முதல் அடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 10,331 
 

தற்செயலாக பழைய சாமான்கள் விற்கும் கடையின் வாசலில் பார்த்தேன் – மணியடிப்பதற்காக பள்ளிகளில் தொங்கவிடப்பட்டு இருக்கும் இரும்புத் தண்டவாளத்தை!
எங்கள் பள்ளியில்கூட மணியடிக்க அது போன்றதொரு இரும்புத் தண்டவாளம் வராந்தாவில் தொங்கும். மணியடிப்பதற்கென வயதான வாட்ச்மேன் இருந்தார். அவர் வராத நாட்களில், மாணவர்கள் அந்த மணியை அடிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு சிற்பத்தைப் பார்ப்பது போல வியப்புடன் ஆழ்ந்து அந்தத் தண்டவாளத்தைக் கவனித்துக்கொண்டு இருந்தேன். எத்தனை முறை அதன் சத்தம் தொலைவில் கேட்டதும் ‘பள்ளிக்கு நேரமாகிவிட்டதே’ என்று ஓடி வந்திருப்பேன். எத்தனை நாட்கள் இந்த மணியடித்து ‘பள்ளி விடுமுறை விட்டுவிடாதா?’ என்று ஏங்கியிருப்பேன். இந்த மணியோசைக்குப் பின்னால் பால்யத்தின் வெளிப்படுத்தப்படாத நிசப்தம் புதைந்திருக்கிறது.

கடைக்காரன் என்னைக் கவனித்திருக்கக்கூடும். ‘பள்ளிக்கூட பெல்லு சார். வேணுமா?’ என்றான். வாங்கிக்கொண்டு போய் என்ன செய்வது… எங்கே மாட்டிவைப்பது? மணியை வாங்குவதைவிடவும் அதை அடித்துப் பார்க்க வேண்டும் என்றுதான் மனது அதிக ஆசைகொண்டு இருந்தது. மிக உரிமையுடன் மணியை அடிப்பதற்காக வைத்திருந்த இரும்புக் கோலை எடுத்து மணியை அடித்தேன்.

கடைக்காரன் சிரிப்போடு பார்த்தான். எங்கோ காஞ்சிபுரம் அருகில் உள்ள கிராமத்துப் பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டு வந்து தந்ததாகச் சொல்லி, இருநூறு ரூபாய் தந்து விட்டு எடுத்துப் போகும்படியாகச் சொன் னான். வாங்குவதற்கு பயமாக இருப்பதாகச் சொன்னேன். அதன் விலையைப் பற்றி சொல்வதாக நினைத்துக்கொண்டு, ஐம்பது ரூபாய் குறைத்துக்கொள்ளச் சொன்னான். பயம் விலை மீதல்ல. அந்த மணியோசை என்றோ ஏற்படுத்திய வலியிலிருந்து பயம் பிறப்பதை எப்படிப் புரியவைப்பது?

இன்றும் மனதில் காலை வெயில் போல துல்லியமாகவும் வசீகரமாகவும் பள்ளியில் சேர்க்கப்பட்ட முதல் நாள் மினுமினுத்துக் கொண்டு இருக்கிறது. அப்போது பள்ளியில் சேர்வதற்கு இருந்த ஒரே சோதனை… வலது கையால் தலையைச் சுற்றி இடது காதை தொட்டுக் காட்ட வேண்டும். அது இருந்தால் போதும், முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்வார்கள்.

படிய வாரிய தலையும் திருநீறு பூசிய நெற்றியும் ஒரே யரு உடைந்த குச்சி,சிலேட்டுமாக பள்ளியில் சேர நின்றுகொண்டு இருந்தபோது ஒரு பக்கம் பயமும் இன்னொரு பக்கம் அழுகையும் சேர்ந்து தொண்டையை இறுக்கியது.

தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைந்தபோது அவரது மேஜையில் இருந்த பிரம்பும் சாக்பீஸ் டப்பாவும் அழுகையை அதிகப்படுத்தப் போதுமானதாக இருந்தது. டவுசர் பையில் வைத்திருந்த ஆரஞ்சு மிட்டாய் பாக்கெட்டை எடுத்து தலைமை ஆசிரியரிடம் நீட்டுவதற்குள், மருத்துவ மனைக்குள் போனதும் ஏற்படும் நடுக்கம் அன்று பள்ளியைப் பார்த்ததும்தானாக ஏற்பட்டது.
வகுப்பில் உட்காரவைத்து விட்டு, அப்பா பள்ளியை விட்டு வெளியேறிப் போகத் துவங்கும் வரை அடக்கிக்கொண்டு இருந்த துக்கம், அவர் தலை மறைந்ததும் பீறிடத் துவங்கியது. வகுப்பில் உள்ள மாணவர்களுக்குக் கொடுப்பதற்காக கொண்டு வந்திருந்த ஆரஞ்சு மிட்டாய் களை எவருக்கும் கொடுக்க வேண்டும் என்றுகூட நினைப்பே இல்லை.

டீச்சர், என் விசும்பல் சத்தம் கேட்டு என்ன என்று அருகில் வந்தாள். ‘காய்ச்சல் அடிக்குது’ என்று கலங்கிய குரலில் சொன்னதும் கழுத்தின் அடியில் கை வைத்துப் பார்த்தாள். குளிர்ச்சியாகத்தான் இருந்தது. அவள் தலையைக் கோதிவிட்டபடி, ‘சரியாப் போயிரும்… தண்ணி குடிச் சிக்கோ!’ என்றாள். இத்தனை நடந்தும் ஏன் காய்ச்சல் வரமாட்டேன் என்கிறது என்று என்மீதே ஆத்திரமாக வந்தது.
திடீரென பிளாக்போர்டு மிக உயரத்திலிருப்பது போலத் தெரிந்தது. எங்கோ மலையடி வாரத்தில் இருந்து டீச்சர் பேசுவது போலக் கேட்டது. மனம் நிலைகொள்ளாமல் தத்தளித்தது. வராந்தாவில் தொங்கும் அந்தத் தண்டவாளத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

பன்னிரண்டரைக்குப் பெல் அடித்த போது கண்களை மூடிக்கொண்டு வீட்டுக்கு ஓடினேன். வீட்டுக்குப் போனதும் பையைத் தூர எறிந்துவிட்டு, என் மீது ஏன் இப்படி இரக்கமின்றி யாவரும் நடந்துகொள்கிறார்கள் என்று கோபமாக வந்தது. சாப்பிடக்கூட மனதின்றி ‘மதியம் பள்ளிக்கூடம் லீவு’ என்று பொய் சொல்லியபடி படுக்கை யில் சுருண்டு படுத்துக்கொண்டேன்.

ஆனால், மறுநாள் பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. எத்தனை மெதுவாக நடந்து போக முடியுமோ அத்தனை மெதுவாகப் போவேன். வகுப்பைக் கவனிக்காமல் படியில் ஏறியிறங்கி விளையாடும் வெயிலைக் கவனித்துக்கொண்டு இருப்பேன்.

பள்ளி நாட்கள் ஒரு விநோத மிருகத்தின் கால்களில் சிக்கிக்கொண்டது போல பயமாக மாறியிருந்தன. ஒவ்வொரு முறை பள்ளியின் பாதி மூடியிருந்த இரும்புக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போவது சிங்கத்தின் வாய்க்குள் தலையைக் கொடுத்து வெளியே எடுக்கும் சர்க்கஸ்காரனின் செயலைப் போலத்தான் இருந்தது.

அப்போது, பள்ளி மிகப் பெரியதாகவும் வகுப்பறைகள் நீண்டதாகவும் டீச்சர் மிக உயரமானவள் போலவும் தோற்றம் தந்துகொண்டு இருந்தது. ஆனால், அந்தப் பள்ளியை விட்டு நீங்கி வேறு வேறு பள்ளிகளில் படித்து முடித்து, ஊரை விட்டு வெளியேறிய பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு முறை அந்தப் பள்ளியைப் பார்த்தபோது அது நான் முதல் நாள் சேர்ந்தபோது பார்த்த நிறம்கூட மாறாதது போல அப்படியே இருந்தது. ஆனால், ஒரேயரு வேறுபாடு, அப்போது பெரிய கோட்டை போலத் தெரிந்த பள்ளிக்கூடம், இப்போது சிறிய தீப்பெட்டி மாதிரி தெரிந்தது.

அது ஒரு ஓடு வேய்ந்த கட்டடம் என்று இன்று திரும்பப் பார்க்கும்போதுதான் அதன் சிவப்பு ஓடுகள் தெரிந்தன. படிக்கட்டுகள், வகுப்பறைகள் யாவுமே உலர்ந்த திராட்சை போல சாறு வற்றிப் போய் சுருங்கி விட்டது போலத் தென்பட்டது.

எனக்கு நடந்த சம்பவத்தைப் போலவேதான் என் பையனை எல்.கே.ஜி&யில் சேர்த்த நாளும் நடந்தேறியது. அவனைப் பள்ளியில் சேர்த்துவிட்டு, முதல் நாள் என்பதால் கேட்டை தாண்டிச் சென்று வகுப் பறையைக் காட்டி விட்டு வெளியே வரும்போது, அவன் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே நடந்து போனான். வகுப்பறையின் அருகே போயும் உள்ளே போகாமல் தொலைவை வெறித்து பார்த்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. குழந்தையை முதன் முதலாகப் பள்ளியில் விட்டு வரும் அந்த நிமிடம் மிகவும் அபூர்வமானது. அதே நேரம் துக்ககரமானது. அது சொல்லி புரியவைக்க முடியாதது.

பள்ளியில் மின்சார மணி அடித்தும் நான் வாசலின் வெளியே நின்றுகொண்டே இருந்தேன். அவன் வகுப்புக்குப் போய் விட்டான். ஆனால், நான் என்றோ காலத்தின் பின்னால் தூக்கி வீசப்பட்டது போல எனது முதல் வகுப்பின் நினைவுகளில் வீழ்ந்துகிடந்தேன். நான் நினைத்தது போலவே மாலை வீடு வந்த பையன் யாரோடும் பேசவே இல்லை. சாப்பிடு வதற்குக்கூட மனதின்றி படுக்கையிலே கிடந்தான். ஆனால், என்னைப் போலின்றி சில வாரங் களிலே அவன் பள்ளிக்குப் பழகத் துவங்கியிருந்தான். பிறகு பள்ளிக்கூடம் பற்றித்தான் எப்போதுமே பேச்சு. காலம் எவ்வளவு மாறியிருக்கிறது என்று அந்த நிமிடம் என்னால் உணர முடிந்தது.

பிறந்த நாள், திருமண நாள் போல ஏன் பள்ளியில் சேர்ந்த முதல் நாளை நாம் கொண்டாடக்கூடாது, என்று சில சமயங்களில் தோன்றும். வகுப்பறைக்குள் ஒவ்வொரு மாணவனும் எடுத்துவைக்கும் முதலடி, நிலவில் இறங்கிய விண்வெளி வீரனின் காலடியைவிடவும் அதிமுக்கியமானதில்லையா! பள்ளியின் முதலடியிலிருந்துதானே அவனது அறிவும் திறனும் வளர்த்தெடுக்கப்படுகிறது.
அந்தக் காலங்களில் கிராமங்களில் ஐந்து வயதில் Ôஏடு தொடங்குதல்Õ என்று ஒரு சடங்கு செய்வார்கள். குழந்தையை உட்காரவைத்து தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி குழந்தையின் விரலைப் பிடித்து “அனா ஆவன்னா” எழுத வைப்பார்கள். அந்தச் சடங்கு கோயிலில் நடக்கும். பிறகு, அங்கிருந்து வீட்டுக்கு வந்ததும் பனையோலைகளில் உயிரெழுத்து மட்டும் எழுதிக் கொடுத்து, படிக்க சொல்லித் தருவார்கள்.

அப்படி ஏடு துவங்கும் சடங்கைச் செய்து வைப்பதற்கென ஒரு அண்ணாவியும் இருப்பார். அவர் தேவாரம், திருவாசகம் பாடவும், விளக்கி பொருள் சொல்லவும் தெரிந்தவராக இருப்பார். பள்ளிக்கூடம் வந்த பிறகு ஏடு தொடங்குதல் மறைந்து போகத் துவங்கியது. ஆனாலும் பள்ளியில் பிள்ளைகளுக்கு டீச்சர் கையைப் பிடித்து அனா ஆவன்னா எழுதித் தரும் பழக்கம் இருந்தது. பின்னாளில் அதுவும் மறைந்து, இன்று பள்ளிப் படிப்பு முடியும் வரை அனா ஆவன்னா என்றால் என்னவென்றே தெரியாத ஆங்கிலக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.

உலகில் வேறு எந்தத் தேசமும் தனது தாய் மொழியின் அட்சரங்களைக் கூட கற்றுக்கொள்ளாமல் குழந்தை வேறு மொழியைக் கற்பதற்கு அனுமதிப்பதில்லை. நாம் எல்லாவற்றிலும் விதிவிலக்குதானோ?

தமிழ் கற்றுக்கொள்வதற்காக இருந்த தமிழ்ப் பள்ளிகளும் தேவார \ திருவாசகப் பாடசாலைகளும், இன்று அடையாளமற்றுப் போய் விட்டன. தமிழ் நமது பேச்சிலிருந்து மட்டுமல்ல, நம் சிந்தனை, செயல் யாவிலிருந்தும் விலக்கப்பட்டு வருவதும் அப்படி விலக்கப்படுவது மேலான செயல் என்று பெருமை கொள்வதுமே நடந்து வருகிறது.

தமிழ் வாழ்வைத் தனது படைப்பு களில் பதிவு செய்ததில் மிக முக்கியமான எழுத்தாளர் மா.அரங்கநாதன். இவரது கதைகள் ஆழ்ந்த தத்துவத் தளம் கொண்டவை. அவரது எழுத்தில் தமிழ் வாழ்வின் நுட்பங்களும் அறமும் மெய்தேடலும் நுண்மை யாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன.
குறிப்பாக, இவரது ‘ஞானக்கூத்து’ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘ஏடு தொடங்கல்’ என்ற கதை. அன்றைய நாஞ்சில் வட்டார வாழ்வைச் சொல்வதோடு, ஏடு தொடங்குதலைப் பற்றிய நுட்பங்களையும் பதிவு செய்துள்ளது. அக்கதை மின்னல் வெட்டைப் போல நிமிட நேரமே கடந்து போகும் ஒரு அனுபவத்தைப் பதிவு செய்கிறது.

ஊரில் ஒரு குழந்தைக்கு ஏடு தொடங்குவதாக அண்ணாவியை அழைக் கிறார்கள். அவர் வர இயலாமல் அவரது பையன் சுப்பையா வருகிறான். அவனுக்குப் பன்னிரண்டு உயிரெழுத்தும் தெரியும் என்றாலும் மணலில் எழுதும்போது கை நடுங்கும். சென்ற வருடம் ஏடு தொடங்கும் போது ஒரு குழந்தை மணலை வாறி அவன் கண்ணில் இறைத்ததால் அவன் ஏடு தொடங்கும் காரியத்துக்கு வருவதே இல்லை.

இன்று வேறு வழியில்லாமல் வந்து சேர்கிறான். அந்த ஆட்டத்தில் ஒரு பதிகம் பாடச் சொல்கிறார்கள். அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் திருவாசகத்தை வாங்கிப் படிக்கத் துவங்குகிறான். சீர் பிரிக்காத பதிப்பு என்பதால் அவனால் படிக்க முடியவில்லை. அப்போது கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி எதையும் சட்டை செய்யாது ஊரில் சுற்றிக்கொண்டு வரும் முத்துக்கறுப்பன், அங்கே வந்து சேர்கிறான். அவனை திருவாசகம் படிக்கச் சொல்கிறார்கள்.

அவன் புத்தகத்தைப் பார்க்காமலே ஒவ்வொரு சொல்லாகச் சொல்லி குழந்தையை திரும்பச் சொல்லச் செய்து, பதிகம் படிக்கவைக்கிறான். அந்தச் சம்பவம் முத்துக்கறுப்பன் மீது அந்த வீட்டில் நல்ல மதிப்பை உருவாக்கி விடுகிறது. அவனுக்கு அந்த வீட்டில் உள்ள பெண்ணைக் கொடுத்து மாப்பிள்ளையாக்கிக் கொள்கிறார்கள். அவன் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடி பிடித்துப் போய், அந்த வீட்டுப் பெண் அவன் மீது ஆசைப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். ஆனால், எது நடக்க வேண்டுமோ, அது ஏதாவது ஒரு வழியாக நடந்துவிடுகிறது என்று சித்தாந்தம் பேசிக்கொண்டு இருந்தார் பெண் வீட்டில் ஒருவர். இரண்டுமே முத்துக்கறுப்பனைப் பொறுத்த வரை நிஜம்தான். இன்னொரு பக்கம் நிஜமில்லைதான்.

மா.அரங்கநாதனின் இக்கதை விவரிக்கும் அந்த ஏடு துவங்கும் காட்சி, புகை மறைவது போல நாம் பார்த்துக்கொண்டு இருந்தபோதே வாழ்விலிருந்து மறைந்து போய்விட்டிருக்கிறது.

பால்யம் சோப்பு நுரைகளைப் போல நூற்றுக்கணக்கான கனவுக் குமிழ்கள் மிதந்து செல்லும் வெளி போலும். கரும்பலகையின் கீழ் உதிர்ந்து கிடந்த சாக்பீஸ் தூசியைவிடவும்வகுப்பறையில் மாணவர்கள் தங்களுக்குள் பேசித் தீர்த்த சொற்கள் ஏராளமானவை. நட்சத்திரங்களைவிடவும் பள்ளியில் கண்ட கனவுகள் அதிகம். விரலில் பட்ட மைக்கறை அழிந்துபோய் பல வருடமாகி இருக்கலாம். ஆனால், மனதில் படிந்த பள்ளியின் நினைவுகள் என்றும் அழியா சுவடுகளாகவே இருக்கின்றன!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *