தோண்டும் கையைத் தனது திருக்கரத்தினாலே தடுத்தார்.”

எனக்கு உடம்பு புல்லரித்தது. கண்ணப்பநாயனாரைப் போல நானும் கடவுளைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டுத் தழுவிக் கும்பிட வேண்டும் போல ஒரு வெறி எனக்கு ஏற்பட்டது. நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். எனக்கு ஏனோ அழுகை வந்தது. விம்மி விம்மி அழுதுகொண்டு கடவுளைக் கும்பிட்டேன்.

எங்களுடைய வகுப்பிலை படிக்கிற மூர்த்தி ஐயர் நான் அழுகிறதைப் பார்த்துவிட்டு, என்னை அழவேண்டாமென்று சொன்னார். அவருக்கு என்னிடத்திலை நல்ல விருப்பம். ஒருத்த ருக்கும் தெரியாமல் மடப்பள்ளியிலிருந்து நிறையக் கடலையும் வாழைப்பழமும் எடுத்துக் கொண்டுவந்து எனக்குத் தந்தார்.

போன தவணைச் சோதனையில் நான் பரமகுருவை முந்தி விட்டன். நான்தான் வகுப்பிலை முதலாம் பிள்ளை.

பரமகுருவுக்குப் தமிழ்ப்பாடத்திலை ‘மாக்ஸ்’ குறைஞ்சு போச்சுது. ‘சாதி யிரண்டொழிய வேறில்லை’ என்ற பாட்டு எழுதச்சொல்லிக் கேள்வி வந்தது. அந்தப் பாட்டு பரமகுருவுக்குப் பாடமில்லை. எனக்கு நல்ல கரைஞ்ச பாடம்.

நான் வகுப்பிலை முதலாம்பிள்ளையாய் வந்தபோது அப்பு நல்ல சந்தோஷப்பட்டார். அப்பு படிக்கிறகாலத்திலை எங்கடை ஆட்கள் ஒருத்தரும் பெரிய உத்தியோகங்களுக்குப் படிக்கிற தில்லையாம். இப்ப காலம் மாறிப் போச்சுது.

எங்களுடைய ஆட்கள் பலபேர் படிச்சு உத்தியோகம் பார்க்கினம். அப்பு என்னை எப்படியும் கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிறனெண்டு சொல்லியிருக்கிறார். நானும் கவனமாகப் படிச்சு உத்தியோகம் பார்க்கத்தான் போறன். பிறகு எங்களுக்கு ஒரு கஷ்டமும் இருக்காது நாங்களும் மற்றவையளைப்போல நல்லா இருக்கலாம்.

பரமகுரு:-

நானும் முத்துவும் எங்களுடைய வளவிலிருக்கும் தோட்டத்தில் சேர்ந்து விளையாடுவோம். நான் முத்துவோடு விளையாடுவதை அப்பா கண்டால் எனக்கு நல்ல அடிதான் கிடைக்கும். அதனால் அப்பா எங்காவது வெளியிலை போன நேரத்திலைதான் நாங்கள் இரண்டுபேரும் சேர்ந்து விளையாடுவோம்.

முத்து இந்தத் தவணைச் சோதனையில் என்னை முந்தி விட்டான். அதைப்பற்றி எனக்குப் பொறாமையில்லை. அவன் படிச்சு பெரியவனாகியதும் கொழும்புக்குப்போய் மூர்த்தி ஐயரின் தமையனைப்போலத் தானும் உத்தியோகம் பார்ப்பானாம்.

முத்துவினுடைய தகப்பன் எங்களுடைய தோட்டத்திலை கஷ்டப்பட்டு வேலை செய்யிறதைப் பார்க்க எனக்குப் பாவமாக இருக்கும். அவையளுக்குக் காணியில்லாத படியாலைதான் எங்களுடைய நிலத்திலை கஷ்டப்படுகினம். இப்ப அவையளுக்குக் காணியில்லாவிட்டால் என்ன? நான் வளர்ந்து பெரியவனாகியதும் எங்களுக்கு இருக்கிற காணிகளில் ஒன்றை முத்துவுக்குச் சொந்தமாகக் கொடுத்துவிடுவன்.

எனக்கு ஒரேயொரு அண்ணன் மட்டுந்தான் இருக்கிறார். அவர் யாழ்ப்பாணத்திலைதான் வேலைசெய்கிறார். அவர்மேலை எனக்கு நல்ல விருப்பம். அண்ணன் எங்களுடைய வீட்டுக்கு வருவதில்லை. அப்பாதான் அவரை வரவேண்டாமென்று சொன்னவர். அண்ணனுக்கு நிறையச் சீதனம் வாங்கி கலியாணம் செய்துவைக்க வேண்டுமென்று அப்பா விரும்பினார். அண்ணர் தனக்கு விருப்பமான ஒரு பெம்பிளையைக் கலியாணம் செய்யவேண்டுமென்று பிடிவாதமாக இருந்தார். அந்தப் பெம்பிளைபகுதி வேதக்காறராம். அவவும் அண்ண ரோடைதான் வேலை செய்கிறவவாம். கடைசியில் அண்ணர் தன்னுடைய விருப்பப்படிதான் கலியாணஞ் செய்தார்.

கலியாணம் முடிஞ்சவுடனை அண்ணர் பெம்பிளையையும் கூட்டிக்கொண்டு வந்தார். அப்பா, ‘இனிமேல் வீட்டுவாசல் மிதிக்கக் கூடாதெ’ன்று அண்ணரை ஏசிக் கலைச்சுப்போட்டார். இது நடந்து ஒரு வருஷத்துக்குப் பிறகு அண்ணருக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிறந்தது. அதைக் கேள்விப்பட்டவுடனை, அம்மா தான் போய்ப் பார்க்கவேணுமென்று அப்பாவிடம் பயந்து பயந்து கேட்டா. அப்பா தடுக்கவில்லை. அம்மாமட்டும் போய் அண்ணரையும், மச்சாளையும், பிள்ளையையும் பார்த்து விட்டு வந்து புதினங்களைச் சொன்னா. அப்பா ஆசையோடு அதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்பாவுக்கும் அந்தப் பிள்ளையைப் போய்ப் பார்க்க ஆசைதான். ஆனால் அவர் அதை வெளிக்காட்டுகிறாரில்லை. அவருடைய பெருமை அவரை விடுகுதில்லை.

போன வெள்ளிக்கிழமை நான் அப்பாவோடை கோயிலுக்குப் போயிருந்தன். மூர்த்தி ஐயருடைய தகப்பன்தான் வழக்கமாகக் கோயிலில் பூசை செய்யிறவர். அன்றைக்கு அவர் கோயிலுக்கு வரவில்லை. அவருக்கு ஏதோ சுகமில்லையாம். கொழும்பிலை உத்தியோகம் பார்க்கிற குருக்களுடைய மூத்த மகன்தான் அன்றைக்குப் பூசை செய்தவர். தகப்பனுக்குச் சுகமில்லாதபடியால் அவர் லீவு எடுத்து வந்தவராம். பெரிய குருக்களைப்போல இவர் குடுமி வைச்சிருக்க வில்லை. பெரிய குருக்களைப்போல இவர் கோயிலுக்கு நடந்து வரவில்லை; சைக்கிளிலைதான் வந்தவர். பூசை முடிஞ்சதும் எல்லோருடனும் சேர்ந்து நானும் அன்று நடந்த பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தன்.

“…….புலால் உண்பவர்கள் புலையர்கள். சிவலிங்கப் பெருமானுடைய சந்நிதியில் வெந்த இறைச்சியும், எலும்பும் கிடக்கக்கண்ட சிவகோசரியார் வேட்டுவப் புலையர்கள்தான் இந்த அநுசிதத்தைச் செய்தார்கள் போலும், இதற்குத் தேவரீர் திருவுளம் இசைந்தீரோ? என மனம் வெதும்பினார்.

…….. வேட்டுவப் புலையரெனத் தான் திட்டிய திண்ணனாரைச் சிவலிங்கப் பெருமான் ‘கண்ணப்பா’ என்று அழைத்ததோடு, தன் வலப்பக்கத்தில் நிற்கும்படி திருவாய் மலர்ந்தபோது சிவகோசரியார் மெய்தானரும்பி விதிர்விதிர்த்துச் சிவலிங்கப் பெருமானை வணங்கி நின்றார்.”

மறுநாள் எங்கடையூர் வயிரவர் கோயிலில் வேள்வி நடந்தது. எங்களுடைய வீட்டிலும் இறைச்சி வாங்கினார்கள். அப்பாவுக்கு ஆட்டிறைச்சி என்றால் நல்ல விருப்பம். எனக்கும் விருப்பந்தான். சாப்பிடும்போது அம்மா எங்கள் இருவருக்கும் நிறைய இறைச்சி போட்டா.

முதன் நாள் கோயிலில் கேட்ட பிரசங்கம் என் நினைவுக்கு வந்தது.

“நாங்கள் இறைச்சி தின்னிறம், அப்படியானால் நாங்களும் புலையர்களோ?” என்று அப்பாவிடம் கேட்டன்.

அதைக் கேட்டதும் அம்மா சிரித்தா. அப்பா கொஞ்சநேரம் பேசவில்லை; ஏதோ யோசித்தார். அவருக்கு நான் கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை.

“முந்தின காலத்தில் புலையர்கள்தான் இறைச்சி சாப்பிடு வார்கள்; வேளாளர் சாப்பிடுவதில்லை. அதனாலைதான் வேளாளரைச் சைவ வேளாளர் என்று சொல்லுவார்கள். இப்ப காலம் மாறிப்போச்சு. இந்தக் காலத்திலை பலபேர் மாமிசம் சாப்பிடுகிறார்கள். அதனால் மாமிசம் புசிப்பது பிழையென்று யாரும் நினைப்பதில்லை” என்று அப்பா சொன்னார்.

நான் யோசித்துப் பார்த்தன்.

அப்படியானால் இப்ப நாங்கள் பிழையென்று நினைக்கிற விஷயங்கள் காலம் மாறினால் பிழையற்றதாகி விடுமோ?

காலம் மாறிக்கொண்டுதானே இருக்கிறது!.

– வீரகேசரி 1973

– கால தரிசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஏப்ரல் 1973, கணேச சனசமூக நிலையம், புன்னாலைக்கட்டுவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *