கண்ணீரில் புன்னகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 7,651 
 

எனது சூழல், மனதில் இறுக்கம், இறுக்கத்தை மீறிய ஒரு நோக்கம். தன்னம்பிக்கை தான் எனது குறிக்கோள். மனதில் குறிக்கோளை சுமப்பது போல், என் உடம்பிலும் சுமக்கிறேன். ஆனால் நான் சுமக்கும் சுமைகள் எனக்காக அல்ல. என் குறிக்கோளை அடைவதற்காக உயிரை எடுக்கவும், என் உயிரையும் கொடுக்கவும் தயங்க மாட்டேன். எப்போது எங்கு செல்வேன், எப்பொழுது திரும்ப வருவேன் என்று தெரியாது. என் பாதை கரடுமுரடான பாதை. எதுவானாலும் பயணித்தாக தான் வேண்டும்.

காயங்கள் வலிக்கும் ஆனாலும் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும், யாருக்கும் புரியாது.. அழுவோம்.. ஆனாலும் யாருக்கும் தெரியாது. ஏனென்றால், இங்கே பார்ப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். வலியென்றால் தோளில் சாயவும், சந்தோசம் என்றால் அணைத்துக்கொள்ளவும், அன்யோன்யமானவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். கண் எட்டும் தூரம் வரை, தனிமை மட்டும் தான் மிஞ்சும்.

ஒருகணம் நான் யோசிப்பேன். “எப்போப்பா வருவிங்க” என்று குழந்தை கேட்க, “சென்று வாருங்கள்” என்று உற்றவள் கண்ணீர் மல்க கூற, திரும்ப வருவோமா? என்ற கேள்விகளோடு நான். எனது சுக துக்கங்களை விட்டு வந்தாலும், பாசங்கள் தடுத்தாலும், என் மனம் வாடினாலும், கடமை என்னை கட்டுக்குள் வைத்திருகிறது. கடமை ஏன் என்னை கட்டுக்குள் வைத்திருக்கிறதென்றால், என்னை நம்பி மற்றும் பலர். நீங்கள் நிம்மதியாக உறங்க, எங்களின் விழிகள் விழித்திருக்கும். மழையானாலும், வெயிலானாலும், குளிரானாலும், பனியானாலும் நேரம் காலம் விழித்திருக்க வேண்டும் உங்கள் அனைவருக்காக.

அன்று ஒரு கோழியை கொல்ல அச்சமுற்ற நான், இன்று கடமைக்காக பல உயிர்களை எடுக்க துணிந்தேன். கஷ்டம் என்று உள்ளேயும் இருக்கமுடியாது. வெளியேயும் செல்ல முடியாது. ஆண்டுக்கொரு முறை வரும் விழாக்கள் கூட, ஒரு தொலைபேசி வாழ்த்துடன் முடிந்து விடுகிறோம். உடனிருப்பவர்களுடன் சந்தர்ப்பங்களில் நேயமுற்று, ஒவ்வொருவரும் சந்தோசத்தையும், துக்கத்தையும் பகிர்ந்து கொண்டோம். நன்றாக பசிக்கும்.

நிறைய சாப்பிடவும் செய்வோம். ஆனாலும் வயிறும், மனமும் நிறையாது. ஏனென்றால், ஒரு விதமான ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். என் சிறிய குடும்பத்தை நினைத்து மட்டுமல்ல. நாம் வாழும் இந்த பெரிய குடும்பத்தையும் நினைத்து தான்.

நல்லது, கெட்டது, பிறப்பு, இறப்பு, வரவு, செலவு இவையெல்லாம் ஒரு தொலைபேசி அழைப்பிலேயே அடங்கிவிடும். ஊரிலிருந்து தான் நமக்கு யாராவது தொலைபேசியில் அழைக்க மாட்டார்களா?? விசாரிக்க மாட்டார்களா? என்று தொலைபேசியை முகத்தின் முன் வைத்து ஏக்கப்பார்வை பார்ப்போம். ஆனாலும், அப்படி யாரும் அழைக்க போவதில்லை என்றும் தெரியும். தெரிந்தும் யாராவது விசாரிக்கமாட்டார்களா..?? என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். ஆனாலும், 2 நாள் நாம் அழைக்காவிடில், நம்மிடம் கேட்பார்கள் “என்னப்பா, அங்க போன உடனே எங்களையெல்லாம் மறந்திட்ட போல” என்று….. அப்பொழுதும் இங்கிருந்து சிரித்துக்கொண்டே பதில் சொல்ல வேண்டும்…..!! அவர்களுக்காகவும் வாழவேண்டும்.

ம்ம்ம்.. அப்பாவின் அக்கறைக்காகவும், அம்மாவின் அன்பிற்காகவும், மனைவின் காதலுக்காகவும், குழந்தையின் ஏக்கத்திற்காகவும், என் மனதின் காயங்களை மறைத்து அவர்களுக்கு ஆனந்தம் தரவே சிரிக்கிறேன். உங்களின் நிம்மதிக்காக எங்களின் தூக்கம் தொலைத்தோம். தீபாவளியை கூட ஒரு சிறு தீக்குச்சியின் வெளிச்சத்தில் கொண்டாடி மகிழ்ந்தோம். எங்களின் பல விழாக்களும், பண்டிகைகளும் இப்படியே கரைந்து விடுகிறது.

எங்களை நினைத்து நீங்கள் அனைவரும் பெருமைபடுவீர்கள். உங்களுக்காக எங்கள் உடல் தேசியக் கொடியால் சுற்றப்பட்டு வரும் பொழுது, வாய்ப்புகளால் வாழ்கின்றோம். உத்தியோகத்தால் உயிரிழக்கின்றோம். தேசியக்கொடி காற்றினால் அசையவில்லை, அதை காக்க முயன்ற எங்கள் வீரர்களின் உயிர் மூச்சினால் அசைகிறது. உங்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லுங்கள். உங்களின் நாளைய சந்தோசத்திற்காக வீரர்கள் ஆகிய நாங்கள் எங்களின் இன்றைய சந்தோசத்தை தருகின்றோம். என்னை போன்ற வீரர்களின் தியாகம் மற்ற வீரர்களுக்கு உத்வேகமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு ஒரு செய்தியாக மட்டுமே சென்றடைகிறது. அதுவும் பத்திரிக்கைகளின் கடைசி பக்கத்தில் செய்தியாக.

உத்தரவு வந்தது புறப்பிட்டோம். அவர்களின் நானும் ஒருவன். என்னுடைய இன்றைய சந்தோசத்தை கொடுத்தேன், இன்றைய பலரின் கனவை நனவாக்க. அனைத்தும் மறந்தேன். கடமை என் கண்ணில். ஆம் கடமை மட்டும் தான் என்னுள். என் துப்பாக்கித் தோட்டாக்கள் எதிரிகளின் நெஞ்சை துளைக்க, என் கடமையை செவ்வனே செய்தேன் என்ற திருப்தி. அப்பூகம்ப பூமியில் கூண்டுகள் வெடிக்க, புழுதி பறக்க பாய்ந்து வரும் தோட்டாக்கள் என் நெஞ்சையும் பிளக்க, அந்த ஒரு நிமிடம் மட்டுமே என் கண் முன், குடும்ப உறவுகள் வந்து போனாலும், என்னையும், என்னை பத்து மாதம் சுமந்து தாயையும் சுமந்து கொண்டிருக்கும் தாய் நாட்டிக்காக என் உயிரை தருகிறேன் என்று பெருமையுடனும், சந்தோசத்துடனும் உங்களை விட்டு செல்கிறேன். எனக்காக என் மனைவி, என் குழந்தை உறவுகள் காத்துருக்க இதோ வருகிறேன் ஊர்வலமாக, மூவண்ண கொடி சுற்றப்பட்ட நிலையில் பெட்டிக்குள் நான். குண்டுகள் முழங்க, கர்வத்துடன் விடைபெறுகிறேன். இப்படிக்கு இராணுவவீரன்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *