எதிர் வீட்டிற்கு வேலையாய்ச் சென்ற மனைவி திரும்பி வரும்போது சுருசுருவென்று வந்தாள்.
”உங்களுக்கு நல்ல இடம் பெரிய இடம் பார்த்துப் பழகத் தெரியாது.” முணுமுணுத்து அருகில் அமர்ந்தாள்.
”என்ன ?” துணுக்குற்றேன்.
”எதிர்வீடு…..எவ்வளவு தாய் புள்ளையாய்ப் பழகுறாங்க. அவுங்க மனசு வருத்தப்படுறாப்போல நடந்துக்குறீங்களே நியாயமா ?” கடுகடுத்தாள்.
”விசயத்தைச் சொல்லு ?”
அவுங்க வீட்டுப் பையன் நாலு நாளைக்கு முன்னாடி உங்ககிட்ட சைக்கிள் இரவல் வாங்கிப் போனானாம். போன இடத்துல சாவியைத் தொலைச்சுட்டு பூட்டை உடைச்சி எடுத்து வந்து உங்ககிட்ட விபரம் சொல்லி வைச்சானாம். நீங்க அதெல்லாம் முடியாது. புதுப்பூட்டு வாங்கி சைக்கிளை சரி செய்து கொடுத்துட்டுப் போ சொல்லி அப்படியே வாங்கி வைச்சீங்களாம். வேலை இல்லாத பையன்கிட்ட பணம் ஏது. தன் அப்பாக்கிட்டதான் வாங்கி புதுப் பூட்டு வாங்கி வைச்சிருக்கான். சாதாரண காசு….சம்பாதிக்காத பையன்தானேன்னு மன்னிக்கக் கூடாதா ? தெரியாத வீட்டுப் பையன்போல சார் கறாராய் நடந்துக்கிட்டாருன்னு புருசன் பொண்டாட்டி ரெண்டு பேருமே சொல்லி வருத்தப்பட்டாங்க.”
”அப்படியா ? நான் போய் மன்னிப்புக் கேட்டுவர்றேன்.” கிளம்பினேன்.
”வாங்க சார்.” பத்மநாபன் வரவேற்றார்.
”நீங்க வருத்தப்பட்டீங்கன்னு காயத்ரி சொன்னாள். அதான் வந்தேன்…”
உடன் தாக்குதல் அவர்கள் எதிர்பாராத ஒன்று. ஆகையால்….
”அதெல்லாம் ஒன்னுமில்லே…” அவர் நெளிய… அவர் மனைவி முகத்தில் சங்கடம்.
”வேலை வெட்டி இல்லேன்னாலும் அம்மா அப்பா சொல்பேச்சு கேட்காம பொறுப்பா இல்லேங்குறது உங்களுக்கும் எங்களுக்கும் தெரிஞ்ச விசயம். விளைவு…உங்க வீட்டு சைக்கிளை ஒடைச்சு ஓரம் கட்டிட்டு என் சைக்கிளை வந்து எடுத்துப் போறவன் இரவலாச்சே அதை சரியாய்த் திருப்பனும் அக்கரை பயம் இல்லாம பல தடவை பழுதாய் வைச்சிப்போறான். இதைக் கண்டிச்சாத்தான் சரி வரும்ன்னு அவன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டேன். என் கண்டிப்பு, பாடம் இப்போ அவனுக்குப் புத்தி வந்து தன் சைக்கிளை சரி செய்;து வேளாவேளைக்கு வந்து வேலைக்கும் முயற்சி செய்றான். இது பையனைச் சரி செய்ய எடுத்த முயற்சி. தப்புன்னா மன்னிச்சுக்கோங்க.? எழுந்தேன்.
”சாரி சார்.” அவர் என் கையைப் பிடிக்க…
”மன்னிச்சுக்கோங்க சார்” அவர் மனைவியும் வருத்தப்பட்டாள்.