மீசை வைக்க ஆசை…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 6,113 
 

‘கண்ணம்மா… ப்ளீஸ்… புரிஞ்சுக்கம்மா…ஒரு பெரிய கம்பெனில… பொறுப்பான ஆபீஸர் உத்தியோகம் பார்க்கறவன் நான்…தெனமும் நாலு பெரிய மனிதர்களைச் சந்திச்சுப் பேச வேண்டியிருக்கு… பழக வேண்டியிருக்கு… நான் போயி ரவுடியாட்டம்… பெரிய மீசை வெச்சுக்கிட்டா… நல்லாவாயிருக்கும்?…என்னைப் பார்த்தா யாருக்கும் ஒரு மரியாதை வராது… பயம்தான் வரும்… உத்தியோகத்துக்கு தகுந்த மாதிரி தோற்றம் வேணாமா?… இப்படி ‘நறுக்”ன்னு சின்னதா மீசை வெச்சுக்கணும்… இல்லாட்டி சுத்தமா வழிச்சுட்டு மீசையே இல்லாம இருக்கணும்… அதுதான் நம்ம இமேஜை உயர்த்திக் காட்டும்” கல்யாணமான நாளிலிருந்து மனைவியின் பெரிய மீசை ஆசையை உத்தியோகக் காரணம் காட்டி தவிர்த்து வந்த பாலுவுக்கு தன் எதிரெ அமர்ந்திருந்த அந்த மனிதர் சொன்னதைக் கேட்டதும் சிரிப்புத்தான் வந்தது.

‘செக்யூரிட்டி வேலைக்கு உன்னோட உடல் வாகும்…பேச்சும் பொருத்தமாத்தானிருக்கு… ஆனா மீசைதான் கொஞ்சம் சின்னதாயிருக்கு… நீ என்ன பண்றே… நல்லா பெரிசா… பார்த்தாலே பயம் குடுக்கற மாதிரி மீசையை வளர்த்துட்டு அடுத்த வாரத்துல வந்து…வேலைல சேர்ந்துடு”

ஆபீஸராய் உத்தியோகம் பார்த்த கம்பெனி திடீரென்று நஷ்ட காரணத்தில் மூடப்பட்டு யாருக்கும் எந்த வித நஷ்ட ஈடும் கிடைக்காது போக, பல வேலைகளுக்கு முயற்சி செய்து…தோற்றுப் போக… இறுதியில் அந்த செக்யூரிட்டி வேலைக்கு மனதைத் தயார் படுத்திக் கொண்டான் பாலு. உத்தியோகமும் கிடைத்து விட்டது மீசை வளர்ந்தால் போதும் சேர்ந்து விடலாம்.

வீட்டிற்குத் திரும்பி வந்தவனிடம் நேரடியாக ‘வேலை கிடைத்ததா?” என்று கேட்காமல் நாசூக்காக ‘ஏங்க… ஏதாச்சும நல்ல செய்தி உண்டா?” கேட்டாள் கண்ணம்மா.

‘உண்டு…உன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றப் போறேன்…ஆமாம்… பெரிசா… கடா மீசை வெக்கப் போறேன்” சொல்லியவாறே உள் அறையை நோக்கி நடந்தவனை புரியாமல் பார்த்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *