வேண்டாத வேலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 8,411 
 

கேளம்பாக்கம், சென்னை. நடுத்தர வர்க்க மக்கள் கடனில் கட்டிய வீடுகள். அதில் ஒன்று.

நேரம் காலை 7.30 மணி. கோபி தனது மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். வயது ஒரு 30 இருக்கும். ஒரு கணிணி சம்பந்தபட்ட அலுவலகத்தில் மென்பொருள் எழுதும் வேலை. வீடு அவனது அப்பாவுடையது. மாடியை வாடகைக்கு விட்டிருந்தார்கள்.

மாடி வீட்டு அனு. 7 வயது பள்ளி சிறுமி. சீருடையில், தூக்க முடியாமல் புத்தக பையுடன் மாடியிலிருந்து இறங்கினாள்.

“ஹாய் அனு, ஸ்கூல் கிளம்பியாச்சா!” கோபியின் கேள்விக்கு அனுவின் “ஆமா!” முனகல்.

வாசலில், அனுவைப்போலவே 7-8 சிறுவர் சிறுமியர். பள்ளி பேருந்துக்காக காத்துக்கொண்டு. ஸ்கூல் பஸ் வந்தது. வழக்கம் போல் ஒரு 30 அடி தள்ளி நின்றது. பசங்கள் ‘ஓ’வென்று சத்தம் போட்டுக்கொண்டு ஓடி, ‘நான் முந்தி நீ முந்தி’ என்று முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினர். அனு கொஞ்சம் பின்னால்.

இது தினம் நடப்பது தான். பார்த்துக்கொண்டே இருந்த கோபி, ஒரு நாள், அனுவிற்கு உதவி செய்ய நினைத்தான்.

மத்தவங்க விஷயத்திலே தேவையில்லாமல் தலையிடுவது கோபியின் ஹாபி. தான் கொஞ்சம் புத்திசாலி என நினைப்பு அவனுக்கு.

அனுவிடம் கேட்டான்: “ஆமாம்! நீ ஏன் பஸ் பிடிக்க ஒரு நாளைப் போல ஓடற? சீட் கிடைக்காதா?”

“ஏன் கேக்கறீங்க அண்ணா ? எல்லோருக்கும் சீட் இருக்கே!” – அனு

“பின்னே ஏன் முன்டியடிச்சிகிட்டு ஓடற?” -கோபியின் அடுத்த கேள்வி.

“முதல்லே வண்டியிலே ஏறணும்! அதுக்கு தான்.”- அனு

“ஏன் முதல்லே வண்டியிலே ஏறணும்?” – விடுவானா கோபி.

“இது வரைக்கும் நான் பஸ்லே முதல்லே ஏறினதே இல்லே. எல்லாரும் எனக்கு முன்னாடியே போயிடறாங்க.” சொல்லும்போதே அனுவின் கண்கள் குளமானது.

“சரி! சரி , நீ ஏன் முதல்லே ஏறணும்? என்ன கிடைக்கும் ? சாக்லேட்? வேறே எதாவது பரிசு?”

அனு கொஞ்சம் யோசித்தாள். “ஒண்ணும் இல்லே!”.

“அப்போ ஏன் ஓடணும்?” கோபி கேட்டான்.

அனு மீண்டும் யோசித்தாள். “தெரியல்லையே!” புரிந்ததோ இல்லையோ, அனு ஓடி விட்டாள்.

****
அடுத்த நாள் காலை. வாசலில் கோபி வழக்கம்போல். அனுவின் “ஹலோ அண்ணா” குரல். பஸ் வந்தது. பசங்க அனைவரும் ஓடினர், அனுவைத்தவிர. அவள் மட்டும் நிதானமாக போய் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு கோபியை பார்த்து கையாட்டினாள்.

ரொம்ப சந்தோஷமாக இருந்தது கோபிக்கு. அனுவிற்கு ஒரு பெரிய விஷயத்தை ரொம்ப சுலபமாக விளக்கிய திருப்தி. தன்னைத்தானே “நீ பெரிய புத்திசாலிடா கோபி” மார்பில் தட்டிக்கொண்டான்.
அவன் பண்ணின வேண்டாத வேலையின் விபரீதம், அப்போது அவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

****
மூன்று நாள் கழித்து. அனுவின் அம்மா, கோபியின் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

“என்ன ஆச்சுன்னே தெரியலை! திடீர்னு அனுவின் போக்கே புரிபடலை. பசங்க கூட விளையாட மாட்டேங்கிறா. “சும்மா பந்து போட்டு பிடிச்சு விளையாடறாதாலே என்ன லாபம்? ஓடிப்போய் கம்பம் தொட்டு திரும்பி ஓடி வந்து விளையாடறது என்ன பிரயோசனம்? நான் விளையாட போகலை! போகமாட்டேன்.” இதுமாதிரி ஏடாகூடமாக பேசறா. பள்ளி வகுப்பாசிரியை என்னை பள்ளியிலே வந்து பாக்க சொல்லியிருக்காங்க!” அனுவின் அம்மா குரலில் கவலை தெரிந்தது.

தற்செயலாக அங்கே வந்த கோபிக்கு ‘சொடேர்’ என்றது. ஐயையோ ! அனுவின் மாற்றத்திற்கு தான் தான் காரணமோ? அனு போட்டு கொடுத்து விட்டால், அம்மாவுக்கு கொலவெறி வந்துடுமே!.

****
இது நடந்து மூன்று நாட்கள் இருக்கும். அன்று ஞாயிற்றுக்கிழமை. அம்மா சொல்படி, வீட்டில் ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தான் கோபி. மெல்லியதாக ‘க்ருக் க்ருக்’ என்று ஒரு சத்தம். ஒரு கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாக உருமாற கூட்டை உடைத்துக் கொண்டிருந்தது. தலை வெளியே. இறக்கை இன்னும் வெளியே வரவில்லை. “ஐயோ பாவம்!”. பூச்சியின் அவஸ்தை, பரோபகாரி கோபிக்கு மனம் தாங்கவில்லை. உதவி செய்ய ஆசை. ஒரு மெல்லிய குச்சி எடுத்து அந்த கூட்டை , ரொம்ப மெதுவாக குத்தி உடைத்தான். வண்ணத்துப்பூச்சி, கூட்டை விட்டு, வெளியே. கோபி மனம் இறக்கை கட்டி பறந்தது. ஆஹா! பூச்சியை காப்பாற்றி விட்டோமே!”. பூச்சி மெல்ல தத்தி தத்தி நடந்தது. ..நடந்தது…. நடந்தது.

ஆனால் பறக்கவேயில்லை. பார்த்துக்கொண்டேயிருந்தான்.

‘ஐயையோ! பூச்சிக்கு என்ன ஆயிற்று?’ இறக்கை இரண்டும் ஒட்டிக்கொண்டு, அது பறக்க முடியாமல் கீழே விழுந்து விட்டது. கோபிக்கு புரிந்தது. கூட்டை அவசரப்பட்டு உடைத்ததனால், பூச்சிக்கு இந்த நிலை. பூச்சியை அதன் போக்கில் விட்டிருந்தால், பூச்சி , தானே, அடித்து பிடித்து கூட்டை விட்டு வெளியே வந்து பறந்திருக்கும். பறக்கமுடியாமல் இப்போது பூச்சி இறந்து விடுமோ? தான் பூச்சி விஷயத்தில் தலையிட்டிருக்க கூடாதோ?

****
மறுநாள் காலை நேரம் 7.30 மணி. கோபி தனது மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். பள்ளிக்கு போக தயாராக அனுவும், கூட அவள் அம்மாவும். அவள் அம்மா திட்டி கொண்டே வர, அனு கோபி பக்கம் கை காட்டி ஏதோ சொல்லி கொண்டே வந்தாள். அனு அம்மா, கோபியை பார்த்த பார்வையில் நெருப்பு.

பள்ளி பஸ் வந்தது. பசங்கள் ‘ஓ’வென்று சத்தம் போட்டுக்கொண்டு ‘நான் முந்தி நீ முந்தி’ என்று ஓடி, முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினர். அனுவின் அம்மா அனுவை ஓடிபோய் ஏற ஊக்குவித்தார் . அவளும் ஓடிப்போய் முண்டியடித்து ஏறினாள். அனு சிரிக்க, அம்மா கை காட்டி அனுப்பி வைத்தார்.

அப்பா! தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. அனுவின் அம்மா அனுவின் பிரச்சினையை கண்டித்து பேசி, சரி செய்து விட்டார். . வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட இதெல்லாம் ஒரு முன்னோட்டம் போலிருக்கு. .

.. முடிவு செய்து விட்டான் கோபி, ஹாபியை மாற்றுவதென்று. இனி, முந்திரி கொட்டையாக, மற்றவர் காரியங்களில், மூக்கை நுழைப்பதில்லை. தேவையில்லாமல் தலையிடுவதில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *