நெருப்பு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2019
பார்வையிட்டோர்: 6,479 
 

மீனுக்குட்டி எலிகளைக் கடித்துக் குதறிவிட்டு தன் காலால் வாயைத் துடைக்கும் அழகே தனி. புலி, சிங்கம் கெட்டது. !

வீட்டு வளர்ப்பு விலங்குகளில் நாயும் பூனையும் தனித்தனி ரகம். நாய் மனித விசுவாசி. வளர்ப்பவர் எங்கு சென்றாலும் பின்னாலேயே வரும். பூனை அப்படி கிடையாது. பத்து நாட்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியில் சென்றாலும்…அது வீட்டை விட்டு எங்கும் நகராது.

எனக்கு இரண்டையும் பிடிக்குமென்றாலும் நாயைவிட பூனையைத்தான் அதிகம் பிடிக்கும். நாயைக் குட்டியாய் இருக்கும் போதுதான் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்ச ஆசையாய் இருக்கும். அதிகம் கொஞ்சினால் முகத்தை நக்குவது அருவருப்பு. வளர்ந்த பின் கொஞ்சினால் காலைத் தூக்கி நம்மீது வைக்கும். உடை அழுக்காகும். அநாகரீகம்.

பூனை அப்படிக் கிடையாது. அதைக் குட்டியாக இருக்கும்போதும் மடியில் கொஞ்சலாம். வளர்ந்தாலும் அப்படிக் கொஞ்சலாம். பஞ்சுப் பொதிபோல் அதை தூக்கவும் சுகமாக இருக்கும். மடியில் அமர்ந்து மியாவ் என்று அழைக்கும் அழகு அழகு.

இந்த மீனுக்குட்டி இருக்காளே… வீட்டில் ரொம்ப செல்லம். படுக்கையில் யாரோடும் வந்து ஒட்டிப் படுத்துக் கொள்ளும். பெரியவர், சிறியவர் யார் கை கால் பட்டு கடித்தது, பிராண்டியது என்பது கிடையாது.

இப்படிப்பட்ட மீனுவைப் பற்றித்தான் ஒரு நாள் என் மனைவி சொன்னாள்.

”என்னங்க ! அடுத்த எதிர்வீட்டு கிடாப்பூனை நம்ம மீனுவைச் சுத்தி தொந்தரவு செய்யுது. இதுவும் அதுவும் சேர்ந்து கர்புர்ன்னு சத்தம் போட்டு அடிக்கிற லூட்டித் தாங்கலை.” என்றாள்.

”பருவம் வந்துடுச்சி. விடு,” சொன்னேன்.

ஒருவாரம் இரண்டும் ஒன்றாக சுத்தி கர்புர்ரென்று கத்தி…. அப்புறம் மீனு அடக்கம். அடுத்து அது உடலில் மினுமினுப்பு ஏற….

”இதோ பார்த்தீங்களா மீனு எவ்வளவு அழகா இருக்கு!” மனைவி சொன்னாள்.

உண்மைதான். தாய்மையின் அடையாளம் பெண்ணாய் இருந்தாலும் விலங்காய் இருந்தாலும் ஒன்று.

எனக்கு இப்போது மீனுவைப் பற்றி வேறொரு கவலை. வசவசவென்று ஐந்தாறு குட்டிகளைப் போட்டால் வீடு எப்படித்தாங்கும். அவைகளைத் தாயிடம் இருந்து பிரித்து தூரம் கொண்டு போய் விட்டு வந்தால் இந்த மீனு கத்தியே அல்லவா செத்துப் போகும். இதற்குப் பயந்து கொண்டுதான் நாயாய் இருந்தாலும் பூனையாய் இருந்தாலும் எவருக்கும் கிடாயை வளர்க்க விருப்பம்.

தாயையும் சேயையும் பிரிக்கும் பாவத்தைச் செய்யாமல் மீனு ஒரு குட்டி போட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அடுத்து அது குட்டிப் போடாமல் இருக்க கருத்தடை செய்து கொள்ளலாம் நினைத்துக் கொண்டேன். மனைவியிடம் சொன்னேன். அவளும் வருத்தப்பட்டு அப்படியே வேண்டினாள்.

எங்கள் வேண்டுதல் நிறைவேறியது. வயிற்றைத் தள்ளிக் கொண்டு வலைய வந்த மீனு பத்து நாட்கள் கண்ணிலேயே படவில்லை. பதினோரறாம் நாள்தான் கொல்லைப் பக்கம் இருந்த நெல் மூட்டைகள் இடுக்கிலிருந்து புசுக் புசுக்கென்று ஓடியது. அடுத்து ஒரு குட்டி தலை நீட்டியது. ஒரே ஒரு குட்டிதான் அதுவும் ஆண். எங்கள் கவலை நீங்கியது.

குட்டி கிடா அழகு.!

தாயும் சேயும் விளையாடும் விளையாட்டை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இரண்டும் ஒன்றுக்கொன்று துணையாய் அப்படி விளையாடும்.

நான், இரண்டு பிள்ளைகள், மனைவி ஆகிய எல்லோரும் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுவோம். இரண்டும் அநியாயத்திற்கு எங்கள் பக்கத்தில் அமர்ந்து மியாவ் ! குரல் கொடுத்து காலால் தொடையைத் தொட்டு குழந்தை போல் சோறு கேட்கும். அசைவமென்றால் இவைகளுக்குக் கொள்ளைப் பிரியம்;. ஆனால் மறந்தும் ஆளில்லா சமயம் தொடாது. எதுவும் எடுத்துப் வைத்தால்தான் தின்னும். ஆளாளுக்கு வைத்து ஊட்டியததிலேயே விரைவில் குட்டியும் தாய் அளவிற்கு வளர்ந்து விட்டது.

ஒரு நாள் மாலை. நான் கொல்லையிலிருந்து வீட்டிற்குள் வரும் போதுதான் அந்த அதிர்ச்சி காட்சியைப் பார்த்தேன். பாவத்தைப் பார்த்த மனம்.

இருட்டில் தாய் மேல் சேய் ஏறி…. அவ்வளவுதான்! என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை. ஆத்திரத்தில் கையில் கிடந்த எதையோ எடுத்து வீசினேன்.

மீனு ஓடிவிட்டது. அதன் மேல் ஏறிய….குட்டி சொத்தென்று விழுந்து துடிதுடித்து வெட்டி வெட்டி இழுத்தது.

சத்தம் கேட்டு ஓடிவந்த என் மனைவி, ”ஐயோ என்ன செய்ஞ்சீங்க?” பதறினாள்.

நான் வெறித்த இடம் பார்த்து….”ஐயோ குட்டி செத்துப் போச்சு!” கூக்குரலிட்டாள்.

”சாகட்டும் !” என்றேன் இறுக்கமாய்.

”பூனைப் பாவம் பொல்லாது. சும்மா விடாது.” அவள் முகத்தில் கலவரம்.

”பரவாயில்லே!” எனக்குள் இன்னும் ஆவேசம் அடங்கவில்லை. அருவருப்பு போகவில்லை.

அன்றிலிருந்து மீனுவைக் காணவில்லை. எனக்கும் பூனை என்றால் வெறுப்பு, கசப்பு.

நெஞ்சை சுடும் அந்த நிகழ்வை எப்போது நினைத்தாலும் குமட்டல், கோபம், பாவத்தின் பதைபதைப்பு.

நியாயம்தானே !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *