ஆறாத ரணம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 10, 2012
பார்வையிட்டோர்: 8,184 
 

நினைவுகள் சாக்கடைகளாய் தேங்கியும், தெளிந்த நீரோடைகளாய் வளைந்து நெளிந்தும் ஒடிக்கொண்டிருந்தன. ஒன்றிற்கொன்று தொடர்ப்பில்லாமல் சிறுசிறு நீர்ச்சுழிகளாய் ஆங்காங்கே தோன்றி மறைகின்றன. சிறுசிறு சுழிகள் இணைந்து இணைந்து பெரியதாகி சுழலுகின்றன. நினைவுகள் சுழன்று சுழன்று ஆழமாய் உள்ளே உள்ளே தனக்குள் சென்று கொண்டே இருக்கின்றன, நேற்று அலுவலகத்தில் செய்த செயல் சுயபரிதாபத்தை என்னுள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.

குடித்துவிட்டு போதையில் பெரிய கலாட்டாவை அரங்கேற்றி இருந்தேன்.

மொடாக்குடி போதையில் பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த எனது வீட்டிற்கு பைக்கில் எப்படி சேதாரம் இல்லாமல் வந்து சேர்ந்தேன் என்பது நினைவில்லை . . . யார் செய்த புண்ணியமோ ?
நேற்று தொழிற்சங்கத்தின் பொதுப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவரும், நானும் மப்பு ஏற்ற டாஸ்மார்க் சென்றோம். நான் சங்கத்தின் உதவிச்செயலாளராக இருக்கிறேன். எம்.சி பிராந்தி ஆப் வாங்கி இருவரும் குடித்தோம் என்பது மட்டும்தான் நினைவில் சுழல்கிறது. அதற்கு மேல் நினைவுகள் செல்ல மறுக்கின்றன!

மங்கலான நினைவுகள் . . . இன்னும் அதிகமாகக் குடித்தோம், எதைப் பற்றியோ பேச ஆரம்பித்து யாரையோ திட்டித் தீர்த்திருக்கிறேன். வருத்தமும், சங்கடமும் நெஞ்சினைப் பாறையாய் இறுக்குகின்றன.
நண்பன் அருளிடம் என்ன நடந்தது என்பதை விசாரிப்பதற்காகத் தலையைச் சொறிந்து கொண்டு நின்றேன்.

“வாங்க தலைவரே? எப்படி இருக்கீங்க . . ?”

கிண்டலாக கலாய்க்கிறார் என்று புரிந்தது.

“என்ன நடந்தது . . .?”

“பண்ண கலாட்டாவே ஞாபகமில்லையா . .? உன்னை சமாதானம் பண்ணி வீட்டிற்கு அனுப்புவதற்குள் நாங்கள் நொந்து நூலாய் போய்விட்டோம். உங்களுக்குதான் குடி ஒத்து வரல்லன்னு தெரிகிறதில்ல . . பின்ன ஏன் குடிக்கிறீங்க?”

நான் சங்கடத்தில் நெளிந்தேன்.

” நேத்து பேரவை நடந்து கொண்டு இருந்தது. புரமோசன் விசயமாக விவாதம் நடந்தது, பேசிய எல்லாரும் அதிகாரிகளைக் குற்றம் சாட்டிப் பேசிக் கொண்டிருந்தனர். நீங்க செமபோதையில் தள்ளாடிக் கொண்டே எழுந்தீங்க. மேடைக்கு வந்து மைக்கை கெட்டியாகப் புடிச்சிக்கிட்டிங்க . . நானும் பேசணும் . . பேசணும்னு என திரும்ப திரும்ப உளறினீங்க . . அப்புறம் தான் அந்த கூத்தே நடந்திச்சி . . ”

அவரின் கிண்டல் பார்வை எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

“அதிகாரிகளை சிறிது நேரம் திட்டினீங்க . . . தொழிற்சங்கம் சரியில்லை . . தீவிரமாகச் செயல் படவில்லை என்று குற்றம் சாட்டிக் கொண்டிருந்தீங்க . . அதற்கு அப்புறம் . . .”

சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.

“நந்தகோபாலைப் பார்த்து கைநீட்டி, இவண் என்னை நொண்டின்னு சொல்லி புட்டான். நொண்டி . . நொண்டின்னு திட்டறான் . . நீங்கல்லாம் கேளுங்க . . கேளுங்ங்க . . திரும்ப திரும்ப இப்படியே சத்தம் போட்டு கத்தி கலாட்டப் பண்ணீங்க”

நந்தகோபாலுக்கு முதலில் என்னவென்றே விளங்கவில்லை.

ஆனால், எனக்கு என்ன நடந்தது என்ற பொறி மின்னலெனத் தட்டியது. போதையில் நந்தகோபாலை சத்தம் போட்டதும், அதற்கு அவர் நான் அப்படி ஏதுவும் சொல்லவில்லை என்று முகம் வெளுத்து பயந்து அலறியபடி சொல்லியதும் நினைவில் சுழன்றன.

மீண்டும் மீண்டும் நொண்டி என்று நந்தகோபால் திட்டினார் என்று நான் கத்தி கலாட்டா செய்தேன், ஒப்பாரி வைத்து ஓவென அழுதேன். போதையில் சோகம் தலைக்கேறி இருந்தது. தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது, நண்பர்களுக்கு எப்படிச் சூழலை சமாளிப்பது என்று புரியவில்லை. ஒரு வழியாக என்னை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்குள் படாதபாடு பட்டது நினைவுக்கு வந்தது.
எனக்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது. நந்தகோபாலிடம் சென்று மன்னிப்பு கேட்டேன்.

“பரவாயில்லிங்க . . . நான் எப்பவும் உங்கள அப்படி சொல்லலையே. போன வாரம்கூட நாம ஒண்ணா ஓட்டல்ல டிபன் சாப்பிட்டோம். நான் பில்லை கொடுக்கிறதா சொல்லியும் நீங்க மறுத்துட்டீங்க . . எனக்கும் சேர்த்து நீங்களே பில் கொடுத்தீங்க”

“ஆமாம் . . ஆமாம் . . .”

பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டினேன்.

நந்தகோபாலைப் பார்த்து நான் ஏன் அப்படி கத்தினேன்? கலாட்டா செய்தேன்? நினைவுகளின் ஆழத்தில் புதைந்தவைகளைக் கிண்டிக்கிளறித் தூர்வாரிக் கொண்டே சென்றேன். பளிச்சென மூளையை மின்சாரம் தாக்கி சுண்டி இழுத்த உணர்வு…

பொதுவாக நொண்டியாய் இருப்பவர்களை நொண்டி என்று யாரும் விளிப்பது கிடையாது. அதுவும் மைய அரசு குமாஸ்தா தகுதி . . நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்பவனை இப்படியெல்லாம் அழைப்பதில்லை. மறைமுகமாக மிகமிகச் சிலர் மனதில் நினைத்தாலும் அழைப்பதில்லை. நினைவுகளின் ஆழ்மன இரத்தம் கசியும் மடிப்புகளில் மின்னல் தாக்கி நரம்பை இழுத்தது . . .
அந்த அழகிய வடிவான முகம். . புசுபுசுவெனத் திரண்டிருந்த சிவந்த கன்னம். . ஒட்டவெட்டிய போலீஸ் கிராப். . திடகாத்திரமான உடற்பயிற்சி செய்த தேகம் . . . நிழலாடியது.

இரணமாகி சீழ்பிடித்து பச்சைப் புண்ணாய் நினைவுகளில் எப்பொழுதும் துரத்திக் கொண்டிருக்கும் வசைச்சொல். சொதசொதப்பாய் ஆண்டுகள் பல உருண்டொடி விட்டாலும், இரணமாய் . .சீழாய் . . புரையோடி நிற்கும் இழிசொல்! மனதின் அடிஆழத்தில் தங்கி நச்நச்செனத் துன்புறுத்திக் ¢கொண்டு இருக்கிறது. சில சமயங்களில் பீய்ந்து வெளிப்பட்டும் உள்ளது.

காலம் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுவது கிடையாது. போலீஸ் கொட்டடி அடி, உதைகள், சித்தரவதைகள், காயங்கள் எல்லாம் காலப்போக்கில் மறந்துவிட்டன. அவன் என்னை அழைத்த தொனி . . .

“டேய், நொண்டி தெவுடியா பய்யா . . .”

கேட்ட மாத்திரத்தில் உள்ளத்தில் எரிச்சலையும் நெஞ்சில் நெருப்பையும் பற்றி எரியச் செய்த சொல்.
இதைச் சர்வ சாதாரணமாக போகின்ற போக்கில் அந்த போலீஸ் அதிகாரி அழைத்தான். பெண்மை கலந்த வட்டமான முகமுடைய அவன் பெயர் பழனியாண்டி! அதிகார ஆணவத்திமிர் இரத்த நாளங்களில் இழை இழையாய் ஓடிக் கொண்டிருந்ததன் வெளிப்பாடு இந்தச் சொல்லடி!

இருபது ஆண்டுகளுக்கு முன் நக்சல் வேட்டையில் சிக்கிய நபர்களில் நானும் ஒருவன் .

சட்டவிரோத சித்திரவதை முகாமில் சிக்கி ஒரு வாரம் நான் பட்டபாடு! நொந்து நூலாகிப் போனேன்.
பல தடவைகள் பழனியாண்டி என்னை பலவாறாக விசாரித்தான். ஆனால், ஒரு முறைகூட அவன் என் பெயரைச் சொல்லி அழைக்கவில்லை . . .

“நொண்டி . .
நொண்டி நாயே . .
நொண்டி கம்முனாட்டி . .
நொண்டிப் பயலே . . .”

ஒவ்வொரு முறையும் அவன் என்னை அழைத்த தொனி என் மூளையைத் பிராண்டிக் கொண்டே இருக்கிறது. .

தொன்மை தமிழின் ”தொனிப்” பொருள்கள் சிறப்பை எண்ணி இறுமாந்த காலமுண்டு. இன்று அதே தொனியின் இழியொலிக் குறிப்புகள் நெஞ்சைப் பிழிகின்றன.

“இந்த நொண்டிப் பயலுக்கு இன்னா திமிர். . வாயே திறக்க மாட்டறான் நொண்டி . . நல்லா கவனிங்க இந்த நொண்டிக் காலனை . . ”

பழனியாண்டி மற்ற உளவு அதிகாரிகளுக்கு என்னை அறிமுகப்படுத்திய விதமே இப்படித்தான் இருந்தது…

”இவனோட இன்னொரு காலையும் பெண்டாக்கிர்றேன் பார்”

வன்மத்துடன் அவன் அடித்த அடியில் லட்டிகள் உடைந்து நொறுங்கின. உடலெல்லாம் வலி விண் விண் என்று தெறித்தது. அதனினும் அவனது இழித்தொனி சொல் உயிரையே பிராண்டிக் கொண்டிருந்தது.

பத்துப் பதினைந்து நபர்களைப் பிடித்து வதைமுகாமில் வைத்து ’விசாரணை’ செய்தார்கள். அவர்களின் பெயர்களைச் சொல்லியும், சில சமயம் சாதியையும் சில சமயம் ஊர்ப் பெயரையும் சொல்லி அழைத்ததைக் கவனித்தேன்.

பிஎச்,டி, படித்துக் கொண்டிருந்த மாணவரை “டாக்டரே” என்றும் கிண்டலாக அழைத்து அடித்தனர்.
என்னை மட்டும் என் பெற்றோர் இட்டப் பெயரைச் சொல்லியோ, சாதியைக் குறிப்பிட்டோ, ஊரைக் குறிப்பிட்டோ அழைக்கவில்லை.

அவன் கண்களுக்கு எனது ஊனம் மட்டுமே தெரிந்தது!

தொழிலைச் சொல்லி அழைக்கவில்லை.

படித்த படிப்பைச் சொல்லி அழைக்கவில்லை.

எப்போதாவது பெயர் சொல்லியோ, சாதியைச் சொல்லியோ தப்பித்தவறி அழைத்தாலும் அதில் “நொண்டி” என்பதைப் பெயரடை சொல்லாக இணைத்துச் சொன்னார்கள்.

எல்லாவற்றிற்கும் மேல் இன்னொன்றையும் செய்தான்.

பத்திரிகையாளர்களை அழைத்து என்னைப் பற்றி மிகைப்படுத்தி விவரித்தான். மறுநாள் செய்தித்தாள்கள் கொட்டை எழுத்துகளில் இப்படி வாந்தி எடுத்தன:

”நொண்டிக்கால் நக்சலைட் கைது . தப்பி ஓடிய நொண்டியை விரட்டிப் பிடித்து காவல்துறை வீரசாகசம்!”

பத்திரிகை தர்மத்தை இப்படிக் கேவலமாகக் காப்பாற்றினர்.

”ஒற்றைக்கண் சிவராசன். .
வழுக்கைத் தலை முருகன். .
பெண்டு மணி. .
நொண்டி நடராசன் ..”

குற்றங்களைவிட முதலில் பத்திரிகைக்காரர்களுக்குத் தெரிவது ஊனங்களைத்தான்!

வீங்கிப் போன காயங்கள் வடிந்து வற்றின.. இரத்தம் கசிந்து புண்ணாகி சீழ்பிடித்த ரணங்கள் ஆறிப்போயின. ஆறிய புண்ணின் பக்குகள் உதிர்ந்து வடுக்களாகி, காலப்போக்கில் மறைந்தன.
பல அற்புதமான நினைவுகள். நெஞ்சை நெகிழவைத்த தோழமை உறவுகள். அறிவு செறிந்த விவாதங்கள். சச்சரவுகள். சில சமயம் சண்டைகளும்கூட! மக்களிடம் பயின்று மக்களுக்காகச் சிந்தித்த, செயலாற்றிய, போராடிய தருணங்கள், வரலாற்று ஆவணங்களாய், பொக்கிசங்களாய்ப் போற்றிப் பதிய வேண்டியவைகள் நீர்க்குமிழிகளாய்த் தேய்ந்து அழிந்து போய்விட்டன.

இயக்கத்தை விட்டு வெளியேறி ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், அந்த போலீஸ் அதிகாரி அழைத்த விதம் மட்டும் கால வெள்ளத்தில் கரைய, அடித்துச் செல்ல மறுக்கிறது.

“நீயெல்லாம் பொழைக்கத் தெரியாத ஆளு” என்ற குமாஸ்தாக்களின் எள்ளல்களை மீறித் தனிமையில் அசைபோட்டால் போராடிய அத்தருணங்கள் பொற்காலம் தான் . . . அந்தச் சொல்லைத், தொனியைத் தவிர.

பிராண்டி பிராண்டி மனம் வலிக்கிறது. குடிபோதையில் அவனை பல நாள்கள் திட்டினேன். சக மனிதர்களிடம் புலம்பினேன். பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

நான் இப்பொழுதெல்லாம் புலம்புவது கிடையாது. போதை தலைக்கு ஏறினால் பழனியாண்டியைத் திட்டித் தீர்த்து விடுகிறேன். அப்படித் திட்டுவதால் மனது ஆறுதலை அடைகிறது.

அந்த போலீஸ்அதிகாரியின் உருவம் ஏதோவிதத்தில் நந்தகோபாலுக்கு இருந்தது. சில விதங்களில் உருவ ஒற்றுமைகள் படைத்த சில மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்! நந்தகோபாலிடம் மன்னிப்பு கேட்டாலும், அவரிடம் இதை விளக்கினால் அவரால் புரிந்து கொள்ள முடியாது என்று விட்டு விட்டேன்.

கைப்பேசி அழைத்தது. மனைவி அழைக்கிறார். மாலை 5 மணிக்கு பேருந்து நிறுத்ததிற்கு வருவதாகக் கூறினாள். மேலதிகாரியிடம் அனுமதி பெற்று நான் புறப்பட்டேன். பேருந்து ஏறிப் போய்ச் சேர மாலை ஐந்தரை ஆகிவிட்டது.

இரண்டு கைப்பைகளையும், மூன்று வயது குழந்தையையும் வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளிடம் ஐஸ்கிரீம் வாங்கி தரும்படி குழந்தை தொந்தரவுச் செய்து கொண்டு இருந்தது. சளி பிடித்துவிடும் என்று அதைத் தட்டி கழித்து கொண்டிருந்தாள். நான் குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தேன்.

எனக்கு ஊனம் என்பதால் என் மனைவியே பைகளை சுமந்து கொண்டு நடந்தாள். வீடு போய்ச் சேர ஒருமைல் நடக்க வேண்டும். டி.வி.எஸ்.50யைப் பழுது பார்க்க மெக்கானிக்கிடம் விட்டிருப்பதால் இன்று நடராஜா சர்வீஸ்தான்!

ஒரு கையில் எனது விரல்களைப் பிடித்துக் கொண்டும், மறுகையில் ஐஸ்கிரீமை சுவைத்துக் கொண்டும் குட்டிப் பையன் நடந்தான். சிறிது தூரத்திற்கு பின் கையிலிருந்த ஐஸ்கிரீம் தீர்ந்து விட்டது. முன்னே நடந்து கொண்டிருந்த அம்மாவிடம் அவன் ஓடினான்.

“என்னய தூக்கும்மா..”

“தூக்கும்மா…. தூக்கும்மா”

பிஞ்சுக் கைகளை நீட்டி அவளைத் தொந்தரவு செய்தான்.

”நானே இரண்டு பைகளையும் தூக்கிக்கிணு நடக்க முடியாம நடக்கிறேன். நீ வேற.. உன்னை எப்படிடா நான் தூக்குறது”

அவள் முணுமுணுத்தாள். குட்டிப்பையன் கைகால்களை உதறிக் கொண்டு தூக்கும்படி அடம் பிடித்தான். செல்லமாகச் சிணுங்கினான்..

“காலு வலிக்குதும்மா.. தூக்கும்மா!”

குட்டிப்பையன் கெஞ்சினான். இரு பைகளைத் தூக்கிக் கொண்டு நடந்ததால் அவனைத் தூக்கிக் கொண்டு நடக்கும் நிலையில் அவள் இல்லை.

”டேய் போடா உங்கப்பாவைத் தூக்கச் சொல்லுடா” என்று பாரத்தை என்னிடம் தள்ளினாள்.

குட்டிப்பையன் திரும்பி நின்று என்னைப் பார்த்தான். குட்டிக் குட்டிக் கண்களால் உற்று நோக்கினான். நான் அவன் அருகில் நெருங்கினேன். என்னைத் தூக்க சொல்லுவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவன் என்னிடம் எதுவும் பேசவில்லை. பிஞ்சு கரங்களால் என் கையைப் பற்றிக் கொண்டு நடந்தான். நான் விந்தி விந்தி நடப்பதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே வந்தான்.

ஒரு மைல்தூரமும் குட்டிப்பையன் குதித்து குதித்து நடந்து வந்தான். குழந்தையின் கால்கள் வலித்திருக்கும். ஆனால் என்னிடம் ஒருமுறைக்கூட தன்னைத் தூக்கும்படி அவர் கேட்கவில்லை.

Print Friendly, PDF & Email

1 thought on “ஆறாத ரணம்

  1. குழந்தைகளுக்கு இயல்பாக அமைந்திருக்கும் உணர்திறன் பெரியவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது.
    உணர்ச்சிபூர்வமான கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *