புது மாப்பிள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 8,334 
 

(இதற்கு முந்தைய ‘அடுத்த பெண்மணி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

இந்தக் கல்யாணம் நிச்சயமானத்தில் சபரிநாதனுக்கு இரண்டு விதத்தில் சந்தோஷம். முதல் சந்தோஷம், வறுமைக் கோட்டுக்குக் கீழே ஏழ்மையில் உழன்றாலும் ராஜலக்ஷ்மி ரொம்ப அழகான பெண்ணாக இருந்தாள். இரண்டாவதாக, பார்ப்பதற்கு அவள் பிராமணாள் வீட்டுப் பெண் போல இருந்தாள்.

சபரிநாதனுக்குப் பாவம் இறக்கை இல்லாமல் போய்விட்டது. அதுமட்டும் இருந்திருந்தால் கல்லிடைக்குறிச்சிக்கு நூறு தடவையாவது பறந்துவிட்டு வந்திருப்பார்.

ராஜலக்ஷ்மிக்கு வயது இருபத்தைந்து. அம்மா, ஒரு அண்ணனும் இரண்டு தங்கச்சிகளும் இருந்தார்கள். அப்பா வறுமைக்குப் பயந்து ஆறு வருடங்களுக்கு முன்பு எங்கோ ஓடி விட்டாராம். அவர்களின் வறுமை காரணமாக ராஜலக்ஷ்மியை இரண்டாம் தாரமாக கட்டிக் கொடுக்கவும் தயாராக இருந்தார்கள்.

இந்த சம்பந்தம் நல்லபடியாக கைகூடி வந்ததால் சபரிநாதன் வயிறு நிறைய திருப்தியுடன் சாப்பிட்டதுபோல் உணர்ந்தார். அவர் ஆசைப்பட்டு ஏங்கியது இருபத்தேழு வயதுப்பெண். ஆனால் அதற்கும் இரண்டு வயது குறைந்த பெண் வருவதற்கு அவரின் தலையில் எழுதியிருந்தால் அதை யாரால் தடுக்க முடியும்? வந்துவிட்டுப் போகட்டுமே!

பெண் பார்ப்பதற்காக சபரிநாதன் அய்யாச்சமியுடன் கிளம்பி கல்லிடைக்குறிச்சி போனார். இதற்கு முன் அவர் நூறு தடவைகளுக்கும் மேல் போயிருக்கிற ஊர்தான். இருப்பினும் இப்போது போனபோது அதன் நிறமே அழகாக மாறிப் போயிருந்தது.

ராஜலக்ஷ்மியைப் பார்த்ததுமே சபரிநாதன் சொக்கிப்போய் விட்டார். கழுவிய பழுத்த பப்பாளி நிறத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மாதிரி இருந்தாள். அவள் இத்தனை அழகான பெண்ணாக இருப்பாள் என்று சத்தியமாக அவர் எதிர் பார்க்கவில்லை. அவளின் கைகளிலும் கழுத்திலும் வறுமையின் சோகமும் வெறுமையும் படிந்து போயிருந்தாலும்கூட, அவளின் முகத்தில் மிருதுவான அழகின் உயிரோட்டம் ஏராளமாக மிளிரவே செய்தது. விலை மலிவான புளியங்குடி சேலையிலும் ராஜலக்ஷ்மி துடைத்து வைத்த குத்து விளக்கு போலதான் இருந்தாள்.

சபரிநாதன் மனசில் ஏனோ தேவையே இல்லாமல் முப்பது வருஷங்களுக்கு முன்னால் – அப்போது இந்த ராஜலக்ஷ்மி பிறக்கவே இல்லை – கோவில்பட்டிக்குப் போய் மரகதத்தைப் பெண் பார்த்த சம்பவம் கண்முன் விரிந்தது. அழகான இந்த ராஜலக்ஷ்மி எங்கே! அழகே இல்லாத அந்த மரகதம் எங்கே? சபரிநாதனுக்குள் இருக்கும் ஆணவச் சிங்கம் சின்னதாக ஒரு கர்ஜனை செய்தது..!

சிங்கம் யோசிக்கவே இல்லை. அடுத்த நிமிஷமே தன் சம்மதத்தை சொல்லிவிட்டு கிளம்பி வந்துவிட்டது. ஆனால் பெண் சிங்கத்தின் சம்மதம் நான்கு நாட்களுக்குப் பிறகுதான் கிடைத்தது. சபரிநாதன் உடனே பெருமாள் கோயிலுக்குப் போய் சன்னதியை பிரதட்சணம் செய்து பெருமாளுக்கு நன்றி சொன்னார். திம்மராஜபுரம் கிராமத்தில் ஒரே நாளில் தன் அந்தஸ்து கூடி விட்டாதாகக்கூட அவருக்கு ஒரு பிரமை ஏற்பட்டது!

இப்படி ஒரு செளந்தர்யமான பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்ள நிஜமாக ஒரு ஆம்பிள்ளைக்கு அந்தஸ்து வேண்டும். ரதி போல பெண் வேண்டும் என்று கேட்க அந்தஸ்து இல்லாதவனால் முடியவே முடியாது! பணக்காரனுக்குத்தான் லட்டு போன்ற பெண்டாட்டி கிடைப்பாள். சபரிநாதனே அனுபவத்தில் இதை நிறைய பார்த்திருக்கிறார். துட்டு இல்லாத பயல்களுக்கெல்லாம் கட்டெறும்பு போல கருவாச்சிப் பெண்டாட்டிகள்தான்!

பெருமாள் அவரைப் பணக்காரராக பிறக்க வைத்துவிட்டார் என்ற சந்தோஷம் எப்போதும் உண்டு. ஆஹா இப்போது இந்தப் பணக்காரருக்கு லட்டு போன்ற இரண்டாம் தாரம் வரப் போகிறாள்…! அவருக்குத் தெரிந்து சுற்று வட்டாரம் எங்கேயும் ஐம்பத்தைந்து வயதுப் பணக்காரன் எவனுக்கும் ராஜலக்ஷ்மி போல ஒரு அழகான பெண் மனைவியாகக் கிடைத்ததே இல்லை. இந்த ஒரு சந்தோஷத்திற்காகவே திருநெல்வேலி மாவட்டம் முழுதும் ஒரு சிங்கநடை நடந்துவிட்டு வரலாம் போலிருந்தது. கூடவே ராஜலக்ஷ்மியையும் கூட்டிக்கொண்டு போனால் இன்னும் விசேஷம்தான்! கல்யாணமான பிறகு ராஜலக்ஷ்மியைப் பார்க்கிற பணக்கார கிழவர்கள் சபரிநாதன் மேல் பயங்கரமாக பொறாமைப்பட சாத்தியம் இருக்கிறது! என்று நினைத்துக்கொண்டு சிலிர்த்துப் போனார்.

நான்கு நாட்கள் கழித்து சபரிநாதன் மறுபடியும் அய்யாச்சாமியுடன் கல்லிடைக்குறிச்சி போனார். அவர் போக வேண்டிய அவசியம் கிடையாது. ஆனாலும் கல்யாணத் தேதியை சொல்லப்போன சாக்கில் அய்யாச்சாமியுடன் இவரும் ஒட்டிக்கொண்டார். எத்தனை வயசானாலும் மாமியார் வீட்டுக் கவர்ச்சி என்பது ஆம்பிளைகளுக்கு ஒரு மாதரியான கிளுகிளுப்புதான் போலும்.

கல்லிடைக்குறிச்சியில் மீண்டும் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது சபரிநாதனின் மனம் பூவாகிப் போயிருந்தது. அவரின் வயதை சிறிதும் பொருட்படுத்தாமல் அழகான பெண்ணைக் கொடுக்க முன்வந்த அந்த நல்ல குடும்பத்தின் தார்மீகத் தலைவர் இனி சபரிநாதன்தானே!? அந்த உணர்வு மேலீட்டில் சபரிநாதன் நிறைய வார்த்தைகளை அள்ளித் தெளித்து கோலமும் போட்டுவிட்டார்…!

ஆமாம். இறந்துபோன தன் மனைவி மரகதத்தின் இருநூறு பவுன் நகைகள் பூராவும் ராஜலக்ஷ்மிக்குத்தான் என்று பெருமையாக பீற்றிக்கொண்டார். இதைக்கேட்ட ராஜலக்ஷ்மியின் கண்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அவளுடைய அம்மாவின் முகத்தில் ஏராளமாக வெளிச்சம் பரவியது. அந்த அம்மா இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை. வயல்கள்; தோப்புகள்; சொந்த வீடுகள் எத்தனை என்பதைத்தான் அவள் விசாரித்து கேட்டுத் தெரிந்து வைத்திருந்தாள்.

ஆனால் இருநூறு பவுன் நகை பற்றி சபரிநாதன் சொன்னதும் உணர்ச்சி வசப்பட்டு நன்றியுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். சபரிநாதனால் நிமிர்ந்து அந்த அம்மாவைப் பார்ப்பதற்கு கொஞ்சம் கூச்சமாகக்கூட இருந்தது. கூச்சம் புது மாமியார் என்பதால் இல்லை; புது மாமியாருக்கு அவரைவிட இரண்டு வயசு குறைச்சல் என்பதால்…!

கல்யாணத் தேதியை குறித்துக் கொடுத்துவிட்டு சபரிநாதன் விடை பெற்றுக்கொண்டார். தெருவில் அவர் இறங்கி நடந்தபோது, எல்லா வீட்டு வாசல்களிலும் பெண்கள் நின்று அவரையே பார்த்தார்கள். அவர்களுக்கெல்லாம் பழக்கப்பட்ட அழகான பெண்ணை மணக்கப் போகிறோம் என்ற பெருமையில் நடப்பதா; அல்லது இருபத்தைந்து வயசுப்பெண்ணை மணக்கப் போகிற ஐமபத்தைந்து வயதான மனிதர் என்ற வெட்கத்தில் நடப்பதா என்று தெரியாத குழப்பத்தில் நடந்ததால் அவரின் நடையே ஒரு மாதிரியாக இருந்தது!

திம்மராஜபுரம் போய்ச் சேர்ந்ததும் சபரிநாதன் செய்த முதல் காரியம், இரண்டு மகள்களையும் மொபைலில் தொடர்பு கொண்டதுதான். முதலில் ஹைதராபாத் மகள் சுகுணாவுக்கு போன் அடித்தார். அன்று அரசாங்க விடுமுறை என்பதால் சுப்பையா வீட்டில் இருந்தான். சுகுணா குளித்துக் கொண்டிருந்தாள். அதனால் சுப்பையாவே மொபைலை எடுத்துப் பேச வேண்டியதாகிவிட்டது. சபரிநாதன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் ‘உம் உம்’ என்பதற்கு மேல் அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. அத்தனை எளிதாக அவருக்கு பெண் கிடைத்து விடாதென்று சுப்பையா நம்பியிருந்தான். ஆனால் அவனுடைய அந்த நம்பிக்கையில் ஒரு வண்டி கல்லிடைக்குறிச்சி மண் விழுந்துவிட்டது!

இந்தக் கல்யாணத்தால் சபரிநாதனுக்குப் பிறகு அவனுக்கு வரவேண்டிய பங்குகள் கணிசமாகக் குறைந்து போய்விடலாம்; அல்லது பங்கே வராமலும் போய்விடலாம்… அதனால் ராஜலக்ஷ்மி பற்றி சபரிநாதன் சொல்லிக் கொண்டிருந்த தகவல்களை சுவாரஸ்யம் இல்லாமலும், எரிச்சலோடும் கேட்டுக்கொண்டே வந்தவன்; பெண்ணிற்கு இருபத்தைந்து வயசு என்பதைக் கேட்டதும் திகைத்துப்போனான். ‘கெழவருக்கு வந்த யோகத்தைப் பார்லே’ என்று விக்கித்துப் போனான். இப்போது அவனுடைய மனைவி சுகுணாவிற்கும் இதே வயதுதான். பெண்டாட்டிக்கும் மாமியாருக்கும் ஒரே வயசு! அத்தோடு முடியிவில்லை விஷயம். வீட்டு மாப்பிள்ளை சுப்பையாவை விட, மாமியார் ராஜலக்ஷ்மிக்கு சரியாக ஐந்து வயசுக் குறைச்சல்!

சுப்பையா கே.பாலசந்தர் படங்களைப் பார்க்கிறவந்தான்; நிறையக் தமிழ்க் கதைகள் வாசிக்கிறவந்தான். ஆனால், இப்படி மாமியாருக்கும் பெண்டாட்டிக்கும் ஒரே வயசு என்பதை அவன் அந்தக் கதைகளில்கூட கேட்டதில்லை. கடைசியில் சபரிநாதனின் கல்யாணக் கதை இப்படியாகிவிட்டது… சுப்பையாவால் இதை ஒரு கதையாகக்கூட எழுத முடியாது!

உடனே அவனுடைய அப்பாவை மொபைலில் தொடர்பு கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *