பஞ்சவர்ணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 11,155 
 

”டேய், எங்க போற… எங்கடா போற… உன்னத் தான்டா…”- பஞ்சு அக்காவின் குரல் என்னை நிறுத்த, ”வேலைக்குப் போறேன்க்கா!” என்றேன்.

”எனக்குப் பொடவ வாங்கித் தர்றியா? எந்தத் தூ… பையன்டா சிரிக்கிறது? எந் தம்பிகிட்ட நான் கேப்பேன்டா, உங்களுக்கின்னாடா? தொடப்பக்கட்ட பிஞ்சுடும்!” என யாருமே இல்லாத ரோட்டைப் பார்த்து, அசிங்கமாகத் திட்ட ஆரம்பித்தாள் பஞ்சு அக்கா.

வாரத்தில் இரண்டு மூன்று முறை இப்படி நிகழும். நான் இதுவரையிலும் அக்காவுக்குத் துணி எதுவும் வாங்கிக் கொடுக்கவும் இல்லை… ‘ஏன் வாங்கித் தரவில்லை?’ என அக்கா ஒரு நாளும் கேட்டதும் இல்லை.

28 வயதில், கிராப் வெட்டிய தலை, கொஞ்ச மாகக் கிழிந்த பாவாடை – தாவணி, நெற்றிப் பொட்டுக்குக் கீழே அடிபட்ட வடு, உடம்பும் முகமும் கறுப்பாக, கொஞ்சமாக எச்சில் ஒழுகியபடி, எப்போதும் சிரித்துக்கொண்டோ, யாரையாவது அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டோ, கற்களை வாரி பிறர் மீது அடித்துக்கொண்டோ இருப்பாள் பஞ்ச வர்ணம் அக்கா. பகல் எல்லாம் அவள் அந்தப் பகுதியைச் சுற்றி வந்தாலும், இரவில் எப்பாடுபட்டாவது பெரியவர், அக்காவை வீட்டுக்குக் கூட்டி வந்துவிடுவார்.

பெரியவருக்கு வயசு 80 இருக்கும். கண்ணாடி போட்டுக்கொண்டு, கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு, கொஞ்சமாகக் குனிந்தபடி நடப்பார். வாழ்ந்து கெட்ட குடும்பத்துக்கு எடுத்துக்காட்டான மனுஷன். நான்கு ஆண் பிள்ளைகள், ஒரு பெண். அக்காதான் கடைக் குட்டி. இரண்டு வருடங்களுக்கு முன்பு, பெரியவரின் மனைவி உயிருடன் இருந்த வரை அவர் மிக தெம்பாகத் தான் இருந்தார்.

அம்மா இறந்தபோது, அவளின் காலைப் பிடித்துக்கொண்டு, ”எம்மா, என்னவுட்டுப் போய்டாத… நைனா பாவம், எம்மா… வூட்ல இனி சத்தியமா ஆயி பண்ண மாட்டேன் எம்மா!” என அக்கா கதறி அழ… ஊரும் சேர்ந்தே அழுதது.

”அவ பைத்தியம் கெடையாது… அவளுக்கு எல்லாம் தெரியும்…”

”இந்த பொம்பளப் பொறுக்கி பண்ண தப்புக்கு, இவ தண்டனை அனுபவிக்கிறது என்ன நியாயம்?”

”கெழவன் பேர்ல வூடு மட்டும் இல்லன்னா… இந்தக் கெழவிகூடவே சேத்துப் பொதச்சுடுவானுங்கோ” என சவ ஊர்வலத்தில் ஊராரின் பேச்சுக்கள் பறை இசையையும் மீறி ஒலித்தன.

பெரியவர், அம்மா, அண்ணன்கள், எங்க அம்மா, நான், நாட்டார், தாந்தோணி தாத்தா, பாக்கியம் ஆயா, இட்லிக் கட பாப்பாத்தி என அக்காவுக்கு அடையாளம் தெரிந்த ஆட்கள் மிக சொற்பமாக இருந்தோம். அண்ணிகள் வரும் வரை, அண்ணன்கள் அக்காவை ஏதும் சொல்லா மல் இருந்தார்கள். பெரியவர் அளவுக்கு அன்பு செலுத்தவில்லை என்றாலும், அக்காவை வெறுக்க வில்லை. நால்வருக்கும் திருமணமான பின் அக்கா பாரமாகிப்போனாள்.

எனக்கும் அவளுக்குமான அக்கா – தம்பி உறவு நிகழ, என் அம்மாதான் காரணம். சில வருடங்களுக்கு முன், மீன் மார்க்கெட்டுக்கோ, ரேஷன் கடைக்கோ நானும் அம்மாவும் சென்று திரும்புகையில்…

”எக்கா, நால்ணா குடேன்” என அம்மாவின் முன் தோன்றினாள் பஞ்சு அக்கா.

”சாப்டியா வர்ணம்?” எனக் கேட்டுக்கொண்டே… முந்தானையில் முடிந்துவைத்து இருந்த ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்தாள் அம்மா. வீட்டுக்கு வாங்கிய சமோசாக்களில் இரண்டையும், பாய் கடையில் வாங்கிய கேக் தூள் பாக்கெட் டையும் அவளிடம் கொடுத்து, ”வீட்ல போய் சாப்புடணும் பஞ்சு… செரியா? வீட்டுக்குப் போய், என்னா… வீட்டுக்குப் போய்ச் சாப்பிடணும்” என மூன்று முறை அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

”செரிக்கா… இது யாரு..?” என என்னைக் கை காட்ட… ”என் ரெண்டாவது புள்ள… உன் தம்பிதான் பஞ்சு. நல்லாப் பாத்துவெச்சிக்க” என அறிமுகம் செய்துவைத்தாள் அம்மா.

”ராணியாட்டம் வாழ வேண்டியவ… இப்படி அலங்கோலமாச் சுத்திக்கிட்டு இருக்கா. ம்… விதி வுட்ட பாடு. இதெல்லாம் அவ அனுபவிக்கணும்னு இருக்கு. பாழாப்போன சாமி, எல்லாத் தையும் பாத்துக்கிட்டு சும்மாதான இருக்கு” எனத் தானாகப் பேச ஆரம்பித்தாள் அம்மா. கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.

”சொல்லு பெர்சு…”

”நீதானே அந்த மாயா பொண்ண ஆஸ்பிட்டல்ல சேர்த்து நல்லாக்குன. அதே மாரி, என் பஞ்சவர்ணத்தையும் நல்லாக்கிடு ராசா. உனுக்குக் கோடி புண்ணியமாப்போவும். நான் கண்ண மூடுறதுக்குள்ள என் கொயந்திய பழயபடியே பாக்கணும். நான் போயிட்டா, அவளுக்கு வேற நாதி இல்லய்யா. அவளுக்கு ஆளு எல்லாம் நல்லா தெரியும் சாமி. வீட்டு உள்ளயே ஆயி போயிடுறா. எப்பவாவது அசிங்கமாத் திட்றா. மத்தபடி சொல் பேச்சு கேட்டுப்பா கண்ணு. அவள எங்கியாவது, எப்பிடியாவது சேத்துவுட்ரு!”

”அந்த ஆஸ்பிட்டல்ல தங்கலாம் முடியாது பெர்சு. செக் பண்ணிட்டு, ஆறு மாசத்துக்கு மருந்து தருவாங்க. அத நம்ம டெய்லி குடுக்கணும். நான் ரெண்டு நாள் கழிச்சு கூட்டிட்டுப் போறேன்.”

”அவளுக்கு வேளா வேளைக்கி மருந்து குடுக்குறதுதானே கஷ்டம். அவள நான் எங்கன்னு தேடுவேன். எப்படி மருந்து கொடுப்பேன். உனக்குத்தான் நிறையப் பேரைத் தெரியும்ல… யார்கிட்டயாவது சொல்லி, எங்கயாவது நெரந்தரமா சேர்த்து வுடுய்யா.”

”ம்மா… பஞ்சக்கா பத்தி கொஞ்சம் சொல்லேன்?”

”இந்த ஊர்ல மொத மொத தங்கக் கொலுசு போட்டுக்கிட்டு நடந்தவ அவ ஒருத்தி மட்டுந்தான். அவளுக்கு இருந்த மாரி, முடி நீளம் இன்னி வரைக்கும் யாருக்குமே இல்ல. கறுப்பா இருந்தாலும், அவ்வளவு களையா இருப்பா. பச்ச கலர் பாவாடை- தாவணியில வெள்ளிக் கெழமக் கோயிலுக்கு வந்தாள்னா, காமாட்சி அம்மனே நேர்ல வந்த மாதிரி இருக்கும். இந்த ஊர்லயே மொத மொத எட்டாவது வரை கான்வென்ட்ல படிச்சவளும் அவ ஒருத்தி மட்டுந்தான்!”

”பின்ன ஏன் இப்டி ஆச்சி?”

”பாவம் ஒரு பக்கம்… பழி ஒரு பக்கம்கிற கதையா, யாரோ செஞ்ச தப்புக்கு இவ தண்டன அனுபவிக்கிறா.”

”புரியறாப்ல சொல்லுமா…”

”இப்ப தெரிஞ்சு என்ன பண்ணப்போற?”

”அத ஒரு எடத்துல சேக்கப் போறேன். அங்க கேட்டா சொல்லணும்.”

”அவங்க பக்கத்து வீட்டுல, இப்ப இருக்கிற போஸ்ட் மாஸ்டருக்கு முன்னாடி, ஒரு ‘பாய்’ குடும்பம் வாடகைக்கு இருந்தாங்க. அவங்களுக்கு வயசுக்கு வந்த ரெண்டு பொண்ணுங்க. பெரியவர் வீட்டு ஜன்னல்ல இருந்து பார்த்தா, பக்கத்து வீட்டு உள் ரூம் வரைக்கும் தெரியும். பஞ்சவர்ணத்தோட ரெண்டாவது அண்ணன் ராமன் இருக்கான்ல… அந்தப் பொறுக்கி, பாயோட மூத்த பொண்ண எப்படியோ மயக்கிட்டான். கொஞ்ச நாள்ல விஷயம் பாய்க்குத் தெரிஞ்சு, பெரிய பிரச்னை ஆயிடுச்சு. கோயிலாண்ட பஞ்சாயத்துக் கூடி, பெரியவரு தன் பையனுக்காக மன்னிப்புக் கேட்டாரு. இனி, தன் பையனால பிரச்னை வந்தா, தான் பொறுப்புன்னும் சொன்னாரு. பஞ்சாயத்துல அவனை எல்லோர் முன்னாடியும் கோவத்துல பாய் அடிச்சுட்டார். பேசிட்டு இருக்கும்போது, எப்படி பாய் கை வைக்கலாம்னும், பொண்ணப் பெத்தவர் கோவத்துல அப்படித்தான் நடந்துப்பார்னும் பஞ்சாயத்து ரெண்டாப் பிரிஞ்சு பிரச்னையாகிப்போச்சு!”

”அய்ய, அக்காவுக்கு ஏன் இப்டி ஆச்சுன்னு கேட்டா, தேவை இல்லாம அவங்க அண்ணன் கத சொல்லிக் கிட்டு… டி.வி-ல நாடகம் பாத்துப் பாத்து, எதச் சொன்னாலும் லென்த்தா சொல்ல ஆரம்பிச்சுட்ட நீ!”

”போனாப் போதுன்னு சொன்னா, இந்த நாயி என்னயே கிண்டல் பண்ணுது. நான் சொல்ல மாட்டேன்டா.”

”அய்ய சொல்லுமா, ஓவராப் பண்றியே!”

”பாய் அடிச்ச கோவத்துல, கொஞ்ச நாள் கழிச்சி, திரும்பவும் ராமன் அந்தப் பொண்ணு மனச மாத்தி, அவளக் கூட்டிட்டு ஊர விட்டே ஓடிட்டான். அந்தத் தெருவுல பாயோட சொந்தக்காரங்க வந்து, பெரியவர் வீட்டாண்ட பெரிய ரகளை பண்ணிட்டாங்க. போலீஸ் கம்ப்ளெய்ன்ட்டாயி, பெரிய அண்ணனை, ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. ரெண்டு நாளாகியும், அவனை யும் அந்தப் பொண்ணையும் காணோம். எங்கே தேடியும் எந்த விவரமும் தெரியலை. இப்போ மாதிரி அப்ப செல்போன் வசதிலாம் இல்லியே. மூணாம் நாளு, அந்த ராமன், அவங்க தெருவுல இருக்கிற மெத்த வீட்டுக்கு போன் பண்ணி, ‘என்னாச்சு?’ன்னு கேட்டிருக்கான். அவங்க மொத்தக் கதையும் சொல்ல, மறுநாள் காலைல பொண்ணக் கூட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டான். பெத்த பொண்ணுன்னுகூடப் பாக்காம, அந்த பாய் பெல்ட்டால, வாங்கு வாங்குனு வாங்கிட்டாரு. பெத்த பொண்ணுக்கே அவ்வளவு அடின்னா, ராமனுக்குக் கேட்கவா வேணும்? பெரியவரோட மொத்தக் குடும்பத்தையும் பாய் அவ்வளவு அசிங்க அசிங்கமாத் திட்டினாரு. அவமானத்துல பெரியவரும் அந்தம்மாவும் கூனிக் குறுகி நின்னாங்க. பஞ்சவர்ணம் ஒரே அழுகை. பாய் சம்சாரம், மண்ணை வாரி இறைச்சுக்கிட்டே, ‘என் பொண்ணு வாழ்க்கை எப்படிச் சீரழிஞ்சிபோச்சோ, அதேமாரி உன்னோட பொண்ணு வாழ்க்கையையும் சீரழிச்சிக் காட்றேன். என் மொத்த சொத்து அழிஞ்சாலும் பரவாயில்ல, உன் பொண்ண நினச்சு நினச்சு நீங்க சாகணும்… சாவீங்கடா!’னு, சத்தியம் செஞ்சுட்டுப் போனா அந்தப் பொம்பள. சொன்ன மாரியே செஞ்சும் காட்டி, பழிக்குப் பழி வாங்கிட்டா. தப்புப் பண்ண அவங்க அண்ணனை இப்படிப் பண்ணியிருந்தா, அது நியாயம். அவன் குத்துக் கல்லாட்டம் நல்லா இருக்கான். கல்யாணம் பண்ணி, புள்ள குட்டியும் பெத்துட்டான். ஆனா, நல்லா வாழ வேண்டிய பொண்ணு… இப்படிப் பைத்தியக்காரியா சுத்திட்டு” -அம்மா அழ ஆரம்பித்துவிட்டாள்.

”ம்மா, அய்வாதேம்மா… பஞ்சுக்கா பைத்தியம்ஆனதுக்கும், அவங்க சாபம் உட்டதுக்கும் இன்னாம்மா சம்பந்தம்? என்ன நடந்துச்சுன்னு சொல்லிட்டு அழுவேன்!”

”சண்ட நடந்த மறுநாளே, பாய் குடும்பம் வீட்டக் காலி செஞ்சுட்டுப் போயிட்டாங்க. பெரியவர் குடும்பம் வெளிய தல காட்ட ஒரு வாரம் ஆச்சு. எல்லாம் ஒரு வழியா சரியாயி, நல்லாப் போயிட்டு இருந்தது. ஒரு இருவது நாளுக்கு அப்புறம் வந்த அமாவாசை ராத்திரி, பஞ்சவர்ணம் வாசக்கால் தடுக்கி, கீழ விழுந்து மயக்கமாயிட்டா. நெத்தியில அடிபட்டு ரத்தமாப் போச்சு. அலறி அடிச்சு, ஆஸ்பிட்டலுக்குத் தூக்கினு போனாங்க. மயக்கம் தெளிய, ஒருநாள் ஆச்சு. ரெண்டு நாள் ஆஸ்பிட்டல்ல இருந்துட்டு, நல்லாயிட்டு வந்தா. எப்பயும் போல, ஸ்கூல் போயிட்டு வந்துட்டு இருந்தா.

அடுத்த அமாவாசை வந்தது. படிச்சுட்டு இருந்தவ, திடீர்னு சிரிக்க ஆரம்பிச்சாளாம். அப்புறம் பல்ல இறுக்கக் கடிச்சி, உடம்ப முறுக்கி, வீடே தூக்கிட்டுப் போற மாரி ‘ஓ’ன்னு கத்திருக்கா. பெரியவரும் அவர் சம்சாரமும் பயந்துபோய், அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்களக் கூப்பிட்டு இருக்காங்க. அஞ்சு ஆறு பேரு சேர்ந்தும் அவளப் புடிக்க முடியில, ‘ஓ’ன்னு சத்தம் போட்டுக்கிட்டு வானத்துக்கும் பூமிக்குமா எகிறி எகிறிக் குதிச்சா. ஒரு வழியா அவள நம்ம தெரு சாமியாரம்மாகிட்ட கூட்டிட்டு வந்தாங்க.

அந்தம்மா வெள்ளிக் கிழம, வெள்ளிக் கிழம குறி சொல்லும். பஞ்சவர்ணத்துக்குப் பேய் புடிச்சிடுச்சினு ஊரே சாமியாரம்மா வீட்டாண்ட கூடிருச்சு. பெரியவர் முடியாம, கீழ உட்கார்ந்துட் டாரு. அந்தம்மா வாயில வயித்துல அடிச்சுக்குனு ஒரே அழுக. அவ அண்ணன்களுக்கும் என்ன நடக்குதுன்னு புரியல. ஆம்பளைங்க அத்தன பேர் அவள சாமியாரம்மாவோட பூச ரூமுக்குக் கூட்டிட்டுப் போக எவ்வளோ போராடியும், பல்ல இறுக்கக் கடிச்சிக்கிட்டு, கையும் காலயும் முறுக்கி, வலுகொண்ட மட்டும் அவ தள்ளின தள்ளுல… ஆம்பளைங்க அஞ்சாறு பேரு கீழ விழுந்தாங்க. சத்தம் கேட்டு வெளிய வந்த சாமியாரம்மா, கைல வெச்சிருந்த பெரம்பால அவ தலையத் தொட்டாங்க, ஊரே தூக்கினு போற மாரி கத்தி அடங்கினா. திருநீற அவ முகத்துல அடிச்சி, வேப்பிலையால மந்திரிச்சாங்க. மயக்கத் துல சரிஞ்சவள பூச ரூமுக்குத் தூக்கிட்டுப்போய்க் கிடத்தினாங்க. அவ மொகம் வேர்த்து தண்ணி கொட்டினதுல, திருநீறு கரைஞ்சு வழிஞ்சுது. சாமியாரம்மா, பெரியவரையும் அந்தம்மாவையும் உள்ள வரச் சொல்லி, ‘என்ன நடந்தது?’ன்னு கேட்டாங்க. ரெண்டு பேரும் ஒரே அழுக.

‘யாரு செஞ்ச பாவமோ, என் வூட்ல இடி மேல இடி உழுதே… சாமி நீதான் தாயி… என் புள்ளயக் குணமாக்கித் தரணும். அவ பச்ச மண்ணும்மா… அவளக் காப்பாத்து ஆத்தா!’னு அந்தம்மா கண்ணீரோடு சொல்ல, அத்தனை ஜனமும் அழுதுருச்சு.

‘இந்தாப்பா, உன் கொழந்தையத் தூக்கி உன் மடியில கிடத்திக்க. உன் இஷ்ட தெய்வத்த மனசார நினச்சுக்க. இந்த எலுமிச்சம் பழத்த அவ தலையில வெச்சுப் பிடிச்சுக்கிட்டு கண்ண மூடிக்க’ன்னு சொல்லவும் பெரியவரும் அப்படியே செஞ்சாரு.

சாமியாரம்மா, தாம்பாளத் தட்டுல பெரிய கற்பூரத்தக் கொளுத்திட்டு, தன் சிக்கு விழுந்த ஜட முடியை அவுத்துவிட்டுட்டு, தலையைச் சொழட்டுச் சொழட்டுனு சொழட்டி, ஆத்தாவ தன் மேல வரவெச்சி அருள்வாக்கு சொன்னாங்க. அவங்க சொழட்டின மாரி வேற யாரு சொழட்டி இருந்தாலும் தல தனியா போயிருக்கும். அதான் சக்தின்றது. அருள் வாக்கு சொல்லும்போது, அவங்க குரல் மறஞ்சு, ஆத்தா குரல் கேட்கும். கேட்கிற நமக்குப் புல்லரிக்கும்.

‘போன அமாவாசையில என்ன நம்பல… இப்ப என்னத் தேடி வந்திருக்க… உண்மையா இல்லையா… சொல்லுடா, உண்மைதானே?’

அப்பதான் எல்லாருக்கும் ஞாபகம் வந்துச்சு. போன அமாவாசையில பஞ்ச வர்ணத்துக்குத் தலையில அடிபட்டது.

‘உண்மைதான் ஆத்தா… உண்மைதான்… கொய்ந்திக்கி அடிபட்டு ரத்தம் ஊத்தவும், என்னன்னு புரியாம ஆஸ்பிட்டல சேர்த்துட்டோம். சத்தியமா, அது தெய்வக் குத்தம்ஆவும்னு தெரியாது ஆத்தா!’

‘அவளுக்கு தெய்வக் குத்தம் இல்லடா. என் கொழந்தைய நான் ஏன்டா தண்டிக்கப்போறேன். அவளுக்கு செய்வின செஞ்சிட்டாங்க…’

ஆத்தா சொல்லவும், மொத்த ஜனமும் பதறிப்போனோம். செய்வின செஞ்சி, அத எடுக்காமப் போனா, என்ன ஆவாங்கன்னு எல்லோருக்கும் நல்லாத் தெரியும். யாரு செஞ்சிருப்பானு யோசிக்கையில…

‘ஐயோ… சொன்ன மேரி செஞ்சிட்டாளே பாதகத்தி. எம் மவன் பண்ண தப்புக்கு, என் கொய்ந்திய தண்டிக்கறது என்ன நாயம்? யார்னா அந்த ராமன் பையன் எங்கிருக்கானு பாருங்களேன். கொன்னு பொலி போட்டுடுறேன். அவனாலதான, நாங்க எல்லாப் பாவத்தையும் அனுபவிக்க வேண்டியிருக்கு. என் கொய்ந்தியக் காப்பாத்திக் குடு ஆத்தா’ன்னு பெரியவர் சம்சாரம் அழுவவும் தான்… செய்வினை செஞ்சது பாய் குடும் பம்னு எல்லாருக்கும் தெரிஞ்சது.

‘அவ உச்சந் தல முடியும், காலடி மண்ணும் எடுத்து, மலையாள தேசத்துலவெச்சு, இந்த செய்வினையச் செஞ்சிருக்காங்க. என்னத் தேடி வந்திட்டீங்க. புள்ள உசுரக் காப்பாத்தித் தரேன். மனக் கோளாறு நீங்கக் கொஞ்ச காலமாவும். நான் சொல்ற பரிகாரத்த, தெய்வ பக்தியோடும், நம்பிக்கையோடும் செஞ்சு வந்தா, காலப்போக்குல அதுவும் நீங்கும்’னு சாமியாரம்மா சொன்னாங்க.

‘என் கொய்ந்திய கைவுட்ராத ஆத்தா. உன்ன வுட்டா, எனக்கு வேற நாதி கிடையாது’ன்னு பெரியவர் கண்ணீர்விட, அந்தம்மா சாமியாரம்மா கால்ல விழுந்து அழ… ‘நான்தான் சொன்னேனடா. காப்பாத்தித் தர்றேன்னு. என்ன நம்பி வந்தவங்கள நான் என்னிக்கும் கை விட்டது இல்லடா’ன்னு சொல்லிட்டு, சாமி மல ஏறிடுச்சு.

ஊரு ஜனம் மொத்தமும் அன்னிக்கி பஞ்சவர்ணம் வூட்டாண்டதான் இருந்துச்சு. பாய் குடும்பத்தைத் தேடிக் கண்டுபுடிச்சு வெட்டணும்னு இளவட்டப் பசங்க பேசினாங்க. பாதிப் பேர் ராமனால வந்த வினைன்னு அவனைத் திட்னாங்க. பெரியவர் கோவத்துல வேப்பம் மிளாரால, ராமனைப் பிச்சு எடுத்துட்டாரு. அவரு கோவப்பட்டு, அந்தம்மாவே மொதத் தரம் அப்பதான் பாத்துச்சாம்.

தானா சோறு துன்ற பொண்ணுக்கு, பெரியவர்தான் அன்னிக்கி சோறு ஊட்டினாரு. நேரம் ஆவ ஆவ… கூட்டம் கலஞ்சுபோச்சு. விநோதமா ராத்திரி முழுக்கச் சிரிச்சிட்டு இருந்தவ, எப்பத் தூங்கினானு தெரில. அன்னில இருந்து, பெரியவருக்கும் அந்தம்மாவுக்கும் தூக்கம்போச்சு!”

”சாமியாரம்மா பாத்துக்கிறேன்னு சொன்னாங்கல்ல…”

”சொன்ன மாரி அவ உசுரக் காப்பாத்திக் குடுத்தாங்க, அவ்ளோதான். அதுக்கப்புறம் அவங்க சொன்ன பரிகாரத்தச் செஞ்சாங்க. ஊரு ஊரா கோயில் கொளம்னு சுத்துனாங்க. மாயம், மந்திரம், எந்திரம், தந்திரம்னு பெரியவரோட சொத்து மொத்தமும் அழிஞ்சதுதான் மிச்சம். கடைசியா வீடு மட்டும் தான் மிச்சம். பசங்களப் படிக்க வெச்சதினால, அவனுகளுக்கு வேல கெடச்சி, அவனவனே பொண்ணப் பார்த்து, கல்யாணம் பண்ணிக்கிட்டானுங்க. இருக்குற வீட்ட இடிச்சு ஆளாளுக்குத் தனித் தனியா ரூம் கட்டிக்கிட்டானுங்க. வீட்டுக்குப் பின்னாடி பத்துக்குப் பத்துல ஒரு ஓல கொட்டா யப் போட்டு, பெரியவரு, அவரு சம்சாரம், பஞ்சவர்ணம்னு மூணு பேரையும் ஒதுக்கிவெச்சிட்டானுங்க. அந்தம்மாவும் பெறவு செத்துப்போச்சு. கவர்மென்ட்லயோ, மிலிட்ரிலயோ, எங்கிருந்து பெரியவருக்கு பென்சன் வருதுன்னு தெரீல… அதவெச்சுதான் பொழப்ப ஓட்டிட்டு இருக்காரு!”

”பேய், செய்வினைலாம் இருக்காமா? நீ சொல்றது நம்பற மாரி இல்லியே… ஒரே டுபாக்கூர் மேட்டரா இருக்கே!”

”தொண்டித் தேவரு கை கால் வெளங்காமப் போனதும், அபூர்வம் பைத்தியம் புடிச்சு ஓடிப்போனதும் செய்வினை யாலதான். ஏன், உங்க பெரியப்பா வாட்டஞ்சாட்டமா இருந்து திடீர்னு ஒடம்புக்கு முடியாம போய், கடைசிக் காலத்துல நாயாட்டம் நக்கிச் சாப்புட்டு, கொரச்சி, எச்சில் ஊத்தி, நாக்கத் தொங்கப்போட்டுக்கிட்டு, மூச்சு வாங்கி செத்துப் போனதும் செய்வினையாலதான். உன் ஃப்ரண்டோட அப்பா மூனடுக்கு சுப்புரமணி எப்படிச் செத்தார் தெரியும் இல்லடா?”

”ஹார்ட் அட்டாக்குல செத்தாரு!”

”இன்னாத்த ஹார்ட்டட்டாக்கு டாட்டட்டாக்குனு. அவர் பூதம் அடிச்சிதான் செத்தாரு. ரா டூட்டிக்குப் போய்ட்டு வந்தவரை, அம்டன் வாராவிதில காத்திருந்த பூதம் காவு வாங்கிடுச்சு!”

”சும்மா இரும்மா… அதெல்லாம் பொய்!”

”பொய்யா… வா உன்ன கோவளம் தர்ஹாவுக்குக் கூட்டிட்டுப் போய் காட்டுறேன். அங்கே பேய் புடிச்சி இருக்குற வங்க, எப்பிடி இங்கிலீஷ்லாம் பேசுறாங்கன்னு வந்து பாரு!”

”போம்மா… உன் கதய எத்துக் கிட்டு!”

”நானா வந்து ‘கத சொல்றேன் வாடா’ன்னு கூப்ட்டேன். நீதானடா நச்சரிச்ச, பஞ்சவர்ணத்த எங்கயோ சேக்கப்போறேன். அதப்பத்தி சொல்லுன்னு!”

அம்மா சொல்வதை நம்ப முடியாமல், பஞ்சு அக்காவை எப்படி, எங்கே சேர்ப்பது எனும் சிந்தனைகளில் மூழ்கிப்போனேன். அவளைப்பற்றி நினைக்கையில் மனம் பாரமாகிப்போனது. அவளை என்கூடப் பிறந்தவள் என்றே நினைக்கத் தோன்றியது. இது பரிதாபத்தில் வந்த அன்பென்றாலும் உண்மையானது.

பயன்படுத்திய துணிகள், அரிசி மூட்டைகள், பால் பவுடர் டப்பாக்கள், எல்லாம் ஓர் அறையில் இருக்க, மற்றோர் அறையில், சாதாரண சேரில் அவர் அமர்ந்திருந்தார்.

”வணக்கம் சார். நான் அடையார்ல இருந்து வரேன். பத்மா மேடம் உங்களப் பாத்து இந்த லெட்டரைக் குடுக்கச் சொன்னாங்க!”

”என்கிட்டயும் போன்ல பேசினாங்க… எங்களது பிரைவேட் தம்பி. கவர்மென்ட் கிடையாது. இதுக்குன்னு ரூல்ஸ் அண்டு ரெகுலேஷன்ஸ்லாம் உண்டு. மொதல்ல இங்க அநாதைகள மட்டும்தான் சேர்த்துப்போம். பத்மா மேடம் எங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்காங்க. அவங்களுக்காக இதப் பண்றேன். பட், நீங்க கொண்டுவரவங்க அநாதைகள் லிஸ்ட்லதான் வருவாங்க. அவங்கள நீங்க வந்து பார்க்கல்லாம் முடியாது. அத நான் ஸ்ட்ரிக்டா சொல்லிடுறேன்!”

”ரொம்ப தேங்க்ஸ் சார். ஆனா, அந்தப் பெரியவர் மட்டும் கொஞ்சம் பார்க்க, நீங்க அலோ பண்ணணும் சார்!”

”அப்ப நீங்க வேற எடத்தப் பாத்துக்கங்க…”

”சார்… சார்… கோச்சுக்காதீங்க சார். எப்பவாச்சும் அலோ பண்ணாப் போதும் சார். ப்ளீஸ் சார்!”

”நல்ல எடமா… நல்லா விசாரிச்சியா?”

”இதானே வேணான்றது. அந்தாளு கைல கால்ல உய்ந்து, கெஞ்சிக் கூத்தாடி பெர்மிசன் வாங்கிட்டு வந்தா… நீ ஆயிரம் கேள்வி கேட்குற?”

”கோச்சிக்காதப்பா… மனசு கேட்க மாட்டேங்குது. பெத்த புள்ளைங்க ஒய்ங்கா இருந்தா, நான் ஏன்யா உனக்குக் கஷ்டம் தரப்போறேன். கட்டைல போற காலத்துல, அவள உன்ன நம்பி ஒப்படைக்குறேன் ராசா!”

”ஐய… ஃபீல் பண்ணாத வுடு. பஞ்சு என்னோட அக்கா. கவலைய வுடு. அத சரியாக்கி, கல்யாணம் பண்ணிக் குடுக்க வேண்டியது என் பொறுப்பு!”

”அத மட்டும் சரியாக்கிட்டினா. உனக்குக் கோயில் கட்டிக் கும்புடுவேன் சாமி!”

”பெர்சு… பேச்சக் குறை… டைம் ஒம்போதர ஆச்சு, பஞ்சுக்கா எங்க? நேத்து அவ்ளோ தூரம் பட்சு பட்சு சொன்னேன். இப்டி லேட் பண்ணா, இன்னா அர்த்தம்?”

”காலிலயே குளுப்பாட்டி நல்ல துணி போட்டு, கம்பல், செயின்லாம் போட்டு ரெடி பண்ணி வெச்சிருந்தேன். கொஞ்சம் இரு. நாட்டான் கடியாண்ட போய்ப் பாத்துட்டு வந்துறேன்!”

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பஞ்சுக்கா ஒரு கையில் மாம்பழம் சாப்பிட, மறு கையை பெரியவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தார். மாம்பழச் சாறு பஞ்சக்காவின் முகம், கை என எல்லா இடங்களிலும் ஒழுகிக்கொண்டு இருந்தது.

”நான் சொல்லல… நாட்டான் கடியாண்டதான் இருந்துச்சு. தோ இரு, கையும் வாயும் கய்விக் கூட்டியாந்துடுறேன்!”

”பெர்சு, நீ மொதல்ல ஏறு. எக்கா ஏறுக்கா… டானி வண்டி எடுடா!” நாங்கள் கிளம்புவதை அக்காவின் அண்ணன் அண்ணிகளும், அவர்களுடைய பிள்ளைகளும் ஆச்சர்யமாகப் பார்த்து நின்றார்கள்.

”நைனா, எங்க போறம்… டேய், எங்க போறம்… நைனா, எங்க போறம்” என வழி எல்லாம் கேட்ட அக்காவின் கேள்விக்குக் கடைசி வரை பதில் சொல்லவில்லை.

”வணக்கம்யா… என் கொய்ந்திய உங்களாண்ட ஒப்படைச்சிட்டேன் சாமி!”

”பெரிய வார்த்தைலாம் பேசாதீங்க பெரியவரே. தம்பி எல்லா மேட்டரையும் சொன்னார். இவங்க எத்தனை வருஷமா இப்படி இருக்காங்க. இதுக்கு முன்னாடி ட்ரீட்மென்ட் ஏதாவது எடுத்து இருக்கீங்களா?”

”பரிகாரம், கழுப்பு எல்லாம் எடுத்தோம். போவாத கோயில் இல்ல. வேண்டாத தெய்வம் இல்ல. கருமாரி, மாதா, ஏசு, அல்லானு எல்லா தெய்வத்துக்கிட்டியும் போயாச்சு. ஒருத்தரும் என் கொய்ந்தியக் குணமாக்கல. கை உட்டுட்டாங்க!”

”நான் கேட்டது ஹாஸ்பிட்டல் ஏதாவது போனீங்களான்னு?”

”கவர்மென்ட் ஆஸ்பத்திரில ஒரு மாசம் பாத்தேன். ஒண்ணும் சொகப்படல. அங்க யாருமே கண்டுக்கல. மனசுக்குப் புடிக்காம வீட்டுக்குக் கூட்டான்டேன்!”

”ஏய்… எனக்குக் கொஞ்சம் தாயேன், கொஞ்சூண்டு தாயேன்” என அக்கா சுவரில் இருந்த குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்துக் கேட்டுக்கொண்டு இருந்தாள். குழந்தையின் கையில் மாம்பழம் இருந்தது.

”எனக்கு வயசாயிப்போய், பார்வ குறைய ஆரம்பிச்சுடுச்சுய்யா. நல்லா இருந்தா, அவள நான் ஏன் சாமி… வெளிய அனுப்பப்போறேன். இன்னிக்கோ, நாளைக்கோன்னு, சாவ எதிர்பார்த்துட்டு இருக்கேன். நான் போன பெறவு இவ அநாததான், சொந்தம்னு யாரும் வர மாட்டாங்க. சொத்துன்னு இருந்த வீட்ட, புள்ளீங்கன்னு பொறந்தவன்களுக்கு மாத்தி எழுதியாச்சு. இனி யாரும் எம் மவளுக்காக வர மாட்டாங்க. இப்பவே நீங்க இவள அநாதைன்னே” – பெரியவர் பேச்சு வராமல் தேம்ப ஆரம்பித்தார்.

பழம் கேட்டுக்கொண்டு இருந்த பஞ்சு அக்கா, ”ஏன் நைனா அழுர… ஏன் நைனா அழுர… அண்ண அட்சிட்சா… எந்தப் பொறுக்கிதே… பையன்டா என் நைனாவ அட்சுது?” என எப்போதும்போல் அசிங்க மாகத் திட்ட ஆரம்பித்தது.

”எம்மா, எம்மா பஞ்சு, அப்பிடிலாம் பேசக் கூடாது. நா அழுவுலம்மா!”

”பத்மா மேடம் சொன்னதாலதான், நான் இந்த ரிஸ்க் எடுக்குறேன். எங்ககிட்டயும் டாக்டர்ஸ் இருக்காங்க. அன்பாப் பாத்துக்குற மனிதர்கள் இருக்காங்க. முடிஞ்ச வரை, நல்லாப் பார்த்துப்போம். நீங்க கவலைப்படாதீங்க. ஹோம் இங்க இருந்து 50 கிலோ மீட்டர் தூரம். அங்க நாங்க யாரையும் பாக்க அலோ பண்ண மாட்டோம். நீங்க ஏதாவது நல்ல நாள்ல, வருஷத்துக்கு ரெண்டு தடவை பார்க்க அலோ பண்றேன்!”

”ஐயா, கொஞ்சம் பெரிய மனசுவெச்சு மாசம் ஒரு தடவ பார்க்க…”

”இந்த ஃபார்ம் ஃபில் பண்ணிக் கையெழுத்துப் போடுங்க…”

பெரியவர் கையெழுத்துப் போடும் முன் என்னைப் பார்க்க… ”போடு பெர்சு… பயப்படாத. நம்ம டீட்டெயில் கேட்டு இருக்காங்க. என் வீட்டு போன் நம்பரும் கொடுத்துஇருக்கேன்!”

அக்கா தனியாக மூன்று கோணங்களில் போட்டோ எடுக்கப்பட்டாள். அக்கா, பெரியவர், நான் என மூவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டோம். வெளியில் வெள்ளை நிற மாருதி வேன் வந்து நிற்க, அக்காவைக் கூட்டிச் செல்ல இரண்டு பேர் வந்திருந்தனர்.

”எம்மாடி அங்க சொல்றபடி கேக்கணும். அடம் பண்ணக் கூடாது. மருந்து மாத்தர குட்த்தா கீயத் துப்பாம சாப்புடணும். அய்யா சொல்ர மேரி நடந்துக்க. நைனா அடிக்கடி வந்து உன்னப் பாக்குறேன். போய் வா எம்மா!” எனப் பெரியவர் சொல்லவும், வந்தவர்கள் அக்காவைக் கைப் பிடித்து அழைக்க, ஒருவனுடைய கையைக் கடித்துவிட்டு, ”இந்தத் தூம… தே… பையன் என்னக் கையப் புடிச்சு இழுக்கிறான் நைனா. கல்லெத்து அடி!”

கொஞ்ச நேரத்துக்குப் பின் மயக்க ஊசி போடப்பட்டு வண்டியில் ஏற்றப்பட்டாள்.

”என் கொய்ந்தியப் பத்துரமா பாத்துக்குங்க சாமி!” எனப் பெரியவர் கை எடுத்துக் கும்பிட… ”பாத்துக்குறோம்… பாத்துக்குறோம். நீங்க கவலப்படமாப் போய்ட்டு வாங்க!”

ஆட்டோவில் பெரியவர் சோகமாக வந்தார்.

”கவலப்படாத பெர்சு…”

”நல்லாப் பாத்துப்பாங்க போலக்குதுப்பா. நகைஎல்லாம் கயிட்டி நம்பகிட்டயே குடுத்துட்டாங்க. நல்லவங்ககிட்டதான் வர்ணத்த ஒப்படச்சிருக்கம்போல. கைய கட்சவொண்ணியம் அவனுங்களுக்குக் கோவம் வராம, மயக்க ஊசி போட்டுக் கூட்டிட்டுப் போனாங்க கவன்ச்சியா நீ!”

”அதற்குப் பிறகான நாட்களில் பெரியவர் எங்கு பார்த்தாலும் புன்சிரிப்புடன் வணக்கம் சொல்லிவிட்டு, ”அந்த அய்யாகிட்ட போன் பண்ணிக் கேட்டியா, பஞ்சு எப்படிக்கீதுன்னு? அடிக்கடி விசாரி. ராவுல தூக்கம் கொள்ளமாட்டுது. கொய்ந்த ஞாபகமாவே இருக்கு. எப்பப் போலாம்? சீக்கிரம் போய்ப் பாத்துட்டு வந்துடலாம். அவரு தான் பாக்கச் சொன்னாரே!”

”போலாம் பெர்சு, ரெண்டு மாசம் போவட்டும். உடனே போய் அவங்களுக்குத் தொந்தரவு தரக் கூடாது. கண்டிப்பாக் கூட்டிட்டுப் போறேன்!”

பெரியவரின் தொடர் தொல்லை தாங்காமல், மூன்று மாதங்களுக்குப் பிறகு, அக்காவைப் பார்க்க அழைத்துச் சென்றேன்.

பச்சை நைட்டியில், கிராப் வெட்டிய தலையில் சிலைடு பின் குத்தப்பட்டு, காதில் கம்மல், கழுத்தில் மணி என வந்த அக்காவைப் பார்த்து நானும் பெரியவரும் உறைந்தேபோனோம். பேசுவதற்கு வசதியாக எங்களைத் தனி ரூமில் விட்டார்கள்.

”எம்மா பஞ்சு… எப்படிமா இருக்க… சோறு துன்றியா… டாக்டர் வந்து பாக்குறாங்களா, மருந்து கிருந்து ஏதாவது சாப்டுறீயா?” எனப் பெரியவரின் கேள்விகள் தொடர்ந்துகொண்டே இருந்தன, அக்காவின் பதிலை எதிர்பாராமல். காப்பகத்தாரின் தொடர் பராமரிப்பில், அவள் ஓரளவுக்குக் குணமடைந்து வருகிறாள் என்பது அவளின் பேச்சு, செயல்பாடுகளில் இருந்து தெரிந்தன.

”வெடிகாலில பச்சத் தண்ணிய உட்டுராங்க நைனா. ஒரே குளிரு. ஊசி போட்டு, கொம்பால அடிச்சி, மாத்திரைய முழுங்கச் சொல்றாங்க.”

”நீ மாத்திரிய கீயத் துப்பாம சாப்டின்னா, அடிக்க மாட்டாங்க. சோறு துன்றியா… சோறு… சோறு!”

”டெய்லி கத்திரிக்கா சாம்பார் நைனா. நம்ம வூடு மாரி கறிக் கொயம்புலாம் கடியாது. மட்டன் பிரியாணி சாப்பிட ஆசையாக்கீது நைனா. வாங்கித் தர்றீயா?”

”போச் சொல்லோ வாங்கித் தர்றேன்…தம்பி தான் உன்ன இங்க சேர்த்தது!”

”நல்லாக்கீறியாக்கா… நல்லாப் பாத்துக் கிறாங்களா?

”ம்…”

”எப்பா முன்னாடிக்கி இப்ப எவ்ளோ தேவலாம் போலக்கீது. அந்த அய்யாகிட்ட கேட்டு வூட்டுக்குக் கூட்டினு போய்டலாமா?”

”அவசரப்படாத பெர்சு… இன்னம் கொஞ்ச நாள்ல அக்கா ஃபுல்லா சரியாயிடும். அப்பாலக் கூட்டிட்டுப் போலாம். இப்ப எதுக்கு. அப்புறம் அங்க போய் அதிகமாச்சின்னா, திருப்பி

இங்க சேத்துக்க மாட்டாங்க. அப்புறம் உன்

இஷ்டம்!”

”அதுவும் கரிக்ட்டுதான்…”

”சார், அக்காவுக்குப் பிரியாணி வாங்கித் தரலாமா?”

”அவங்க வயித்துக்கு சாம்பாரத் தவிர வேற ஏதும் சரி வராது. நீங்கபாட்டுக்குக் கண்டதை வாங்கித் தந்து, நல்லா இருக்கிறவங்களக் கெடுத்துராதீங்க” என்றார் கோபமாக.

”ஸாரி சார்…. ஸாரி சார்!”

”வேணும்னா, பிஸ்கட், பழம் ஏதாவது வாங்கித் தந்துட்டு, நீங்க கிளம்பற வழியப் பாருங்க. அப்புறம் அவங்க உங்ககூட வர அடம் புடிப்பாங்க!”

ஆட்டோவில்…

”பஞ்சு பயத்த எவ்ளோ ஆச ஆசயாத் துன்னுச்சு பாத்தியா. கறின்னா அதுக்கு அவ்ளோ உசுரு. முன்னாடி நல்லா இருக்கறச்சே, நாத்திக் கிழமன்னா, காலில அத்தக் கூட்டுட்டு, நொண்டி கடைக்குப் போய்டுவேன். ‘கடிக்கு ஆடு வர்தோ இல்லியோ… அப்பனும் பொண்ணும் வந்து ராங்க’ன்னு நொண்டி கிண்டல் பண்ணுவாரு. நொண்டி சம்சாரம் பாக்யம் கறுக்கல்ல வறுத்துவெச்சிருந்து, பஞ்சுக்கு ஆச ஆசயாத் தருவாங்க. ‘கவலப்படாத வர்ணம். ஆடு அறுக்கரவனாப் பாத்து, உனக்குக் கல்யாணம் பண்ணிவெச்சிரலாம்’னு கிண்டல் பண்ணும் பாக்கியம். இப்ப கறி கறின்னு உசுர விடுது, துன்னத்தான் குட்த்துவெக்கல!”

”நல்லாயி வந்த பெறவு, அது கல்யாணத்துல கறி பிரியாணி போட்டுர்லாம், வுடு பெருசு!”

”ஹலோ… ஆமா சார்… சார், இன்னா சார் சொல்றீங்க… அய்யோ சார்… நாங்க பாக்கும்போது நல்லா இருந்துச்சே சார்?”

”ஹார்ட் அட்டாக் எப்ப வரும்னு யாருக்குங்க தெரியும்? ஐ’ம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி!”

”சார்… எனக்குத் தல கிர்ருனு சுத்துது சார். கண்ல தண்ணியாக் கொட்டுது சார். கொஞ்சம் நல்லா செக் பண்ணிப் பாருங்க சார். உயிரு இருக்கும் சார்!”

”நான் செக் பண்றதில்லைங்க. டாக்டர் செக் பண்ணிட்டுத்தான் சொன்னாரு!”

”சின்ன வயசுல எப்படி சார் ஹார்ட் அட்டாக் வரும். பக்கத்துல ஆஸ்பிட்டல்ல காட்டுங்க சார்!”

”உங்களுக்கு ஹெல்ப் பண்ணதுக்கு இந்தக் கேள்விலாம் எங்களுக்கு வேணும்தான். இன்னம் கொஞ்ச நேரத்துல நீங்க குடுத்த அட்ரஸுக்குப் பாடி வந்துடும். உங்க நெலம எங்களுக்குப் புரியுது. பட், அவங்க டைம் முடிஞ்சுபோச்சு அவ்வளவுதான். இருந்து அவங்க கஷ்டப்படாமப் போய் சேர்ந்தது நல்லதுன்னு எடுத்துக்க வேண்டியதுதான்… ஸாரி!”

வேன் தெருவில் நுழைவதை டீக் கடையில் இருந்தே பார்த்த பெரியவர்…

”தாந்தோணி, தோ இர்ரு வர்றேன். அது நம்ம வர்ணத்த ஏத்திட்டுப் போச்சே, அந்த வேன் மேரிக் கீது. மனசு திடீர்னு பொரட்டுது. ஒருவேள நல்லாயிட்டு இருக்கும். அதான், வேன்ல கூட்டிட்டு வந்திருக்காங்கபோல. நான் போய்க் கண்டுக்கினு வர்றேன். வர்ணம்… எம்மா… வர்ணம்!” எனப் பெரியவர் வீட்டை நோக்கி வேக வேகமாக நடந்தார். அவரும் நானும் வீட்டுக்கு ஒரே நேரத்தில் வந்தோம்.

”இன்னாபா வேன் வந்திருக்கு… ஏன் அழற?”

புடவை சுற்றப்பட்ட அக்காவின் உடலை வந்தவர்கள் இறக்கினார்கள்.

”அய்யய்யோ… கொல… கொல பண்ணி என் பொண்ணக் கொண்டுவந்திருக்காங் களே… இப்பதானே நல்லாப் பாத்துட்டு வந்தேன். எங்கடா அந்த தே… பையன்… நல்லாப் பாத்துக்குறேன், நீங்க போங்கன்னு சொல்லி, பின்னாடியே சாவடிச்சு அனுப்பிட்டாங்களே… ‘பாத்துக்க முடில கூட்டினு போங்க’ன்னா, கூட்டியாந்துருப்பேனே!”

என் நா தழுதழுக்க, ”பெர்சு… பெர்சு… திடீர்னு அக்காவுக்கு ஆட்டட்டாக்காம்… அவரு எனக்கு போன்…”

”த்தா நீ போய்டு… போடா… என் கொய்ந்தியக் கொல பண்ணித் துணில சுத்திக் குடுக்கவாடா, உன்கிட்ட கால் கடுக்க நடந்தேன். அய்யோ வர்ணம்… வர்ணம்… எம்மா… என் வர்ணம், பெத்த பொண்ண எல்லாம் கலியாணம் பண்ணி, மாமியர் வீட்ல வுடுவாங்க. இந்தப் பாவி உன்ன எமன்ட்ட எத்துனு போயி வுட்டு வந்தேனே. நீ நல்லா இருப்பேனுதானெ உன்ன வுட்டு வந்தேன். எனக்குப் பாரம்னு நான் நினைக்கலியே. நீ நைனாவத் தப்பா நினைச்சு, போயி சேர்ந்துட்டியா எம்மா. உன் வயசுப் பொண்ணுங்க கலியாணம் ஆயி, கொய்ந்த குட்டிகன்னு இருக்கும்போது… சாவுர வயசா உனக்கு… வயசுக்கு வந்த ஒரே மாசத்துல கீய உய்ந்திய, அன்னிக்கே போய்ச் சேர்ந்திருக்கக் கூடாதா? அன்னில இருந்து எவ்ளோ சித்ரவதை. நான் இன்னா பாவம் பண்ணேன்னு தெரிலியே. என் குடி முய்விப்போச்சே. எம்மா வர்ணம் ஆட்டுக் கறிக் கேட்டியே கடசியா… நைனா போய் வாங்கியாறேன்.. எய்ந்திரிம்மா… எம்மா…”

”இங்க பாரு… இங்க பாரு… வுடு… அய்வாத… நடக்க வேண்டியதப் பாப்போம்…”

”நான் இன்னா பண்ணுவேன் தாந்தோணி. உனக்குத் தெரியாதா அவ என்னோட உசுருன்னு. பச்ச மண்ணத் துணில சுத்திக் கொடுத்துட்டாங் களே. பாவிங்க… அவனுக குடும்பம் விளங்குமா… அவன்க நாசமாப் போவ… நான்தான் சொன்னேனே… கடசியாப் பாக்கும்போது நல்லா பேசினா. கூட்டினு போலாம்னு சொன்னதுக்கு, அந்த ஆதி மவன்தான் வேணாம்னு சொன்னான். பாவிப் பய பேச்சு கேட்டதுக்கு… என் கொய்ந்த இல்லாமப்போச்சு… எவன சொல்லி இன்னாவப்போது. பெத்த புள்ளிங்கோ ஒயுங்கா இருந்திருந்தா, என் கொய்ந்த இப்படி நாதியில்லாம, அநாதியாட்டம் எங்கேயோ போய் நான் ஏன் சாவ கொடுக்கப்போறேன்… அய்யோ எம்மா… வர்ணம்…”

”தோ பாரு வயசான காலத்துல…”

”அய்யோ தாந்தோணி… நா எதுக்கு இந்த வயசு வரிக்கும் உசுரோடு இருக்கணும்… இந்தக் கொடுமையெல்லாம் பாக்கருதுக்கா. நான் அய்வ மாட்டேன். நா அய்வ மாட்டேன். நா போயிருந்தா, இவள எடுத்துப் போட நாதி இருந்திருக்காது. அநாதப் பொணமாப் போயிருப்பா. தோ இரு… வரேன்!”

வீட்டுக்குள் போனவர் ஒரு பிளாஸ்டிக் கவருடன் வெளியே வந்தார். இந்தா இதுலாம் இவ வயசுக்கு வந்தப்புறம் வாங்கின நகைங்க. அவ உசுரோடு இருக்கும்போது, போட்டுப் பார்க்க ரொம்ப நாள் குட்த்துவைக்கல. சாவுக்காச்சம் உதவுட்டும். இத, இத மொத்தமும் வித்து… என் ராசத்தியத் தேர்ல ஜோடிச்சு ஏத்திப் போவணும். கல்யாணந்தான் பண்ணிப் பாக்கக் குட்த்துவெக்கல. சாவயாவது நல்லா எடுக்குறேன். என் நெலம யாருக்கும் வரக் கூடாதுடா சாமி. எம்மா வர்ணம்… பஞ்சு… நாலுமே ஆம்ள புள்ளியாப் போச்சு, பொட்டப்புள்ள வேணும்னு தவம் இருக்கைல… அந்த மாரியம்மாவாட்டம் ஆடில பொறந்து, என் வயித்துல பால வார்த்த… இப்ப நான் உனக்குப் பால் ஊத்துறேனே!”

”தோ பாரு… வுடு… நீ சொன்னாலும் சொல்லனாலும் கூடப் பொறந்த நாலு அண்ணனுங்க இருக்காங்க… அவனுகளையும் கலந்துக்குனு…”

”இன்னாயா எல்லாம் தெரிஞ்ச நீயே, பைத்தியக்காரனாட்டம் பேசிட்டு இருக்க. உயிரோடு இருக்கும்போதே, ஒத்த வார்த்த பேசாதவனுங்க, ஒரு வேள சோறு போடாதவனுங்க, நாலணா ஈயாதவனுங்க… செத்த பெறவு செலவு பண்ணுவானுங்க? சொன்ன மேரி நகைய வித்துப் பணத்த செலவு பண்ணுவியா… அத வுட்டுட்டு மவன், மயிருன்னு…”

பெரியவரின் வீட்டின் முன் ஷாமியானா போடப்பட்டு, கட்டிலில் அக்கா கிடத்தப்பட்டு இருக்க… அவள் காலைப் பிடித்துக்கொண்டு பெரியவர்… ”எம்மா… எம்மா… நானே கொன்னுட்டனே… எம்மா!” எனக் கதறிக் கதறி அழுதுகொண்டு இருந்தார்.

அவரை தாந்தோணியாலும் ஆறுதல்படுத்த முடியவில்லை. அதிசயமாக அண்ணன்கள், அண்ணிகள் கண்களும் கலங்கி இருந்தன. ஊரே பெரியவரின் வீட்டின் முன் கூடி நின்றது. அக்காவைத் தெரிந்த பெண்கள் அழுகையோடும், தெரிந்த ஆண்கள் போதையோடும் காட்சியளித்தனர்.

தாந்தோணி தாத்தா அடங்கிய ஊர் பெரியவர்களிடத்தில், அழுகையோடு நடந்தவை எல்லாம் சொன்னேன். பேண்டு வாத்தியங்கள் ஒலிக்க, பட்டாசுகள் வெடிக்க, பூக்களால் ஜோடிக்கப்பட்ட தேர்… ஊராரின் அழுகைகளோடு மயானத்தை நோக்கிப் புறப்பட்டது.

”வர்ணம்… எம்மா… வர்ணம்… என்னியக் கூட்டிக்கினுப் போய்டு. நீ இல்லாம நா எப்டி இருப்பேன்? எம்மா… என் தங்கமே… என்னப் பெத்த அம்மா. என்னக் கூட்டிட்டுப் போ!” எனப் புலம்பிக்கொண்டு இருந்த பெரியவர், மூன்றாம் நாள் அக்காவைக் கடைசியாகப் போர்த்தி இருந்த புடவையில் தூக்கில் தொங்கினார். அவருடைய பாக்கெட்டில் இருந்து கடிதம் ஒன்று கண்டு எடுக்கப்பட்டது கிறுக்கலான கையெழுத்தில்…

‘தாந்தோணி… தாம்புலத் தட்டுக் கீழ துட்டு வெச்சிருக்கேன்… என் கடைசிச் செலவுக்கு. புள்ளிங்கோனு எனக்கு யாரும் கிடையாது. அவனுங்க நாலு பேரையும் என் பொணத்தாண்ட சேக்காத. என் அண்ணன் மவன் பூங்காவனத்த கொள்ளி போடச் சொல்லு. அவன் மறுத்தா, அநாதப் பொணம்னு வெட்டியானயே போடச் சொல்லு.

எனக்கு மூணு கேள்வி மனசுல அரிச்சுக் கிட்டே இருக்கு… நீ யார் கிட்டயாவது கேளு… நான் தெரிஞ்சிக்க விரும்பல… ஒருவேளை அப்டிலாம் இல்லைன்னு தெரிய வந்தா, என் கொய்ந்திக்கு என்ன நடந்திருக்கும்னு என்னால யோசனைகூடப் பண்ணிப் பார்க்க முடில. அதான் போய்ச் சேர்ந்துட்டேன். அவ பண்ண ஒரே தப்பு, இந்தப் பாவிக்கு மகளாப் பொறந்ததுதான்.

பைத்தியம் புடிச்ச சின்ன வயசுப் பொண்ணுக்கு ஆர்ட்டட்டாக்கு வருமா?

ஆர்ட்டட்டாக்குல சாவும்போது பல்ல இறுக்கமாக் கடிச்சிட்டு இருப்பாங்களா?

ஆர்ட்டட்டாக்குல சாவும்போது கைய இறுக்கமா மூடிட்டு இருப்பாங்களா?

என் வர்ணம், பொணமா அப்படித்தான்டா கெடந்தா. அவ உயிரோடு இருக்கும்போதுதான், யாரும் கிட்ட வந்து பாக்கல… செத்த பெறவுக்கூட ஒருத்தனும் கிட்ட வர்லிய ஏன்?

என் வர்ணத்துக்குப் பக்கத்துலயே என்ன பொதச்சுடு!’

– மே 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *