மிச்சமிருக்கும் தறிகளுக்காக ஒருவன்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 12,147 
 

சுந்தரி ஷிஃப்ட் முடித்துக் கிளம்பும்போது மழை வேகமாகப் பெய்யத் தொடங்கியது. நவநீதன் கம்பெனி வாசலில் நின்று மழையில் நனைந்தபடி, மினி பஸ்ஸில் ஏறும் சுந்தரியைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு வாழ்வில் இரண்டு சந்தோஷங்கள் இருந்தன. ஒன்று, சுந்தரி. இன்னொன்று, நைட் ஷிஃப்ட் வேலை. முகத்தில் படிந்து இருந்த மழை நீரைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டே ஜன்னல் வழியே அவனைப் பார்த்து அவள் சிரித்த பின்புதான் கம்பெனிக்குள் நுழைந்தான். அவளின் சிரித்த முகம் மனதில் நிழல் ஆடிக்கொண்டு இருக்க… மிகப் பரபரப்பான வேலைக்காரனைப்போல வேலையைத் தொடங்கினான். தறி சத்தத்தில் இடி விழுந்தாலும் கேட்காதுதான், அதற்காக இடி விழ வேண்டும் என்கிற வேண்டுதல்களோ விருப்பங்களோ எதுவும் அவனுக்கு இல்லை. ரசனை, ரசனை இன்மை என்று பிரித்துப் பார்க்கத் தெரியாத அவனுக்கு, சுந்தரியின் சிரிப்பினூடான அந்த மழை நாள், மனம் எங்கும் பொங்கும் சந்தோஷத்தால் நிறைந்து இருந்தது.

கணபதி டெக்ஸ்டைல்ஸில் நைட் ஷிப்ஃட் வருவது குதூகலமான விஷயமாக இருந்தது. வெயில் காலத்தில் மட்டும்தான் தறி வெக்கையில் கொஞ்சம் முதுகு எறியும். நீர்க் கடுப்பில் வயிறு வலிக்கவும் ஒண்ணுக்குப் போகையில் எரிச்சலுமாகச் சேர்ந்துவிடும். ஆனாலும், அதை எல்லாம் பார்த்தால் வேலை செய்ய முடியுமா? இந்த கம்பெ னியில் வேலைக்குச் சேர்ந்த இத்தனை வருஷத்தில், அவன் விடுமுறை எடுத்த நாட்களை எண்ணிவிடலாம். தறிச் சத்தத்தில் இவன் பாடுவது வெளியே கேட்காது என்ற தைரியத்தில் இரவு எல்லாம் பாடல்களை முனகியபடியே மெனக்கெட்டு வேலைகளைச் செய்வான். ஆனால், உண்மை என்னவோ வேறு மாதிரி இருந்தது. இவனுக்குப் பின்னால் வேலைக்கு வந்த சிறுவர்கள், இப்போது வீவர்களாகி, இவனை ‘வாடா… போடா’ என்கிறார்கள். இவன் இன்னும் பேட்டரி ஃபில்லராகவே இருக்கிறான். இவனோடு வேலைக்குச் சேர்ந்த பாண்டிக்கண்ணன் இப்போது ஃபிட்டர். அவனைப் பார்க்கும்போது கொஞ்சம்கூட இவனுக்குப் பொறாமையாக இருப்பது இல்லை. ”இந்த வருஷமாவது வீவராகிடுடா…’

அவன் இவனிடம் சொல்வதில் கொஞ்சம் பாசம் இருக்கும் எப்போதும். இவனும் அதற் கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இல்லை. என்ன செய்தும் இவனுக்கு நூலில் மிகச் சிறியதாக நாட் போடுகிற அந்தசூட்சுமம் வாய்க்கவில்லை.

நாட் போடுவதற்கு முதன்முதலாக இவன் கற்றுக்கொண்டது எட்டு வருஷங்களுக்கு முன்பு. முடிச்சு பெரிதாகி நாடா உட்கார்ந்துவிட, அந்த லைன் வீவர் ஓடி வந்து காதில் ஓர் அறைவிட்டான். அவனுக்கு நாடா உட்கார்ந்ததில் எல்லாம் வருத்தம் இல்லை. அப்படி ஓர் அறை விட்ட பிறகும் இவன் லூஸு மாதிரி சிரித்துக்கொண்டு இருந்ததைப் பார்க்கவும்தான் எரிச்சல் அதிகமானது. இன்னோர் அறை விழ, அப்போதும் இவன் சிரித்தபடியே நிற்க, ”இனிமே என் லைனுக்கு நீ கண்டு வைக்காதடா’ என்று துரத்திவிட்டான்.

அன்று முதல் இன்று வரை அந்த முடிச்சு சின்னதாகிறதே ஒழிய, இன்னும் அது முடிச்சு ஆகி இருக்கவில்லை. வந்து கொஞ்ச நாட்கள் ‘நவநீதா’ என்று கூப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள், நாளாக நாளாக அந்தப் பெயரை மறந்து, மாமா என்று கூப்பிடத் துவங்கி இருந்தார்கள். இந்தப் பெயர் எப்படி வந்தது என இவன் உட்பட ஒருவருக்கும் தெரியாது. வேலைக்குச் சேர்கிற எல்லோருக்கும் அவன் அப்படித்தான் அறிமுகப்படுத்தப்பட்டான். சொந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் அவனுக்கே மறந்துபோகிற அளவுக்கு அந்த வார்த்தையை எல்லோரும் பயன்படுத்தி இருந்தார்கள். ‘ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி,’ யாருக்குப் பொருந்துமோ இல்லையோ இவனுக்குப் பொருந்தும்.

எல்லோருக்கும் பிடிக்கிறதோ இல்லையோ, சுந்தரிக்கு இவனைப் பிடிக்கும். ஆளாளுக்கு இவனை அழவைக்கையில், ஊரே கேட்கும்படியாகக் கத்துகிற இவனைக் கட்டுப்படுத்தக்கூடியவள் அவள் ஒருத்தி மட்டும்தான். யார் சத்தத்துக்கும் கட்டுப்படாத அவன் அழுகை, இவள் பேசினால் மட்டும் நின்றுவிடும். கம்பெனியில் அவளுக்கு அடைப்புப் போட வேண்டும் என்கிற முயற்சியில் ஒருவர் விடா மல் இறங்கியிருந்தனர். அவளை வேலைக்கு இங்கே கொண்டுவந்து சேர்த்தது நவநீதன்தான்.

இவன் வசிக்கும் தெரு, காலனி தெருவுக்குப் பக்கத்தில் இருந்தது. அந்தத் தெரு ஆட்களோடு பழகுவதற்கு நவநீதனுக்கு எந்தத் தடையும் இல்லை. வெள்ளந்தியான இவனின் மனதைப் புரிந்துகொண்ட அந்தத் தெரு ஆட்களின் வீடுகளுக்குச் சென்று வருவான். சுந்தரியை இவன் கவனித்து எல்லாம் பார்த்தது இல்லை. ஒருநாள் அவளாகவே இவனிடம் வந்து, ‘உங்க கம்பெனியில வேலை இருந்தா, என்னைச் சேத்துவிடு’ என்றாள். இவனை ஒரு காரியக் காரனாக நினைத்து இப்படி ஒரு பொறுப்பைக் கொடுத்த முதல் மனுஷி. அவன் தன்னை ஓர் ஆணாக உணர்ந்த தருணம் அது. அவளிடம் சிரித்தபடியே தலையாட்டிப்போனவன், மேனேஜரிடம் பம்மிப் பயந்தே விஷயத்தைச் சொன்னான். மேனேஜர், ‘அந்த அளவுக்கு நீ பெரிய மனுஷனாயிட்டியாடா’ என்ற தோர ணையில் இவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘போய் வேலையப் பாருடா ஒழுங்கா’ என்று முறைத்து அனுப்பினார். அன்று முழுவதும் மேனேஜர் கண் முன்னே கெஞ்சும் பாவனை யில் சுற்றிச் சுற்றி வந்தான். இரண்டு நாட்கள் கழித்து, சுந்தரிக்கு வேலை தருவதாக மேனேஜர் சொல்ல… இவனுக்குத் தலைகால் புரியவில்லை. மிகப் பெரிய சாதனையைச் செய்தவனைப்போல சுந்தரியிடம் விஷயத்தைச் சொன்னான். உண்மையிலேயே அந்த கம்பெனியில் இன்னும் நிறையப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு இருந்தது.

சுந்தரி ஒருத்தனை நம்பி ஊர், உறவை எல்லாம் விட்டுப்போனவள். போன மூணாம் மாசத்திலேயே அவன் நடுத் தெருவில் விட்டுவிட… ஏமாந்து வீடு திரும்பிய கதையை மினி பஸ்ஸில் போகும்போது அவனிடம் அழுதபடி சொன்னாள். அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்து சுந்தரியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே சிரித்தாள். சுந்தரி ஒருவனோடு ஓடிப்போனவள் என்ற விஷயம் நவநீதனுக்கு ஒரு பொருட்டாக இல்லை. அவன் வாழ்வில் இத்தனை அன்போடு ஒரு ஜீவனும் அவனை அரவணைத்தது இல்லை. அவன் இயல்பிலேயே அவனை ஏற்றுக்கொண்ட பெண். அவளை நினைத்தாலே, பித்தாக இருந்தது. இவன் ஒரு மார்க்கமாக இருப்பதும், இவனை யாராவது திட்டும் போது எல்லாம் சுந்தரி பரிந்து பேசுவதுமான இவர் களின் செயல்களைப் பார்த்து, எல்லோரும் நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்கள். சுந்தரி மீதான இவன் காதலையும் கிண்டலாகப் பேசினார்களே தவிர, யாரும் அதை அசைபோடுவதற்கான ஒரு முக்கியமான விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. சுந்தரியைப் படியவைக்கும் திட்டத்தில் சிலர் இவனிடமே அவளைப்பற்றி கேட்டுக் கொண்டு இருந்தார்கள். ”என்னப்பத்தி யாரு என்ன கேட்டாலும் சொல்லிடாத…’ முன்பே கறாராக அவள் சொல்லி இருந்ததால், இவன் பையன்கள் என்ன கேட்டாலும் ”தெரியாதப்பா, ஊர்க்காரப் பிள்ள… அவ்ளோதான்’ என்பதோடு முடித்துக்கொள்வான். பக்கத்து கம்பெனி ஆட்களும், மினி பஸ்ஸில் வருகிறவர்களும்கூட இப்போது அவளைக் குறித்து அதிகமாக விசாரிப்பதால், அவர் களிடம் இருந்து தப்பிக்க வேண்டியே அதிகமாக ஓவர் டைம் பார்க்கத் தொடங்கினான். யாரும் இவனை ஓவர் டைம் பார்க்கச் சொல்வது இல்லை. எத்தனை ஷிப்ஃட் பார்த்தாலும் இவன் பார்க்கிற வேலை அரைகுறையாகவே இருக்கும் என்பதால், ஒரு ஷிஃப்ட்டே போதும் என்றுதான் சொல்வார்கள். சுந்தரி நினைப்பிலேயே உறங்காமல் வீட்டுத் திண்ணையில் உருண்டுகொண்டு இருப்பது வேதனையாக இருக்க… நைட் ஷிஃப்ட் வேலையும் சேர்த்துப் பார்க்கத் தொடங்கினான்.

இவனைத் திறமையானதொரு வீவராக்கிவிடுகிற முயற்சியில் நிறைய வீவர்கள் கற்றுக்கொடுத்து தோற்றுப்போக, ஆகக் கடைசியாக செல்வராசு வீவரிடம் வந்து பேட்டரி ஃபில்லராக நின்றான். அவர் கொஞ்சம் ஈவு சோவான ஆள் என்பதால், இவனுக்கு ஊடமாட உதவி செய்வார் வேலையில். அதனாலேயே, நீண்ட நாட் களாக அவர் லைனில் பிரச்னை இல்லாமல் வேலை செய்ய முடிந்தது அவனால். அப்படியும் தறியைக் கையாள்கிற பக்குவம் வந்திருக்கவில்லை. செல்வராசு, சுந்தரிக்காக அதிகம் இளகுகிறவனாக இருந்தான். சுந்தரி அவனுக்குப் பக்கத்து லைனில் கண்டு வைத்துக்கொண்டு இருந்தாள். அவளைப்போலவே இன்னும் நிறையப் பிள்ளைகள் இப்போது கண்டு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். பையன்களில் இன்னும் கண்டு வைத்துக்கொண்டு இருப்பது நவநீதன் மட்டும்தான். இவனுக்குப் பின்னால் வேலைக்கு வந்த சுந்தரி, அவனுக்கு முடிச்சுப் போடவும், தறி ஓட்டவும் சொல்லிக்கொடுத்துப் பார்த்தாள். இவன் அவள் சொல்லிக் கொடுக்கிற நேரம் எல்லாம் அவளைக் குனிந்து பார்ப்பதும், அவள் முடிச்சுப் போடும்போது இரண்டு உதடுகளையும் மடித்து ஒரு மாதிரி யான முகபாவத்தோடு இருப்பதையும் பார்ப்பதில் தறி ஓட்டுவதைக் கவனிக்காமல் விட்டுவிட்டான். அதன் பிறகு, முடிச்சுப் போடும்போது இவனுக்கும் உதடுகள் ஒரு மாதிரியாக கோணிக்கொண்டு போனது. முடிச்சு வந்திருக்கவில்லை.

பொம்பளைகள் நிறையப் பேர் இப்போதுஎல்லாம் மூன்று ஷிஃப்ட்டுக்கும் வருகிறார்கள். முன்பு டே ஷிஃப்ட்டில் மட்டும்தான் இருந்தார்கள். புதிது புதிதாகச் சின்னப் பிள்ளைகள் நிறையப் பேர் வேலைக்கு வர… போட்டிக்கு எல்லா ஷிஃப்ட்டுக்கும் வரக் கிளம்பிவிட்டார்கள் வயசுப் பெண்களும். பையன்களுக்குத்தான் ஏக குஷி. ஷிஃப்ட்டில் கரன்ட் கட்டாகி ஜெனரேட்டர் மாற்றும் அந்த ஐந்து நிமிஷத்தில் இல்லாத அட்டூழியங்கள் நடக்கும். யார் எங்கே இருப்பார்கள் எனக் கண்டுபிடிக்க முடியாது. வைண்டிங் ஓட்டுவதற்கு நிறையப் பெண்கள் வந்திருக்கிறார்கள். சின்னப் பிள்ளைகள் ஆம்பளை சட்டை போடுவதால், அவர்களுக்குச் சொல்லித் தர யாருக்கும் விருப்பம் இருக்காது. சேலையோ, தாவணியோ கட்டுகிற பெண்கள் என்றால், அவர்கள் கையைத் தூக்குகிறபோது உடம்பின் ஒரு பாதியைப் பார்க்க முடிகிற எதிர்பார்ப்பில் பையன்கள் ஆர்வமாக அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். வேலைக்குச் சேர்கிற கொஞ்ச நாட்களிலேயே விவரம் புரிந்து சில பெண்கள் சேலைக்கு மேல் சட்டை போட்டுக்கொள்வதும், சட்டை போட்டு வரும் குமரிப் பிள்ளைகள் தாவணி போட்டுக்கொண்டு வருவதும் நடக்கும். மாமா இது எதற்கும் சம்பந்தம் இல்லாதவனைப்போல் இருப்பதால், எல்லாப் பெண்களுக்கும் விருப்பமானவனாக அவனே இருந்தான். வீட்டுச் சோறு இவனுக்கு எப்போதும் அப்படி ஒன்றும் சிறப்பானதாக இருப்பது இல்லை என்பதால், சோறு கொண்டுவரும் பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆளுக்குக் கொஞ்சமாகக் கிண்ணத்தில் போட்டுக் கொடுப்பார்கள். ”சும்மா சாப்பிடு மாண்ணே… வேல பாக்கத் தெம்பு வேணாமா?’

பழைய இரும்புத் தூக்கு வாளியில் இவன் கொண்டு வருகிற கொஞ்சம் பழைய சோற்றி லும் ஊறுகாயிலும் என்ன இருக்குமோ தெரி யாது, கண்ணை மூடி ரசித்து அதனைச் சாப்பிடுவான். ‘சர்… சர்’ என அவன் கஞ்சியை உறிஞ்சும் சத்தம் நாராசமாக இருக்கும்.

‘மாடு கழனித் தண்ணி குடிக்கிற மாதிரி குடிக்காதண்ணே… கஞ்சிய மெள்ளக் குடி…’ பிள்ளைகள் யாராவது சொல்லிவிட்டால், அடுத்த நிமிடம் சுந்தரியிடம் இருந்து கோபத்தோடு பதில் வரும், ‘அவன்கிட்ட வாயக் குடுக்காம பொத்திக்கிட்டுத் தின்னுங்கடி.’ அந்த வருட ஆயுத பூஜைக்கு முந்தின தினம் பாதி ஷிஃப்ட்டில் தறிகளை நிறுத்திவிட்டு, எப்போதும்போல், கம்பெனியைச் சுத்தம் செய்ய ஆளுக்கு ஒரு பக்கமாக ஒதுங்கிவிட்டனர். தறிகளைத் துடைப்பதைவிட்டு, பாதிப் பையன்கள் பக்கத்து கம்பெனி இளவட்டப் பெண்களுக்கு உதவி செய்யப்போக… மிச்சம் மீதி இருக்கிற கொஞ்ச பேரில் வேலை பார்த்தது ஒன்றிரண்டு பேர்தான். சுந்தரி எப்படியும் இன்று படிந்துவிடுவாள் என்கிற நம்பிக்கையோடு செல்வராசு விடாமல், அவளைச் சுற்றிக்கொண்டு இருந்தான். பொரியும் பழங்களும் வந்து தனித் தனி பைகளில் போட்டு அடைத்துக்கொண்டு இருக்க, தேங்காய் உடைக்க ஆள் இல்லாமல் மாமாவைத் தேடியபோதுதான், பாதி ராத்திரிக்கு மேல் அவனை யாரும் பார்த்திருக்கவில்லை என்பது தெரிந்தது. பையன்கள் சுந்தரியிடம் கேட்டார்கள், ”எத்தா… எங்க ஒன் ஆளக் காணோம்…’

அவளுக்குச் சட்டெனக் கோபம் வந்தது, காட்டிக்கொள்ளாமல் ‘அந்த லைன் வீவரப் போய் கேளுங்கடா… எங்கிட்ட கேக்குறீங்க’- அவள் வார்த்தை வந்த வேகத்தில் பையன்கள் நகர்ந்துவிட்டார்கள். ஆளுக்கொரு பக்கமாக ‘டே மாமா… டே…’ வலை வீசித் தேடிக்கொண்டு இருக்க, சுந்தரி மட்டும் அவனைப் பேர் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டு இருந்தாள். சுவரில் சந்தனத்தால் ‘உ’வன்னா போட்டுக்கொண்டு இருந்த தங்கபாண்டி, தறிக்குக் கீழ் ஏதோ ஓர் உயிர் அசைவதைப் பார்த்து எல்லோரையும் கூப்பிட்டான். யாரும் சத்தம் கொடுக்காமல் வந்து நிற்க, சலனமே இல்லாமல் தறிக்குள் பீம் இருக்கும் இடத்தில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்தான். யாரும் நெருங்கிப் போகாமல் தறி மோட்டாரை ஆன் செய்ய, தறி துடைக்கத் தந்த நூல் வேஸ்ட்டைத் தலைக்குவைத்துத் தூங்கிக்கொண்டு இருந்த மாமா, மலங்க மலங்க எல்லோரையும் பார்த் துச் சிரித்தான். அவன் சிரிப்பை நிறுத்தின பிறகு எல்லோரும் சேர்ந்து சிரிக்க, எதற்குச் சிரிக்கிறார்கள் எனத் தெரியாமல் இவனும் சிரித்தான்.

‘எலே கூறுகெட்டவனே துணியும் இல்லாமத் தூங்குறியே, எவ நெனப்புல இப்புடிக் கெடக்கற?’

அதுவரையிலும் தான் லுங்கியை அவிழ்த்து விரித்துப் படுத்த நினைவு இல்லாதவன், அவசரமாக லுங்கியைத் தேடி எடுத்து உடுத்தினான். சுந்தரி சுற்றி இருந்த கூட்டத்தை விலக்கிவிட்டு, அவனை இழுத்துக்கொண்டுபோய் முகத்தில் தண்ணீரை அடித்துவிட்டாள். ‘தூங்கறதுக்கு வேற எடம் கெடைக்கலையா லூஸுப் பயலே…’ திட்டியபடியே முதுகைத் துடைத்துவிட்டவளுக்குத் தன் இள வயது அம்மாவின் சாயல் இருப்பதாகத் தோன்றியது இவனுக்கு. ரொம்ப நேரம் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவனை மண்டையில் நறுக் எனக் குட்டி, ‘உத்துப் பாக்காம போயி ஆகுற சோலியப் பாரு’- சிரித்துக்கொண்டு போய்விட்டாள். எல்லோருக்கும் பொரி கொடுத்துக்கொண்டு இருந்த முதலாளி, இவனுக்குப் பொரியோடு சேர்த்து அன்னிக்கு இரண்டு புது ஜட்டிகளும் தந்தார். ‘காலா காலத்துல கல்யாணத்தப் பண்ணுடா…’- முதலாளி சத்தமாகச் சொன்னதற்கு, ‘பொண்ணெல்லாம் தயாரா இருக்கு சார்’ – மத்த ஆட்கள் எல்லாம் சத்தமாகச் சொன்னார்கள். இவன் யாரைப் பார்ப்பது எனத் தெரியாமல் சிரிக்க, சுந்தரி மட்டும் ஓரமாகத் தலையைக் குனிந்து நின்றுகொண்டு இருந்தாள். வெறும் மாமாவை எல்லோரும் ஜட்டி மாமாவாக்கிவிட்டனர்.

ஆயுத பூஜை லீவு முடிந்து எல்லோரும் கம்பெனிக்கு வர, மாமா மட்டும் வரவில்லை. ஒருநாள் விடுமுறை, இரண்டு, மூன்று எனக் கடந்து, 15 நாட்களைத் தாண்டவும், பாதிப் பேர் அவன் இனி எப்போதும் வர மாட்டான் என்றே பேசிக்கொண்டார்கள். சுந்தரியிடம் கேட்டதற்கு எந்தத் தகவலும் தெரியாது எனச் சொல்லிவிட்டாள். 16-வது நாள் வேலைக்கு வந்தவனிடம் புது மாப்பிளைக் களை. புது வேட்டியும், கொஞ்சம் லூஸான மோதிரமும் அவனுக்குப் பொருத்தமே இல்லாமல் இருந்தது. கல்யாணம் கட்டிவைத்து இருக்கிறார்கள். சொந்தக்காரப் பெண், பக்கத்து ஊர்தான். கம்பெனியில் இவனையும் சுந்தரியையும் வைத்துப் பேசியதில் அரையும் குறையுமாக வீட்டுக்குத் தெரிந்துவிட, ‘போயும் போயும் சாதி கெட்ட சாதியில இருக்குற சிறுக்கிகூடத்தானா சேத்துவெச்சுப் பேசணும்’- ஆத்திரத்தில் சட்டெனக் கல்யாணத்தை முடித்துவைத்துவிட்டனர். தனக்கு வாக்கப்பட்டு வந்த பெண்ணை சுத்தமாக இவனுக்குப் பிடிக்கவில்லைதான். எப்படி அந்தக் கல்யா ணத்தில் இருந்து தப்பிப்பது என்றுகூட அவனுக்குத் தெரிந்து இருக்கவில்லை.

சுந்தரியைப் பார்த்ததில் இருந்து அவனுக்கு இருந்த மயக்கம் முற்றாக வடிந்து இருந்தது. ஓர் ஆணாக அவன் உணர்ந்த சந்தோஷம் அது. வெறுங்கூடாகச் சிரிப்பை மறந்து எப்போதும்போல் தறிக்குக் கண்டு வைத்துக்கொண்டு இருந்தான். தறியின் சத்தம் அவன் மனதின் பேரோலத்தைப் போலவே கேட்டது. யார் யாரோ ஏசிய வார்த்தைகள் எல்லாம் அவனை இத்தனை வதைத்தது இல்லை.

தன் பக்கத்தில் நின்று வேலை பார்த்துக்கொண்டு இருந்த சுந்தரி தன்னிடம் பேச மாட்டாளா என்ற ஏக்கத்தோடு அவள் முகத்தைப் பார்த்தான். அவன் இன்னது என்று அறிய முடியாத… அவனால் அர்த்தம்கொள்ளவே முடியாத சிரிப்பொன்றை உதிர்த்தவள், ”ஒரு வார்த்தை சொல்லாமக்கூட கல்யாணத்த முடிச்சுப்புட்ட” என்றாள். பதில் சொல்லாமல் அவன் திணறிக்கொண்டு இருந்தபோது, கம்பெனியில் எல்லோரும் மொய் செய்வதாகச் சொல்லி ஆளுக்குக் கொஞ்சமாகப் பணம் சேர்த்து அவனுக்குக் கொடுத்தனர். யாரிடமும் வாங்காமல் சுந்தரியைப் பார்த்துக்கொண்டு இருக்க… களங்கமற்ற சிரிப்புடன் அவள், ‘சும்மா வாங்கிக்க… அந்தப் புள்ளைக்கி ஏதாச்சும் நல்லது கெட்டத வாங்கிக் குடு…’ சொன்னதும் ஆட்டுக் குட்டியைப்போல் தலையாட்டி வாங்கிக்கொண்டான். முதலாளி இவனுக்கும் வீட்டுக்காரிக்குமாகச் சேர்த்து புதுத் துணி வாங்கிக் கொடுத்தார். செல்வராசு மட்டும் ரொம்ப அக்கறையாகப் பேசினான். கல்யாணத்துக்குக் கூப்பிடாததுக்காகக் கோபப்பட்டவன், ‘புள்ளய உனக்குப் பிடிச்சிருக்காடா..? அந்தப் புள்ள வீட்ல எப்படி இருக்கு. வீடா, இல்லாத வீடா..?’

விவரமாக எல்லாத்தையும் கேட்க நினைத்தவனை சந்தோஷமற்ற இவன் முகமும் குரலும் நிராகரித்தபடியே இருந்தது. எல்லாவற்றுக்கும் ஒரே வார்த்தையில் பதில் சொன்னவனை ‘ஏன்டா ஒரு மாதிரி இருக்க, சந்தோஷமா இருக்க வேண்டியதுதான?’- செல்வராசு சொன்னதற்கு நீண்ட நேரத்துக்குப் பின்பாக, ”எனக்கு இந்தப் புள்ளையத்தாண்ணே புடிச்சிருக்கு…’ சுந்தரியைக் காட்டினான்.

இத்தனை நாட்களும் விளையாட்டுக்கு இவர்களைச் சேர்த்துவைத்துப் பேசியது பொய்யாகிய வெறுமையில் செல்வராசு அமைதியாக அங்கே இருந்து போய்விட்டான். அதன் பிறகு, செல்வராசு உட்பட யாரும் அவனை சுந்தரியோடு சேர்த்துப் பேசவில்லை!

– ஜூன் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *