‘பார்க்’காமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 7,142 
 

ஒரு நாளைப் போல இதே தொந்திரவு. என்னை தூங்க விட மாட்டேங்கிறாங்க. வேறே யாரு? என் தர்ம பத்தினி தான்.

“பாருங்க! உங்களுக்கு வயசாயிண்டே போறது. ரத்த கொதிப்பு, சர்க்கரை, இதோட சேர்ந்து கொலஸ்ட்ரால் வேற. வாக்கிங் கிளம்புங்க.” மனைவயின் அதட்டல்.

வேறே வழியில்லை. கிளம்பிட்டேன். காலை 6.00 மணி. பார்க்லே கொஞ்சம் கூட்டம். கேட் கிட்டே வரிசையாக ஸ்கூட்டர்/மோட்டார் பைக்குகள், ஒட்டி ஒட்டி. நடக்க வழியே இல்லை, வண்டிகளை இடித்து கொண்டே உள்ளே நுழைந்தேன்.

“கொஞ்சம் கூட அறிவே இல்லை. இப்படியா வண்டிகளை பார்க் பண்ணுவாங்க” அலுத்துக் கொண்டே சக நண்பர் வளைந்து வளைந்து நுழைந்தார். அவரது கையில் ஒரு சைனா மொபைல்,

“என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே” அந்த கால எம்.ஜி.ஆர் பாடல் உரக்க பிளிறிக் கொண்டிருந்தது. ‘யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’. அவர் முரட்டு மீசையுடன், கொஞ்சம் பெரிய தொப்பையுடன், போலீஸ் மாதிரி இருப்பார்.. அதனால் நான் அவருக்கு வைத்திருந்த பெயர் எஸ்.பி (சவுண்ட் பார்ட்டி).

“பார்க் வந்திருக்காங்க இல்லியா! அதான் இப்படி பார்க் பண்ணியிருக்காங்க.!” ஜோக் கடித்தேன். என்னை ஏதோ பூச்சி மாதிரி பார்த்துக் கொண்டே வேகமாக நடந்தார். அப்படி என்ன தப்பாக சொல்லி விட்டேன்?

நெறைய பேர் பார்க்கை சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார்கள். சில பேர் இடம் வந்து கொண்டிருந்தார்கள், என்ன வேண்டுதலோ? கொஞ்சம் பேர் ஸ்லோவாக, சிலர் அசுர கதியில், அரசியல் பேசிக் கொண்டு, போனில் காலேஜ் சீட் பேரம் பேசிக்கொண்டு. ரெண்டு பேர் தங்களை மறந்து, அவர்களது அதிகாரியை நக்கல் அடித்து கொண்டு நடை பயின்று கொண்டிருந்தார்கள். என்ன ஒரு மஜா அவர்களுக்கு அதில்!

சில யுவதிகள், பறக்காத தலைப்பை சரி செய்து கொண்டே இடுப்பசைக்க, சில வாலிப மற்றும் டை அடித்த வயோதிக அன்பர்கள் அவர்களை ஜொள்ள, ரெண்டு மூணு விடலை ஜோடிகள் வாக்கிங் பெயரில் கடலை போட்டுக்கொண்டு போக, , ‘பார்க்’க கண் ரெண்டு போதாது. பார்த்துக் கொண்டே ஊர்ந்தேன்.

என்னோட வேக நடைக்கு, எறும்பு கூட என்னை ஓவர் டேக் பண்ணிடும். எறும்பு என்பது இன்னொரு வயதான தம்பதியினருக்கு நான் வெச்ச பேர். என்பதை தாண்டிய அவர்கள், ஜோடியாக ஒருவர் பின் ஒருவராக அசைவார்கள்.

சொல்ல மறந்திட்டேன். பார்க் ரெகுலராக வரவங்க எனக்கு வெச்ச பேர் ‘ஆமை’. அவ்வளவு வேகம் எனது நடையில். காலுக்கு வலிக்குமோ, இல்லே பூமிக்கு வலிக்குமோ என்கிற மாதிரி நடப்பேன். இந்த லட்சணத்தில் எனக்கு உடல் எடை குறைய வேறு ஆசை.

ஆயிற்று, ஒரு மாதிரியாக 10 ரவுண்டு முடிந்தது. அப்பாடா! கிளம்ப வேண்டும். வெளியே கேட்டில் வரிசையாக வண்டிகள். “இங்கு வண்டிகளை நிறுத்தக் கூடாது” நோட்டீஸ் போர்டு கீழேயே ஸ்கூட்டர்/ பைக்குகள். இடைவெளி இல்லாமல் நிறுத்தி வைத்திருந்தனர்.

நான் வெளியே வரும் போது, தாறு மாறாக நிறுத்தியிருந்த ஒரு பைக்கின் ஹான்டல் பார் என் தொப்பையில் இடித்தது. . வலி தாங்காமல் அனிச்சையாக திரும்பினேன். இந்த பக்கம் இன்னொரு பல்சர் வண்டியின் ஹான்டல் பார் இடித்து முட்டியில் அடி சுரீர் என்றது. வேகமாக என் கையை இழுத்ததில், அந்த வண்டி கவிழ்ந்து, பின்னால் வந்த ஒருவர் மேல் விழுந்தது. அவர் நிலை குலைந்து கீழே சாய்ந்தார். நல்ல வேளை, அவருக்கு பெரிய அடி ஒன்றும் இல்லை. கை சிராய்ப்பு, ரத்த காயம், அவ்வளவு தான்.

அதற்குள், எங்கிருந்து பார்த்தாரோ, விழுந்த வண்டியின் ஓனர் ஓடோடி வந்து “என்ன சார், வண்டிய தள்ளிட்டீங்களே! ‘பார்க்’காம கண்ணை மூடிட்டு வரீங்களே?” என்று நெற்றிக் கண்ணை திறந்து எங்களை எரிக்காத குறையாய் கேட்டார்.

பின்னே, வண்டி இன்டிகேட்டர் லைட் உடைந்தால் யாருக்கு தான் கோபம் வராது? விழுந்தவரை பற்றியோ அல்லது என்னை பற்றியோ அவர் கவலை பட்டதாக தெரியவில்லை. அவரது வண்டி முக்கியம்.

“ஹலோ! வண்டியை உங்களை யார் சார் வழியில் நிறுத்த சொன்னாங்க? இங்கேயே அடி பட்டு கிடக்கிறோம், சத்தம் போடறீங்க” நான் ஆரம்பிப்பதற்கு முன்னால் கீழே விழுந்தவர், சத்தம் போட்டு எகிற ஆரம்பித்து விட்டார்.. படித்தவர் அதனால் ஆங்கிலத்தில்” ஸ்டுபிட், இடியட் இப்படியா வண்டிய நிறுத்தறது? அறிவு வேணாம்?”.

“நாங்க பின்னே எங்கே விடறது, இந்த பக்கம் குப்பை வண்டி, அந்த பக்கம் கார்ப்பரேஷன் தோண்டிய பள்ளம். எங்களுக்கு ஏது இடம்? சொல்லுங்க! ” வண்டி காரர் கத்த , மற்றவர்கள் கூச்சல் போட, கூட்டம் சேர்ந்து விட்டது. கொஞ்சம் ரசா பாசம். .

நான் கொஞ்சம் முன் கோபி. நிறைய ரத்த அழுத்தம் வேறு. போதாத நேரம் வேறு. என்கிட்டே இல்லாத ஒண்ணை இருக்கான்னு வண்டி காரரின் நண்பர் வினவியதும் (வேறென்ன, மூளைதான்), கோபம் தாங்காமல் அவரை அடிக்க போனேன். (அவரும் அங்கேதான் தன் ஸ்கூட்டியை பார்க் பண்ணியிருந்தார்). துரதிர்ஷ்டவசமாக அவரிடம் அடி வாங்கிக்கொண்டேன்.

அன்றிலிருந்து மனசுக்குள் ஒரு வெறுப்பு.. பத்து நாள் பார்க் பக்கமே போகாமலிருந்தேன். என்னை அடித்தவர் முகம் மற்றும் அவரது ஸ்கூட்டி ஞாபகம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர பழி வாங்க மனது துடித்தது. மறக்க முயன்று கொண்டிருந்தேன். முடியவில்லை.

***

இந்த பத்து நாளும் ரோட்டில் வாக்கிங். ஆனால், மாநகராட்சி தோண்டல். அவர்களது உபயத்தில் ரோடே பள்ளமும் மேடுமாக. குப்பை வேறு. குழியில் விழுந்தால், எழுந்துக்க முடியாது. மண்ணை போட்டு நம்மை மூட வேண்டியதுதான். அதையும் நகராட்சி செய்யாது. அப்படியே விட்டு விடும்.

வேறு வழி, திரும்பவும் பார்க்குக்கு போனேன். ஒரு மாற்றமும் இல்லை. அதே குப்பை. வண்டிகள் எப்போதும் போல் கேட் வாசலில் பார்கிங், இடக்கு மடக்காக. என்னை அடித்தவரோட ஸ்கூட்டி அங்கே நின்று கொண்டிருந்தது. அடி வாங்கியது மறக்க முடியவில்லை.

பழி வாங்க மனது துடித்தது. என்ன பண்ணலாம்? வண்டியை தள்ளி விடுவோமா? யாராவது பார்த்து விட்டால்? டயரை பஞ்சராக்கி விட்டால்? ஆனால் அது சாத்தியமில்லையே. படிச்சவங்க பண்ற காரியமா இது? மாட்டிக்கொண்டால் எவ்வளவு அவமானம் ?
யோசனையுடன் பார்க்கில் நடந்தேன்.. அன்று ஆமையே அசால்டாக என்னை ஓவர்டேக் பண்ணியிருக்கும். திடீரென்று ஒரு பல்பு என் மண்டைக்குள் எரிந்தது. ஐடியா. பழி வாங்க.

****
அடுத்த நாள். உற்சாகமாக,எனது மனைவிக்கு முன்பாக நான் எழுந்து வாக்கிங் தயாராகி விட்டேன். பழிக்கு பழி. வழக்கம் போல “பாருங்க! உங்களுக்கு வயசாயிண்டே போறது. ரத்த கொதிப்பு,…” மனைவி சுப்ரபாதம் ஆரம்பித்து முடிப்பதற்குள், வீட்டிற்கு வெளியே நான். கையில் ஒரு சின்ன பேனா கத்தி. விடுவிடுவென பார்க் நோக்கி நடந்தேன்.

முயல் கூட அன்று என்னிடம் ரேசில் தோற்றிருக்கும்.

என்னை அடித்தவரோட ஸ்கூட்டி ,பார்க்கில் கேட் முன்னால், எப்போதும் போல் வழியை மறித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தது. நேராக அருகில் போனேன். யாரும் பார்க்கவில்லை. கத்தியால் சீட்டில் நாலு கோடு இழுத்தேன். டர்ரென்று சீட கிழிந்தது. அப்பாடா, திருப்தி. பழி வாங்கினால் என்ன சுகம்.! அதுக்கு ஈடு இணையே கிடையாது. மற்றவரின் சீட்டை கிழிப்பது என்பது எல்லாருக்கும் கிடைக்கும் பாக்கியமா என்ன?

திரும்பினேன். ஸ்கூட்டி ஓனர், என்னை அடித்த மகானுபாவன். அவனுடன் கூட ரெண்டு தடியன்கள். என்னை நோக்கி ஓடி வந்தார்கள். “மாட்டினியா! மவனே! பத்து நாலா (அவருக்கு ளா வராது) எங்க வண்டிங்க சீட் கிழிச்சியே! நீதான்னு எனக்கு சந்தேகம். பிடிச்சிட்டோம் பாத்தியா!” கொக்கரித்தான் ஸ்கூட்டி ஓனர்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் பார்க் பக்கம் வந்தே பத்து நாளாயிற்றே. இன்னிக்கு தானே இந்த வேலையை பண்ணினேன். பத்து நாளா நான் எங்கே, எப்படி செய்திருக்க முடியும்?.
என்னைப் போல் எவனோ ஒருவன், இந்த வேலையை பண்ணியிருக்கிறான். பழி என் தலையில்.

எல்லாரும் சேர்ந்து என்னை ஜூஸ் பிழிந்து விட்டார்கள். என்னை ஒண்ணுமே சொல்ல விடலை. ஒரே ஒரு நாள் கிழிச்ச பாவத்துக்காக, பத்து பேருக்கு புது சீட கவர் வாங்க பணம் கொடுத்தேன். நல்ல வேளை, தெரிந்த நண்பர்கள் வந்து காப்பாற்றினார்கள். இல்லாவிட்டால், போலீஸ் கேஸ் ஆகியிருக்கும்.

அடுத்த நாள், பார்க் பக்கம் போனேன். ‘சார்! சார்!’ என்று யாரோ கூப்பிட்டார்கள். திரும்பினேன். டெய்லி மார்னிங் வாக் வருபவர். ஒல்லியா இருப்பார். பென்சில்னு அவருக்கு நான் அன்பாக வைத்த அடைமொழி. “சாரி சார், நேத்து நீங்க சீட் கவர் கிழிக்கறப்போ நான் அங்கே தான் இருந்தேன். எல்லாத்தையும் பார்த்தேன்”

எனக்கு கொஞ்சம் ஆதங்கமாக இருந்தது. “ஆமா சார், கோபத்திலே நான் ஒரே ஒரு நாள் தான் சீட்ட கிழிச்சேன். அனால், பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் மாதிரி, பத்து நாள் தண்டனை கொடுத்திட்டாங்க” எனக்கு யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல இருந்தது.

“என்ன சார், படிச்ச நீங்களே இதெ செய்யலாமா? பண்றது தான் பண்றீங்க, யாரும் பாக்காம பண்ண வேண்டாம்? அது கூடவா தெரியாது? நானே பாருங்க, ரெண்டு நாள் இந்த தடியன்கள் வண்டி சீட் கிழிச்சிருக்கேன். மாட்டினேனா?”- பென்சில் மார் தட்டிக் கொண்டார்.

“அப்படியா? நீங்க கூடவா? நீங்க ஏன் அப்படி பண்ணீங்க?”

“பின்னே என்ன சார் ? வண்டியே குறுக்கால நெடுக்கால நிறுத்தி இடைஞ்சல் பண்றாங்க. வெறுப்பா இருக்கு. கேட்டால் சண்டைக்கு வராங்க”- தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

“அப்போ, மீதி ஏழு நாள் யார் கிழிச்சிருப்பாங்க!”

“அதான் சார், எனக்கும் புரிபடலை. ஆனாலும், ஸ்கூட்டர் கேட் கிட்டே நிறுத்திறது குறையலியே! தண்டனை கொடுத்தாலும் திருந்த மாட்டேங்கறாங்க”. பென்சிலுக்கு குழப்பம்.

எனக்கு தெரிந்துவிட்டது. யாரை சொல்லியும் பிரயோஜனமில்லை. குறை எங்க எல்லோரிடமும் தான். நமது ஊரில் நடப்பது நகராட்சி இல்லை. நகராத ஆட்சி. கார்பரேஷன் மெத்தனம், ஊர்பட்ட ஸ்கூட்டர், கட்டமைப்பு குறைகள், மலிந்து போன ஊழல், மக்களின் வெறுத்து போன முரட்டு சுபாவம், தன்னலம் எல்லாம் தான் காரணம்.

ஒன்று எனக்கு தெரிந்தது. வன்முறை இதற்கு வழியில்லை. நான் செய்த தவறு எனக்கு மெதுவாக புரிந்தது. ஆமை தானே! எதுவுமே மெதுவாகத்தான். நாம கோபப்பட்டு ஒரு உபயோகமும் இல்லை. மனக் கஷ்டமும், பண நஷ்டமும் தான் மிச்சம்.

முடிவு செய்து விட்டேன். இப்போது , மீண்டும் ஒரு முறை பல்பு எரிந்தது. இனி என் வழி இன்முறை தான்.

பார்க் டிரஸ்ட் மெம்பர்களிடம் சொல்லி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பென்சில், ஜெட் லீ, உதறல், எஸ்.பி (சவுண்ட் பார்ட்டி) மாதிரி நண்பர்கள் மூலமாக , ஸ்கூட்டர் பார்கிங் சீர் செய்யவேண்டும். பொறுமையாக செயல் பட்டு, வண்டிகளை சீராக, மற்றவருக்கு தொந்திரவில்லாமல் நிறுத்த வழி செய்ய வேண்டும். பார்ப்போம். முயன்றால் முடியாதது எது?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *