வீடும் கதவும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 23,504 
 

பெரியார் நகரில் பாவேந்தர் தெருமுனைக்கு வந்ததும், எத்தனையாவது வீடு என்ற குழப்பம் சகுந்தலாவுக்கு வந்தது. ஐந்தாவது வீடு என்ற நினைவு இருந்தது. `போன் போட்டுக் கேட்கலாமா?’ என யோசித்தாள். போனை எடுத்தாள். அதற்குள், `அஞ்சாவது வீடுதான். வடக்குப் பார்த்த வீடு’ என நினைவுக்குவந்த மாதிரி சொன்னாள். ஆனாலும் சந்தேகத்துடன் நடக்க ஆரம்பித்தாள். மேற்கில் இருந்து நடந்துவந்து ஐந்தாவது வீட்டின் முன்பாக நின்றாள். வீட்டின் தோற்றம், அவள் முன்னர் பார்த்ததற்கும் இப்போதைக்கும் பெரிய மாற்றத்துடன் இருந்தது; குழப்பத்தை உண்டாக்கிற்று. வீட்டின் எண்ணைப் பார்த்தாள். `80′ என இருந்தது. வீட்டின் எண்ணும் அவளுக்கு மறந்துபோனது. பெயர்ப்பலகை இருக்கிறதா எனப் பார்த்தாள். `சபாநடேசன் எம்.ஏ., எம்.எட்., ஆசிரியர்’ என எழுதித் தொங்கவிடப் பட்டிருந்ததைப் பார்த்ததும் `இந்த வீடுதான்’ எனச் சொல்லிக்கொண்டே அழைப்பு மணி எங்கே இருக்கிறது எனத் தேடி அழுத்தினாள். அப்போது வெளிநாட்டு நாய் ஒன்று அவளைப் பார்த்து முறைத்தது. நாயைப் பார்த்துப் பயந்தாள். இரண்டாவது முறை மணியை அழுத்தி, சிறிது நேரம் கழிந்த பிறகுதான் கதவைத் திறந்தாள் ரேவதி. சகுந்தலாவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு “பிரசிடென்ட் மேடம், என்ன திடீர்னு வந்து நிக்கிறாங்க?’’ எனக் கேட்டுச் சிரித்தாள்.

“வீட்டு நம்பர் மறந்துபோச்சு. அஞ்சாவது வீடுங்கிறது மட்டும்தான் ஞாபகத்துல இருந்தது. ஒரு நிமிஷம் டென்ஷன் ஆகிருச்சு. என்ன… நாய் எல்லாம் புதுசா இருக்கு?’’

“நாலு அஞ்சு வருஷம் கழிச்சு வந்தா அப்படித்தான். உள்ளாற வா’’ எனச் சொல்லி, சகுந்தலாவின் கையைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள் ரேவதி. சோபாவில் அருகருகே உட்கார்ந்துகொண்டனர்.

“என்ன திடீர்னு வந்து வாசல்ல நிக்கிற… ஒரு போன் பண்ணிட்டு வந்திருக்கக் கூடாது?’’

“நான் உனக்கு போன் பண்ணிட்டுத்தான் வரணுமா?’’ – கோபம் வந்த மாதிரி சகுந்தலா கேட்டாள்.

“ச்சீ கழுதை… நீ எப்ப வேணும்னாலும் வா… போ. திடீர்னு பார்த்ததும் ஆச்சர்யமாப்போச்சு. அதனாலதான் கேட்டேன். என்ன சாப்பிடுற?’’

“ஒண்ணும் வேணாம். உன்கூட உட்கார்ந்து பத்து நிமிஷம் தனியா பேசினா போதும், மனசு நிறைஞ்சிரும்.’’

“காலேஜ்ல படிக்கும்போது விடிய விடியப் பேசினது எல்லாம் மறந்துட்டியாடி கழுதை’’ – ரேவதி உற்சாகமாகச் சிரித்தாள்.

“நீதான் எல்லாத்தையும் மறந்துட்டே. போன் போடுறது இல்லை; நான் போட்டாலும் பேசுறது இல்லை.’’

“உன்கிட்ட பேசாம நான் எங்கே போறேன்? கிளாஸ் ரூம்ல இருக்கும்போது போன் வந்தா, நான் பேச மாட்டேன்’’ எனச் சொன்ன ரேவதி கேட்டாள், “திருடி… திடீர்னு வந்திருக்கியே… என்ன விஷயம்? வந்தவ நேரா வீட்டுக்குள்ளார வரவேண்டியதுதானே… எதுக்கு மணியை அடிச்சிக்கிட்டு நிக்கிற?’’

“நானும் அவரும்தான் வர்றதா இருந்தோம். கிளம்பும்போது திடீர்னு பீ.டி.ஓ ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அதனால ‘நீ போயிட்டு வந்துடு’னு சொல்லிட்டார். அவரோட வந்தா, `கிளம்பு… கிளம்பு’னு நச்சரிப்பார். உன்கிட்ட அஞ்சு நிமிஷம்கூடப் பேச முடியாது. `நீ போயிட்டு வந்துடு’னு சொன்னதுமே `சரி’னு கிளம்பி வந்துட்டேன்’’ – உற்சாகமாகச் சொன்னாள் சகுந்தலா. திடீரென நினைவுக்கு வந்த மாதிரி, “எங்கே… உங்க சாரைக் காணோம்?’’ எனக் கேட்டாள்.

“நீ என்னைப் பார்க்க வந்தியா… இல்லை அவரைப் பார்க்க வந்தியா?’’

“உன்னைத்தான் பார்க்க வந்தேன். `எங்கே?’னு கேட்கக் கூடாதா? உங்க சாரை நான் பிக்கப் பண்ணிக்கிட்டுப் போயிடுவேன்னு நினைச்சியா?’’ – சகுந்தலா வாய் நிறையச் சிரித்தாள்.

“பிக்கப் பண்ணிக்கிட்டுப்போயேன். சனியன் விட்டதுனு போறேன்’’ – சிரித்த ரேவதி, “ `பொண்ணைப் பார்த்துட்டு வர்றேன்’னு மெட்ராஸுக்குப் போயிருக்கார்’’ என்றாள்.

“நீயாவது வீட்டுல இருந்தியே… அதுவே போதும்’’ எனச் சொன்ன சகுந்தலா, ஜவுளிக்கடை பையில் வைத்திருந்த சில்வர்தட்டை எடுத்து அதில் வாழைப்பழம், ஆப்பிள், வெற்றிலைப்பாக்கு, பூ, கல்யாணப் பத்திரிகை என ஒவ்வொன்றாக வைத்துக்கொடுத்தாள்.

தட்டை வாங்கிக்கொண்டே ரேவதி, “யாருக்குடி கல்யாணம்? எனக்கு எதுக்கு வெளி ஆள் மாதிரி ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் செய்யுற?’’ எனக் கேட்டாள்.

தட்டை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு, கல்யாணப் பத்திரிகையை எடுத்துப் பார்த்தாள். ஆச்சர்யப்பட்ட மாதிரி, “நம்ப ரம்யாவுக்கா கல்யாணம்?! போன வருஷம்தான் பி.எட் முடிச்சா. அதுக்குள்ளாற எதுக்குக் கல்யாணம்… சின்னப் புள்ளைதானே? வேலை கிடைச்ச பிறகு செய்ய வேண்டியதுதானே?’’ – அக்கறையுடன் கேட்டாள்.

“சொன்னேன்… கேக்கலை. `வேலை வர்றப்ப வரட்டும். வர்ற எலெக்‌ஷன்ல ஜெயிக்க முடியுமோ… முடியாதோ. பவர்ல இருக்கும்போதே கல்யாணத்தை முடிச்சிடணும். அப்பதான் நல்ல கூட்டம் வரும்; மரியாதையாவும் இருக்கும்’னு சொல்லிட்டார். நானும் `வேலை முடிஞ்சா சரி’னு சொல்லிட்டேன்.’’

“பையன் என்ன பண்றான்?’’ என்று கேட்ட ரேவதி, கல்யாணப் பத்திரிகையைப் பிரித்து மாப்பிள்ளை பெயர் போட்டிருந்த இடத்தைப் பார்த்தாள்.

“இன்ஜினீயரா… நல்ல கம்பெனியிலதான் வேலைபார்க்கிறான். இன்ஜினீயருக்கு இன்ஜினீயர் பொண்ணுதானே பார்ப்பாங்க?’’ எனக் கேட்டாள்.

“முன்னதான் அப்படி. இப்ப இன்ஜினீயர், டாக்டருக்குப் படிச்சவன் எல்லாம் டீச்சருக்குப் படிச்ச பொண்ணா இருந்தா பரவாயில்லைனு சொல்லி அலையுறானுவ’’ – சகுந்தலா சிரித்தாள்.

“சொந்தமா?’’

“பிறத்திதான். பீ.டி.ஓ ஆபீஸ்ல வேலை பார்க்கிறவரோட சொந்தக்காரப் பையன். அவருக்குப் பிடிச்சிருச்சு… முடிச்சிட்டார்.’’

“உனக்குப் பிடிக்கலையா?’’

ரேவதி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், “நான் முன்னாடி வந்தப்ப இருந்ததைவிட வீடு ரொம்ப மாறியிருக்கு’’ – வீட்டை ஒரு பார்வை பார்த்தாள்.

“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் மேல்மாடி கட்டினேன். தரையையும் மாத்திட்டேன். வீட்டை கொஞ்சம் ஆல்ட்டர் செஞ்சேன். நீ அடிக்கடி வந்தாத்தானே தெரியும்!’’ – கோபித்துக்கொண்டாள் ரேவதி.

“நான் உன்னைப் பார்க்க வந்து மூணு நாலு வருஷம் இருக்குமா?’’

“இருக்கும். மேடம் ரொம்ப பிஸிதான். பிரசிடென்ட் ஆகிட்டில்ல. அப்படித்தான் இருப்ப. அதிகாரத் திமிருடி உனக்கு’’ – சகுந்தலாவின் தொடையில் லேசாக அடித்தாள்.

“பசங்க எப்படி இருக்காங்க?’’

“பையன் முன்னாடியே வேலைக்குப் போயிட்டான். உனக்குத் தெரியும். பொண்ணு இப்பதான் வேலைக்குப் போனா. ஆறு மாசம் இருக்கும். பழைய காலம் மாதிரி இல்லை. இன்ஜினீயரிங் படிச்சவங்களுக்கு இப்ப வேலை கிடைக்கிறது ரொம்பக் கஷ்டமா இருக்கு. `இன்ஜினீயரிங் ஏன் படிக்கவெச்சோம்?’னு இருக்கு. டீச்சருக்குப் படிக்கவெச்சிருக்கலாம். சம்பளமும் அதிகம்; வேலையும் கம்மி’’ என ஆரம்பித்த ரேவதி, தன் மகன் எப்படிப் படித்தான், எப்படி வேலைக்குப் போனான், எவ்வளவு கஷ்டப்படுகிறான் எனச் சொல்ல ஆரம்பித்தாள். பிறகு, கல்லூரியில் படித்ததைப் பற்றி சொல்ல ஆரம்பித்ததும், சகுந்தலாவும் சேர்ந்துகொண்டு கல்லூரி நண்பர்கள், பேராசிரியர்கள் பற்றி பேச ஆரம்பித்தாள். இருவரும் மாறிமாறி தங்களுடைய கல்லூரிக் காலத்தைப் பற்றி பேசினார்கள். நேரம் பற்றிய கவனம் இருவரிடமும் இல்லை. ஏதோ நினைவுக்கு வந்தமாதிரி “நான் கிளம்பட்டுமா?’’ சகுந்தலா கேட்டாள்.

“அதுக்குள்ளாற என்ன அவசரம்?’’

“நேரமாகிருச்சு.’’

“ஒரு நேரமும் ஆகலை. புருஷன் – பிள்ளைனு இல்லாம இன்னிக்கித்தான் அதிசயமா ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கோம். அதுக்குள்ளாற போறாளாம்’’ – சகுந்தலாவின் தலையில் கொட்டிய ரேவதி, “என்னடி… தலையில பாதி முடியைக் காணோம்?’’ எனக் கேட்டாள்.

“வயசாகுதுல்ல. சரி… நான் கிளம்புறேன்.’’

“பிரசிடென்ட்டுங்கிற திமிர்ல பேசுறியாடி நாயே..?’’

“பிரசிடென்ட்டுதான். ஆனா, எப்பவும்போல சோறுதான் ஆக்குறேன்; துணிதான் துவைக்கிறேன்; வீட்டு வேலைதான் செய்றேன்’’ – சகுந்தலா சிரிக்க முயன்றாள். ஆனால், சிரிப்பு வரவில்லை.

“ரெண்டு பீரியடுதானே ஜெயிச்ச?’’ சந்தேகப்பட்டது மாதிரி ரேவதி கேட்டாள்.

“ம்’’ என சகுந்தலா தலையை மட்டும் ஆட்டினாள். சகுந்தலாவின் முகம் வாடிப்போனதைப் பார்த்த ரேவதி கேட்டாள்…

“என்னாச்சு… எதுக்கு அவ்வளவு சலிப்பா சொல்றே?’’

“பிரசிடென்ட்டுதான். ஒன்பது வருஷம் முடிஞ்சுபோச்சு. பீ.டி.ஓ ஆபீஸ், கலெக்டர் ஆபீஸ்னு இதுவரை நான் எங்கேயும் அதிகம் போனது இல்லை. அவர்தான் போவார்… வருவார்’’ – சொல்லிவிட்டு அடுத்த சோபாவில் கிடந்த நாய் பொம்மையைப் பார்த்தாள். அது தன்னையே பார்ப்பது மாதிரி அவளுக்குத் தோன்றியது.

“என்னடி சொல்ற சகுந்தலா?!’’ – ஆச்சர்யமாகக் கேட்டாள் ரேவதி.

“நிசம்தான்.’’

“ஊராட்சி மன்ற அலுவலகம்னு இருக்குமே… அங்கேயாச்சும் நீ போயிருக்கியா?’’

“இல்லை.’’

“ஒரு நாள்கூடப் போனது இல்லையா?’’ – சகுந்தலா சொன்னதை நம்பாத மாதிரி கேட்டாள் ரேவதி.

“பொய்யா சொல்றேன்… போனது இல்லை. இந்த ஒன்பது வருஷத்துல, பிரசிடென்ட் நாற்காலியில நான் உட்கார்ந்ததுகூட இல்லை’’ – சிரித்தாள் சகுந்தலா. அதில் அவளுக்கு மகிழ்ச்சியும் இல்லை… வருத்தமும் இல்லை.

“ஆச்சர்யமா இருக்கு’’ – ரேவதிக்கு, குரல் மாறிவிட்டது. சகுந்தலா சொல்வதை அவளால் நம்ப முடியவில்லை. கிண்டலாகக் கேட்டாள்…

“கையெழுத்தாவது நீ போடுவியா?’’

“இல்லை.’’

“பொய் சொல்லாதேடி.’’

“அவர்தான் போடுவார்.’’

“உன் கையெழுத்தையா?’’ – நம்ப முடியாத விஷயத்தைக் கேட்ட மாதிரி வாய் அடைத்துப்போனாள் ரேவதி. “அதிசயம்தான்!’’ எனச் சொல்லிவிட்டு சகுந்தலாவின் முகத்தைப் பார்த்துக் கேட்டாள், “நூறு நாள் வேலைத் திட்டம், கட்டடம் கட்டுறது, ரோடு போடுறது, தெருவிளக்குப் போடுறதுனு பணம் வருமே… அதை எல்லாம் யார் எடுப்பா?’’

“அவர்தான்.’’

“கவர்மென்ட் பணம், செக்காத்தானே வரும்?’’

“செக்கை அவரே மாத்திடுவார்.’’

“சத்தியமா?’’

“ஆமான்டி. இதுல புதுசா என்ன இருக்கு… நூத்தியெட்டு கேள்வி கேக்குறே?’’

“யாரும் கேக்க மாட்டாங்களா?’’

“எதுக்கு?’’

“கையெழுத்துப் போடுறதுக்கு, தலைவர் ஸீட்டுல உட்கார்றதுக்கு.’’

“பீ.டி.ஓ ஆபீஸ்லையும் சரி, பள்ளிக்கூடம், பேங்க்னு எங்க போனாலும் அவரைத்தான் `தலைவர்’னு சொல்வாங்க தெரியுமா?’’ – வாய்விட்டுச் சிரித்தாள் சகுந்தலா.

“சத்தியமா?’’ – சகுந்தலா சொல்கிற விஷயங்களில் ஒன்றைக்கூட ரேவதியால் நம்பமுடியவில்லை.

“பொம்பளை பிரசிடென்ட், கவுன்சிலர், சேர்மனா இருக்கிற இடங்கள்ல எல்லாம் இப்படித்தான் நடக்கும். இது ஊரு உலகத்துக்கே தெரியும். ரகசியம் ஒண்ணும் இல்லை. பள்ளிக்கூடத்துல கொடி ஏத்தக்கூட அவர்தான் போவார் தெரியுமா? யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.’’

“நீ என்னதான் செய்வ?’’ – கிண்டலாகக் கேட்டாள்.

“நாமினேஷன் கொடுக்கும்போது கூடப் போவேன். அப்புறம் கவுன்ட்டிங்குக்குப் போவேன்’’ – சகுந்தலா வாய்விட்டுச் சிரித்தாள்.

“நீ ஒண்ணும் கேக்க மாட்டியா?’’

“என்ன கேக்குறது? அவர்தான் 24 மணி நேரமும் அலயுறார்; பணம் புரட்டுறார்; ஊரு ஆளுங்களை எல்லாம் சரிகட்டுறார்; பிராந்தி வாங்கித் தரார். என்னால இதெல்லாம் செய்ய முடியுமா?’’ – லேசாகச் சிரித்த சகுந்தலா சட்டென உற்சாகமாகி, “ஊரு சனங்க திட்டுறதையும் வாங்கிக்குவார். சங்கடப்பட மாட்டார்’’ என்று சொன்னாள்; சிரித்தாள்.

“கஷ்டம்தான்’’ எனச் சொன்ன ரேவதி, “கூல்டிரிங்க் குடிக்கிறியா?’’ – சகுந்தலா என்ன பதில் சொல்கிறாள் எனக் கேட்காமல் எழுந்து போய் ஃப்ரிட்ஜைத் திறந்து சாக்லேட் டப்பாவை எடுத்து வந்து கொடுத்தாள். ஒரு சாக்லேட்டை எடுத்து வாயில் போட்டு மென்று தின்ற சகுந்தலா, “நான் கிளம்பட்டுமா?’’ எனக் கேட்டாள்.

“அதெல்லாம் முடியாது. இன்னொரு சாக்லேட் எடுத்துக்க. நீ சொல்ற எதையும் என்னால நம்பவும் முடியல… நம்பாம இருக்கவும் முடியல’’ எனச் சொன்னாள்.

“இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.”

“என்ன கூல்டிரிங்க் குடிக்கிற… கோக், ஃபேன்டா?”

“மோர் இருந்தா கொடு. இல்லைன்னா எலுமிச்சை ஜூஸ்.”

“அதெல்லாம் விட்டு பத்து வருஷத்துக்கு மேல ஆகிருச்சு. இப்ப எல்லாம் யாரு வந்தாலும், யார் வீட்டுக்குப் போனாலும் கூல்டிரிங்க்தான்.”

“வேணாம். ஏப்பம் ஏப்பமா வரும். நெஞ்சைக் கரிக்கும்.”

சகுந்தலா, நாய் பொம்மையைப் பார்த்தாள்; அதன் கண்களைப் பார்த்தாள். பிறகு, ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியைப் பார்த்தாள். பிறகு, ரொம்பவும் களைப்படைந்துவிட்ட மாதிரி சொன்னாள்… “எங்கே கடன் வாங்குறார், என்ன செலவு செய்றார், எதுவுமே எனக்குத் தெரியாது. நானும் கேட்கிறது இல்லை. மீறிக் கேட்டா, ‘இதுல உனக்கு வேலை இல்லை’னு சொல்வார். நானும் `சனியன்… நமக்கு எதுக்கு?’னு கேக்குறது இல்லை. எப்பவும்போல என் வேலை என்னவோ அதைச் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.’’

“சரி… ஓட்டுக் கேட்கவாவது நீ போனியா… இல்லியா?’’

மொட்டையாகச் சொன்னாள், “இல்லை.’’

“அப்படியா… நிசமாவா?’’ – கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்டாள். சகுந்தலா எவ்வளவு சொல்லியும் ரேவதி நம்பவில்லை.

“அப்புறம் எப்படி ரெண்டு முறை ஜெயிச்சே?’’

“உள்ளூர்தானே… அவர் பார்த்துக்குவார்.’’

சகுந்தலாவின் முகம், கை கால்கள், கட்டியிருந்த புடவை என ஒவ்வொன்றாகப் பார்த்த ரேவதி, “என்னடி… இவ்வளவு நரைச்சிப்போச்சு? சாட்டைசாட்டையா நீட்டுநீட்டா முடி இருக்கும். எல்லாம் கொட்டிப்போயி எலி வாலாட்டம் இருக்கு. தலைமுடியை வெச்சுக்கிட்டுத்தானே காலேஜ்ல பெரிய ராணி மாதிரி சுத்தின? எல்லாப் பயலையும் உன் பின்னாடி சுத்தவுட்ட?’’ எனச் சொல்லிவிட்டு, சகுந்தலாவின் சடையை எடுத்துப் பார்த்தாள்.

லேசாகச் சிரித்த சகுந்தலா சொன்னாள்… “வயசாவுதுல்ல… நீயும் நானும் காலேஜ்ல படிச்சு 25 வருஷமாகிருச்சு தெரியுமா? நீ டீச்சர்… டை அடிப்ப.’’

தலைக்கு டை அடிக்கிற விஷயத்தை சகுந்தலா சொன்னதும் பேச்சை மாற்றினாள் ரேவதி.

“உங்க வீட்டுக்காரர் நல்ல ஆளுதானே?’’

“எத்தனை வருஷம் கழிச்சுக் கேக்குற? எலெக்‌ஷன்ல நின்னதில் இருந்துதான் குணம் கெட்டுப்போயி நிக்கிறார். ஊரு ஆளுங்களுக்கு பிராந்தி வாங்கிக்கொடுக்கிறேன்னு ஆரம்பிச்சு, இப்ப அவரும் தினம் குடிக்கிறார். வர்ற எலெக்‌ஷன்ல எங்க யூனியன், பொம்பளைக்குனு மாறப்போவுதாம். அதனால அடுத்த முறை சேர்மனுக்கு நிக்கணும். அதுக்கு கவுன்சிலர் ஆவணும்னு இப்பவே மூணு ஊர்ல ‘கட்சிப் பக்கமே ஓட்டு போடுங்க. ஊருக்கு இவ்வளவுனு மொத்தமா பணம் தர்றேன். காலனிக்கும் ஊருக்கும் தனித்தனியா கோயில் கட்டித் தர்றேன்’னு பேசிக்கிட்டிருக்கார்; பிராந்தி வாங்கித்ந்துக்கிட்டிருக்கார்.’’

“இந்த மாதிரி வர்ற பணத்துல கோயில் கட்டலாமா?”

“ஊரு உலகத்துல எல்லாம் அப்படித்தானே நடக்குது?”

“ `நான் நிக்க மாட்டேன்’னு சொல்ல வேண்டியதுதானே?’’ – அக்கறையுடன் சொன்னாள் ரேவதி.

“சொன்னா கேட்டாதானே? பிரசிடென்டுக்கு நின்னாலும், கவுன்சிலருக்கு நின்னாலும் நான் சும்மாதானே? பேருக்குத்தான் என் பேரு. `பிரசிடென்ட்’னும் `கவுன்சிலர்’னும் அவரைத்தானே கூப்பிடுறாங்க. சாராய போதையைவிட அதிகாரப் போதை பெருசு தெரியுமா?’’

“ஆச்சர்யமா இருக்கு. மத்த பொம்பளை பிரசிடென்ட் எல்லாம் எப்படி?’’

“பி.எஸ்ஸி படிச்ச எனக்கே இந்த நிலைமைன்னா, படிக்காத, பத்தாவது, பன்னிரண்டாவது படிச்ச பொம்பளைங்க எப்படி இருப்பாங்க… வெறும் பேருதான்” – சகுந்தலா சத்தம்போட்டுச் சிரித்தாள்.

“நீ சொல்ற எதுவும் எனக்குப் புரியல. இரு வர்றேன்’’ எனச் சொல்லிவிட்டு எழுந்து சமையலறைக்குச் சென்றாள். அடுப்பைப் பற்றவைத்தாள். பால் குண்டானை எடுத்து அடுப்பில் வைத்தாள். ஃப்ரிட்ஜில் இருந்த பாலை எடுத்து ஊற்றிக் கொதிக்கவைத்தாள்.

ரேவதி சமையலறைக்குப் போனதும், சகுந்தலா வீட்டை ஒரு பார்வை பார்த்தாள். ஃபிளாட் டி.வி., பெரிய பெரிய சோபா, அழகான ஷோகேஸ், விலை உயர்ந்த ஜன்னல் திரைச்சீலைகள், இரண்டு ஏ.சி அறை, கிரானைட் தரை, டைனிங் டேபிள், டிரெஸ்ஸிங் டேபிள் என, வீடு பார்ப்பதற்கு அமர்க்களமாக இருந்தது. எழுந்து நின்று, வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். அழகாக இருந்தது. கடைசியாக சமையலறைக்கு வந்தாள். மாடுலர் கிச்சன் பிரமாதமாக இருந்தது. `சமையலறைக்கு எவ்வளவு செலவு செய்தாய்?’ எனக் கேட்கத் தோன்றியது. தவறாக நினைப்பாள் என்பதால் எதுவும் கேட்காமல், ரேவதிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு, “உங்க சார் எப்படி இருக்கார்… எப்ப வருவார்?’’ எனக் கேட்டாள்.

“நல்லா இருக்கார்’’ என அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

“எதுக்கு இழுத்தாப்ல சொல்றே?’’

“ஒண்ணும் இல்லை’’ ரேவதியின் முகம் கோணிற்று. அதைப் பார்த்த சகுந்தலா, “எனக்குத் தெரிஞ்சு உங்க சார் நல்லவர்தான்டி’’ எனச் சொன்னாள்.

“ஆமா… ஆமா…’’ – அழுத்தமாகச் சொன்னாள். பிறகு சிரித்தாள். அவளுடைய சிரிப்பில் உயிர் இல்லை. கொதித்துக்கொண்டிருந்த பாலின் மீது டீத்தூளைக் கொஞ்சம் போட்டாள். பொங்கிவிடாமல் இருக்க அடுப்பைக் குறைத்துவைத்தாள்.

எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ரேவதியைப் பார்த்த சகுந்தலா, கேலியாகச் சொன்னாள், “நம்ம ரூம்மேட்லயே நீதான் அழுத்தம் பிடிச்சவ. எதையும் வெளியே சொல்ல மாட்டே. என்னை மாதிரி ஓட்டைவாயும் இல்லை. `நீ பெரிய திருடி’னு நம்பகூடப் படிச்ச எல்லாருக்குமே தெரியும்’’ – கலகலவெனச் சிரித்தாள். ரேவதியும் சிரித்தாள். ஆனால், சத்தம் வெளியே வரவில்லை.
டீ நன்றாகக் கொதித்துவிட்டது தெரிந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, டீயை வடிக்கட்டினாள் ரேவதி. சர்க்கரை போட்டாள். இரண்டு மூன்று முறை நன்றாக ஆற்றி, இரண்டு டம்ளர்களில் ஊற்றினாள். ஒரு டம்ளரை எடுத்து சகுந்தலாவிடம் கொடுத்தாள்.

“மத்தவங்க டீ போட்டு தந்து, அதை வாங்கிக் குடிக்கிறப்ப இருக்கிற சுகமே தனிதான்’’ எனச் சொல்லிவிட்டு டீயை ஒரு வாய் குடித்தாள். பிறகு சிரித்துக்கொண்டே, “உனக்கு ஒண்ணும் சர்க்கரை வியாதி இல்லையே?’’ எனக் கேட்டாள்.

“இருக்கு… நீ வந்ததால சர்க்கரையைக் குறைச்சிப்போட மறந்துட்டேன்.’’

“அதானே பார்த்தேன். வாத்தியார், பேராசிரியர்களுக்கு எல்லாம் சர்க்கரை வியாதி இல்லாம இருக்காதே” – சகுந்தலா சிரித்தாள்.

“மகளுக்குக் கல்யாணம் கட்டப்போற. ஆனா, உனக்கு அந்தக் காலத்துல இருந்த குசும்புப் பேச்சு மட்டும் இன்னும் போகலை. கழுதை’’ – ரேவதி சிரித்தாள்.

பிறகு, “வா… ஹாலுக்குப் போவோம்’’ எனச் சொல்லிவிட்டு, ஹாலுக்கு வந்து முன்புபோலவே சோபாவில் உட்கார்ந்துகொண்டாள். பின்னாலேயே வந்த சகுந்தலாவும் முன்புபோலவே உட்கார்ந்துகொண்டு டீயை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தாள்.

“என்ன திடீர்னு டல்லாயிட்ட?’’

ரேவதி வாயைத் திறக்கவில்லை. டம்ளரில் இருந்த டீயையே பார்த்தாள். பிறகு, ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியைப் பார்த்தாள். சுவரில் மாட்டியிருந்த சபாநடேசனுடைய போட்டோவைப் பார்த்தாள். திரும்பவும் டீ டம்ளரைப் பார்த்தாள். சகுந்தலாவை மட்டும் பார்க்கவில்லை.

சந்தேகப்பட்ட சகுந்தலா கேட்டாள், “என்னாச்சு?’’

ரேவதி, சிறிது நேரம் எதுவும் பேசவில்லை; ஒரு வாய் டீ குடித்தாள்; அங்கும் இங்குமாகப் பார்த்தாள். அதனால் மிகவும் முக்கியமான கேள்வியைக் கேட்பது மாதிரி சகுந்தலா கேட்டாள்…

“நீ சந்தோஷமா இருக்கியாடி?’’

“இல்லாம என்ன?’’ – மொட்டையாகப் பதில் சொன்னாள் ரேவதி. பெரிதாக மூச்சுவிட்டாள். நிதானமான குரலில் சொன்னாள்…

“நான் முதன்முதல்ல வேலைக்குப் போனப்ப, எல்லாம் சேர்த்து 910 ரூபாய்தான் சம்பளம். இப்ப, 64 ஆயிரம். சம்பளம் கூடியிருக்கு. வீடு மூணு மாடி ஆகியிருக்கு. வீட்டுல பொருட்கள் எல்லாம் கூடியிருக்கு. ரெண்டு ஏ.சி இருக்கு. கார் இருக்கு. பேங்க்ல பணம் இருக்கு. ரெண்டு பிள்ளைகளும் வேலைக்குப் போயிருச்சுங்க. லாக்கர்ல நகைகள் இருக்கு. வீட்டுவாசல்ல வெளிநாட்டு நாய் கட்டியிருக்கு. அதுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 200 ரூபாய் செலவு ஆகுது. எல்லாம் இருக்கு. காலேஜ்ல நீயும் நானும் சிரிச்சோமே அந்தச் சிரிப்பு மட்டும் இல்லை’’ – பேச்சை நிறுத்திவிட்டு, ஒரு வாய் டீ குடித்தாள். என்ன தோன்றியதோ பாதி டம்ளரில் டீ இருக்கும்போதே, குடிக்கப் பிடிக்காதவள் மாதிரி டம்ளரை தரையில் வைத்தாள். சகுந்தலாவின் கையை எடுத்து, மடியில் வைத்துக்கொண்டு உடைந்துபோன குரலில் சொன்னாள்.

“பணம், நகை, கார், வீடு, புருஷன், புள்ளைங்க… எல்லாம் இருக்கு. ஆனா, சந்தோஷம் மட்டும் இல்லை’’ – ரேவதியின் கண்களில் நீர் திரண்டு நின்றதைப் பார்த்துப் பதறிப்போன சகுந்தலா, “என்னடி சொல்றே… எதுக்கு கண்ணு கலங்குது?’’ எனக் கேட்டாள்.

சகுந்தலா கேட்டது, தன்னையே பார்ப்பது என எதையும் கவனிக்காத ரேவதி, ரொம்பவும் தாழ்வான குரலில் சொன்னாள், “நம்ம படிக்கிறப்ப எங்க அப்பா மாசத்துக்கு
25 ரூபாதான் மணியார்டர் அனுப்புவார். உனக்குத் தெரியும். அந்தப் பணத்தை வாங்குறப்ப மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? மனசு நிறைஞ்சிருக்கும். ஆனா,
64 ஆயிரம் ரூபாய் வாங்கிறப்ப அது இல்லை’’ – ரேவதியின் கண்களில் மீண்டும் நீர் வழிந்தது. சகுந்தலாவைப் பார்க்காமல் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது மாதிரி சொன்னாள்…

“அப்பா அம்மாகூட புள்ளையா இருக்கோம் பாரு… அதோடு முடிஞ்சுபோகுது சந்தோஷம்… சிரிப்பு… வாழ்க்கை… எல்லாம்.’’

ரேவதியின் பேச்சும் அழுகையும், சகுந்தலாவை ஆச்சர்யப்பட வைத்தன. பொதுவாக அதிகம் பேசக்கூடிய ஆள் அல்ல. அதிகம் சிரிக்க மாட்டாள். சத்தம்போட்டுக்கூடப் பேச மாட்டாள். பத்து வார்த்தைகள் பேசினால் ஒரு வார்த்தைதான் பேசுவாள். அவளா அழுகிறாள், அவளா கூடுதலாகப் பேசுகிறாள் என ஆச்சர்யப் பட்ட சகுந்தலா, மேலும் நெருக்கமாக நகர்ந்து உட்கார்ந்து, ரேவதியின் கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு கேட்டாள்…

“என்னடி ஆச்சு… உனக்கு?’’

“காலையில எங்க அம்மா வந்துட்டுப் போச்சு. கவர்மென்ட் ஆஸ்பத்திரியில சுகர் மாத்திரை வாங்க வந்துச்சாம்’’ – சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டுச் சொன்னாள்… “எங்க அம்மா சுகர் பேஷன்ட் தெரியுமா? நான் 64 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறேன். எங்க அம்மா கவர்மென்ட் ஆஸ்பத்திரியில இலவச மாத்திரைக்கு வரிசையில பொழுது முழுக்க நிக்குது…’’ – ரேவதியின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.

“நீ வாங்கித் தரவேண்டியதுதானே?’’

“பணம்?’’

“என்னடி சொல்றே?’’

“உண்மையைத்தான் சொல்றேன். எங்கிட்ட ஏது பணம்?’’ – கண்ணீரை மறைப்பதற்காக தொலைக்காட்சியைப் பார்த்தாள். புதிதாகப் பார்ப்பது மாதிரி ஷோகேஸில் உள்ள பொருட்களைப் பார்த்தாள். வீட்டில் உள்ள மற்ற பொருட்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்தாள். ஒவ்வொரு பொருளையும் பார்க்கப் பார்க்கத்தான் அவளுக்குக் கண்ணீர் கூடுதலாக வந்தது.

“சம்பளப் பணத்தை என்ன செய்யுற?’’

“ஏ.டி.எம் கார்டு அவர்கிட்டதான் இருக்கு.’’

“நீ பணத்தை எடுத்துத் தரவேண்டியதுதானே?’’

“தபால்ல ஏ.டி.எம் கார்டு வந்த அன்னிக்குப் பார்த்ததுதான். இந்தப் பத்து வருஷத்துல அதை எடுத்துக்கிட்டுப் போயி நான் ஒரு நாளும் பணம் எடுத்தது இல்லை. பின்நம்பர்கூட எனக்குத் தெரியாது’’ – முகத்தைத் தாழ்த்திக்கொண்டாள்.

முந்தானையால் கண்களைத் துடைத்தாள். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. ரேவதியின் பேச்சு, சகுந்தலாவை அமைதியாக்கிவிட்டது. என்ன பேசுவது எனத் தெரியாமல் உட்கார்ந்திருந்தாள்.

கையில் போட்டிருந்த வளையல்களை மேலேயும் கீழேயும் நகர்த்திவிட்டபடியே ரேவதி சொன்னாள், “ஏ.டி.எம் கார்டு வந்த இந்தப் பத்து வருஷத்துல என் சம்பளப் பணத்தை நான் மொத்தமா ஒருமுறைகூட கண்ணால கண்டது இல்லை. ஸ்கூல்ல சம்பளம் வாங்குறப்ப இருந்த சந்தோஷம் இப்ப இல்லை. சம்பளம் வாங்குற அன்னிக்கி மத்தியானம் சாப்பிட்டதுமே சாப்பாட்டு டப்பாவை, கேரியரைக் கழுவி வெயில்ல காயவெச்சிருவோம். சம்பளத்தை வாங்கி மூணு முறை எண்ணுவேன். அப்புறம் ஹேண்ட் பேக்குல வெச்சா திருடன் அடிச்சிட்டுப்போயிடுவான்னு சாப்பாட்டு டப்பாவுல, கேரியருல வெச்சு எடுத்தாருவேன். ஸ்கூல்ல இருந்து வீடு வரைக்கும் சாப்பாட்டுக் கூடை நினைப்பாவே இருக்கும். இப்ப எதுவும் இல்லை. அப்ப லோன் போட்டா அஞ்சு ஆயிரம் ஆறாயிரம்தான் வரும். அதை ஒரு கோடி ரூபாயைத் தூக்கிட்டு வர்ற மாதிரி வருவேன். எல்லா டீச்சர்ஸும் அப்படித்தான் செய்வாங்க. இப்ப எதுக்குப் பணம்னு ஆகிப்போச்சு.

910 ரூபாய் கொடுத்த சந்தோஷத்தை 64 ஆயிரம் கொடுக்கலை’’ – ரேவதியின் கண்கள் கலங்கின.

“காரணம் இல்லாம எதுக்கு நீ அழுவுற?’’ – ரேவதியின் தோளில் தட்டினாள் சகுந்தலா.

“சம்பளத்துல ஒரு எட்டணா மாத்தி சொல்ல முடியாது தெரியுமா? சம்பளம், அக்கவுன்ட்ல ஏறின மறுநிமிஷமே மெசேஜ் வந்துரும். அதுவும் அவருக்குத்தான் வரும்.’’

“உன் செல் நம்பர் என்னாச்சு?’’

“முதல்ல அவர்தான் செல்போன் வாங்கினார். அப்புறம் நாலைஞ்சு வருஷம் கழிச்சுத்தான் எனக்கு வாங்கினேன். அதனால அவர் நம்பரை பேங்க்ல கொடுத்தாச்சு.’’

தொலைக்காட்சியைப் பார்த்தாள் ரேவதி. பிறகு, ஹாலை ஒரு பார்வை பார்த்தாள். சுவரில் சிரித்தபடி தொங்கிக்கொண்டிருந்த சபாநடேசன் போட்டோவைப் பார்த்தாள். அடுத்து மகனுடைய மகளுடைய போட்டோக்களைப் பார்த்தாள். போட்டோக்களில் எல்லாரும் நன்றாகச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். ரேவதி, சகுந்தலாவை மட்டும் பார்க்கவில்லை.

அப்போது சோர்ந்துபோய் சகுந்தலா சொன்னாள், “நம்ப ரூம்மேட் நாலு பேர்ல நீ ஒருத்திதான் டீச்சராப்போய் வசதியா, சந்தோஷமா இருக்கேன்னு நினைச்சேன்.’’

“தினமும் இருபது ரூபாய் பஸ்ஸுக்குனு டேபிள் மேல வெச்சிடுவார். அதுவும் சில்லறையா.’’

“நீ கூடுதலா கேட்கவேண்டியதுதானே… உனக்குத் துப்பு இல்லை?’’

“ `டீ குடிக்க, காபி குடிக்க காசு தாங்க’னா?’’ – ரேவதி கேட்டவிதம், அவள் ரொம்பவும் கோபமாக இருக்கிறாள் என்பதைக் காட்டியது. சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு சகுந்தலா கேட்காமலேயே சொன்னாள், “முன்னெல்லாம் ஸ்கூலுக்கு, புடவைக் காரங்க சம்பளம் வாங்குற அன்னிக்கு வருவாங்க. இருநூறு ரூபா புடவையை முந்நூறு ரூபானு சொல்வோம். ரெண்டு மூணு புடவை எடுத்தா இருநூறு முந்நூறு ரூபா ரகசியமா கிடைக்கும். அதைத்தான் டீச்சர்ஸ் அப்பா அம்மாவுக்குக் கொடுப்பாங்க. இல்லைனா தம்பி, தங்கச்சிக்குக் கொடுப்பாங்க. நானும் அப்படிச் செஞ்சிருக்கேன். எனக்குனு எடுக்கிற புடவையை என் அம்மாவுக்கு, தம்பி பொண்டாட்டிக்குக் கொடுத் திருக்கேன். இப்ப அந்த மாதிரி எல்லாம் செய்ய முடியாது. மளிகைக்கடை, துணிக்கடைனு எல்லாத்துலயும் கம்ப்யூட்டர் பில் வந்திருச்சு. காபிக்குக்கூட கம்ப்யூட்டர் ‘பில்’தான். ஒரு ரூபா மாத்தி சொல்ல முடியாது. `பில் எங்கே?’னு கேட்பார்.’’

“நீ பணம் கேட்டா, உங்க சார் கொடுக்க மாட்டாரா?’’

“ `டீ குடிக்க, காபி குடிக்க, தலைவலி மாத்திரை வாங்க காசு கொடுங்க’னு நான் கேட்கணுமா? நான் கேட்க மாட்டேன்’’ – வீம்பாகச் சொன்னாள் ரேவதி.

“அவர் வாத்தியார்தானே? மனுஷங்களைப் புரிஞ்சிக்க வேணாம்? அப்புறம் என்ன வாத்தியார்?’’ – கோபமாகக் கேட்டாள்.

“நீ எதுக்கு சாதாரண விஷயத்துக்கு எல்லாம் அழுவுற… `பணம் கொடுங்க’னு நீ கேட்டு, அவர் `தர முடியாது’னு சொன்னாரா?’’ – சகுந்தலா அதிகாரமாகக் கேட்டாள்.

“இல்லை… எவ்வளவு கேட்டாலும் எண்ணி டேபிள் மேல வெச்சிடுவார்.’’

“அப்புறம் என்ன?’’

“நீயே எடுத்துக்கனு சொல்ல மாட்டார். எண்ணாம வைக்க மாட்டார். அதுதான் சிக்கல்’’ – ரேவதியின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.

“நீ ஏன் அவர்கிட்ட கேக்குற… நீயே எடுத்துக்க வேண்டியதுதானே? அப்பா – அம்மாவுக்குக் கொடுக்கிறதுக்கு இல்லாத பணம், வேற எதுக்கு இருக்கு?’’

“உனக்குப் புரியலை சகுந்தலா. அது ஒரு ஃபீலிங். சில விஷயங்களைப் பேசாம, நினைக்காம இருக்கிறதுதான் மனசுக்கு நல்லது. மீறி நினைச்சா என்னென்ன பூதம் எல்லாம் வருமோ. நீ என் ஃப்ரெண்ட். உங்கிட்ட உண்மையைச் சொல்லாம, வேற யார்கிட்ட சொல்லப் போறேன்… என் பணம்தான். ஆனா, நான் செலவுசெய்ய முடியாது. இந்த வீடு என் பேர்லதான் இருக்கு. மூணு பிளாட்டும் என் பேர்லதான் இருக்கு. பேங்க்ல லோனும் என் பேர்லதான் இருக்கு” எனச் சொன்ன ரேவதி, சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு, நிதானமாகச் சொன்னாள்.

“ஊர்க்காரங்க, சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, வேண்டினவங்கனு யாராச்சும் வீட்டுக்கு வந்துட்டுப் போகும்போது, ‘இந்தா… இதை பஸ்ஸுக்கு வெச்சுக்கங்க’னு பத்து ரூபா என் இஷ்டத்துக்குக் கொடுத்தது இல்லை. அவர்கிட்ட சொல்லித்தான் கொடுக்கணும். அப்படி சொல்லும்போது எல்லாம் எவ்வளவு அசிங்கமா இருக்கும் தெரியுமா? ஊர்ல என் தம்பி மூணு பிள்ளைங்களை வெச்சுக்கிட்டுக் கஷ்டப்படுறான். அவன் பிள்ளைங்களுக்கு பொங்கல், தீபாவளிக்குக்கூட ஒரு துணி எடுத்துத் தர முடியலை. நூறு இருநூறு மறைச்சுக் கொடுக்கலாம். அது அசிங்கம். என் பணத்தை நானே திருடணுமா? வெக்கமா இருக்குடி.’’

“நீ பேசுறது புதுசா இருக்கு’’ – லேசாகச் சிரித்தாள் சகுந்தலா.

“எங்க தாத்தா காலத்தில் இருந்து, எங்க அப்பா காலத்தில் இருந்து, என் தம்பி காலம் வரைக்கும் எங்க வீட்டுல வேலைசெஞ்சவர் போனவாரம் செத்துப் போயிட்டார். `இருநூறு ரூபாய்க்கு மாலை வாங்குங்க’னு சொன்னேன். அம்பது ரூபாய்க்கு மாலை வாங்கிப் போட்டார். அன்னிக்குப் பூராவும் நான் சாப்பிடவே இல்லை. அவர் செத்தது ஒரு கஷ்டம். இருநூறு ரூபாய்க்கு மாலை வாங்கி என் இஷ்டத்துக்குப் போட முடியலையேனு இன்னொரு கஷ்டம். மனசு ரொம்பப் பாரமாகிருச்சு. சாவு செலவுக்கு வெச்சுக்கனு ஆயிரம் – ரெண்டாயிரம்னு கொடுக்க முடியலை” – ரேவதியின் கண்களில் நீர் பீறிட்டது.

“சின்ன விஷயத்தை எல்லாம் பெருசு பண்ணாதே.”

“ `இது என் ஏ.டி.எம் கார்டு. என்கிட்டதான் இருக்கும்’னு சொல்லி, சம்பளத்தை தானே எடுத்து செலவுசெய்ற ரகம் ஒண்ணு இருக்கு. எங்க போனாலும் நானும் கூட வருவேன்னு சொல்லி ஜோடி போட்டுக்கிட்டுப் போற ரகம் ஒண்ணு இருக்கு. ஏ.டி.எம் பின்நம்பர்கூடத் தெரியாத என்னை மாதிரி ஒரு ரகமும் இருக்கு. டீச்சர்ஸ்ல இப்படி மூணு வகைகள் இருக்கு.’’

“எது அதிகம்?’’

“என் ரகம்தான்’’ – ரேவதி லேசாகச் சிரித்தாள். பிறகு, லேசாக உற்சாகம் வந்த மாதிரி சொன்னாள்… “புருஷன் டீச்சரா இல்லாம வேற டிபார்ட்மென்ட்ல இருக்கிற வீட்டுல பரவாயில்லை. புருஷனும் டீச்சரா இருந்தா கதை முடிஞ்சிரும். ஒரு பைசா மாத்தி சொல்ல முடியாது’’ – முன்பைவிட இப்போது ரேவதி கூடுதலாகச் சிரித்தாள்.

“வீட்டுக்கு வீடு பிரச்னை தான்.’’

“அது இல்லைடி சகுந்தலா, ஒரு கடைக்குப் போறோம், நம்ம கையால நாலு காசு செலவு செய்யணும்னு ஒரு ஆசை இருக்காதா? நான் செலவுசெஞ்சாலும் இந்த வீட்டுக்குத்தானே செலவுசெய்யப்போறேன்… என்ன வாழ்க்கை?’’ – உடைந்துபோன குரலில் சொன்னாள்.

“மாசம் 64 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற உனக்கே இந்த நிலைமைனா என்னைப் பத்தி என்ன சொல்றது?’’- சகுந்தலா சிரித்தாள். பிறகு, “எங்க வீட்டுக்குப் பணம் எப்படி வருது, எப்படி போகுதுனு எனக்குத் தெரியாது. கேட்டா, ‘உங்க அப்பன் வீட்டுல இருந்து கொண்டாந்தியா?’னு கேட்பார். அதனால நான் வாயைத் திறக்கிறது இல்லை. மீறி வாயைத் திறந்தா `பிரசிடென்டுங்கிற திமிர்ல பேசுறியா?’னு கேட்பார்’’ எனச் சொல்லும்போது அவளுடைய செல்போன் ஒலித்தது.

“அவர்தான் கூப்பிடுவார்’’ – ரேவதியிடம் சொல்லிவிட்டு போனை எடுத்து “ஹலோ’’ எனச் சொன்னாள்.

“இன்னும் கால் மணி நேரத்துல பஸ் ஸ்டாண்டுக்கு வரணுமா… ரெண்டு பேரும் சேர்ந்து போயிடலாமா? சரி, நான் வந்துடுறேன். வெச்சுருங்க’’ – போனை வைத்தாள்.

“சரி… நான் கிளம்பட்டுமா?’’

“என்ன அவசரம்? ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்குத்தான் வந்திருக்க. இப்பத்தானே பேச ஆரம்பிச்சோம். இன்னும் ஒண்ணுமே பேசலை.’’

“அவர் பஸ் ஸ்டாண்டுக்கு கால் மணி நேரத்துல வந்துருவார். இப்ப போனா ரெண்டு பேரும் வண்டியிலேயே போயிருவோம். இல்லைனா நான் டவுன் பஸ் பிடிச்சுப் போறதுக்குள்ள நேரமாகிடும்; திட்டுவார்.”

“திரும்ப எப்ப வருவ?’’

“நீ போன் பேசு. வர்றேன். கல்யாணத்துக்கு மறக்காம வந்துடு.’’

“வராம எப்படி இருப்பேன்? நீ சீக்கிரம் போறியேனுதான் வருத்தமா இருக்கு. சாப்பிடக்கூட ஒண்ணும் கொடுக்கலை.’’

“உங்கிட்ட பேசிக்கிட்டிருந்ததே எனக்குப் போதும். உன் பையன் ரமேஷுக்குக் கல்யாணம் முடிக்கலையா?”

“அவன் ஏதோ கூட வேலைசெய்யுற புள்ளையை லவ் பண்றான்னு நினைக்கிறேன். அந்தப் பொண்ணு வேற சாதிபோல. இவர் `முடியாது’னு சொல்லிட்டார். `படிச்சிட்டா, வேலைக்குப் போயிட்டா எல்லாரும் பெரிய சாதியா ஆகிட முடியுமா?’னு கேட்கிறார். என்னத்தைச் சொல்ல? ரெண்டு வருஷமா இழுத்துக்கிட்டுக் கிடக்கு. இப்ப பொண்ணு வேற மெட்ராஸுக்குப் போயிருக்கா. என்ன நடக்கப்போகுதோ?’’

“ஒண்ணும் நடக்காது. கவலப்படாம இரு.”

“மனசுல உள்ளதைப் பேசக்கூட எனக்கு ஆள் இல்லைடி’’ – ரேவதியின் கண்கள் கலங்கின.

“சாதாரண விஷயத்தைப் பெருசு பண்ணாம இரு. ஒவ்வொரு வீட்டுக்கும் வாசலும் இருக்கு; கதவும் இருக்கு. நீ வீடா இருக்க… உங்க சார் கதவா இருக்கார். உலகம் பூரா அப்படித்தான். சரி, நான் கிளம்புறேன்’’ எனச் சொல்லிவிட்டு பையை எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது, வாசலில் கட்டியிருந்த வெளிநாட்டு நாய் எழுந்து நின்றுகொண்டு சகுந்தலாவையே முறைத்துப் பார்த்தது!

-அம்ருதா – பிப்ரவரி 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *