ஷெர்லி அப்படித்தான்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 20,984 
 

காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது. வாசலில் ஷெர்லி பிராங் நின்று கொண்டிருந்தாள், அவள் பூசியிருந்த லாவெண்டர் செண்டின் நறுமணம் அவள் வீட்டிற்குள் வருவதற்கு முன்னதாகவே நுழைந்திருந்தது. இவ்வளவு அடர்த்தியான வாசனை திரவியத்தைப் பூசிக் கொள்கிற ஒரே பெண் அவளாகத் தானிருக்ககூடும்

ஷெர்லி பிராங் வாசலில் நின்று கொண்டிருக்கிறாள் என்றால் அன்று ஏழாம் தேதி என்று அர்த்தம், ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி அன்று மாலை நான்கு மணிக்கு ஷெர்லி அப்பாவைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வருவது வழக்கம், இது இருபத்தைந்து வருஷங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது,

அப்பா கடந்த ஒருவருசமாகவே நோய்முற்றி படுக்கையில் கிடக்கிறார், பேச்சும் ஒடுங்கிவிட்டது, கழிப்பறைக்குத் தூக்கி போய்விடுவதற்குக் கூட ஆள் வைத்தாகிவிட்டது, யார் அறைக்குள் போனாலும் அவருக்கு முகம் தெரியவில்லை, காதும் மங்கிவிட்டதால் சப்தமாகப் பேசிய போதும் அவர் கேட்டுக் கொண்டதாகவேயில்லை, அப்பாவை தேடி வருபவர்கள் குறைந்து போய்விட்டார்கள், ஆனால் ஷெர்லி வரத் தவறுவதேயில்லை

எங்கள் ஊரில் இருந்த ஒரே ஆங்கிலோ இந்தியப்பெண் ஷெர்லி மட்டும் தான், அவள் எப்போதும் பூப்போட்ட கவுன்களைத் தான் அணிகிறாள், பாரதி நகரில் புதுவீடு கட்டிக் கொண்டு குடியேறிய போதும் ஒரு காலத்தில் தனக்கு வாடகைக்கு வீடு கொடுத்தவர் என்ற முறையில் அப்பாவை காண வருவதை ஷெர்லி வழக்கமாகக் கொண்டிருந்தாள்

சென்ற மாதம் வந்த போது கூட அம்மா சொன்னாள்

ஏன் ஷெர்லி உன்னை இப்படி வருத்திக்கிடுறே, அவருக்கு நீ வந்து போவது கூடத் தெரியாது, உனக்குத் தான் வீண் அலைச்சல்

அப்படியில்லை மீனாம்மா, நான் உயிருடன் இருக்கிற வரைக்கு அவர் செய்த நன்றியை மறக்க கூடாது, இது என் கடமை,

என்று அப்பாவின் அறைக்குள் போய் அவர் கைகளை எடுத்து தன்னுடன் வைத்துக் கண்ணை மூடி பிரார்த்தனை செய்துவிட்டு பத்து நிமிசம் அமைதியாக உட்கார்ந்திருந்தாள், பிறகு விடைபெற்றுக் கொண்டு போய்விட்டாள்

இன்றைக்கும் அதற்காகத் தான் வந்திருக்கிறாள், என்ன மனுஷி அவள், எப்போதோ தனக்குக் குடியிருக்க வாடகை கொடுத்த ஒருவரை இத்தனை ஆண்டுகளாகத் தேடிவந்து நன்றி சொல்லி கொண்டேயிருக்கிறாளே, நன்றியுணர்ச்சி என்பது இவ்வளவு ஆழமானதா என்று தோன்றியது,

பல ஆண்டுகளாகப் பழகிப்பழகி ஷெர்லி எங்கள் வீட்டுப்பெண்களில் ஒருத்தியாகவே மாறியிருந்தாள், எனது தங்கையின் திருமணத்தின் போது ஷெர்லிக்கும் பட்டுபுடவை எடுத்துத் தந்தார்கள், அதை ஏற்றுக் கொண்டு திருமணத்தின் போது மணமகனுக்கு ஒரு மோதிரம் அணிவித்ததோடு தனது வீட்டில் புது மணத் தம்பதிகளுக்கு விருந்தும் அளித்தாள்

ஷெர்லி பேசுவது ஒரு பறவை சப்தமிடுவதைப் போலத்தானிருக்கும், ஒவ்வொருமுறை அப்பாவை காணவரும் போதும் வீட்டில் தயாரித்த முந்திரி கேக் ஒன்றினை அழகான காகிதம் சுற்றி எடுத்துக் கொண்டுவருவாள்,

ரயில்வே பீடர் ரோட்டில் எங்களுக்கு ஆறு வீடுகள் இருந்தன, அதை வீடு என்று சொல்லமுடியாது, புறாக்கூடு போன்ற சிறிய இருட்டறை, லயன்வீடு என்று சொல்வார்கள், அதில் ஒன்றில் தான் ஷெர்லி ஆரம்பக் காலத்தில் குடியிருந்தாள்,

அவளது கணவன் பிராங்க் எங்கள் ஊரில் இருந்த கேத்தி மில்லில் வேலை செய்து கொண்டிருந்தவன், அவனது புகைப்படத்தைப் பார்த்திருக்கிறேன், கிரிக்கெட் விளையாட்டுகாரன் ரோஜர் பின்னியை போன்ற முகஅமைப்பு அவனுக்கு இருந்தது,

பிராங் பர்கான்பூரில் வேலை செய்து கொண்டிருந்த போது ஷெர்லியோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது, ஷெர்லியின் கணவன் ஹெர்பட் ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தான், அவனுடன் வாழ்ந்து ஷெர்லி ஸ்டீவ் என்ற ஆண் குழந்தையைப் பெற்றிருந்தாள், அந்த நாட்களில் தன் கணவனைக் காண வந்த பிராங்கோடு டென்னிஸ் விளையாட துவங்கியதில் ஏற்பட்ட பழக்கம் அவன் மீதான காதலாக உருமாறியது

அதை ஷெர்லி ஸ்ரேஞ்ச் லவ் என்று சொல்வாள், ஸ்ரேஞ்ச் என்ற சொல்லை அவள் உச்சரிக்கும் போது தான் அதன் உண்மையான அர்த்தம் வெளிப்படுவது போலவே இருக்கும், காதலின் தீவிரத்தில் ஹெர்பட்டை விட்டுவிட்டு பிராங்கோடு அவள் மைசூருக்கு கிளம்பிப் போனாள், அங்கிருந்து கோரக்பூர், பின்பு புதுச்சேரி, அதன்பிறகு எங்கள் ஊரில் ஆரம்பிக்கபட்ட கேத்தி மில்லின் பொறியாளராகப் பிராங்க் வந்து சேர்ந்திருந்தான்

ஷெர்லிக்கு நினைவாற்றல் மிகவும் அதிகம், தான் எந்த நாளில் எந்தப் பேருந்தில் வந்து இறங்கினோம், அன்றைக்கு ஊரில் வெயில் எப்படியிருந்தது, யார் யாரை எல்லாம் சந்தித்தோம் என்பதை இப்போதும் துல்லியமாகச் சொல்வாள்,

ஷெர்லிக்குப் மூன்று பிள்ளைகள், அதில் மூத்தவன் மார்டி, இளையவன் ஹெப்பா, மூன்றாவது பெண் டோல், வந்த புதிதில் மில்லின் உள்ளேயே இருந்த குடியிருப்பில் அவர்கள் வசித்தார்கள்,

கிராப் தலையுடன் ஒரு வெள்ளைக்காரி சைக்கிள் ஒட்டிக் கொண்டு ஊரைச்சுற்றுகிறாள் என்று அன்று ஊரே அவளைப்பற்றிக் கேலி பேசிக் கொண்டிருந்தது,

ஷெர்லியின் அடையாளம் அவளது பொன்னிறமான தலைமயிர், மற்றும் சிவப்பு நிற ராலீஸ் சைக்கிள், ஷெர்லி சிகரெட் பிடிக்கிறாள் என்பதைப் பற்றி ஆண்கள் வியந்து பேசிக் கொள்வார்கள், ஷெர்லிக்குப் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம், மில்லில் நடந்த விளையாட்டு போட்டிகளின் போது அவள் அருணா ஸ்டுடியோ போட்டோகிராபரிடம் இருந்து கேமிராவை வாங்கி விதவிதமாகப் போட்டோ எடுத்தாள் என்பது பலராலும் பேசப்பட்டது,

ஷெர்லியின் கணவன் பிராங் மஞ்சள் காமாலை கண்டு இறந்து போகும்வரை அவளுக்கு அந்த ஊரில் அதிகம் ஆட்களைத் தெரியாது, காய்கறி மற்றும் பழங்கள் வாங்குவதற்கு மார்க்கெட் போய்வருவதும், ஞாயிறுகிழமைகளில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு புனிதமேரி தேவாலயத்திற்குப் பிரார்த்தனை செய்யப் போவதும், அன்றாடம் வீட்டில் இசை கேட்பதும் தான் அவள் உலகமாக இருந்தது, ஆனால் பிராங்கின் மறைவு அவளது உலகை அப்படியே கலைத்துப் போட்டது,

மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு அவள் குடியிருக்க வீடு கிடைக்காமல் தேடி அலைந்த நாட்களில் தான் அப்பாவை சந்தித்திருக்கிறாள், மழைக்காலத்தின் ஒரு அதிகாலையது,

அப்பா மில்லின் உள்ளிருந்த மைதானத்தில் நடைபயிற்சிக்கு போவது வழக்கம், நிறைய மரங்கள் அடர்ந்திருந்த மில்லின் உட்புறச்சாலைகள் மிகவும் அழகானவை, அதுவும் காலைவேளையில் பறவைகளின் சப்தமும், இலைகளின் பசுமையும் பார்த்துக் கொண்டு நடப்பதற்கு ரம்மியாக இருக்கும்,

அப்பா இது போன்ற விஷயங்களில் தேர்ந்த ரசனை கொண்டவர், மயில்சப்தம் கேட்கவேண்டும் என்பதற்காகத் தேனூத்துப் பாலம் வரை நடந்து போகிறவர் அவர், தினமும் வீட்டில் இருந்து மில் வரை சைக்கிளில் போய் இறங்கி இரண்டாவது கேட்டின் முன்பாகச் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு அப்பா இறங்கி உள்ளே நடக்க ஆரம்ப்பிப்பார், முக்கால் மணி நேர நடைக்குப் பிறகு மகிழமரத்தடியில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்வார், கண்ணை மூடிக் கொண்டு பத்து நிமிசம் இந்த உலகையே மறந்து அமர்ந்திருப்பார், அந்தப் பெஞ்ச் மழைக்காலத்தில் ஈரமாகி குளிர்ந்திருக்கும், அந்தக் குளிர்ச்சியோடு உட்காருவது ஒரு சுகம்,

அன்றைக்கும் காலையில் அவர் அப்படித் தான் நடைபயிற்சியை முடித்துவிட்டு அந்தப் பெஞ்சினை தேடி வரும்போது அதில் ஷெர்லி உட்கார்ந்திருப்பதைக் கண்டார், அவள் புகை பிடித்துக் கொண்டிருந்தாள், தனிமையில் ஒரு பெண் கவலை தோய்ந்த முகத்துடன் புகைப்பிடித்துக் கொண்டிருந்த காட்சி அப்பாவின் மனதை ஏதோ செய்திருக்க வேண்டும்,

அவர் தயக்கதுடன் அதே பெஞ்சில் தான் உட்காருவதா வேண்டாமா என்ற நின்ற போது அவள் கண்ஜாடையில் உட்காருங்கள் என்று சொல்லியிருக்கிறாள், அப்பா பெஞ்சின் ஒரு நுனியில் உட்கார்ந்து கொண்ட போது ஷெர்லி அவரிடம் தயக்கத்துடன் எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா என்று கேட்டாள்,

அப்பா அவளிடம் மை டியர் பிரண்ட், வாட் கேன் ஐ டூ பார் யூ என்று கேட்டிருக்கிறார், அறிமுகமே ஆகாத தன்னைத் தோழி என்று அவர் அழைத்த விதம் அவளை நெகிழச்செய்திருக்க வேண்டும், அவள் தனது நிர்கதியை சொல்லி அழுதிருக்கிறாள்,

அப்பா அவள் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்துவிட்டு பிறகு குழந்தைகளை அழைத்துக் கொண்டு உனது பொருட்களை எடுத்துக் கொள், வீடு நான் தருகிறேன் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்

அன்று மாலை எங்களது லயன் வீடுகளில் காலியாக இருந்த ஒன்றில் ஷெர்லியை அப்பாவே குடிஅமர்த்தியதோடு அவள் கையில் நூறு ரூபாய் பணம் கொடுத்து இதை வைத்துக் கொண்டு ஒரு தையல் மிஷினை வாங்கிப் பிழைத்துக் கொள், இந்த வீட்டிற்கு வாடகை எதையும் தர வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்

ஷெர்லி தையல்மிஷினை வாங்கவில்லை, அவள் மதுரைக்குப் போய் ஒரு கேமிராவை வாங்கி வந்தாள், திருமணவீடு, பள்ளி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் எனப் பல்வேறு புகைப்படங்களை எடுத்து தர துவங்கினாள், வீட்டிலே ஒரு அறையைப் புகைப்படப் பணிகளுக்கு ஒதுக்கி கொண்டாள், அவளது பிள்ளைகள் அரசுபள்ளியில் தான் படித்தன, அப்பா அவளிடம் வாடகை கேட்கவேயில்லை,

அழகான ஒரு இளம்பெண் உள்ளுரில் புகைப்படம் எடுத்து வாழ்வது எளிதானதில்லை, ஷெர்லியை சந்திக்கிற ஆண்கள் ஒவ்வொருவரும் அவளுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளவே ஆசைப்பட்டார்கள், அவள் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக மிகுந்த கோபக்காரி என்ற தோற்றத்தை உருவாக்கி கொண்டாள், அவளது பேச்சில், நடையில் அகம்பாவம் கொண்டவள் போலவே இருப்பாள், பொது இடங்களில் அவள் சிகரெட் புகைப்பதை பலரும் திட்டியிருக்கிறாள்,

அவள் தன்னை அவமானமாகப் பேசி ஆட்களைக் குடையால் அடித்திருக்கிறாள், ஷெர்லி குடிகாரி, போதைமருந்து சாப்பிடுகிறவள், சிறுவர்களை மயக்கி அனுபவிக்கின்றவள் என்று வதந்திகள் அவளைப் பற்றிப் பரவின,

அப்பா ஒரு போதும் அது எதையும் பற்றி அவளிடம் கேட்டுக் கொண்டதேயில்லை, அப்பா சில வேளைகளில் அவளுக்குக் கடனுதவி செய்திருக்கிறார், சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார், அப்பாவிற்கு இப்படி ஒரு பெண் தோழி இருப்பதைப் பற்றி உறவினர் பலரும் அவதூறு பேசிய போது அம்மா அது அவரது விருப்பம், அவர் மேல் எனக்கு நம்பிக்கையிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள்,

எங்கள் வீட்டில் நடக்கிற எல்லா முக்கிய நிகழ்வுகளையும் ஷெர்லி தான் புகைப்படம் எடுத்திருக்கிறாள், அப்பாவை மரநிழலில் நிற்க வைத்து அவள் எடுத்த புகைப்படம் தான் இப்போது ஹாலில் மாட்டப்பட்டிருக்கிறது, அவளுடன் நட்பாகப் பழகிய போதும் ஒரு தடவை கூட அவள் வீட்டிற்கு அப்பா போனதேயில்லை,

ஷெர்லி அப்பாவை தங்கரத்னம் என்று பெயரைச் சொல்லி தான் கூப்பிடுவாள், ரெட்டினம் என்று அவள் உச்சரிப்பதை நாங்கள் கேலி செய்வது வழக்கம், , அப்பா அவளுட்ன் ஆங்கிலம் பேசும் போது கச்சிதமான வார்த்தைகளைத் தேர்வு செய்து கவிதையைப் போல எப்படிப் பேசுகிறார் என்று எங்களுக்கு எல்லாம் வியப்பாக இருக்கும்,

அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருப்போம், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புதிய சொல்லை அவர்கள் பயன்படுத்துவார்கள், அப்படிதான் abli என்ற சொல்லை கேள்விப்பட்டேன், ஷெர்லி போன பிறகு அப்பாவிடம் அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டபோது ஐ பிலீவ் என்பதைத் தான் அப்படிச் சொல்கிறாள் என்றார்,

உன் கணவர் ஒரு ஜெம், அவரைக் கவனமாகப் பாதுகாத்து வைத்துக் கொள், கடவுள் உங்களுடன் எப்போதும் துணை இருப்ப்பார் என்று ஷெர்லி அம்மாவிடம் பலமுறை சொல்லியிருக்கிறாள்,

ஒருமுறை அம்மா உடல் நலமற்று மருத்துவமனையில் இருந்த போது யாரோ சொன்னார்கள் என்று ஷெர்லி அம்மா நலம் பெறுவதற்காக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மொட்டை அடித்துக் கொண்டு வந்து நின்றாள், அவள் கையில் திருநீறு பொட்டலம் இருந்த்து, அதைக் கண்ட அம்மா தன்னை மீறி வெடித்து அழுதுவிட்டாள், அந்த ஒரு செய்கை அவளை ஒரு உடன்பிறந்த தங்கையைப் போல அம்மாவை நினைக்கச் செய்துவிட்டது

ஒருநாள் அம்மா என்னிடம் சொன்னாள்

எங்கேயோ பிறந்து எங்கயோ வளர்ந்து நம்ம ஊர்ல வந்து புருஷனை பறிகொடுத்து மூணுபிள்ளைகளை வச்சிகிட்டுக் கஷ்டப்படுறா பாரு, அவளுக்கு நம்மளை விட்டா யாருடா இருக்கா, அவள் தலைஎழுத்து இங்கே வந்து கஷ்டப்படணும்னு எழுதியிருக்கு, அவ இடத்தில் நான் இருந்திருந்தா வேதனையில் இந்நேரம் செத்துப்போயிருப்பேன், அவளைப் பாத்து தான் நானே வாழ கத்துகிட்டேன்

தனது கஷ்டங்களைப் பற்றி ஷெர்லி யாரிடமும் புலம்பியதில்லை, தனது சந்தோஷங்களை மட்டுமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறாள், லயன் வீட்டினை ஒட்டிய சாந்தி டீச்சரின் வீட்டில் இருந்த எலுமிச்சை செடி ஒன்று ஒரு முறை சூறைக்காற்றில் விழுந்துவிட்டதை அறிந்த ஷெர்லி தானே வீடு தேடிப் போய் எலுமிச்சை செடியை முட்டுக் கொடுத்து நிறுத்தி கயிறு கொடுத்து கட்டி மறுபடி மண்ணில் வேர் ஊன்ற செய்துவிட்டாள், அது முதல் எங்கே மரம் முறிந்துவிட்டாலும் அவளைச் சொஸ்தப்படுத்த கூப்பிடுவார்கள், அவளும் போய் அதைச் சரிசெய்துவருகிறாள்,

ஷெர்லியிட்ம் சில அபூர்வமான குணங்கள் இருந்தன, அதில் ஒன்று தெருநாய்களுக்குச் சாப்பாடு போடுவது, இதற்காகவே அவள் மாட்டுஇறைச்சியை விலை கொடுத்து வாங்குவாள், தனது சைக்கிளில் வீதிவீதியாகப் போய்த் தெருநாய்களை அழைப்பாள், அவளைக் கண்டதும் நாய்கள் தானே ஒன்று கூடிவிடுகின்றன, நாய்களின் முதுகை தடவிவிட்டுக் கொண்டுவந்திருந்த உணவை நாய்களுக்குக் கொடுப்பாள், பிறகு அந்த நாய்களுடன் உடலில் உள்ள உண்ணிகளை எடுத்துப் போட்டுவிட்டுச் சண்டைபோடாமல் இருங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டுச் சைக்கிளில் புறப்பட்டுப் போய்விடுவாள்,

அவள் ஆட்டுகுட்டி ஒன்றை தனது கடைக்கு அழைத்து வந்து சாப்பிடுவதற்குக் கத்திரிக்காய் வாங்கித் தந்ததாகப் பெட்டிக்கடை கிருஷ்ணன் சொன்ன போது அது ஒன்றும் பெரிய ஆச்சரியமாக எனக்கு இருக்கவேயில்லை, ஷெர்லி அப்படித்தான்,

பள்ளி நாட்களில் அப்பா எங்களை ஆங்கிலம் படிப்பதற்காக ஷெர்லி வீட்டிற்கு அனுப்பி வைத்தார் அவள் எங்களுக்கு ஆங்கிலம் கற்று தந்ததை விடவும் விதவிதமான இனிப்புப் பணடங்களைச் செய்து தந்து சாப்பிட வைத்துச் சந்தோஷப்படுத்தியது தான் அதிகம்

அவளது மூத்தமகன் மார்டி பள்ளியின் ஹாக்கி டீமில் இருந்தான், அவன் மிகச்சிறந்த விளையாட்டுகாரன், ஆனால் கடுமையான முன்கோபி, போட்டி விளையாட்டுகளின் போது எதிரில் விளையாடுபவர்களை மட்டையால் அடித்து மண்டையை உடைத்துவிடுகிறான் என்று அவனைப் பலமுறை நீக்கம் செய்திருக்கிறார்கள்

மார்டி என்னுடன் ஸ்நேகமாக இருப்பான், அவன் தீவிர எம்ஜிஆர் ரசிகனாக இருந்தான், எந்தப் புதுப்படம் வந்தாலும் முதற்காட்சிக்கே போய்விடுவான், எம்ஜிஆரைப்போலவே இமிடேட் செய்து காட்டுவதும் அவனது வழக்கம், அவனை எப்படியாவது கப்பற்படைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது ஷெர்லியின் விருப்பமாக இருந்தது, ஆனால் அவன் அவளது ஆசையை நிறைவேற்றவில்லை, தூத்துக்குடியை சேர்ந்த ஒரு மீனவப்பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டு கருவாட்டு வியாபாரி ஆகிப்போனான், அதில் ஷெர்லிக்கு பயங்கரமான மனவருத்தம், அவள் கவலையுற்ற நாட்களில் அதிகம் வேலை செய்வாள், மனதை துயரத்திலிருந்து விடுபடச் செய்வதற்குக் கடினமான வேலைகளைச் செய்ய வேண்டும் என்று அவளது அம்மா கற்றுத் தந்திருப்பதாகச் செர்ல்வாள்,

அடுத்தவன் ஹெப்பா, இடது கை பழக்கம் கொண்டவன், அவன் தான் அந்த வீட்டிலே பூஞ்சை, சில சமயம் எங்கள் வீட்டிற்கு அவனையும் ஷெர்லி அழைத்து வருவாள் ,

எனது அம்மா தரும் காபியை ஹெப்பா ஒரு போதும் குடித்ததேயில்லை, அவனால் சூடான எதையும் ஒரு மடக்கு கூடக் குடிக்க முடியாது, அவள் ஒரு குளிர்பிராணி, ஐஸ்கட்டிகளை வாங்கி வாயில் போட்டுத் தின்கிறான், எங்கள் ஊரின் பனி இவன் ஒருவனுக்குள் தான் மிச்சமிருக்கிறது என்பாள், ஹெப்பா நன்றாக மவுத் ஆர்கான் வாசிப்பான், அதற்காகவே அவனைத் தேடி நான் போயிருக்கிறேன், அதிலும் ஹிந்திபாடல்களை அவன் வாசிக்கக் கேட்பது மயக்கம் தருவதாக இருக்கும்,

ஹெப்பா ஒருவன் தான் தனது தந்தையை அடிக்கடி நினைத்துக் கொள்கின்றவன், அப்பாவின் மரணத்தைப் பற்றி அவன் நினைக்க ஆரம்பித்த நாட்களில் சாப்பிடவே மாட்டான், யாருடனும் பேசவும் மாட்டான், மவுத் ஆர்கான் வாசித்துக் கொண்டே இருப்பான், அந்த இசையில் பீறிடும் துயரத்தை கேட்டு ஷெர்லி அழுவாள்,

அவன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இந்தக் கைகளால் அப்பாவை தொட்டு இருக்கிறீர்கள் தானே, அதை எனக்குத் தாருங்கள், உங்கள் வழியாக நான் அப்பாவை தொட்டுக் கொள்கிறேன் என்று கேட்பான், இருவரும் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு அழுவார்கள்,

அவன் தான் முதன்முதலாக என்னைக் கோனியாக் குடிப்பதற்குப் பழக்கியவன், யாரோ நண்பன் கொடுத்தது என்று ரகசியமாக ஒரு மூடி கோனியாக் பிராண்டியை எனக்குக் குடிக்கத் தந்து நண்பனே ஒரு பெண்ணை முத்த்மிடுவதைப் போல ரசித்துக் குடிக்க வேண்டும், என்னைப் பார் என்று ஒவ்வொரு சொட்டாக அவன் சுவைத்துக் குடித்தான்,

ஹெப்பா கிறிஸ்துமஸ் காலங்களில் எங்கள் வீட்டிற்கும் ஒரு நட்சத்திரம் கொண்டுவந்து கட்டிவிட்டு போவான், மேடைநாடகங்களில் நடிப்பான், யாருடனாவது பைக்கில் ஏறிக் கொண்டு ஊரை சுற்றிக் கொண்டேயிருப்பான், ஒரு நாள் இல்லட்ஸ்ரேடட் வீக்லியில் அவனது கவிதை வெளியாகி இருப்பதை எடுத்துக் கொண்டு வந்து காட்டினான்,

ஷெர்லி அந்தச் சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக வான்கோழி பிரியாணி செய்தாள், ஹெப்பா தனது நண்பன் ஒருவனின் கல்யாணத்திற்காகச் சோழவந்தான் போய்விட்டு இரவில் திரும்பி வரும் போது சாலை விபத்தில் லாரியில் மோதி இறந்து போனான், அவன் உடலை பெற்றுக் கொள்வதற்காக ஷெர்லியை அழைத்துக் கொண்டு அப்பா தான் போயிருந்தார்,

ஷெர்லி மகனின் சாவில் உடைந்து போயிருந்தாள், ஆறுமாதம் காலம் அவள் படுக்கையிலே கிடந்தாள், நாள் முழுவதும் மகனை நினைத்து அழுவதும் நினைத்தாற் போல எழுந்து பிரார்த்தனை செய்து கொள்வதுமாக நாட்களை ஒட்டினாள், அப்போது எனது அம்மா தினசரி அவளைப் போய்ப் பார்த்து வருவது வழக்கம்,

பின்பு ஒருநாள் ஷெர்லி உடலும் மனமும் தேறி வந்து புகைப்படம் எடுக்கத் துவங்கினாள், அந்த வீட்டிலே ஷெர்லியோடு சதா சண்டையிடுகின்றவளும் இந்தியாவைச் சுத்தமாகப் பிடிக்க்காதவளுமான வளர்ந்தவள் டோல், எப்படி அது போல ஒருத்தி தனக்கு மகளாகப் பிறந்தாள் என்று ஷெர்லி திட்டியிருக்கிறாள்,

டோல் மிகவும் கர்வமான பெண், தான் ஒரு அழகி என்ற பெருமிதம் கொண்டவள், அத்துடன் தான் ஒரு ஆங்கிலோ இந்தியப்பெண் என்பதை ஒவ்வொரு அசைவிலும் நிரூபணம் செய்து கொண்டேயிருப்பாள், மற்றவர்கள் பேசும் ஆங்கிலத்தைக் கடுமையான கேலி செய்வது, பையன்களைப் போலக் கிரிக்கெட் விளையாடுவது, பியர் குடிப்பது என டோலி செய்யாத வேலைகளே இல்லை,

அவளைக் காதலித்த உள்ளுர் பையன்களை அவள் தன் பின்னால் சுற்றி அலைய விட்டாள், பின்பு ஒரு நாள் அவளை விடப் பதினைந்து வயது மூத்த டாக்டர் இமானுவேலை தான் பதிவு திருமணம் செய்து கொண்டதாகச் சொன்ன போது ஷெர்லி அவளைக் குடையால் அடித்து வீட்டை விட்டு துரத்திவிட்டாள், அந்த டாக்டரை ஆண்டவர் பார்த்துக் கொள்வார் என்று சாபமிட்டார், அதன்பிறகு ஷெர்லி தனிமையில் வாழத்துவங்கினாள், முன்பு போல அவள் புகைப்படம் எடுப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை, மனதை அழுத்தும் வலியில் இருந்து விடுபடுவதற்காகப் பின்னல் வேலை செய்யத் துவங்கி நாள் முழுவதும் லேஸ் பின்னிக் கொண்டேயிருந்தாள், அவள் பின்னிய ஒரு வெண்ணிற ஸ்கார்பை அப்பாவிற்குப் பரிசாகத் தந்திருக்கிறாள்,

ஷெர்லியின் மூத்தபையன் மார்டி ஒரு நாள் திரும்பிவந்து தன்னோடு வந்துவிடும்படியாக அவளைத் தூத்துக்குடிக்கு அழைத்துக் கொண்டு போனான், தனது தங்கை டோலி அந்த டாக்டருடன் மும்பையில் சந்தோஷமாக வாழ்கிறாள் என்று மார்டி சொன்னதைக் கூட ஷெர்லி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை

தூத்துக்குடியில் இருந்து பத்தே நாட்களில் திரும்பிவந்துவிட்டாள், குழந்தைகள் இல்லாத அந்த வீட்டில் இருப்பது மூச்சுமுட்டுகிறது, தான் ஒரு புதுவீடு கட்டப்போகிறேன், அதில் தான் மட்டுமே வசிக்கப் போவதாகச் சொல்லியதோடு வங்கி கணக்கில் இருந்த பணதை எடுத்து பாரதி நகரில் ஒரு வீடு கட்ட துவங்கினாள்

அப்பா தான் அந்த வீட்டினை திறந்து வைத்தார், அழகிய வீடாக இருந்தது, அந்த வீட்டில் அப்பாவின் புகைப்படம் ஒன்றினை ஹாலில் மாட்டி வைத்திருந்தாள், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அவள் அப்பாவிற்கு இங்கில்பெர்ட்டின் இசைத்தட்டுகளைப் பரிசாகக் கொடுத்தாள், அதை வாங்கிக் கொண்டதும் ப்ரோ, உங்களுக்கு மனக்கஷ்டமாக இருந்தால் இதில் உள்ள லவ் மீ வித் ஆல் யுவர் ஹார்ட் பாடலை கேளுங்கள், அது ஒரு அருமருந்து என்று சொன்னாள்

அப்பா அதன்பிறகு தான் இங்கில்பெர்ட்டின் இசைக்கு அடிமையாகத் துவங்கினார், எங்கள் வீட்டில் பக்லும் இரவும் இங்கில்பெர்ட் பாடிக்கொண்டேயிருந்தார், அந்தக் குரலில் ஏதோவொரு மாயமிருந்தது, தேனை சுவைத்து சாப்பிடுவதைப் போல அப்பா அதைத் துளித்துளியாக ருசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்,

ஒருமுறை ஷெர்லி சொன்னாள்

மனிதர்களைத் துயரத்தில் இருந்து மீட்பதற்காகவே பாடகர்களைக் கடவுள் படைத்திருக்கிறார், இங்கிள்பெர்ட் மதராசில் பிறந்தவன், அவன் குரலில் நம் ஊரின் வாசம் அடிக்கிறது

ஷெர்லி நம் ஊர் என்று தமிழ்நாட்டினை குறிப்பிட்டதை அப்பா பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தார், ஷெர்லி தனது துயரங்களைத் தனக்குள் ஒடுக்கி கொண்டு சகமனிதர்களைப் பூரண அன்புடன் நேசிக்கத் தெரிந்திருந்தாள், அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று தோன்றியது

•••

காலிங் பெல்லின் ஒசை மறுபடி கேட்டது, மாடியில் இருந்து நான் இறங்கி வருவதற்குள் உறக்கம் கலைந்த அம்மா வாசல் கதவை திறந்துவிட்டு மிருதுவான குரலில் வெல்கம் ஷெர்லி என்று அழைக்கிற சப்தம் கேட்டது,

இட் இஸ் மை ஸ்மால் கிப்ட் என்றபடியே ஷெர்லி கேக்கை முன்னால் நீட்டினாள், பிறகு என்னைப் பார்த்து புன்முறுவல் செய்தபடியே

ஹெ இஸ் யுவர் லைப் மை சன் என்று கேட்டாள்

கிரேட் என்று சொன்னேன், அவள் தலையசைத்துவிட்டு மெதுவாக அப்பாவின் அறையை நோக்கி நடந்து போனாள், அம்மா கிச்சனுக்குப் போய் ஷெர்லிக்காகக் காபி தயாரிக்க ஆரம்பித்தாள், நான் ஷெர்லியிடம் பேச வேண்டும் என்று ஹாலில் உட்கார்ந்து கொண்டேன்,

ஷெர்லி அயர்ந்து கிடக்கும் அப்பாவின் அருகில் போய் அவரது கைகளை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள், நீண்ட நேரம் அவருக்காகக் கண்ணை மூடி பிரார்த்தனை செய்தாள், பிறகு யாரும் தன்னைப் பார்க்கிறார்களா என்று சுற்றிலும் திரும்பி பார்த்துவிட்டு அப்பாவின் காதருகே போய்ச் சொன்னாள்

பிரண்ட், எனது மகள் டோலி கருக்கொண்டிருக்கிறாள், நான் பாட்டி ஆகப்போகிறேன், இந்தச் சந்தோஷத்தை உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன், உனது மனம் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் என்று எனக்குத் தெரியும், நீ என்னைப் புரிந்து கொண்ட ஒரு மனிதன்,

டோலி நேற்று இரவு என்னிடம் போனில் பேசினாள், பேசினால் என்பது கூடத் தவறு, அழுதாள், கர்ப்பிணியாக உள்ள தன்னோடு உடன் வந்து இருக்கும்படியாக அழைக்கிறாள், நான் மும்பைக்குப் போக இருக்கிறேன், ஒருவேளை இந்த ஊருக்கு நான் இனிமேல் திரும்பி வராமலே போகவும் கூடும், உன்னிடமிருந்து விடைபெறுவதற்காகத் தான் வந்திருக்கிறேன், மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற நாளில் நீ செய்த உதவி தான் என்னை வாழ வைத்திருக்கிறது, நீ ஒரு உன்னதமான மனிதன், நீ செய்த நன்றியின் அடையாளமாக உன்னை ஒரு முத்தமிட விரும்புகிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று குனிந்து உறங்கும் அப்பாவின் தலையில் அவள் முத்தமிட்டுவிட்டு கசியும் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள், பிறகு விடுவிடுவெனப் படி இறங்கி வெளியே போகத் துவங்கினாள்,

அம்மா காபி கொண்டுவருவதற்குள் ஷெர்லி போயிருந்தாள், எஙகே ஷெர்லி எனக்கேட்ட போது இப்போது தான் போகிறாள், என்றேன்

அவளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை விசித்திரமான பெண் என்று அம்மா சொன்னாள்

நானும் தலையாட்டிக் கொண்டேன்

அம்மா அவள் கொண்டுவந்த கேக்கை பிரிட்ஜில் எடுத்து வைக்கும்படியாகச் சொன்னாள்

நான் ஷெர்லியின் கேக்கை பிரித்த போது அதில் Goodbye friend என்று அழகாக வெண்ணிற கிரிமீல் எழுதப்பட்டிருந்தது, அதைப் பார்த்தபோது என்னை அறியாமல் கண்கள் கலங்கியது, ஷெர்லி அடிக்கடி சொல்லும் ஸ்ரேஞ்ச் என்ற சொல் ஏனோ மனதில் வந்து போனது

– அந்திமழை இதழில் வெளியானது

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஷெர்லி அப்படித்தான்

  1. அழகான வரிகள் ..ஆத்மார்த்தமான உணர்வுகள் ..தனது துயரங்களைத் தனக்குள் ஒடுக்கி கொண்டு சகமனிதர்களைப் பூரண அன்புடன் நேசிக்கத் தெரிந்திருந்தாள், அது எவ்வளவு பெரிய பாக்கியம்

  2. உங்களுடைய சிறுகதையின் பாதிப்பிலிருந்து என்னை நான் மீள்வதற்கு வெகு நேரம் பீடிக்கின்றது…….சின்ன சின்ன உணர்வுகளை என்னால் மென்மையாக உணரமுடிகின்றது ….. நன்றி …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *