நாளும் கோயிலும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 6,806 
 

ஒனக்கு இப்போ `நாள்,’ இல்லே?” தாயாரின் குரலில் கவலை தொனித்தது.

மகள் அலட்சியமாகக் கையை வீசினாள். “இப்போ என்ன அதுக்கு?”

“இல்லே, ஹம்சா. நாளைக்குக் கோயில்ல ஆடப்போறியே..,” மீதியைச் சொல்லாமல் விட்டாள். “ஆமா, எந்தக் கோயில்லேன்னு சொன்னே?”

எங்க கிளாஸ் நடக்கிற கோயில்லதான்!”

“காமாட்சி அம்மன் கோயில்!” என்று சொல்லிக்கொண்டாள் தாய், தனக்குள்.

ஹம்சா மேலே எதுவும் பேசவில்லை. பேசப் பிடிக்கவில்லை. ஒரு பாட்டை மனதிற்குள் பாடியபடி அங்கிருந்து நகர்ந்தாள். கை, தன்னையுமறியாமல், அபிநயம் பிடித்தது.

அப்போதைக்கு அம்மாவிடமிருந்து தப்பித்துப்போனால் போதும் என்றிருந்தது அவளுக்கு. மாடியிலிருந்த தனது அறையை நோக்கிப்போனாள்.

அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் மேலெழுந்தது.

`தீட்டு’என்று இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண்களை மட்டமாகவே நடத்தப்போகிறார்கள்?

ஆதிமனிதன் குகையில் வசித்த காலத்தில், காட்டு விலங்குகள் ரத்த வாடையை முகர்ந்து குகைக்குள் வந்துவிடுமே என்று பயந்து, அக்காலங்களில் பெண்களைத் தனியே விலக்கிவைத்திருக்கலாம். இப்போது என்ன வந்தது!

பள்ளிக்கோ, அல்லது வேலைக்கோ வெளியே போகும் பெண்கள் வீட்டில் தனித்து விலக்கி வைக்கப்படுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனால், கோயில்களில் மட்டும் பழைய விதிமுறைகளை மாற்றாமல், கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

சில கோயில்களில், `இவர்களெல்லாம் கோயிலுக்குள் நுழையக்கூடாது!’ என்று ஒரு பெரிய பட்டியல் தயாரித்து, வெளியிலேயே எழுதி வைத்திருக்கிறார்கள்! மாத விலக்கு வந்த பெண்களும், பெருநோய் வந்தவர்களும் ஒன்றா? கையில்லாத ரவிக்கை அணிபவர்களுக்கு மட்டும் பக்தி இருக்கக்கூடாதா?

அவளுடைய ஆத்திரத்திற்கு முட்டுக்கட்டை போடவேபோல் தொலைபேசி அழைத்தது.

ஹம்சாவுக்குச் சட்டென்று சிரிப்பு வந்தது. யாராவது ஒரு மாணவி, `டீச்சர்! இன்னிக்கு பரத்நாட்யம் க்ளாஸ் இருக்கா?’ என்று கேட்பாள்! முதலில் வரவே யோசித்தவர்களுக்கு இப்போதுதான் எத்தனை ஆர்வம்! நினைத்துப்பார்க்கவே பெருமையாக இருந்தது அவளுக்கு.

பரதநாட்டியம் வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே எட்டக்கூடிய ஓர் உயரம் என்ற எழுதப்படாத விதிமுறையை எதிர்த்து, ஹம்சா அந்த வகுப்பை ஆரம்பித்திருந்தாள்.

பெரிதாக இடம் எடுத்து நடத்த வழில்லை. குடிசைகளுக்குப் பதிலாக்க கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள் நிறைந்த அவ்விடத்தில் அவர்களுக்கென இருந்த ஒரு சிறு கோயில் பிரகாரம்தான் நாட்டிய வகுப்பு — பூஜை இல்லாத நேரங்களில்.

அக்கம்பக்கத்திலிருந்த குடும்பங்களிலிருந்து மாணவிகள் வந்தார்கள் — இலவசம் என்பதைக் கேள்விப்பட்டு. ஆனால், எதிலும் அவர்களுக்கு துடிப்போ, புதியதாக ஒன்றைக் கற்கும் ஆர்வமோ இருக்கவில்லை. எப்போதும் வாயில் விரல். நிமிர்ந்து நிற்கக்கூட தெம்போ, உத்வேகமோ இல்லாதவர்களாக இருந்தார்கள். எட்டு வயதிலேயே கூனலா! இவர்களை எப்படி வழிக்குக்கொண்டு வருவது என்று அயர்ந்தே போனாள் ஹம்சா.

எப்போதோ அம்மா சொன்ன ஒன்று நினைவுக்கு வந்தது: `சின்னப்பிள்ளைங்களுக்குத் தாகமா இருந்தாலோ, பசியா இருந்தாலோ சொல்லத் தெரியாது. வாயிலே விரல் போட்டுப்பாங்க!’

தன்னுடைய தோழிகள் சிலருடன் கலந்தாலோசித்து, அவர்களுக்குச் சாப்பிட எதையாவது கொடுக்க ஏற்பாடு பண்ணினாள்.

`நாட்டியம் கற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ, வயிறாரச் சாப்பிட்டுவிட்டாவது போகட்டுமே!’ தான் பசியே அறியாது வளர்ந்திருந்ததில் சிறிது குற்ற உணர்வுகூட ஏற்பட்டது.

வெளியில் எங்கும் கிடைக்காத தோழமையும், சிரிப்பும், அறிவும் அங்கு கிடைப்பதை உணர்ந்தவர்களுக்குச் சில மாதங்களிலேயே உணவில் ஆர்வம் குறைந்துபோயிற்று.

ஆரம்பத்தில் எதையும், `எனக்கு? எனக்கு?’ என்று பிடுங்கியவர்கள்கூட, `நீங்களும் சாப்பிடுங்க, டீச்சர்,’ என்று உபசாரம் செய்யக் கற்றுக்கொண்டார்கள்.

சில நாட்கள், ஓரிரு பெண்கள் வகுப்புக்கு வராததன் காரணத்தை (`அக்கா சுத்தமில்லே!’) யார்மூலமாவது சொல்லி அனுப்பியபோதுதான் அந்த யோசனை எழுந்தது ஹம்சாவுக்கு.

பெண்கள் மருத்துவரான சுந்தரவல்லி அந்த வகுப்புக்கு வந்து விளக்கினாள். ஒரு பெண் கர்ப்பம் தரிக்கத் தயாராக இருக்கிறாள் என்பதைத்தான் உணர்த்துகிறது மாதாந்திர உதிரப்போக்கு. இயற்கையான ஒரு செயல்! அதற்கு ஆயிரம் தப்பு கண்டுபிடித்து..,! அவளடைந்த கோபம் அவள் பேச்சில் தெறித்தது. “ஒங்க ஒடம்பைப்பத்தி ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும். நீங்க தீட்டுன்னு நினைக்கிறது தப்பான உணவாலேயோ, ஆரோக்கியக் குறைவாலேயோ கிடையாது. நம்ப உடம்பை, உயிரை, கடவுள் குடுத்ததுன்னு ஏத்துக்கறோம். இல்லியா? அவரோட செயலே தப்புங்கிறமாதிரி, இயற்கையா நடக்கிற இதுக்குக்காக பயந்துக்கிட்டு, கோயிலுக்கு வராம இருந்துடாதீங்க. எவ்வளவு கஷடப்பட்டு ஒங்களுக்கு டான்ஸ் கத்துக்குடுக்க வராங்க டீச்சர், தெரியுமா?” என்று சந்தடி சாக்கில், ஹம்சா படும்பாட்டையும் குறிப்பிட்டாள் சுந்தரவல்லி. தன் தோழியைப்பார்த்துக் கண்ண்டித்தாள்.

அப்பெண்களின் முகம் தெளிந்தது. தமக்காகப் பாடுபடும் இரு பெண்மணிகளையும் பார்த்து நட்புடன் சிரித்தார்கள்.

ஏன் இப்படி கூனிக்கிட்டு நடக்கறீங்க?” உரிமையுடன் அதட்டினாள் சுந்தரவல்லி.

ஒரு துணிச்சலான பெண் தங்கள் தர்மசங்கடமான நிலைமையை வெளிப்படுத்தினாள்: “எல்லாரும் எங்க ஒடம்பையே மொறைச்சுப் பாக்கறாங்க, டாக்டர்! வெக்கமா இருக்கு!” குரல் அழுகையாக வந்தது.

பிற மாணவிகளும் தலையை ஆட்டினார்கள். உதடுகள் பிதுங்கின

அலட்சியமாகக் கையை வீசினாள், அந்த சிறப்பு விருந்தினர். “அதுக்கென்ன பண்றது? சாமி நமக்கு அப்படி அழகான ஒடம்பை நமக்குக் குடுத்திருக்கு!” என்று புன்சிரிப்புடன் கூறியவள், தன் இருகரங்களால் மூன்று வளைவுகளைக் காட்டினாள்.

எல்லாரும் நிம்மதியும், வெட்கமுமாகச் சிரிக்க, ஒரு பெண், “இரண்டுதானே, டாக்டர்?” என்று சிரிப்புடன் வினவ, டாக்டர் யோசிப்பதைப்போல் பாவனை காட்டினாள். “நீ சொல்றது சரி. இரண்டு வளைவுகள்தான்!”

சிரிப்பு பலத்தது. இப்போது எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

சில சமயம் ஆட முடியலே. வலிக்குது,” என்று ஒரு பெண் சுட்டினாள்.

ஒங்கம்மாவை கருஞ்சீரகத்தை வறுத்துப் பொடி பண்ணி, மோரிலே கலக்கிக் குடுக்கச் சொல்லு. தினமும் குடிச்சா, கருப்பை வலுவாகும்”.

சொல்லக்கூடாத அந்த வார்த்தையைக் கேட்டதும் எல்லாரும் வெட்கத்துடன் சிரித்தார்கள்.

அறிவுரை தொடர்ந்தது: “ரொம்ப வலிச்சா, வெந்நீர் ஒத்தடம் குடுக்கச்சொல்லு. இந்தமாதிரி சமயங்களிலே சுருண்டு படுக்காம, எக்சர்சைஸ் பண்ணணும். அது ரொம்ப முக்கியம்!”

அதன்பின், வீட்டில் பாட்டியோ, அம்மாவோ ஆட்சேபித்ததையும் மீறிக்கொண்டு, எந்த நாட்களிலும் கோயிலுக்கு வந்து நாட்டியம் கற்றுக்கொள்ளத் துணிந்தார்கள் அப்பெண்கள்.

நான்கு பேர் பார்க்க நாட்டியமாடும் தகுதி அவர்களுக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட ஹம்சா, சரஸ்வதி பூஜையன்று (அன்று தான்டாக்டர் சுந்தரவல்லியின் உபயம்) அவர்கள் ஆட ஏற்பாடு செய்திருந்தாள். மாணவிகளுடன், அவளும் ஆடவேண்டும் என்று கோயில் குருக்கள் விண்ணப்பித்திருந்தார்.

இப்போது அம்மா அவள் மனத்தைக் கலைத்துவிட்டாள்!

தொலைபேசியில் ரஞ்சனி பேசினாள், தயங்கித் தயங்கி. “டீச்சர்! எனக்கு இப்போ பீரியட். நான் ஆடலாமா?”

“தாராளமா! ஆனா, யார்கிட்டேயும் இதைப்பத்தி சொல்லிக்கிட்டிருக்க வேண்டாம், என்ன?”

ஒவ்வொரு வகுப்புக்கும் தவறாது வந்து, பெருமுயற்சியுடன் கற்ற கலை! இப்போது பல பேர் பார்க்க தன் திறமையை வெளிப்படுத்த ஒரு தருணம் வந்திருக்கிறது. அது நழுவி விடுமோ என்ற கவலை இனி இல்லை! “சரி, டீச்சர்!” என்ற சிறுமியின் குரலில் அலாதி நிம்மதி. “ரொம்ப பயந்துக்கிட்டிருந்தேன், டீச்சர் — டீச்சர் என்ன சொல்வீங்களோன்னு!”

ஹம்சா சிரித்துக்கொண்டாள். “குளிச்சுட்டு வந்தா போதும். காமாட்சி புரிஞ்சுக்குவா!”

“யாரு, டீச்சர்?”

“காமாட்சி அம்மன்!”

“ஓ!” அப்பெண் புரிந்தவளாகச் சிரித்தாள்.

“தைரியமா ஆடு. அதான் முக்கியம். ஏதாவது மாத்தி, தப்பா ஆடினாலும் பரவாயில்லே. அடிச்சு விட்டுடணும். என்னைத் தவிர, யாருக்கும் அது தெரியப்போறதில்லே!” என்று, பல முறை வகுப்பில் சொன்னதையே திரும்பச் சொன்னாள் ஹம்சா. “காமாட்சி அம்மனும் நம்பளைமாதிரி ஒரு பொண்ணுதானே! கோவிச்சுக்க மாட்டா!” தனக்கே தைரியம் அளித்துக்கொள்வதைப்போல் இருந்தது .

கணினியில் பதிவு செய்திருந்த பாட்டை ஒலிக்கவிட்டாள். முகத்தில் புன்னகை படர, புடவைத்தலைப்பை இழுத்துச் சொருகிக்கொண்டாள். தரையைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, பயிற்சியில் இறங்கினாள் ஹம்சா.

(வல்லமை.காம்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *