கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,687 
 

துபாயிலிருந்து பத்து நாள் விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் மகனிடம், காலில் கட்டுடன் விந்தி, விந்தி நடந்து வந்தாள் அகிலா. “”பரணி… என் மனசுக்கு நிம்மதியும், சந்தோஷமும் கிடைச்சுடுச்சிப்பா… வேலையில்லாம கஷ்டப்பட்ட உனக்கு, துபாயில் நல்ல வேலை கிடைச்சு, இந்த இரண்டு வருஷத்திலே கைநிறைய சம்பாதிச்சு ஊருக்கு வந்திருக்கே. எல்லாம் அந்த மாரி ஆத்தாவின் கருணை.

“”கடம்பரான்பட்டி மாரி ஆத்தாவை தான், மனசார வேண்டிக்கிட்டேன். அவ உனக்கு, நல்ல வழியை கொடுத்திட்டா… நீ நாளைக்கு நம்ம கிராமத்துக்கு போயி, அம்மனுக்கு அர்ச்சனை பண்ணிடு. நான் வேண்டிக்கிட்டபடி, உன் வருமானத்தில் பத்தாயிரம் ரூபாயை அந்த ஆத்தா உண்டியலில் செலுத்திட்டு வந்திடுப்பா…”

மாரி ஆத்தா

“”அம்மா… உனக்கு காலில் அடிபட்டிருக்கு… நீயில்லாம நான் மட்டும் எப்படி போறது?”

“”இல்லப்பா. எனக்கு காலு குணமாகி, ரெண்டு பேரும் போறதுக்கு நாளாகும்… மாரி ஆத்தா கடனை, செலுத்திட்டு வர்றதுதான் நல்லது. நம் வேண்டுதலை நிறைவேத்தி வச்சவ. நீ அவசியம் போய்ட்டு வாப்பா…”

அம்மாவின் சொல்லை தட்ட முடியாமல், கிளம்பினான் பரணி. பஸ்சில் புதுக்கோட்டை வந்தவன், அங்கிருந்து கடம்பராயன்பட்டி செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தான்.

கிளம்பி ஒரு மணி நேரம் கழித்து, கர்புர் என்ற சப்தத்துடன் வண்டி நிற்க, “”பஸ் பிரேக் டவுன், இனி பஸ் கிளம்பாது. டிக்கெட் பணத்தை வாங்கிட்டு, அடுத்த பஸ்சை பிடிச்சு போங்க…” கண்டக்டர் சொன்னார்.

பஸ்சில் இருந்த பயணிகளுடன், பரணியும் இறங்கினான். தூரத்தில் ஒரு கிராமம் தெரிய, இப்படி நட்ட நடு ரோட்டில் நிற்காமல், அங்காவது போய் காத்திருக்கலாம் என, அந்த கிராமத்தை நோக்கி நடந்தான்.

சிறிய கிராமமாக இருந்தாலும். பச்சை பசேலென்று பசுமையுடன் காட்சியளித்தது. வீட்டின் முன்புறம் ஒரு சிறிய டீக்கடை வைத்து, வியாபாரம் செய்து கொண்டி ருந்தவனை நெருங்கினான்.

“”ஐயா… கடம்பராயன்பட்டி போகணும், பஸ் எப்ப வரும்?”

“”இன்னும் ஒரு மணி நேரம் இருக்குங்க… இப்படி பெஞ்சில உட்காருங்க… காபி, டீ, சாப்பிடறீங்களா? சூடா இட்லி இருக்கு… தரட்டுமா?”

“”ஒரு காபி கொடுங்க…”

உள்ளிருந்து எட்டி பார்த்த பெண்மணி, “”என்னங்க கொஞ்சம் உள்ளே வர்றீங்களா? வள்ளி என்ன சொன்னா<லும் கேட்காம அழுதிட்டே இருக்கா…”

“”வியாபாரம் பண்ணிட்டிருக்கேன். கஸ்டமரு இருக்காங்க… நீ உள்ளே போ… சித்த நேரத்தில் வரேன்…”

அவனிடம் காபி டம்ளரை கொடுத்தவர், வீட்டி<னுள் சென்றார். உள்ளே நடக்கும் பேச்சு வார்த்தை, வாசலில் உட்கார்ந்திருந்த பரணியின் காதில் தெளிவாக விழுந்தது.

“”இங்க பாரு வள்ளி, நீ சின்ன குழந்தை மாதிரி அழுது, அடம் பண்றது சரியில்லை…”

“”அப்பா… எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்பா… நான் படிக்கணும்பா… டீச்சர் டிரெயினிங் காலேஜில் சேர்ந்து படிக்கிறேன்பா… நான் படிச்சு, என் தகுதியை உயர்த்திகிட்ட பிறகு, நீங்க சொன்ன மாதிரி கல்யாணம் கட்டிக்கிறேன்பா…”

“”இதைத்தான் நீயும், பத்து நாளா சொல்லிட்டு இருக்கே… தோடு, மூக்குத்தி போட்டு உன்னை கல்யாணம் கட்டிக்க, நம்ம மேலத் தெரு மகேசன் தயாராக இருக்கான். ஏதோ ஆசைபட்டியேன்னு, ஸ்கூல் படிப்பு படிக்க வச்சேன். நம்ம தகுதிக்கு இது போதும். பேசாம நல்லபடியா கல்யாணம் கட்டிக்கிட்டு, குடித்தனம் பண்ற வழியைப் பாரு… புரியுதா?”

“”அப்பா… நான் படிக்கணும், நாளைக்கு பணம் கட்ட கடைசி நாள்பா… ப்ளீஸ் பா…”

“”வள்ளி… பொட்டை புள்ளையை கட்டி காக்க முடியாதும்மா… நான் சொல்றதை புரிஞ்சுக்கிட்டு, இந்த நினைப்பை இதோட விட்டுட்டு, குளிச்சுட்டு அடுத்த வேலையை பாரு.”

வீட்டினுள் இருந்து வெளியே வந்தவர், பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் பரணியிடம், “”தம்பி… இட்லி சூடா இருக்கு… சாப்பிடறீங்களா?”

“”சரி… நாலு இட்லி கொடுங்க…”

இலையில் இருந்த இட்லியை, சாம்பாரில் தொட்டு சாப்பிட ஆரம்பித்தான். இடுப்பில் குடத்துடன், கையில் குளிப்பதற்கு துணிமணிகளுடன், வெளியே வந்த பெண்ணை பார்த்தான். அவள்தான், வள்ளியாக இருக்க வேண்டும்.

“”வள்ளி குளிச்சுட்டு வரும் போது, நாயர் கடையில் டீத்தூள் வாங்கிட்டு வாம்மா…”

அவர் சொல்ல, பதில் பேசாமல் அழுது சிவந்த கண்களுடன் நடந்தாள்.

வெயில் சுள்ளென்று தகிக்க, அங்கிருந்த செய்தித் தாளை படிக்க ஆரம்பித்தான். அரைமணி நேரம் கூட ஆகியிருக்காது. நா<லு பேர் கடைநோக்கி வேகமாக ஓடி வந்தனர்.

“”வீரப்பா… உன் மக வள்ளி, வயல் தோப்பிலிருக்கிற கிணத்திலே குதிச்சுட்டாப்பா… சீக்கிரம் ஓடி வா…”

கடையை போட்டுவிட்டு அலறிக் கொண்டு, கணவனும், மனைவியும் ஓட, இருப்புக் கொள்ளாமல் பரணியும் பதற்றத்துடன் அவர்களை பின் தொடர்ந்தான்.

அதற்குள், வள்ளியை கிணற்றிலிருந்து தூக்கி, வண்டி சக்கரத்தில் வைத்து சுழற்றி, கீழே இறக்கி இருந்தனர். கண் திறக்காமல் மயக்கத்தில் இருந்தாள்.

“”அடிப்பாவி மகளே… என்ன காரியம் செஞ்சுட்டே?”

அவள் தாய் வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொண்டு அலற, “”எல்லாரும் ஒதுங்கி நில்லுங்க, காத்து வரட்டும். வள்ளிக்கு ஒண்ணும் ஆகலை; குடிச்ச தண்ணியை இறக்கியாச்சு. இன்னும் கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிஞ்சுடும்…”

கிராமத்து பெரியவர் ஒருவர் சொல்ல, மொத்த கிராமத்து ஜனமும் அங்கு கூடி வேடிக்கை பார்த்தது.

டீக்கடை பெஞ்சில், முகம் சோர்ந்து உட்கார்ந்திருந்தாள் வள்ளி. கவலையை முகத்தில் தேக்கி, அவளை பெற்றவர்கள் நிற்க, பரணிக்கு அவர்களை பார்க்க பாவமாக இருந்தது.

“”இங்க பாரும்மா… நீ பண்ணின காரியம் எவ்வளவு தப்பானதுன்னு உனக்கு புரியுதா? படிக்கணுங்கற உன் ஆசையை தப்பு சொல்லலை. இருந்தாலும், இந்த முடிவு தப்பானதும்மா…

“”வாழ்க்கையில் எவ்வளோ விஷயங்கள் இருக்கு. உன்னை நல்லபடியா வாழ வைக்கணுங்கற உங்க அப்பா, அம்மாவோட கனவையே ஒரு நிமிஷத்தில் தவிடு பொடியாக்க பார்த்தியே,” என்றான் பரணி.

“”வள்ளி… இனி உன் விருப்பத்துக்கு மாறாக நடக்க மாட்டோம். நீ ஆசைப்பட்டபடி, டீச்சர் டிரையினிங் காலேஜில் சேர்த்து விடறேன்; நல்லா படி. கடவுள் உனக்கான, வாழ்க்கையை தீர்மானிச்சு இருப்பாரு… அதுபடி நடக்கட்டும். எனக்கு என் மக வேணும். உன்னை இழக்க நாங்க தயாராக இல்லம்மா…”

“”அப்பா… என்னை மன்னிச்சுடுங்க.”

அவரை கண் கலங்க பார்த்தாள்.

“”தம்பி… உங்களை பார்த்தா, படிச்சவராக தெரியுது. உங்க தங்கச்சியா நினைச்சு, இந்த புள்ளைக்கு நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க. எங்களுக்கு இவளை விட்டா வேற யாரு இருக்கா… இவ பண்ணின காரியத்தை நினைச்சு மனசு பதறுது…”

வள்ளியின் தாய், கண்ணீர் விட்டு அழ, “”அழாதீங்க, நீங்க அருமையான மகளை பெத்திருக்கீங்க… அவ நினைச்சது போல், நல்லபடியாக, நல்லதை சொல்லித் தர நினைக்கிற ஆசிரியர் பணி, எவ்வளவு மகத்துவமானது தெரியுமா? உங்க பொண்ணு படிச்சு, தன்னையும் உயர்த்திகிட்டு, உங்களையும் பாதுகாப்பாள். கவலைப்படாதீங்க…”

சொன்னவன், பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்தான்.

“”இந்தாம்மா இதை வச்சுக்க… இந்த அண்ணன் உனக்கு மனசார வாழ்த்தி கொடுக்கிறேன். நீ ஆசைப்பட்டபடி ஒரு நல்ல ஆசிரியராக வரணும்ன்னு வாழ்த்தறேன்.”

“”தம்பி என்ன இது… இவ்வளவு பணத்தை கொடுக்கிறீங்க? வேண்டாம் தம்பி. நீங்க யாரோ, எவரோ, இவ்வளவு தூரம் அன்பாக பழகி நல்லது சொன்னவரைக்கும் சந்தோஷம்… வேண்டாம்பா!”

அவர் மறுக்க, “”தயவு செய்து மறுக்காம வாங்கிக்க சொல்லுங்க. இந்த பணத்தை கடம்பராயன்பட்டி மாரி ஆத்தா உண்டியலில் போட எடுத்துட்டு வந்தேன். இது உங்க மகளோட படிப்பு செலவுக்கு உபயோகப்பட்டா அந்த ஆத்தாவே சந்தோஷப்படுவா…”

அவள் கையில் பணத்தை கொடுத்தவன், “”இந்த பணத்தை, உன் சகோதரன் கொடுத்ததாக நினைச்சுக்கம்மா… நீ படிச்சு முடிச்சு நல்லபடியா சம்பாதிக்கிற காலத்தில், இந்த பணத்தை அந்த ஆத்தா உண்டியலில் சேர்த்திடு. இதை உன் படிப்பு செலவுக்கு அந்த ஆத்தா கொடுத்ததாக நினைச்சு, வாங்கிக்கம்மா…”

சொன்னவன், அங்கு மாட்டியிருக்கும் படத்தில், கருணை ததும்ப வீற்றிருக்கும் அம்மனை பார்த்தான்.

“”என்னோட வேண்டுதலை, ஆத்தா, இங்கேயே நிறைவேத்திட்டா… ஏழைக்கு இரக்கம் காட்டுபவன் தான், உண்மையான பக்தன்னு நான் நினைக்கிறேன்…”

சொன்னவனை அவர்கள் நன்றியுடன் பார்த்தனர்.

– ஆகஸ்ட் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *