நூலிழை இறகுகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 20,695 
 

”பிரியாணி மட்டுந்தான் இருக்கு சார். வான் கோழி, பிஷ்ஷு, மட்டனு,காடை”சர்வர் சொன்னதும் சரவணன் காளீஸ்வரன் சித்தப்பா முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து “ரெண்டு சிக்கன் கொண்டு வாங்க என்றான். சித்தப்பாவுடன் ஊரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரியாணி சாப்பிட்ட ஞாபகம் வந்தது.. அப்போது தாஜ் ஹோட்டல் பிரியாணி தான் ஊரில் பிரபலம். ஒவ்வொரு சனிக்கிழமை மத்தியானமும் சரவணனை கேரியரில் இரண்டு பக்கமும் கால் போட்டு உட்காருகிற மாதிரி உட்கார வைத்து விட்டு ”உள்ள விட்டுறாதடா” என்று ஒவ்வொரு மிதிக்கும் சொல்லுவார். அந்த வார்த்தை ஒவ்வொண்ணும் அவர் மிதிக்கும் போது சத்தமாய் வெளிவரும் மூச்சுக் காற்றில் பஸ்பமாவது போல் தோன்றும் சரவணனுக்கு.

சித்தப்பா பிரியாணியை சாதாரணமாக சாப்பிடுவாரில்லை. அரைப்பிளேட் பிரியாணி ஆர்டர் செய்து விட்டு கழுவிய கைப்பக்க சட்டையை மடித்து விட்டு முழங்கைக்கு மேல் ஏத்தி விட்டுக் கொள்வார்.பிரியாணி வந்ததும் அதை இலையில் தட்ட அவர் ஒருபோதும் சம்மதித்ததில்லை. அப்படியே வச்சிடு என்று இடது கையால் இலையை மூடிக் கொண்டு சமிக்ஞை செய்வார்.வலது பக்கமாய் பிரியாணி ப்ளேட்டை அவர் வைத்துக் கொண்டு அதில் கொஞ்சத்தை மட்டும் இலையில் தட்டுவார். ஒவ்வொரு வாய்க்கும் பச்சடி ஒரு தரம் என்றும் இலை ஓரமாய் ஊற்றிய குருமா ஒரு தரம் என்றும் முறை மாறாமல் அவர் கைகள் போகும், இரண்டு வாய்க்கு இடைஇடையே கோழிக்கறியை ஒரு கடி. தப்பித்தவறி கோழிச்சாறு கடைவாயில் வழிந்தால் அப்பவே சர்வரைப் பார்த்து டிஷ்யூ இருக்கா என்று சித்தப்பா கேட்பார். அதை உச்சரிக்கவே தவறிய சர்வரை அவர் “மெட்ராஸ்லலாம் கைத்தொடைக்க வாய்த்தொடைக்க அதான் வைக்கிறாங்கப்பா”என்பார். அந்த உரையாடலின் கடைசியில் வைக்கப்படும் “ப்பா” அந்த சர்வரை சித்தப்பா பக்கம் வர வைத்தது. “வொயிட் ரைஸ் வேணுமா சார்? என்று கேட்டு சித்தப்பா மறுக்க மறுக்க இலையில் சாதம் வைத்து மட்டன் குழம்பு ஊற்றுவார்.

அதற்கடுத்த முறை அந்த சர்வர் சித்தப்பாவின் நண்பராகவே ஆகி விட்டார்.அந்த வாரம் பிரியாணியோடு குடல்.மூளை என்று இத்தியாதி கூட்டு வகைகளோடு சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது. அதுதான் சரவணன் மூளையை சாப்பிட்ட முதலும் கடைசியுமான நாள். “நல்லா சாப்பிட சொல்லுங்கண்ணே” என்றார் சர்வர். ”ஆமால…சாப்பிடு…மூளை வளரும்”என்று சித்தப்பா சிரித்தார்.. சரவணன் வாய்க்குள் மூளை கொழ கொழ என்று ருசிக்கும் அப்பாற்பட்ட ஒரு உணர்வை ஏற்படுத்தியதில் அவனால் அடுத்த வாயை சாப்பிட முடியவில்லை.”என்னலே புடிக்கலையா?”என்றபடி இவன் இலையில் உள்ளதை குழம்புக் கரண்டியால் எடுத்து அவர் இலையில் வைத்துக் கொண்டார். “மூளைப் பிடிக்காத பயலா இருப்பான் போலிருக்கே அண்ணாச்சி”என்று சர்வர் சொன்னதுக்கு சிரித்ததற்காய் சித்தப்பாவிடம் இவன் ஒரு மாதம் பேசாமல் இருந்திருக்கிறான்.

அந்த ஒரு மாசம் கழித்து சனிக்கிழமை சித்தப்பா மறுபடி அதே ஹோட்டலுக்குப் போகும் போது இவன் வாசலில் கைப்பிடித்து பக்கது நியாஸ் ஹோட்டலைக் காட்டி அங்க போவோமா என்றான். “அட..அவரு சும்மா ஜாலிக்கு சொன்னாருடா.. வா அதெல்லாம் ஒண்ணுஞ் சொல்ல மாட்டார் என்றார். இந்த தடவை சர்வரின் பெயரை “அபு”என்று சொல்லி சித்தப்பா கூப்பிட்டதும் அபூ சித்தப்பாவுக்கு கேட்காமலே ஒரு ப்ளேட் ஈரல், ஒரு ஒன் சைட் ஆம்லெட் போட்டதும் ஆச்சர்யமாய் இருந்தது.”உனக்கென்னடா வேணும் “என்று அபூ வாஞ்ஞையாய் இவனிடம் கேட்டார்.”ச்சும்மா விளையாட்டுக்கு சொன்னதுக்கு கோச்சிக்கிட்டியாமே…”என்று சொன்னபோது சித்தப்பா அபூவிடம் கண்ணைக் காட்டியதை இவன் பார்த்து விட்டான். சாப்பிட்டு முடித்த பிறகு சுடச்சுட சம்சா ஒன்றை அபூ தந்தார். “வேணாம்”னு சொல்ல வாய் எடுத்தவன் அதன் வாசத்தாலும் சூட்டாலும் ஈர்க்கப்பட்டு லபக்கென்று கடித்தான். “நல்லருக்காடா”என்றார் சித்தப்பா.

சின்னத் தாளில் பில் கொண்டு வைத்ததும் முதலில் சித்தப்பா அபூவுக்கு ஒரு முழு பத்து ரூபா தாளை நீட்டினார். அபூ அதை வாங்கி அவசரமாக பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். பில் தொகை அதிகமாய் இருக்குமென சரவணன் நினைத்தான். தொண்டை வரை நிறைந்திருந்த சம்சா அப்படியே நினைக்க வைத்தது. சித்தப்பா பில்லை எட்டிப் பார்த்து ”ஒண்ணும் பிரச்னை இல்லியே?” என்று கேட்டார். ”ச்ச..அதெல்லாம் என்ன? உங்களுக்கு இல்லாமயா? நீங்க ஸ்பெஷல்லே?”என்றார் அபூ. எடுக்காமல் போன பில்லை எட்டிப் பார்த்த போது அதில் ஒரு அரை ப்ளேட் பிரியாணிக்கும் ஒரு கால் ப்ளேட் பிரியாணிக்குமான காசு மட்டும் போட்டிருந்தது. சரவணனுக்கு ஒரு நிமிஷம் சித்தப்பாவைப் பிடிக்காமல் போனது.
பிரியாணி சாப்பிட்டு விட்டு பில்லோடு வைக்கப்படும் கருஞ்சீரகத்தை சித்தப்பா நாசூக்காய் சவைக்க ஆரம்பித்தார். “ சித்தப்பா?”என்றான் இவன்.

“என்னங்கடா?”

“பில்லுல ஈரல் ஆம்லெட்லாம் இல்ல பாருங்க?”

சித்தப்பாவின் முகம் ஒரு நிமிஷம் கடுப்பாகி“ அது போன வாரம் சில்லரை வாங்காம போயிட்டேன்ல” என்று சமாதானமான ஒரு குரலில் சொன்னார். இருவரும் பேசாமலேயே வெளியே வந்தார்கள். இவர்கள் எழுந்த அறையின் மின்விசிறியை அபூ
அணிப்பதன் மூலம் அந்தக் கடகட சத்தம் மெள்ள மெள்ள அமுங்குவதும் உட்கார்ந்திருந்த நாற்காலியை மேஜைக்கடியில் தள்ளுவதுமான முனங்கல் ஒலி கேட்டது. எல்லாமே
சித்தப்பாவுக்கும் அபூவுக்குமான ரகசியங்களின் மெளன சாட்சியாக இருப்பதாய்
இவனுக்குத் தோன்றிற்று.

தனக்கு ரொம்பவும் பிடித்த சித்தப்பாவை ஒரு பிரியாணி பிடிக்காமல் செய்து
விட்டதாகவே இவனுக்குத் தோன்றிற்று. வரும் வழியில் கோவில் வாசலில்
சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு இருட்டுக் கடையில் கால் கிலோ அல்வா வாங்கிக்
வந்தார். கையில் வாழை இலையில் வழுக்க வழுக்க ஐம்பது அல்வா. கவரை ஹேண்டில் பாரில் மாட்டியப் படி “சாப்பிடுல”என்றார்.

“வேணாம் சித்தப்பா” என்றவன் திடீரென பூங்கொடி மிஸ்ஸைப் பார்த்ததும் “குட் ஈவ்னிங் மிஸ் “என்றான். பூங்கொடி மிஸ் திரும்பி இவனைப் பார்த்து “என்ன சரவணப்பெருமாள்? அல்வா சாப்பிடுறியா? அப்பா கூட எங்க வந்தே? என்றார் இவன் கன்னத்தைத் தட்டி. இவனுக்கு பூங்கொடி மிஸ்ஸுக்கு மிக நெருக்கமாக இருக்கும் உணர்வு வந்தது.”நான் சரவணன் அப்பா இல்லீங்க…சித்தப்பா”என்றார் சித்தப்பா. பூங்கொடி மிஸ் அச்சோ அச்சோ என்றபடி சிரித்தார். அவளுடன் வந்தவர் அல்வா வாங்க வரிசையில் நின்று சிரமப்பட்டதைப் பார்த்த சித்தப்பா “எவ்ளோ வேணும்?”என்றபடி முன்னால் விரைந்தார். முன்னால் போய்க் கொண்டிருந்த சித்தப்பாவுக்குக் கேட்கிற மாதிரி பூங்கொடி மிஸ் “அரைக் கிலோ போறும்”என்று காற்றுக்கும் முன்னால் சித்தப்பாவிடம் சொல்வது போல் ஒரு விதமான வேகத்தோடு சொன்னார்.

நெடிய போராட்டத்திற்குப் பிறகு நாட்டை மீட்டு வந்த அரசன் போல் சித்தப்பா நெடிய பெருமூச்சுகளுக்கு மத்தியில் அல்வா வாங்கி வந்தார். இரும்பு ப்ரேம் போட்ட சைக்கிள் கேரியரில் உட்கார்ந்தே இருந்ததால் டிராயர் அழுந்தியது இவனுக்கு.ஆனாலும் மிஸ் முன்னால் எழுந்து அதை இழுத்து விடக் கூச்சமாய் இருக்கவே லேசான வலியோடு அசைந்து உட்கார்ந்து கொண்டான்.மிஸ் சித்தப்பாவுக்கு அவரது அப்பாவை அறிமுகப்படுத்தியபடி அல்வா வாங்கிக் கொடுத்ததுக்கு ஆயிரம் தாங்க்ஸ் சொன்னார்.

அப்போதுதான் சித்தப்பா அதைக் கேட்டார்.

“சரவணன் எப்படி படிக்கான்? நல்ல பயலா இருக்கானா?”

பூங்கொடி மிஸ் இவனைப் பார்த்துக் கள்ளசிரிப்பு சிரித்து “படிக்கான்..வீட்டுல கவனிக்க மாட்டீங்களா? ஹோம் வொர்க் செல நாள் பண்றதில்ல” என்றார்.

“அப்படியால…கேட்டா செஞ்சிட்டேன் செஞ்சிட்டேன்னு சொல்லிடுதானே” என்ற சித்தப்பா “இனிம நான் பாத்துக்குறேன் மிஸ்” என்றார். இவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கழுகு படம் பார்த்துட்டு ஒரே ஒரு நாள் ஹோம் வொர்க் செய்யாமல் போனதுக்கு பூங்கொடி மிஸ் இப்படி போட்டுக் கொடுக்கணுமா?

வர்ற வழி முழுதும் சித்தப்பா இவனுக்கு நிறைய அறிவுரைகள் சொல்லிக் கொண்டே வந்தார். தொண்டர் சந்நிதி முக்கு வரைக்கும்தான் இவனுக்கு ஞாபகம் இருந்தது. அதற்கு பிற்கு தூங்கி விட்டான்.வீட்டுக்கு வந்து சித்தப்பா மிஸ் சொன்னதாக சொல்லியவற்றை சொன்னதால் அப்பா இடுப்புக்குக் கீழே இரண்டு அடி அடித்தார். கேரியர் அழுத்திய வலி மறைந்து போய் இப்போது அப்பா அடித்தது வார் வாராய் விழுந்து கிடந்தது.அம்மா சாயங்காலம் காம்பெளண்ட் சுவர் வழியாய் பின்வீட்டு பாத்திமா அம்மாவிடம் சித்தப்பா தேவையில்லாமல் இவனைப் பற்றி போட்டுக் கொடுத்து அடி வாங்கிக் கொடுத்ததாய் ரகசியமாய் சொன்னது இவனுக்குப் பெரிய ஆறுதலாய் இருந்தது.

அப்பா சொன்னதாய்ச் சொல்லி சித்தப்பா இவன் ஹோம் வொர்க்கில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். வாரம் ஒரு நாள் ஸ்கூலுக்கு வந்து பூங்கொடி மிஸ்சிடம் பாடம் சம்பந்தமான விவரங்களையும் சரவணன் அந்த வார ஸ்கூலில் எப்படி நடந்து கொண்டான் என்ற விவரங்களையும் கேட்டுக் கொண்டார். பையன் படிப்பின் மேல் தம்பி கொள்ளும் அக்கறையால் அப்பா சிலிர்த்துப் போனார். சித்தப்பா எந்த நாளில் நேரத்தில் ஸ்கூலுக்கு வருவார் என்று தெரியாமல் மத்தியான சாப்பாட்டு நேரத்திலேயே கைக்கடிகார ஜவ்வு மிட்டாயையும் நெல்லி ஊறுகாயையும் வாங்க வேண்டியதாயிற்று இவனுக்கு. பூங்கொடி மிஸ் ”உங்க சித்தப்பா கீழப் போட்டுட்டுப் போயிட்டார்”என்று கொடுத்த கைக்குட்டையில் புதுத் துணிக்கான வாசம் இருந்தது. பிரித்தபோது ஓரத்தில் காளீஸ்வரன் என்று எம்பிராயிடரி போட்டிருந்தது.
இவன் மெனக்கட்டு அதை அம்மாவிடம் கொடுத்து,”மிஸ் சித்தப்பாட்ட கொடுக்க சொல்லிச்சிம்மா? என்றான். அம்மா அன்றைக்கு முழுக்க மசாலா அரைத்ததிலிருந்து துணி பிழிந்து கொல்லைப் பக்கமாய் காயப்போடும் வரை ”எம்புள்ளய குறை சொல்லிக் கூத்தடிக்கிறவன் உருப்படவா போறான்?”என்று புலம்பித் தள்ளி சாயங்காலம் அப்பா வந்ததும் கொழுந்தங்கிட்ட சரவணன் மிஸ் கொடுக்க சொன்னாவளாம் என்று கிசுகிசுத்தாள். அப்பா அதை பெரிசா எடுத்துக்காமல் ”நீ கொடுத்து தொலையறதுதானட்டி?” என்றார்.சரவணன் சித்தப்பா அன்று லேட்டாக வந்தார்.முகம் பேயறைந்த மாதிரி இருந்தது. அப்பா வரிடம் சாப்பிடியால என்றார். அவர் வெறுமனே “ ம் ” கொட்டி உள்ளே போன போது ”ஸ்கூல்ல கைக்குட்டை வுட்டுட்டு வந்துட்டியால? சரவணன் டீச்சர் எடுத்து கொடுத்து வுட்டிருக்கு”னு சொன்னார்.

சித்தப்பா முகத்தில் ஒரு நிமிஷம் பல விதமான உணர்வுகள் தெரிந்தன. விளக்கிலிருந்து கழற்றின மாலையில் புதுப் பூவின் மிஞ்சிய வாசமும் காய்ந்த இதழ்களின் மணமும் சேர்ந்து இருப்பது போல சித்தப்பா குழப்பமாய் அந்த கைக்குட்டையை வாங்கிக் கொண்டது இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது.. அதற்குப் பிறகு பூங்கொடி மிஸ்ஸின் டிரெஸை வைத்தே அன்று சித்தப்பா ஸ்கூலுக்கு வருவாரா மாட்டாரா என்று தெரிந்து கொள்ள முடிந்தது இவனால். சித்தப்பா வரும் நாட்களில் மிஸ் கொண்டையை சுற்றி பூ வைத்து அதன் ஒரு நுனி வலது கழுத்துப் பக்கம் வருமாறு விட்டிருந்தாள்.அன்று மட்டும் மிக நேர்த்தியாக உடுத்தியிருந்தார்.
ஒருகட்டத்தில் இந்த மர்மம் நிறைந்த காதல் கதை இவனை சுவாரஸ்யப்படுத்தவே செய்தது. பூங்கொடி மிஸ் இவன் மேல் பிரத்யேக அன்பு செலுத்த ஆரம்பித்தது பசங்களுக்கு வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்து “இவன் பூங்கொடி மிஸ் ஆளுல்ல?”என்று சிரித்தார்கள். இவனுக்கு அது பெருத்த அவமானமாக இருந்தது..”இனி நீ ஸ்கூலுக்கு வராத சித்தப்பா”என்று சொல்லி விடத் துடித்தான்..அதற்காகவே சித்தப்பாவுடன் தனியாக இருக்கும் நேரங்களைத் தேடினான். சித்தப்பா வெளியே போகும் போதெல்லாம் “நானும் வர்றேன்லா”என்ற படியே இருந்தான்.

“ஏறுல”என்று ஒரு நாள் சித்தப்பா சிரித்தபடி சொன்னார். எப்ப சொல்ல நினைத்ததை நாசூக்காக சொல்லலாம் என்று இவன் எதிர்பார்த்தப்டியே இருந்தான். வசந்தி மிஸ் கிண்டலாய் சொன்னாள் என்று கதை கட்டி விடலாமா என்று கூட தோன்றிற்று இவனுக்கு. சித்தப்பா ஒரு பழைய கட்டிடத்துக்குள் இவனைக் கூட்டிப் போனார். அதுவரை அந்த கட்டடத்தை அவன் அந்த ஊரில் பார்த்ததே இல்லை. சினிமா பட போஸ்டர் மாதிரி நிறைய போஸ்டர்கள் வெளிச்சுவரில் இருந்தன, எல்லா போஸ்டரிலும் ஒரு அரிவாள் படம் இருந்தது. சித்தப்பா எதிர்ப்பட்ட எல்லாரிடமும் “என் அண்ணன் மகன்” என்றபடி இருந்தார்.

உள்ளே அவனை உட்கார வைத்து விட்டுப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். ஒரு பெண் அவசர அவசரமாக உள்ளே வந்து “ஹேய்…யாருய்யா இது ? என்றது. சித்தப்பா பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது”இரு இரு வந்துடுறேன்”என்றபடி உள்ளே ஓடினார். ஐந்து நிமிடங்களில் நனைந்த கால்களில் புடவை படாத படி ”கூட லேடீஸ் வாராங்களே அவங்க பாத்ரூம் போகணுமேனு எவனும் யோசிக்க மாட்டேங்கிறான் தோழர். சுவர் இருக்கிற தைரியம் ஆம்பளைங்களுக்கு “என்றவர் “அது சரி..இது யாரு”என்றார். சித்தப்பா மறுபடி என் அண்ணன் பையன் என்றார். அவர் மெளனமாக இவனைப் பார்த்து “சித்தப்பா கூட பவனி வந்தியாக்கும் “என்றார்.

“நீங்களும் வாங்களேன் செல்வி, தாஜ்ல பிரியாணி சாப்பிட்டு வரலாம்” என்றார் சித்தப்பா. அவர் ஏதோ நாகரிகத்துக்காக கேட்கிறார் என்றுதான் இவன் நினைத்தான். ஆனால் செல்வி அப்படி நினைக்காமல் கிளம்ப ஆரம்பித்தது ஆச்சர்யமாய் இருந்தது. செல்வி சிந்துபூந்துறை வழியாக நடந்து வர இவனைக் கேரியரில் உட்கார வைத்து சித்தப்பா உருட்டினார்.
ஹோட்டலுள் நுழைந்ததும் அபூ சித்தப்பாவைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி “மைனியா? என்று ரகசியமாய் கேட்டது இவனுக்கும் கேட்டது.பூங்கொடி டீச்சர் இப்ப இங்கே பிரியாணி சாப்பிட வரணும் போலிருந்தது இவனுக்கு. இவனால் பெரிதாய் ஒன்றும் சாப்பிடவோ பேசவோ முடியவில்லை. “சமர்த்தாருக்கானே” என்று செல்வி இவன் கன்னத்தைத் தட்டிய போது முகம் துடைப்பது போல் அந்த ஸ்பரிசத்தை அழித்தான்.

“ருசியாருக்கு ருசியாருக்கு என்றபடியே செல்வி கோழி எலும்பை நறநறநக்கென்று கடித்து துப்பினார்.சித்தப்பா அதைக் காணப் பிடிக்காமல் அவ்வப்போது முகத்தை திருப்பிக் கொண்டார். கடைசியில் அபூ சம்சா தந்த போது இவன் வேண்டாம் என்றான். ”தாஜ் ஹோட்டல் சம்சாவை வேணாம்னு சொல்லாத தம்பி”என்று சொன்ன செல்வி அதை பேப்பரில் மடக்கி ஹேண்ட் பேக்கினுள் வைத்தார்..அபூ சித்தப்பாவிடமிருந்து இருபது ரூபாய் வாங்கிக் கொண்டு பில் கொடுத்தார்.இவன் விரைவாக படிக்கட்டில் இறங்கி வெளியே வந்து சைக்கிள் பக்கமாய் நின்று கொண்டான்.

அவர்கள் இருவரும் வெளியே வந்து “போலாமா?”என்றார்கள் இவனிடம் . செல்வி சித்தப்பாவைப் பார்த்து “ரொம்ப நாள் கழிச்சு திருப்தியா சாப்பிட்டேன் உங்க கூட “ என்றார். சித்தப்பா ”அதுக்கென்ன” என்றார். இருவரும் அங்கேயே வெயிலில் நின்று ஏதோ கூட்டம் பற்றிப் பேசினார்கள். இவனுக்கு ஒன்றுக்குப் போக வேண்டும் போலிருந்தது. ஹோட்டல் பக்கவாட்டிலிருந்த மடையில் இருந்த போது செல்வி பார்க்கிறாரா என்று திரும்பிப் பார்த்தான் . “சுவர் இருக்கிற தைரியம் ஆம்பிளைங்களுக்கு என்று சொன்னது மாறி மடை இருக்கிற தைரியம் ஆம்பிளைங்களுக்கு என்று சொல்லி விடுவாளோ என்று தோன்றிற்று. தான் பெரியவன் ஆனா காதலிக்கவே கூடாது என்றும் சித்தப்பா மாதிரி இரண்டு பெண்களை ஏமாற்றவே கூடாதென்றும் தோன்றிற்று.

அடுத்த வாரமே சித்தப்பாவை போலீஸ் கைது செய்தது. கட்சில இருந்தா இதெல்லாம் சகஜம்தாண்டி என்று அப்பா சாதாரணமாக சொன்னார். ஆனால் அம்மாவோட அப்பா தாத்தா இவனைத் தனியாகக் கூட்டிட்டுப் போய் ”சித்தப்பா கூட இனி தனியாலாம் போகக் கூடாது” என்று சொல்லி நாலணாவும் தேன் மிட்டாயும் வாங்கிக் கொடுத்தார். யோசித்தால் அதெல்லாம் அம்மாவின் வரிகளாக தோன்றுகிறது இவனுக்கு.

சித்தப்பா வெளியே வந்தபிறகு நிறைய மாறுதல் ஏற்பட்டது. அப்பாவைத் தவிர வேறு யாரும் அவரிடம் சகஜமாக பேசவில்லை. பூங்கொடி மிஸ்ஸிடம் அவர் “கட்சியை எப்டிம்மா விட முடியும்”என்று சமாதானம் சொல்லியும் “இல்ல…இதெல்லாம் சரி வராது “என்று சொல்லி மிஸ் அழுதது வாசலுக்கு வெளியே நின்ற இவனுக்கும் கேட்டது..சித்தப்பா பிறகாய் ஸ்கூலுக்கு வரவேயில்லை.அடுத்த முழு ஆண்டு பரீட்சையின் போது கடைசியாய் பூங்கொடி மிஸ்ஸைப் பார்த்தது. கும்பகோணத்தில் கல்யாணமானதாய் ஜூன் மாசம் ஸ்கூலுக்குப் போனபோது பேசிக் கொண்டார்கள். சித்தப்பாவிடம் சாயங்காலம் சொல்லவா வேண்டாமா என்று நினைத்தபடியே சொன்னான். ”தெரியும்”என்று ஒத்த வார்த்தையில் நிறுத்திக் கொண்டு சத்தமாக ஏதோ பாட்டுப் பாடினார். சித்தப்பாவைப் பார்க்க பாவமாக இருந்தது இவனுக்கு.

சித்தப்பாவுக்கு அப்பா தீவிரமாக பெண் பார்க்க தொடங்கினார்கள். அம்மா வாரம் ஒரு முறை நகையெல்லாம் போட்டுக் கொண்டு பெண் பார்த்து வந்தார். எல்லா பெண்களையும் சித்தப்பா பிடிக்கலனு சொல்லிக் கொண்டே வந்ததில் அப்பாவுக்கு எரிச்சலாயிற்று. ”மனசுல யாரையாச்சும் வச்சிருந்தா சொல்லித் தொலை”என்றார்.

“அதெல்லாம் இல்ல” என்ற சித்தப்பா அடுத்த வாரம் அம்மா பார்க்கப்போனப் பெண்ணை போட்டோ கூடப் பார்க்காமல் சரி என்றார். இவனுக்கு செல்வி பத்தி கேட்க நுனி நாக்கு வரைக்கும் தோன்றியும் கேட்காமலே இருந்து விட்டான். கல்யாணத்தன்னிக்கு சித்தியைப் பார்த்தால் முள்ளும் மலரும் ஷோபா மாதிரி தெரிந்தது. சித்தப்பாவுடன் ராயல் டாக்கீசில் அந்தப் படம் பார்த்த ஞாபகமும் இண்ட்ரவலில் அவர் வாங்கிக் கொடுத்த முறுக்கு வாசமும் ஞாபகம் வந்தது. கல்யாணத்துக்கு கட்சியிலிருந்து வந்தவர்களோடு செல்வியும் வந்திருந்தார் .கைத்தறிப் புடவையில் முகம் முழுக்க வேர்வையில் அவர் சிரித்த மாதிரி நடிப்பது போலிருந்தது. அவசர அவசரமாக சித்தப்பாவுக்கு வாழ்த்து சொன்ன பிறகு வர்றேன் என்றார், இவனைப் பார்த்து.”போட்டோ எடுத்துக்கோங்க “என்றார் யாரோ. இருக்கட்டும் என்றபடி அவசரமாக வெளியேறின செல்வி தூசு விழுந்திடுச்சி என்று போய் சொல்லி அழுதிருக்கலாம்.அபூ கூட கல்யாணத்திற்கு வந்திருந்தார்.காய போட்டு விருந்து வச்சிட்டீக. இல்லனா பிரியாணி போட்டு ஜமாய்ச்சிருக்கலாம்னு சொல்லிக்கிட்டே ஒரு கவர் எடுத்து சித்தப்பா கையில் கொடுத்து விட்டு போட்டோவில் நிற்க தயாரானார்.

அந்த போட்டோ இன்னும் சித்தப்பா வீட்டு டிவி மேல் இருக்கிறது..தாஜ் ஹோட்டலை மூடிய பிறகு அபூ எங்கே என்று தெரியாமலே போனது.மூன்று பெண்குழந்தைகள் ஆன பிறகு நாற்பதாவது வயதில் சித்தி கர்ப்பப்பை கான்சரில் இறந்து போனாள். சித்தப்பா அழுது இவன் பார்த்தது அன்றுதான். அவருக்கும் சித்திக்கும் இடையில் பேசப்படாத ஒரு ப்ரியம் இருந்திருப்பதை தான் கவனிக்காமல் விட்டதை நினைத்து இவன் மருகினான். மூத்த பெண்ணுக்கான டீச்சர் டிரெயினிங் சீட்டுக்கு இவனையும் கூட வர சொல்லி சித்தப்பா போன் செய்தார்.

டிரெயினிங் கல்லூரியில் பீஸ் கட்டிய போது சித்தப்பாவிடம் ஐநூறு ரூபாய் கம்மியாயிருந்தது. இவன் ஆயிரம் ரூபாயை அவரிடம் நீட்டினான்.”பீஸ்னு ஒரு தொகை போட்டுட்டு டாக்ஸ் அது இதுனு இங்க வந்தா கூட போடுறாகல” என்றார். மீதியை பாக்கெட்டில் வைத்த படி “சாப்பிடலாமா?”என்றார்.

எதிரே இருந்த ஹோட்டலில் நுழைந்த போது அங்கு பிரியாணியைத் தவிர ஏதுமில்லை. சித்தப்பாவுக்கும் தனக்கும் பிரியாணிக்கும் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம தொடர்பு இருப்பதாகவே தோன்றிற்று இவனுக்கு. ”இப்பல்லாம் அரை ப்ளேட்டுனுலாம் இல்ல”என்றார் அவராகவே.ஒரு வெங்கல கிண்ணத்தில் வந்த பிரியாணியை அவர் ப்ளேட்டில் தட்டி குனிந்தபடியே சாப்பிட்டார்.பச்சடியை எப்போதாவது தொட்டுக் கொண்டார். குழம்பு பாத்திரத்தை அவர் தொடவே இல்லை. “குழம்பு சித்தப்பா?”என்றான் இவன்,”வேணாம்ப்பா:என்று மறுத்து இடது கையை மறித்தார். மளமளவெனச் சாப்பிட்டு இவனுக்கு முன்பாகவே கைகழுவி விட்டு உட்கார்ந்தார். மேஜையின் மீது ஒரு இரும்பு ஸ்டாண்டில் டிஷ்யூ பேப்பர் இருந்தது.

சாப்பிட்டு முடித்தும் அதை எடுக்கவில்லை அவர்.

– செப்டம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *