“டே! போதும், ஓவரா சீன் போடாத, நீ வேண்டிக்கிறதுலதான் அந்த ஆம்புலன்ஸ்ல போறவன் பொழைச்சிக்கப் போறானா!’ தன்னைக் கடந்து போன ஆம்புலன்ஸைக் கண்டு பிரார்த்தித்த முத்துவுக்கு சதீஷ் கொடுத்த வார்த்தைப் பரிசு இது.
“டே, நான் பண்ணது சீன் போட இல்லை. நம்ம பிரார்த்தனையும் அவர் பொழைக்க ஒரு காரணமா இருக்கலாம் பாரு. அதையும் தாண்டி பாதிக்கப்பட்ட ஒருத்தன் நல்லா இருக்கணும்னு நினைக்கறதுல தப்பும் இல்ல, குத்தமும் இல்ல’ என்று முத்து தன் கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சதீஷின் செல்போன்
ஒலித்தது.
“டே சதீஷ்! நான் அம்மா பேசரேன்டா. உங்க அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம். ஆக்சிடென்ட் ஆன இடத்துல இருந்தவங்க அவரை ஜி.எச்.ல சேர்த்திருக்காங்களாம். சீக்கிரம் வீட்டுக்கு வாடா. எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை!’
தன் அம்மாவின் பேச்சைக் கேட்கக் கேட்க சதீஷின் முகம் வெளிறிக் கொண்டே போனது.
“டே இங்கு பாரு, உங்க அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது, பயப்படாம போ’ சதீஷை தன் தைரிய வார்த்தைகளால் தேற்றிய முத்து பிரார்த்திக்கத் தொடங்கினான்.
சதீஷின் உதடுகளும் பிரார்த்திக்கத் தொடங்கியது, தன் அப்பாவை இறைவன் காப்பாற்ற வேண்டுமென்று.
– ச.கோபிநாத் (ஜூலை 2012)