ப்ளீஸ், இன்னும் ஒரு தடவை..! – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,015 
 

சீதா இன்னும் ஒரு தடவை மட்டும் – கெஞ்சினான் வினோத்

ச்சீய்..பேசாமல் படுங்க. பதினோரு மணிக்குள் மூணு முறை ஆகிவிட்டது. மறுபடியும் ஒன்றா..? உடம்பு என்னத்துக்கு ஆகும்..? என்றபடி திரும்பிப் படுத்துக் கொண்டாள்

இல்லே, சீதா, கடைசியா…

இப்படித்தான் கடைசி கடைசின்னு ஏழு மணிக்கு ஒரு முறை, அப்புறம் ஒன்பது மணிக்கு ஒரு தரம், மீண்டும் பத்து மணிக்கு, இப்போ நாலாவது முறையா…உம்..ஹூம் நான் மாட்டேன்! – சீதா பிடிவாதம் பிடித்தாள்

வினோத்துக்கு நாக்கு வரண்டது. உதடுகள் ஏங்கின. நெஞ்சுக்குள் ஒரு தவிப்பு. அந்த இளம் சூடான இன்ப சுகத்துக்கு, உள்ளம் ஏங்கியது. உடலுக்கு கெடுதல் என்றாலும் இதை விட்டு விடுவதற்கு முடியலியே…

சீதா…சீதாக் கண்ணு ,டார்லிங்கஃ என் கண்ணுல்ல நீ கேட்ட புதுப்புடவை நாளைக்கு வாங்கிடலாமா?

எந்தக் கேள்விக்கும் பதில் கூறாது அசைந்து கொடுக்காது அவன் தவிப்புகளை அலட்சியம் செய்தாள் சீதா.

சே, மனுஷனுக்கு இதுல இவ்வளவ ஆசையா? என மனதிற்குள் சலித்துக் கொண்டாள்

இல்லே, சீதா , முழுசா ஒண்ணு இல்லேன்னாலும் இந்த தடவை பாதி சிகரெட்டாவது கொடுத்துடு சீதா. பல வருஷத்துப் பழக்கம். இப்படி ஒரே நாளிலே விட முடியுமா? ஒண்ணு ஒண்ணா குறைச்சு ஒரு மாசத்துல அடியோடு விட்டுடறேன். சீதா, ப்ளீஸ் இப்போ ஒரு தடவை மட்டும்”

கணவனின் தொடர்ந்த கெஞ்சலில் சற்று மனம் இரங்கினாள் சீதா.

‘சரி, எக்கேடு கெட்டாவது தொலையுங்க, என்ற போலி கோபத்துடன் பிடுங்கி ஒளித்து வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவனிடம் எறிந்தாள்.

– தேவி காந்தன் (ஏப்ரல் 1, 2014 )

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *