மீனாட்சி நிமிர்ந்து பார்க்கிறாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 5,216 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

வசந்தா, மீனாட்சியை அடித்தபோது, அடியோசையும் அடித்தவளின் உறுமலுந்தான் கேட்டதே தவிர, அடிபட்டவள் அலட்டிக்கொள்ளவே இல்லை. மீனாட்சி, இரு முழங்கால்களையும் செங்குத்தாக வைத்துக்கொண்டு அவற்றிற்குள் நெருப்புக்கோழி மாதிரி தலையைப் புதைத்துக் கொண்டு இருந்ததால், வசந்தாவிற்கு அவளை அடிப்பது எளிதாக இருந்தது.

உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த அவள் தந்தை சாமிநாதன் எச்சிற் கையோடு ஏய் நிறுத்து. நிறுத்து என்று கத்திக்கொண்டே துள்ளியோடி வந்தார். மகளைக் கோபமாகப் பற்றி வேகமாக இழுத்தார்.

“பல்லை ஒடச்சிடுவேன்… கழுதை… அவள் னா ஒங்க எல்லாருக்குமே இளக்காரம். அத்தை என்கிற மரியாதை கூட நீ கொடுக்கவேண்டாம். வயசில பெரியவள் என்கிற அனுதாபமாவது வேண்டாமா… கழுதை’

வசந்தா சீறினாள்: “அவள் எதுக்கு என் பேனாவை எடுத்துப் பல் குத்தனும்? நிப்பு உடைஞ்சு போச்சு. இன்னைக்கு டெஸ்டு… தடிச்சி. ராட்சலி… பேய்… மடச்சி. அறிவுகெட்ட பரம்பரை…”

சாமிநாதன், கடைசி வார்த்தையைக் கேட்டதும் எச்சிற் கையோடு மகளை ஓங்கி அடித்தார். அப்படி அடிக்கும் போது, கையில் ஒட்டிக்கொண்டிருந்த பருக்கை மீனாட்சியின் தலையில் போய் அமர்ந்தது.

வசந்தாவின் அக்கா விமலா மீனாட்சியின் அருகில் போய், அந்தப் பருக்கையை எடுத்துவிட்டு, அவள் தலையைக் கோதிவிட்டாள். அவளிடம் இவள் அவ்வளவு அனுதாபம் கொண்டிருக்கிறாளாம்! இவள்தான், சற்று நேரத்திற்கு முன்பு தங்கையிடம், “பாருடி. உன் பேனா நிப்பு வச்சு… அத்தை பல் குத்தறா!’ என்று தூண்டிவிட்டவள். இப்போது அப்பாவின் கோபத்தைப் பார்த்ததும் தன் குட்டு அம்பலமாகாமல் இருப்பதற்காக, அத்தைக்காரியிடம் அனுதாபம் கொண்டவள்போலும் தங்கையின் வன்முறையை அங்கீகரிக்காதவள் போலும் பாவலா செய்தாள்.

அதுவரை சமையலறைக்குள் நின்று கொண்டிருந்த அம்மாக்காரி “நிறுத்துங்க நிறுத்துங்க… எதுக்காக வசந்தாவை அடிக்கிறீங்க?” என்று சொல்லிக்கொண்டே வந்தாள்.

“பிள்ளைங்கள வளக்குற லட்சணமாடி இது. மீனாட்சியைப் பத்தி நல்லாத் தெரியும்; தெரிஞ்சிக்கிட்டும் அவளை இவள் அடிக்கிறாள்னா… அதுக்கு நீ குடுக்கிற செல்லந்தான் காரணம்…” “ஒங்க தங்கச்சிய நீங்கதான் மெச்சிக்கணும். பேனாவை எடுத்தா பல் குத்தறது?”

“சரி. உடச்சிட்டா. அதுக்காக அவள் தலையை உடைக்கணுமா… ரெண்டு திட்டு திட்டிட்டு விடவேண்டியது தானே? என்று கத்தினார் சாமிநாதன்.

மீனாட்சி இப்போதும் தலை குனிந்தபடியே உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு இப்போது முப்பது வயதிருக்கும். அவளுக்கு மூளைக்கோளாறு என்று சொல்ல முடியாது. ஆனால் பார்ப்பதற்குப் பித்துப் பிடித்தவள் மாதிரி இருப்பாள். ஒரு இடத்தில் உட்கார்ந்தால் முழங்காலில் தலையைப் புதைத்துக்கொண்டு, யோகி மாதிரி மணிக்கணக்கில் இருப்பாள். எவருடனும் பேச மாட்டாள். எப்போதும் ஏகாந்தமான தனிமை; ஆகாயத்தைத் துழாவுவது போன்றோ, அல்லது பூமியைக் குடைவது போன்றோ பார்வை இருக்கும். பெரியவர்களிடம் அனுதாபத்தையும், குழந்தைகளிடம் அழுகையையும் தோற்றுவிக்கும் தோற்றம். அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள், அடம்பிடிக்கும் குழந்தைகளை அடக்குவதற்காக, பூச்சாண்டி என்பதற்குப் பதிலாக மீனாட்சி என்பார்கள். இவ்வளவுக்கும் மீனாட்சி கோபப்பட்டு எவரும் பார்த்ததில்லை. எப்போதாவது, எந்தக் குழந்தையையாவது ஆசையுடன் பார்த்து, “வா” என்று சொல்லிக் கையை நீட்டுவாள். சில சமயம் ‘பசிக்கிது என்று அம்மாவிடம் சொல்லுவாள். சத்தம் வருகிற திக்கில் முகத்தைத் திருப்புவாளே தவிர, அலட்டிக்கொள்ள மாட்டாள். கிணற்றில் தண்ணிர் இழுக்கச் சொன்னால், போதும் என்று சொல்வது வரைக்கும் அல்லது கிணற்றுநீர் வற்றுவது வரைக்கும் நீர் பிடித்துக்கொண்டே இருப்பாள். வீட்டைத் துடை என்றால் நிறுத்து, என்று சொல்வது வரைக்கும் தரையே உடைந்தாலும் சரி, துடைத்துக் கொண்டிருப்டாள்.

அன்னையும் தந்தையும் ஒருவர்பின் ஒருவராக இறந்தனர். மூத்த அண்ணன் சாமிநாதன் சென்னையில் செகரட்டேரியட்டில் வேலை பார்த்துக்கொண்டு, அங்கேயே செட்டில் ஆனார். தம்பிமார்களும் அவர்களின் மனைவியரும் மீனாட்சியை மாடு மேய்ப்பதற்கு அனுப்புவதாகவும், அந்த வாயுள்ள பிராணிக்கு வயிறார உணவு கிடைக்கவில்லை என்பதையும் கேள்விப்பட்ட சாமிநாதன், ஊருக்குப் போய், தங்கையைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்.

இங்கேயும் அதே அவலம் தான். “இன்னைக்கு மட்டுமில்ல அப்பா… தினமும் அத்தையை… இவள் இப்படித்தான் அடிப்பாள்… அம்மாவும்… பேசாமல் கையைக் கட்டிக்கிட்டு நிற்பாள்…” என்றாள் விமலா. சொல்லிவிட்டு, அம்மாவைக் காட்டிக்கொடுத்த திருப்தியில் லயித்தாள்.

சாமிநாதனுக்கு, ரத்தபாசம் சப்தநாளங்கள் எல்லாம் பரவி அலைமோதியது. தினமும் மீனாட்சி அடிபடுகிறாளா.. தினமும் இவள் கையைக் கட்டிக்கொண்டு நிற்கிறாளா…

“ஏண்டி… நீ அடிக்கிறத பாத்துக்கிட்டுதான் நிக்கிறியா… இல்ல. நீயும் சேர்த்து அடிக்கிறியா…”

“உங்களுக்குத்தான் பேசத் தெரியுங்கற மாதிரி குதர்க்கமா பேசாதீங்க. இந்த இரண்டு வருஷத்திலே ஒங்க தங்கச்சிய கோபமா ஒரு தடவை தொட்டிருந்தாக்கூட, என் கை அழுகிப் போயிடும். நானும் அக்கா தங்கச்சியோட பிறந்தவள்தான்.”

“ஏம்மா மழுப்புறே? முந்தாநாள். நீ கூடத்தான் அத்தையை திட்டினே. என்னைமாதிரி அவள் எதிர்த்துப் பேசலே. இல்லன்னா என்னை அடிக்கிறமாதிரி அவளையும் அடிச்சுருப்பே. என்று வசந்தா தெரிவித்ததும் சாமிநாதனுக்குச் சுர்ரென்று கோபம் வந்தது.

“ஏண்டி. முந்தாநாள் அவளை எதுக்காகத் திட்டினே?” “முந்தா நாள்… நம்ம சங்கருக்கு ஜூரமுன்னு டாக்டர் கிட்ட போயிருந்தேன்… உங்க தங்கச்சியும் கூட வந்தாள். திரும்பி வரும்போது வழியில நம்ம காமாட்சி பாத்துட்டா… வீட்டுக்குப் போன்னு சொல்லி இவள் கையில சாவியைக் குடுத்தேன்.”

“&#!”

“நான் காமாட்சியோட பேசிட்டு, வீட்டுக்கு வரும் போது இவள் வெளில நிக்குறா. கையில சாவியில்ல. சாவி எங்கேன்னு கேட்டா பதில் இல்ல. பித்து பிடிச்சவள் மாதிரி சாக்கடைக் குழாயையே பாத்திட்டு நிற்கிறாள். சாக்கடையில சாவிய போட்டியான்னு கேட்டால்… அதுக்கும் பதிலில்ல. கடைசில. சாக்கடைக்குள்ள கம்பு வச்சிப் பார்த்தோம். சாவி கிடந்தது. ஊரையே கூட்டி என் மானத்தை வாங்கிட்டா.’

சாமிநாதன் தங்கையைப் பார்த்தார். இப்போதும் மீனாட்சி தன் தலையை நிமிரவேயில்லை.

அன்று

சாமிநாதன் கேம்ப் போய்விட்டார். மனைவிக்காரி, சங்கருடன் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தாள். வசந்தாவின் பள்ளிக்கூடத்தில் ஏதோ விழா…

சாயந்தரம் ஆறு மணி இருக்கும். விளக்கு ஏனோ எரியாமல் இருந்தது. மீனாட்சி, வழக்கமான இடத்தில், வழக்கமான முறையில் உட்கார்ந்திருந்தாள்.

சாத்தியிருந்த வாசற் கதவைத் திறந்துகொண்டு, கல்லூரிக்காரி விமலா வந்தாள். அவள் பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே, ஒரு வாலிபன் அவளுடன் வந்தான். அவன் அவளை விட இரண்டு கிளாஸ் அதிகமாகப் படிப்பவனாக இருக்கவேண்டும். அல்லது அஸிஸ்டெண்ட் புரொபஸராக இருக்க வேண்டும்.

“சும்மா… வாங்க… ஏன் நடுங்குறீங்க…? நான் சொன்னேனே… அது இவள்தான். என் அத்தை. ஆபத்தில்லாத பயித்தியம்.” என்று சொல்லிக்கொண்டே விமலா அந்த வாலிபனின் கைகளைப் பிடித்தாள்.

இருவரும் உள்ளறைக்குள் போனார்கள். பயத்துடன் சிரிக்கும் சப்தம் கேட்டது. வளையலோசை கேட்டது. எனக்குப் பயமா இருக்கு என்ற பல்லவியை மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று ஏதோ சத்தம். கையில் ஒரு பெட்ரும் விளக்குடன் – மீனாட்சி கோர சொரூபமாக நின்று கொண்டிருந்தாள். குபிரென விளக்கை எறிந்துவிட்டுப் பாய்ந்து உள்ளே வந்தாள். விமலாவைக் கட்டிலில் இருந்து தூக்கி நிறுத்திக் கன்னத்திலும் பிடரியிலுமாக மாறி மாறி அடித்தாள். அந்த வாலிபன் மீனாட்சியின் கைகளைப் பிடித்துத் தடுக்கப்போனான். அவ்வளவுதான்

மீனாட்சி அவன் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு, மூக்கிலேயே குத்தினாள். ஓங்கி ஒரு அறை கொடுத்து, வாசலுக்கு வெளியே தள்ளிவிட்டு உள்ளே வந்தாள்.

விமலா ஏங்கி ஏங்கி அழுதுகொண்டிருந்தாள். மீனாட்சி, அவள் அருகில் வந்தாள். விமலாவின் கண்களைத் துடைத்தாள். அப்போது அவள் கண்களில் ஒருவித ஒளி மின்னியது. கருணை படமெடுத்தது.

ஒரே ஒரு வினாடிதான். மீனாட்சி மீண்டும் வழக்கமாக உட்காரும் இடத்தில், முழங்கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.

– ஒரு சத்தியத்தின் அழுகை, முதல் பதிப்பு: 1981, மணிவாசகர்பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *