தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகிவிட்ட ஆளவந்தார் தன் உயர்விற்கு அல்லும் பகலும் பாடுபட்ட நெருக்கமானவர்களைத் தனியே சந்தித்தார்.
”உங்களுக்கெல்லாம் நான் எப்படி கைமாறு செய்யப்போறேனோ !” நெகிழ்ந்தார்.
”பெரிய வார்த்தையெல்லாம் வேணாம். அதெல்லாம் அப்புறம். மொதல்ல நாம ஒரு முக்கியமான காரியம் செய்யனும்.” காறாராய்ச் சொன்னான் காசிநாதன்.
”என்ன சொல்லு ?” ஏறிட்டார்;.
”என் தெரு முருகேசு பயல். தான் அரசாங்க உத்தியோகஸ்த்தன் என்கிறதை மறந்து நமக்கு எதிராய் வேலை செய்து ஓட்டையெல்லாம் பிரிச்சான். அவனை மொதல்ல தண்ணி இல்லா காட்டுக்குத் தூக்கனும்.”
”அப்புறம் ?” ஆளவந்தார் அடுத்தவனைப் பார்த்தார்.
”நம்ம கூட்டத்துல கல்லெறிஞ்சவனை அந்த சபாபதி இன்ஸ்பெக்டர் கண்டுக்கவே இல்லே. அவனை மாத்தனும்.”
”அடுத்து…?” கேட்க…. ஆளாளுக்கு ஒவ்வொருத்தரைச் சொல்லி அமைதியானார்கள்.
ஐந்து நிமிடம் அமைதியாய் இருந்த ஆளவந்தார் அமைதியாய்……
”நேத்திவரை நான் உங்களுக்கு நண்பன். இன்னைக்கு…..நம்ப தொகுதியில் உள்ள மொத்தப்பேருக்கும் பொது. எதிரியைப் பழிவாங்குறது சரி இல்லே. நண்பனாக்கிக்கிறதுதான் சரி. மறந்து மன்னிச்சாலே நண்பனாகிடுவான். இது அடுத்த தேர்தலுக்கு நமக்கு இன்னும் பலம். சுலபமா ஜெயிக்கலாம்.” – அரசியல் அரிச்சுவடியைச் சொன்னார்.
கேட்டவர்கள் தலை சுழன்றது.