கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 12,627 
 

ஏன் வாசலிலேயே நின்று விட்டீர்கள்? உள்ளுக்கு வாருங்கோ ஐயா. இன்றைக்கு நான் மட்டுந்தான் வேலை செய்யிறன். தம்பிக்கு ‘சேவ்’. கையோடு முடிந்துவிடும். இளமட்டங்கள் சில, எங்களுடைய ‘ஸ்டை’ யிலைப் பார்த்துத்தான் உள்ளே வாருங்கள். ‘ஜங்கி ஸ்ட’லில் என்று சொல்லி, நாக்கு வழிப்பதைப் போல அந்தரப்பட்டு, ஒரு படத்தையும் அதில் நடிக்கும் நடிகனின் பெயரையும் சொல்லி, அப்படியே வெட்டிவிடும்படி சில விறுதாக்கள் கேட்கும். அதை ஏன் ஐயா கேட்கிறீர்கள்? மயிரைக் கவனமாகச் சீவி விடவில்லை என்பதைக் காட்டிக்கொள்ள, ஒரு மணி நேரம் அவர்கள் கண்ணாடிக்கு முன்னால் சீப்புடன் படும் பாட்டைச் சொல்ல முடியாது. பார்த்தீர்களா? மரியாதை தெரியாமல் நிற்க வைத்தே பேசிக் கொண்டிருக்கிறன். குடையை அந்த மூலையிலை வையுங்கோ. ஓமோம். அந்தப் ‘புட்டு’ வத்திலை வசதியாக இருக்கலாம். அது நேற்றையப் பேப்பர். இன்றைய்குப் பேப்பர்காரப் பொடியன் இன்னும் வரவில்லை. புழுக்கமாகத்தான் இருக்கிறது. விசிறியைப் போட்டு விடுகின்றன். நீங்கள் இந்த ஊருக்குப் புதிதாக்கும். நான் ஆக்களைப் பாத்துச் சொல்லுறநிலை கெட்டிக்காரன். பார்த்தீர்களா, சரியாகச் சொல்லி விட்டேன். வேலை மாற்றமாகி வந்திருக்கிறீர்களாக்கும். இல்லையா? மட்டக் களப்பிலிருந்து நல்லூர்க் கந்தசுவாமிக்கோயில் பார்க்க வந்திருக்கிறீர்களா? இன்றைக்குக் கார்த்திகைத் திருவிழாவாக்கும். ஓம், தம்பி மறந்து போனன். தம்பிக்கு சேவ் மட்டுந்தானே? இருபத்தைந்து சதம். சரி, போயிட்டு வாரு ம….ஐயா, இந்தப் புட்டுவத்திலை வந்து இருங்கோ. இது நாலுபேர் வேலை செய்யிற பெரியகடை தான். எலெக்ஷனுக்கு நாலு நாட்கள் தான் இருக்கின்றன. அது வரைக்கும் நான்தான் கடையைத் தனியாப் பார்க்கவேணும். நான் ஒரு வாய் வெற்றிலை போடுகிறன் ஐயா. அப்பொழுதுதான் கை சுறுசுறுப்பாக வேலை செய்யும்.

ஏன் சுவர்களைப் அப்படிப் பார்க்கிறீர்கள்? இவை சலூனில் மாட்டத்தக்க படங்களல்ல என்று நினைத்துத் தானே? சினிமா நடிகைகளின் படங்களையும், சீனாக்காரிகளின் கொங்கொங் படங்களையுந்தான் சுவர்களிலை மாட்டலாமென்று பெரும்பாலான சலூன்காரர்கள் நினைக்கிறார்கள். ஒரு காலத்திலை அப்படிப்பட்ட படங்கள்தான் இங்கும் இருந்தன. இவையெல்லாம் விக்டர் செய்த மாற்றங்கள். லிங்கன், காந்தி, பாரதி, லெனின், மாஸேதுங், ஜ“வானந்தன்,… அந்தப் பெயர் தான் மனநிலை நிற்கமாட்டுது. லீயூ-சாவூ-ஸ’ என்று சொன்னீர்களா? ஓம். அதைப்போல தான் ஒரு பெயர். இந்த வரிசையிலை நடுவிலை இருக்கும் படம். அதற்குப் பக்கத்திலிருக்கும் படம் முருகேச வாத்தியாருடையது… சே, இந்த நானா வரவர வலு மோசம். வெற்றிலைக்கு நொங்குப்பாக்கு வைக்கலிலை.

நான் ‘ஷ“ட்’ எடுக்க உள்ளை சென்ற பொழுது ஏதோ கேட்டீர்களே? நன்றாகப் பின்னுக்கு நகர்ந்து உட்காருங்கோ. ஏன் இந்தப்படங்களைச் சிவப்பு ‘லைட்’டுகள் அலங்கரிக்கின்றன என்றா? அதுவும் விக்டரின் ஏற்பாடுதான். இந்தப் படங்களுக்கு நீல ‘பல்பு’ அழகாக இருக்குமென்று பலர் சொல்லியிருக்கிறார்கள். விக்டர் அடிக்கடி சொல்லுவான். தொழிலாளர் அணியைச் சேர்ந்தவர்களுடைய இரத்தம் சிவப்பாம். ஏன் சிரிக்கிறீர்கள்? விக்டரின் கதையைக் கேட்டீர்களென்றால் சிரிக்க மாட்டீர்கள். கொஞ்சம் இந்தப் பக்கமாகத் தலையைக் குனியுங்கோ…. கதையைச் சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுது வேலையும் முடிந்துவிடும்; நேரம் போறதும் தெரியாது. ‘இவனிடம் தலையைக் கொடுத்து விட்டோம்; சொல்லுவதை எல்லாம் சொல்லட்டும்’ என்று சிலர் நினைப்பினம். நீங்கள் அப்படி இல்லையா? சந்தோஷம்.

என்னுடைய அண்ணன் டொமினிக் தான் இந்த சலூனைத் திறந்தவர். முப்பது வருஷம் இருக்கும். அப்பொழுது இது தார்றோட்டுமில்லை; கஸ்தூரியார் வீதியுமில்லை. மக்கிபோட்ட றோட்; செம்மாதெரு என்று சொல்லுவார்கள். வின்ஸர் தியேட்டருக்குத் தகரக் கொட்டகை என்றுதான் பெயர். வண்ணாங்குளத்தடி பாபர் சலூன் என்றால் எல்லாருக்கும் தெரியும். நல்ல உழைப்பு. அந்த அண்ணனுடைய மகன்தான் விக்டர். அவனை நன்றாகப் படிப்பித்து உத்தியோக காரனாக்கவேண்டும் என்று அண்ணனுக்கு நல்ல ஆசை, மட்டக்களப்புப் பகுதியிலை சாதி வித்தியாசங்கள் எப்படி என்று தெரியாது. அங்கு அவ்வளவாகச் சாதி பார்ப்பதில்லை என்று சொன்னீர்களா? ஆனால், இங்கு இப்பொழுதுகூடச் சாதி வித்தியாசம் பாராட்டுகிறார்கள். முந்திய காலத்திலை சொல்லத் தேவையில்லை. தேத்தண்ணிக்கடைகளிலை எங்களுக்கெல்லாம் கறல்பேணி, அல்லது சோடாப் போத்தில் தனியாக இருக்கும். நீங்களும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? விக்டிரைச் சம்பத்திரிசியார் கல்லூரியிரை அண்ணர் சேர்த்தார். ‘ஏன் உனக்குப் படிப்பு? சவரக்கத்தியை எடுத்துக்கொண்டு சிரைக்கப்போவன்’ என்று தன்னை பொடியன்கள் ‘பகிடி’ பண்ணுகிறார்கள் என்ற எத்தனையோ நாட்கள் விக்டர் அழுதிருக்கிறான். யாழ்ப்யாணத்திலை சாதி வித்தியாசம் வலுபொல்லாது. தலையைக் கொஞ்சம் இந்தப் பக்கமாக… இன்னும் கொஞ்சம்…சரி. நான் எல்லாரிடமும் இப்படிக் கதைப்பதில்லை. விக்டருக்குப் படிப்பு நல்லா வந்தது. ஆனாலும், ஏழாம் வகுப்புடன் அவனுடைய படிப்புத் தடைப்பட்டுப் போச்சுது. என் தம்பிக்காரனொருவன் அகப்பட்ட பணம் முழுவதையும் சுருட்டிக் கொண்டு, யாரோ ஒரு கரையூர் வேசையையும. ‘தூக்’கிக்கொண்டு நீர்கொழும்புக்கு ஓடிவிட்டான். அத்துடன் கடையும் சீரழிந்தது. இந்த நேரத்திலை விக்டரும் எங்களுடைய தொழிலுக்கு வந்துவிட்டான். நான் சிகரெட் புகைப்பதில்லை. வெற்றிலைதான் போடுவன். நெருப்புப் பெட்டிதேவையோ? நீங்கள் புகையுங்கோ. எல்லாம் பழக்கந்தானே? ஓமோம். எனக்கும் இப்படித்தான். நெடுநேரம் இல்லாவிட்டால் வாய் புளித்துவிடும். நெருப்புக் குச்சைக் கீழை போடுங்கோ. நான் கூட்டித் தள்ளுவன். தலையை இன்னும் கொஞ்சம் குளியுங்கோ…. எங்கை விட்டனான்? ஆ…விக்டர் சலூனுக்கே வந்துவிட்டான். இங்கை பேப்பர் ஒழுங்காக எடுப்பது வழக்கம். வாடிக்கைக்காரருக்குத் தேவை. சும்மா எவ்வளவு நேரந்தான் படத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது? பின்பு, அவை கடுதாசித் துண்டுகளாகவும் உதவும், விக்டர் பேப்பர்களை ஒழுங்காக வாசிப்பான். ஆனாலும் முருகேச வாத்தியாருடைய சிநேகிதந்தான் அவனுக்கு அரசியல் விஷயங்களிலை ஆசையைக் கொடுத்தது.

ஐயா, இந்தச் சுருள் மயிருக்குக் கொஞ்சம் ‘சோட்’ டாக வெட்டினால் நல்லது. அப்படியே செய்யட்டுமா?…. ஓம். விக்டரின் படத்திற்குப் பக்கத்திலை இருப்பதுதான் முருகேசு வாத்தியாரின் படம். அவர் பெரும் படிப்புப் படித்த மனுஷன். ஒருநாள் அந்தப் புட்டுவத்திலிருந்து சொன்னார். அவர் எப்பொழுதும் அந்தப் புட்டுவத்திலைதான் உட்காருவார். ‘விக்டர்! மனிதன் தானும்-மனைவியும்-தட்டானும் என்று வாழக்கூடாது. மனிதன் உலக சமுதாயத்தின் ஓர் அங்கம். உலகத்திலுள்ள தொழிலாளர்கள் எல்லாரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள். அந்த அணியின் பெருமையை நிலை நாட்டும் வர்க்கப் போராட்டத்தில் அவன் ஓர் அங்கமாக மாறவேண்டும்.’ அவர் வடிவாகப் பேசுவார். எனக்கு அதிகம் விளங்காது. விக்டருக்கு எல்லாம் விளங்கும்.

இப்பதான் பேப்பர்காரன் வருகிறான். ஏன் தம்பி? இன்றைக்கு றெயின் பிந்திட்டுதோ? கையிலை வேலை. அந்த மேசையிலை வையுங்கோ…. விக்டர் நிறையப் புத்தகங்களும் வாசிப்பான். முருகேசுவாத்தியார் பெரிய பெரிய புத்தகங்களை வாசிக்கக் கொடுப்பார். ‘வேலையை ஒழுங்காகக் கவனிப்பதில்லை’ என்று நானே எத்தனையோ தடவை அவனை ஏசியிருக்கிறன். ‘முருகேசுவாத்தியார் கொம்யூனிஸ்டு. அவருடன் சேர்ந்து கொம்யூனிஸ்டாகக் கூடாது’ என்று ஓகஸ்டீன் சுவாமியார் கூடப் புத்திமதி சொல்லியிருக்கிறார். ஓ, நீங்கள் சொல்லுறது சரிதான். நாங்கள் பழங்காலத்து ஆக்கள். இப்பொழுது சரிதான். நாங்கள் பழங்காலத்து ஆக்கள். இப்பொழுது லெனின் படமிருக்கிற இடத்திலை முந்தி தாடிக்கார ஜோர்ஜ் மன்னரின் பெரிய மடமொன்று இருந்தது. நல்ல வடிவான படம். ஒரு நாள் அந்தப் படத்தைக் கழற்றிப் போட்டு இந்தப்படத்தை மாட்டினான். அன்றைக்கு இங்கை பெரிய போரல்லே நடந்தது. தகப்பனுக்கு விசர் வந்தது போலைதான். விக்டருக்கும் தகப்பனுக்குமிடையிலை நல்ல வாக்குவாதம். ஒரு மாதமாக விக்டர் கடைப்பக்கமு ம வரவில்லை விட்டிட்டம். தலையைக் கொஞ்சம் இந்தப் பக்கமாகச் சரியுங்கோ; இன்னும் கொஞ்சம்… ஆ…

இன்னொரு நாள் நடந்த சம்பவத்தையும் கேளுங்கோ. அன்று ‘குறப்’ வெட்ட முருகேசு வாத்தியார் வந்திருந்தார். அதே சமயம் சாளையாவும் வந்தார். நாகையாவை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? சாதி வேறுபாடுகள் நல்லாப் பாக்கிற மனுஷன். கோயில்கள் சிறுபான்மைத் தமிழருக்குத் திறந்து விடப்பட்ட அக்கிரமத்தைப் பார்க்காது சிவபத மடைந்து விட்டார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை. அவர் முருகேசு வாத்தியாரைக் கண்டதும், நாகத்தை மிதித்தவரைப்போல பதறி, ‘இந்த நளம்-பள்ளுகளுக்கு முடிவெட்டும் இவங்களிடம் நான் ஒருநாளும் வெட்டமாட்டன்’ என்று முழு நீளத்திலை’பானா சானா’ வரிகளிலை ‘தேவாரம்’ பாடினார். ஓம். ‘றிங் கத்திரிக்கை’ தான். அடர்த்தியான மயிரைக் கோதி எடுத்தால் வடிவாக இருக்கும். பார்த்தீர்களா, ஐயா. நாங்கள் வெட்டுவதோ அழுக்கு மயிர். பேண்புழுக்கும் இந்த மயிரிலைகூட சாதிவேறுபாடு இருக்கிறதாம்.

நாகையா ‘சண்டித்தனம்’ செய்கையிலை சலூனில் முருகேசு வாத்தியார் மட்டுந்தானிருந்தார். அவர் நாகையாவிலும் ‘மாத்து’க்கூடிய வெள்ளாளன். அவர் வட்டுக்கோட்டைப் பகுதி. நாங்கள் விஷயத்தை அறியாது விழித்தம். வாதிதியாரின் கண்கள் கோவத்திலை சிவந்தன. மலைத்து நின்ற விக்டரைப் பார்த்து அவர் சொன்னார். ‘நான் ஒரு சீவல்தொழிலாளியின் கல்யாண வீட்டில் பந்தியிலிருந்து சாப்பிட்டதற்குத்தான் இந்தக் குதிப்பு. பூனை பூனைதான்; நாய் நாய்தான்; மனிதன் மனிதன்தான் வர்க்க ஒற்றுமையைச் சாதியின் பெயராலே சிதைத்து விடலாம் என்று இந்தப் பிற்போக்குவாதிகள் மனப்பால் குடிக்கிறார்கள். உலகெங்கும் தொழிலாளி வர்க்கம், செங்கொடியின்கீழ் அணிதிரண்டு வருவதை அறியாது இந்தக் கிணற்றுத் தவளைகள் சத்தம் போடுகின்றன. இரத்தம் சிவப்பு. அது பச்சையோ, நீலமோ மூவர்ணமோ அல்ல. இரத்தம் செங்கொடியின் நிறமேதான். உலகில் இரண்டே இரண்டு சாதிகள்தான். உலகில் இரத்தம் செங்கொடியின் நிறமேதான். உலகில் இரண்டே இரண்டு சாதிகத்‘ன் இருக்கின்றன. மனித இரத்தத்தைக் குடித்துக் கொழிக்கும் சுரண்டல் வார்க்கம் ஒரு சாதி-ஒரு அணி. உழைத்துத் தொழிலின் கௌரவத்தை நிலைநாட்டும் பாட்டாளி விவசாயிகள் மற்றைய சாதி-மற்றைய அணி. விக்டர்! நீ-தான்-அந்தச் சீவல் தொழிலாளி எல்லோரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள். மார்க்ஸ்-ஏங்கல்ஸ்லெனின்-ஸ்டாலின் – மாஹேதுங் வழிவழி வந்த செங்கொடி நம்மை வழிநடத்தும்.’ கோபம் வந்தால், அவர் மேடையிலை பேசுவதைப் போலைதான் பேசுவார். கன்னத்திலை அதிக மயிர் குடைந்தெடுக்க வேண்டாமென்று சொன்னீர்களா? கதை கதையாக இருந்தாலும் வேலையும் வேலைதான். சிலிம்பிக் கிடக்கும் மயிர்களைத்தான் லேசாக வெட்டி விடுகிறன். ஐயா கன்னத்திலை ‘மெஷ’ன்’ போடவிடுவதில்லை என்பது பார்த்தவுடனையே தெரிகின்றது, வாருங்கோதம்பி, வாருங்கோ. ஐயாவுக்கு ‘குறப்’ மட்டுந்தான். முடியப்போகிறது. அந்தப் புட்டுவத்திலை இருங்கோ இன்றைய பேப்பர்தாள் பார்த்துக் கொண்டிருங்கோ.

ஐயா, கேட்கிறீர்களா? பல ஆண்டுகளுக்கு முன்னர் அதே புட்டுவத்திலை-இப்ப தம்பி உட்கார்ந்திருக்கிற அதே புட்டுவத்திலை – அமர்ந்து சொன்னார். அப்பொழுதுதான் யாழ்ப்பாணத்துக்கு இந்த முனிசிப்பசல்பை கிடைத்தது. புதிய வட்டாரங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. அவர்-அவர்தான் முருகேசு வாத்தியார்-சொன்னார். ‘விக்டர்! தன்னலமற்றவர்கள், தியாகம் என்ற அக்கினிக் குண்டத்தில் புடம் போட்டெடுக்கப்பட்ட நாணயஸ்தர்கள். மக்கள் தலைவர்களாக வேண்டும். படிப்பை முன் வைத்துத் தலைவர்களை உருவாக்கி எமாந்தது போதும். உன்னதமான உத்தமத் தலைவர்கள் தொழிலாளர் மத்தியிலேதான் தோன்றுகிறார்கள். அப்படியொரு தலைவன் நீ. இந்த எலக்ஷனில் நீ பதினாலாம் வட்டாரத்திற்கு போட்டியிட வேண்டும். வெற்றி-தோல்வியல்ல முக்கியம். இலட்சியம் என்பது நீண்ட பிரயாணம். தனி ஒருவன் முன்னேறுவான்; மரிப்பான். அவன் விட்ட இடத்தில்இன்னொருவனோ, சிலரோ அணி முன்னேறி வெற்றித் துவஜத்தை அடையும். நீ போட்டியிடுவது ஒரு சலூன் தொழிலாளியும் தேர்தலுக்குநிற்கலாம் என்ற சகஜநிலையை உருவாக்கும். நான் நன்றாகப் பேசுகிறன் என்று சொல்லுகிறீர்களா? ஒரு முறை கேட்டால் எனக்குப் பாடம் வந்துவீடும். அந்தக் காலத்திலை கிடாய் விழுந்தானிலை கூத்துகளும் ஆடி இருக்கிறன். நீங்கள் விக்டர் பேசுவதைக் கேட்டிருக்க வேணும். புயலடிப்பது போலை தான் இருக்கும். அவன் கொழும்பு, காலி எல்லா இடத்திலும் பேசியிருக்கிறான். சுருட்டை மயிர் படியிறது குறைவு. தலைக்குக் கொஞ்சம் தண்­ர் போடட்டுமே?

விக்டர், நாங்கள் யார் சொன்னதையும் கேட்காமல் எலெக்ஷனுக்கு நின்றான். இந்த ஊரே தடம் புரண்டது. ‘காலம் கலிகாலம். அம்பட்டனும் தேர்தலு ககு நிற்கிறான். எல்லாம் இரண்டு காசு துள்ளுவதினாலை வந்த வினை’ என்று சாதித்தடிப்புக் கொண்ட வாடிக்கைக்காரர் இந்தச் சலூனுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்கள். ‘இதை உலகம் ஏற்குமா? அவர்களைப் பகைத்து நாம் தொழில் நடதத முடியுமா?’ என்று எதிர்த்துப் போட்டியிட்ட அபேட்சகர் கொடுத்த சாராயம் வேலை செய்ய, எங்கட சாதிக்காரரே விக்டரை எதிர்த்தனர். அதற்கு விக்டர் என்ன சொன்னான் தெரியுமே? ‘நாம் முடி வெட்டுவது அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், அவர்களும் நமது தொழிலைக் கற்றுக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கின்றேன்’ என்றான். அவன் பகிடியும் விடுவான்.

ஓமோம், பிடரிக்கு மட்டுந்தான் மெஷ’ன் போடுறன். தலையை நன்றாகக் குனியுங்கோ…. நெடுகிலும் நல்லெண்ணெய் வைத்து வந்தால் சொடுகு பிடிக்கும். ஏன்? ஆமணக்கெண்ணெய் தலைக்கு நல்ல குளிராக இருக்குமே. கதையைக் கேட்கிறீர்களா? அந்தத் தடவை விக்டருக்குக் கட்டுக்காசு கூடக் கிடைக்கவில்லை. ‘அம்பட்டனுக்கு நல்ல பாடம்’ என்று எல்லோருக்கும் நல்ல சந்தோஷம். முருகேசு வாத்தியார் மட்டும், ‘செடியை நாட்டிவிட்டோம்; இனி, அதனை வளர்ப்போம்’ என்று விக்டரை மேலும் ஊக்கப்படுத்தினார்.

அடுத்த தடவை தேர்தல் வந்தது. விக்டர் மசியல் கள்ளன்; சரியான பிடிவாதக்காரன். அவன் மீண்டும் போட்யிட்டான். முதல் தேர்தலிலை இருத் சலசலப்பு இல்லை. தேர்தலைப் பற்றி வாடிக்கைக்காரர் சலூனிலேகூடப் பேசுவார்கள். அம்முறை கட்டுக்காசு கிடைத்தது. அப்பொழுது முருகேசு வாத்தியார் பூரிப்புடன் சொன்னார். ‘நமது அணியின் ஆதரவு நன்றாக வளருகின்றது.’ மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் மூன்றாம் எலெக்ஷன் நடந்தது, சரியான போட்டி, ஒருவரும் நம்பவில்லை. விக்டர் இரண்டு வாக்குகளால் வெற்றி பெற்றான்.

மன்னிக்கவேண்டும் ஐயா. இது கண்­ர். அது நினைத்துப் பார்க்க முடியாத சங்கதி. இப்பவும் நெஞ்சு வெடிக்கிறது போலை இருக்குது. ஊர்வலம் புறப்படும் பொழுது, யாரோ வில்லூண்டித் துப்பாக்கிச் சூட்டைப் பற்றியும் சொன்னான். அவன் சரியான கரிநாக்குக்காரன்தான். வெற்றி ஊர்வலத்திலை வந்து கொண்டிருந்த விக்டர் துப்பாக்கிக் குண்டிற்குப் பலியான செய்தியை நீங்கள்? ஓமோம். அதே விக்டரின் கதையைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறன். நாலு பேர் எதிரிகள். இரண்டுபேர் எங்களுடைய சாதிக்காரர்தான். உடன் பிறந்து கொல்லும் வியாதி. ஓம், ஐயா. விக்டருக்குப் பெண்சாதி இருக்கிறாள். கிளிக்குஞ்சு மாதிரி. பாவம், சின்ன வயது. இரண்டு பிள்ளைகள். கொஞ்சம் கஷ்டப்படத்தான் போகுதுகள். நாங்கள் அதுகளை அலைய விட்டிடுவமே?

சாவதற்கு முன்னர்கூட விக்டரின் ஓர்மம் தளரவில்லை. அவன் பேசிய ஒவ்வொரு சொல்லும் எனக்கு ஞாபகம் இருக்கிறது ‘வெற்றித் துவஜத்தை அடைவதற்கு முன்னர் பலர் பலியாகலாம். நான் முதலில் பலியாவதைவிடச் சிந்த பேறில்லை, இதோ இரத்தம் அது செங்கொடியின் நிறமேதான். இந்த இரத்தத்தின் மீது ஆணையாகச் சொல்லுகிறேன். நமது அணியிலே ஒரு விக்டர் மறையலாம், ஆனால் அந்த இடத்திற்கு ஆயிரம் விக்டர்கள் தோன்றுவிட்டார்கள்.’

மன்னிக்க வேண்டும் ஐயா, மன்னிக்க வேண்டும். கன்னத்து மயிரை ஒதுக்கும் பொழுது, விக்டரின் நினைவில் கை நடுங்கி விட்டது. ‘பரவாயில்லை’ என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், மன்னிக்க வேண்டும் மயிரை நன்றாகத் துடைத்து விட்டிருக்கிறன் குளிக்கத்தானே போகிறீர்கள்?…நல்லது.

‘குறப்’ மட்டுந்தானே? எழுபத்தைந்து சதம். தம்பி, இந்தப் புட்டுவத்தில் வந்து இங்கோ…இரண்டு ரூபாய்த் தாளா? சில்லறை இருக்கிறது. இந்தாருங்கோ ஒரு ரூபா இருபத்தைந்து சதம். ஓமோம். வெளியே, எதிர்ப் பக்கச் சுவரைப் பாருங்கோ. ‘விக்டரின் பணியைத் தொடர டேவிட்டைத் தேர்ந்தெடுங்கள்’ என்ற நோட்டீஸை. டேவிட் விக்டரின் மருமகன்…சரி வாருங்கள் ஐயா.

தம்பி சுதுமலையல்லே? அங்க படிப்பித்துக் கொண்டிருந்த டீச்சர் பொடிச்சியைக் கிளப்பிக் கொண்டுபோனவன் எந்தப் பகதியாம்?…. மானிப்பாயோ? இவன் கந்தர்மடமல்லோ?… என்ன வேண்டும் ஐயா? குடையை மறந்து போய் விட்டீர்களா? அந்த மூலையிலைதான் வைத்தீர்கள். ஓம் அதோ இருக்கிறது. சரி, போயிட்டு வாருங்கோ ஐயா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *