‘’வினோ, பேரன் பேத்திகளைப் பார்க்க அம்மா நாளைக்கு ஊரிலிருந்து வர்றாங்க. ஒரு வாரம் தங்குவாங்க. கொஞ்சம் பக்குவமா நடந்துக்கோ’’
– பார்த்திபன் தனது மனைவி வினோதினியிடம் கூற, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் அவள்.
‘கிழத்தை ஒரே நாளிலிலேயே துரத்திட வேண்டும்’ என மனதில் நினைத்துக் கொண்ட வினோதினி, மறுநாள் வந்து விட்ட தனது மாமியார் ஞானத்திடம் கடுமையாக நடந்து கொண்டு இடைஞ்சல் செய்ய ஆரம்பித்தாள்.
பொறுமையிழந்த ஞானம் இது பற்றி பார்த்திபனிடம் கூற, அவன் கண்டுகொள்ளவேயில்லை.
மறுநாள் காலையில் பாத்ரூமிற்குள் குளிக்கச் சென்ற வினோதினி வழுக்கி விழுந்து விட்டாள்,
டாக்டரை வரவழைத்துக் காட்ட, அவளைப் பரிசோதித்த டாக்டர், ‘’கணுக்கால் தசை பிசகி விலகியுள்ளது. ஒரு வாரம் பெட் ரெஸ்ட் எடுத்தால் சரியாய்ப் போயிடும்’’ என கூறி தைலம் தடவி, ஊசி போட்டு, மாத்திரை கொடுத்து விட்டுச் சென்றார்.
வினோதினி படுக்கையறையே கதியென இருக்க, ஞானம் சமையல் வேலையைப் ஆர்த்துக் கொண்டு பேரன், பேத்திகளை கொஞ்சி மகிழ, பொழுது போனது,
பார்த்திபன் கடவுளை நினைத்துக்கொண்டான். பாத்ரூமில் மனைவியை வழுக்கி விழ வைத்து, அப்பாவி அம்மாவை நிம்மதியாக நாலு நாள் வீட்டில் தங்க வைத்த கடவுளுக்கு நன்றி சொன்னான்.
– ஜி.ராஜா (ஜனவரி 2013)