நன்றி சொல்லலாமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 10,144 
 

“அம்மா எனக்கு எப்படியாவது அப்பாகிட்ட சொல்லிப் புது சைக்கிள் வாங்கிக் கொடும்மா, ப்ளீஸ்.”

“இங்க பாரு, உங்கப்பா எப்ப நல்ல மூடுல இருப்பாருன்னு தெரியாது. அப்படி ஏதாவது சந்தோஷமா இருந்தாருன்னு வச்சுக்க அப்ப நைசா பேசி வாங்கித்தரேன் புரியுதா?”

“என்ன அம்மாவும் பையனும் காலையிலேயே கூடிப்- பேசிக்கிட்டுருக்கீங்க.”

“அது ஒன்னுமில்லீங்க. அவனுக்கு கணக்கில சந்தேகம் அடிக்கடி வருதாம். அதான் தினமும் ஸ்கூல் விட்டு வந்தவுடனே சொல்லித்தரயான்னு கேட்டான்.” என்று உண்மையை சற்று மறைத்துப் பேசினாள் மீனா.

“ம் ஒழுங்கா வாத்தியாரு நடத்தறத க்ளாஸ்ல கவனிச்சாலே போதும். இவன் எங்க ஒழுங்கா கவனிக்கிறான். எப்பப்பாரு விளையாட்டுன்னுதானே இருக்கான். இப்படியே இருந்தான்னு வச்சுக்க, அடுத்த வருஷம் ஆறாவதுலேயே இருக்க வேண்டியதுதான். இப்பல்லாம் அரசாங்கப் பள்ளியிலே பிள்ளைங்க எப்படி மார்க் வாங்கறாங்க தெரியுமா?. இவனுக்கு இதெல்லாம் எப்படி புத்தியில எட்டும். போடா போ உருப்படியா பள்ளிக்கூடத்துக்கு கிளம்பற வழியப்பாரு.” என்று அவர் சொல்ல,

“டேய், பாபு நீ பேசாம போய்ட்டு வா. அம்மா நான் எல்லாம் பாத்துக்கிறேன்.” என்று அவனை மெதுவாக அங்கிருந்து அனுப்பினாள்.

சாயங்காலம்.

பாபு பள்ளிக்குச் சென்று திரும்பி வந்து சிறிது நேரம் விளையாடி விட்டு, ஹோம் ஒர்க்கை செய்து படிக்க வேண்டிய பாடங்களைப் படித்து முடித்தான்.

மூவரும் இரவு சாப்பிட உட்கார்ந்தனர்.

“நல்லா சாப்பிடு பாபு. அப்பதான் நல்லா படிக்கமுடியும்… ஏங்க நல்லாக் குழம்பு ஊத்திக்கிங்க. அப்பளம் எடுத்துக்கங்க.”

“என்ன இன்னிக்கு உபசாரம் எல்லாம் பலமா இருக்கு…?”

“அது ஒன்னுமில்லீங்க. நம்ம பாபுக்கு ஒரு புது சைக்கிள் வேணுமாம். அதான் உங்ககிட்ட சொல்லாம்னு இருந்தேன்.”

“இங்க பாரு எப்ப இவன் ஒழுங்காப் படிச்சு முதல் ஐந்து ரேங்க்குக்குள்ள எடுக்குறானோ அப்ப பார்க்கலாம்…”

பாபு பள்ளியில் ரொம்ப சுமாராகத்தான் படிப்பான். அதற்காகவே அவனுக்கு அப்பா இப்படி ஒரு கண்டிஷனை போட்டார்.

அவனுடைய ப்ரண்ட்ஸ் எல்லார்கிட்டேயும் சைக்கிள் இருக்கு. அவனிடம் மட்டும் இல்லை. அதை நினைக்கும் போது பாபுவுக்கு அழுகையாக வந்தது.

ஒரு வாரம் கழித்து ஒரு நாள் பள்ளிவிட்டு வரும்போது நல்ல மழை. பாபு மழையில் நனைந்து கொண்டே வீடு வந்து சேர்ந்தான். அவன் வீட்டு வாசலில் ஒரு சிறிய பெண் நாய்க்குட்டி ஒன்று கத்திக் கொண்டே இருந்தது. அவனுக்கு அதைப் பார்த்தவுடன் மிகவும் பாவமாக இருந்தது. கேட்டை திறந்து, வீட்டுத் திண்ணையில் ஒரு சாக்கை விரித்து அதன் மேலே நாய்க்குட்டியை வைத்தான்.

சிறிது நேரத்தில் அதன் சத்தம் ஓய்ந்து அமைதியாக இருந்தது.

“அம்மா கொஞ்சம் கொட்டாங்குச்சியில் பால் கொடுங்க. அதுக்கு ஊத்தரேன்…”

மகனின் விருப்பத்திற்காக அவனின் தாய் பால் கொண்டு வந்து தர அவனும் அந்தப் பாலை அதனருகே வைத்தான்.

அது பாலைக் குடித்து முடித்தது.

அவன் அப்பா மழை ஓய்ந்த பிறகு வீட்டுக்கு வந்தார்.

அவர் வண்டி நிறுத்துற இடத்தில் ஒரு நாய்குட்டி இருப்பதை பார்த்தவுடன் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“ஏ, மீனா! இங்க வா. யாரு இதையெல்லாம் வீட்டுல்ல கூட்டிகிட்டு வந்தது?.”

“இல்லங்க நம்ம வீட்டு வாசல்ல கத்திக்கிட்டே இருந்துச்சு. மழை பேஞ்சதால நம்ம பாபுதான் இங்க கொண்டு வந்து வச்சான்.”

“ஆமாம் படிப்பத்தவிர இதல்லாம் நல்லாச் செய்வான். அந்த நாயை முதல்ல வெளிய கொண்டு விடு. அப்பா ப்ளீஸ்ப்பா. இந்த ஒரு ராத்திரி மட்டும் இங்க இருக்கட்டும்பா.”

அவனுடைய அப்பாவிற்கும் அந்த நாயின் மேல் இரக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

அவன் அப்பா அரைமனதுடன் சம்மதித்தவுடன் அவனுக்கு ஏதோ முதல் ரேங்க் வாங்கின மாதிரி நிம்மதி ஏற்பட்டது. பாபுவிற்கு தூக்கமே வரவில்லை. அந்த நாய்க்குட்டி வரவு அவனுக்கு இனம புரியாத ஒரு சந்தோஷத்தை கொடுத்தது.

மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்து விட்டான். காலையில் தனக்குக் கொடுத்த பாலை கொஞ்சம் நாய்க்குட்டிக்கு ஊத்தினான். அவன் அப்பா எழுந்தவுடன் முதல் வேலையாக நாய்க்குட்டியை வெளியே கொண்டு போய் விட்டார்.

பாபுவிற்கு கோபம் வந்தது. ஆனால், ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டான்.

சாயங்காலம் வீட்டுக்கு வந்தவுடன் விளையாடப் போகாமல் இருந்தான்.

அம்மா அவனிடம் கேட்டார். “ஏண்டா உம்முன்னு இருக்க?.”

“ஏம்மா அப்பா இப்படி செய்யறாரு. ஆசையா ஒரு நாய்குட்டி வந்துச்சு. அதக் கூட நம்ம வீட்டில வளர்க்க விடமாட்டேங்கிறாரு.”

“சரிசரி. போய் நீ படிக்கிற வேலையப் பாரு. நம்ம வேற நாய்க்குட்டி வாங்கலாம்.”

அவனுக்குப் புத்தகத்தை எடுத்தாலும் படிப்பில் நாட்டமே இல்லை. சிறிது நேரம் கழித்து அவன் வீட்டு வாசலில் நாய்க்குட்டி சத்தம் கேட்டது. அவனுக்கு சத்தம் கேட்டவுடன் தாவிக்குதித்து போய் பார்த்தான்.

அவன் அம்மாவிடம் அதற்குப் பால் வாங்கி ஊத்தினான். அது குடித்துவிட்டு படியிலேயே படுத்துக் கொண்டது. அவன் அப்பாவின் வண்டி சத்தம் கேட்டவுடன், வேகமாக ஓடி அந்த நாய்குட்டியை பக்கத்தில் உள்ள காலிமனையில் விட்டுவிட்டு வந்தான்.

இதைப் பார்த்த அவன் அப்பா சத்தம் போட்டார்.

“இங்க பாரு கண்ட தெரு நாயெல்லாம் கூட்டிகிட்டு வந்த… உன் முதுகுதோல உரிச்சுடுவேன். போய் உள்ளபோய் ஒழுங்கா படக்கிற வேலையைப் பாரு…”

அவனுக்கு அவன் அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை.

சில நாட்கள் சென்ற பின்னர், பாபுவிற்கு ஸ்கூல் நேரம் போக அந்த நாய்க்குட்டியிடம்தான் இருப்பான். அவன் அப்பாவிற்கு தெரியாமல் அதற்கு சாப்பாடு கொடுப்பான்.

ஒரு நாள் அவன் அப்பா கூப்பிட்டார்.

“டேய் இங்க பாரு சாயங்கலாம் ரெடியாய் இரு. உன்னைய சைக்கிள் கடைக்கு கூட்டிகிட்டு போறேன். உனக்கு எந்த மாடல் பிடிச்சிருக்கோ அதை வாங்கிக்க. ஆனா இனிமேலாவது ஒழுங்காப் படிக்கணும் புரியுதா?.”

ஆனால் பாபுவிடம் இருந்து வார்த்தையே வரவில்லை.

“ஏன் உம்முன்னு இருக்க?”

“அது வந்துப்பா, எனக்கு சைக்கிள் வேண்டாம். ஆனா வேற ஒன்னுதான் வேணும்”.

“என்ன சொல்லு.?”

“அந்த நாய்க்குட்டியை நம்ம வீட்டிலே வளர்க்கலாம்பா…”

“டேய் நீ அடி வாங்கப்போற….”

“இல்லப்பா. அது மட்டும் இருந்தாப் போதும்ப்பா… ப்ளீஸ்ப்பா…”

“நீ ஏற்கனவே நல்லாவே படிக்க மாட்ட. இதல அதுவும் வந்துச்சுன்னா, நீ உருப்பட்டாப்லதான்….”

“இல்லப்பா, நான் சத்தியமா நீங்க சொல்றாப்ல முதல் ஐந்து ரேங்க்குக்குள்ளாற வாங்குவேன். நாய்குட்டிக்கு மட்டும் பர்மிஷன் தாங்கப்பா.”

அவன் கெஞ்சல் பாபுவின் அப்பா மதனுக்கு என்னவோ செய்ய. “சரிசரி நீ நிறைய மார்க் வாங்கலேன்னா, அதை எங்கயாவது விட்டுட்டு வந்துடுவேன் புரியுதா?.”

“ரொம்ப தேங்க்ஸ்பா.”

ஒரு வழியாக அந்த நாய்க்குட்டியை எடுத்துக் கொண்டு வந்து விட்டான். அதற்கு திண்ணையில் ஒரு இடமும் கொடுத்தாகிவிட்டது.

மறுநாள் அவனுக்குப் பள்ளி விடுமுறை. எனவே அந்த நாய்குட்டிக்கு பெயர் வைக்கவேண்டும் என்று நினைத்தான். அவன் அம்மா மீனா ஏதேதோ பெயர் எல்லாம் சொன்னாள். ஆனால் அவனுக்கு எதுவும் பிடிக்கவில்லை. கடைசியில் அவனுக்கு ஒரு பெயர் மனதில் தோன்றியது.

அவன் இரண்டாவது வகுப்பு படிக்கும்போது, ஷண்முகப்ப்ரியா என்ற டீச்சர் இருந்தார். அவர் அனைத்து குழந்தைகளையும் மிகவும் அன்பாக நடத்துவார். அந்த டீச்சருக்கு பாபுவைக்கண்டால் மிகவும் பிடிக்கும். பின்னர் மாறுதல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இருந்தாலும் அவருடைய ஞாபகங்கள் அவனுக்கு இப்பொழுதும் வந்து கொண்டே இருக்கும்.

எனவே அவன் ஷண்முகப்ப்ரியாவை சுருக்கி அந்த நாய்குட்டிக்கு ஷபி என்று வைத்தான்.

படிக்கிற நேரம் போக மீதி எல்லா நேரமும் ஷபிதான். ஷபிக்கு சந்தோஷம் வந்தால் அவன் சட்டையை இழுத்து வெளியிலே கூட்டிக் கொண்டு போகச சொல்லும். அவன் பள்ளி செல்லும் போதும், அவன் அப்பா ஆபிஸ் செல்லும் போதும், அது தெருமுனை வரை விட்டுவிட்டு வரும். ஆனால் அவன் அப்பாவிற்கு இதன் செயல் பிடிக்காது.

ஒருமுறை ஷபிக்கு உடம்பு சரியில்லாமல் போக, வெட்னரி டாக்டரிடம் காண்பித்த பொழுதுதான், அது அல்சேஷன் வகையைச சார்ந்தது என்று தெரிய வந்ததது.

பாபுவிற்கு காலாண்டுத் தேர்வு தொடங்க இரண்டு நாட்கள் இருந்த வேளையில், அவன் அப்பா சொன்னார், இந்த முறை நீ சொன்னபடி மார்க் வாங்கலேன்னா, இந்த ஷபி வெளியில போய்விடும் ஜாக்கிரதை.

அதற்காகவே பாபு மிகவும் விடியற்காலையிலேயே எழுந்து கவனமுடன் படிக்கத் தொடங்கினான். அனைத்துத் தேர்வுகளையும் நன்றாக எழுதியிருந்தான்.

காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கியிருந்தது.

இன்று பேப்பர் தருவார்கள். அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. மார்க் குறைந்து விட்டால் நம் ஷபி நம்மை விட்டுப் போய்விடுமே என்ற கவலை இருந்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக அவன் வகுப்பில் இரண்டாவது ரேங்க் வாங்கியிருந்தான்.

அவன் அப்பாவிற்கு நம்பவே முடியவில்லை. உள்ளுக்குள் அவருக்கு சந்தோஷம்.

இப்படியே வருடங்கள் ஒடின.

பாபுவும் பத்தாவது வந்துவிட்டான். ஷபியும் நன்றாக வளர்ந்து விட்டான். இருவரும் இணைபிரியாத தோழர்கள் ஆகி விட்டனர்.

ஆனால் ஷபியை அவன் அப்பாவிற்கு பிடிக்காததால், ஷபியும் அவர் எதிரில் வரவே வராது. மிகவும் நாசூக்காக நடந்து கொள்ளும். ஏனோ மதனுக்கு அதைக் கண்டால் எரிச்சல் தான் வரும். இருந்தாலும் பையன் நன்றாக மார்க் எடுப்பதால் பேசாமல் இருந்தார்.

பத்தாவது முழுத் தேர்வு தொடங்கப் போகிற காரணத்தால், பாபு காலை 3.30 மணிக்கு எழுந்து விடுவான். அலாரம் அடித்துவிடும். சிலநேரம் சோம்பல் காரணமாக அவன் எழுந்திருக்க மாட்டான். அந்த சமயத்தில், ஷபி அழகாக கொஞ்சலுடன் ஒரு சத்தம் எழுப்பும். உடனே எழுந்து விடுவான். ஷபிக்கு சந்தோஷம் வந்தால், மேலே அவனிடம் தாவி விளையாடும்.

பத்தாவது தேர்வும் முடிந்தது.

இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. பாபு ஒருவித டென்ஷனுடன் இருந்தான். அவனுக்கு மார்க் குறைந்தால், அப்பா ஷபியை வேற எங்கையாவது விட்டுவிட்டு வந்து விடுவாரே என்று கவலை அதிகரித்தது. எனினும் கடவுளிடம் மனதார வேண்டிக்கொண்டான்.

காலை ஒன்பது மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. என்ன ஆச்சர்யம்! பாபுதான் மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளான். மொத்த மதிப்பெண்கள் 500 க்கு 497 மதிபெண்கள் வாங்கியிருந்தான்.

அவன் அப்பா, அம்மாவிற்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.

பள்ளிக்கு சென்ற பொழுது அவன் தலைமை ஆசிரியரிலிருந்து, மற்ற ஆசிரியர்கள் வரை அவனைப் பாராட்டி இனிப்பு வழங்கினர்.

எல்லா மீடியாவும் அவனை வீடியோ எடுத்தது. பாபுவைப் பேட்டி காண அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஆவலுடன் இருந்தனர்.

“மாநிலத்தில் முதலிடம் பெற்ற நீங்கள் யாருக்கு நன்றி சொல்லுவீர்கள்?” என்றனர்.

உடனே பாபு, “எல்லாருக்கும் வணக்கம். முதலில் கடவுளுக்கும், பின்னர் என் பள்ளி ஆசிரியர்கள், என்னை நல்ல திறமையான மாணவனாக உருவாக்கியதற்கு மிக்க சந்தோஷம். என் பள்ளிக்கு நான் செய்ததது மிகச்சிறிய காணிக்கை. என் அப்பாவும், அம்மாவும் இந்த உலகத்திற்கு என்னால் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க சந்தோஷம். அவர்கள் கொடுத்த உற்சாகத்தால் நான் மிகவும் நல்ல மதிப்பெண்ணைப் பெற முடிந்தது. இவர்களுக்கு மேல் என் ஷபிக்கு என் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறேன்.”

“ஷபியா? யாரது?”

“ஷபி. என் செல்ல நாய்க்குட்டி…!”

உடனே ஒரு பத்திரிகையாளர் குறுக்கிட்டு “என்ன தம்பி நாயை போய் இப்படி சொல்றீங்க?”

“சார். உங்களுக்கு வேணா அது நாயாத் தெரியலாம். ஆனால் எனக்கு அவன் உற்ற நண்பன். மக்கு மாணவனா இருந்த என்னை, இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பது அது என் மேல் கொண்டிருந்த அன்புதான்.”

அப்ப அதற்கும் நன்றி தெரிவிக்கிறீர்களா?, என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார்.

“நாய் நன்றியை காட்டிலும், அன்பைத்தான் அதிகமாக கொடுக்கும். அது எதையும் எதிர்பார்க்காது.”

“……….”

“சார் மனுஷங்க தான் ஒத்தருக்கொருத்தர் உதவி செய்யும் போது நன்றியை எதிர்பார்த்து, மற்றவர்களிடம் நன்றி சொல்லி அந்த செயலுக்கே முற்றுபுள்ளி வைக்கிறாங்க. உலகத்திலே ஒவ்வொரு காலகட்டத்திலேயும் யாராவது யார்காவது உதவி செஞ்சுகிட்டே இருப்பாங்க. அது எல்லாத்துக்கும் அந்த நேரத்தில நன்றின்னு சொல்லிட்டு அப்புறம் மறந்துடறாங்க. இனிமேயாவது நன்றின்னு சொல்லாம, நாம எல்லாரும், நீங்க செஞ்ச உதவி எனக்கு மனசுல நல்ல நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் கொடுத்துருக்கு சொல்லனும். அப்படின்னு சொன்னா, சொல்றவங்களும், கேட்கிறவங்களும் காலத்துக்கும் மறக்க மாட்டாங்க…அவங்க அன்பு நம்ம கூட ஆசிர்வாதமா எப்போதும் வந்துகிட்டே இருக்கும்…. அது போல என் ஷபியிடம் உன் அன்பு எப்போதும் எனக்கு வேணும், என் கூடவே இருக்கணும்…” என்றபடி அவனனங்கிருந்த ஷபியைப் பார்க்க அது தன் முன்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துத் தூக்கியபடி அவன் மேல் நட்புடனும் பாசத்துடனும் தாவியது.

இதைப் பார்த்த பத்திரிகையாளர்கள், “நீங்க எதுவும் சொல்லாமலே உங்கள் பார்வையைப் பார்த்து உங்களோட வந்து ஒட்டிக்கிட்டதே…?” என்றனர்.

“இல்ல சார், நாம எப்படி அன்பு செலுத்தறமோ, அதைப் பல மடங்கா அது வெளிப்படுத்தும் இந்த ஷபிக்கு எந்த மொழியுமில்லை… மிருகங்கள் நாம் காட்டுற ஒலியையும் உணர்வுகளையும் உள்வாங்கிட்டு அதற்கேற்றபடி அதன் உணர்வுகளை வெளிப்படுத்தும். எனக்கு இந்த ஷபியால்தான் எல்லாப் புகழும் கிடைத்திருக்குன்னு நான் நம்புகிறேன். நான் வருங்காலத்தில ஒரு வெட்னரி டாக்டராக ஆக வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.” என்றான்.

இந்தப் பேட்டியை, அனைத்து மீடியாவும் உலகம் முழுவதும் ஒளிபரப்பியது.

ஆனால் அவன் அப்பாவிற்கு மனதில் ஒரே வருத்தம். நாம இவனை கஷ்டப்பட்டு படிக்கவச்சா, ஒவர் நைட்ல இந்த நாயை ஸ்டார் ஆக்கிட்டானே என்று நினைத்தார்.

பத்து நாட்கள் சென்ற நிலையில் அவன் அப்பா அவனுக்கு ப்ளஸ் ஒன்னுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கச் சென்றார். தீடீரென்று மழை கொட்டத் தொடங்கியது.

இவன் அம்மாவும், ஷபியும், பாபுவும் வீட்டிலே அவன் அப்பாவிற்காக சாப்பிடாமல் இருந்தனர். மழை விட்டபாடில்லை. அடைமழையாக இருந்தது. அவன் அம்மா மீனா, அவன் அப்பாவிற்கு மொபைலில் தொடர்பு கொண்டபோது தொடர்பு கிடைக்கவில்லை. மணியும் இரவு பத்தரை ஆகிவிட்டது. ரொம்ப கவலையாக இருந்தது. ஷபியும் சாப்பிடாமல் சோகமாக இருந்தது. தீடீரென்று ஷபி வெளியே ஒடிவிட்டது.

ஒரு அரைமணி நேரம் கழித்து ஷபி வந்து அவன் சட்டையை பிடித்து இழுத்தது. உடனே பாபு, இங்கபாரு பேசாம இரு. மழை வேற கொட்டிகிட்டு இருக்கு, போ மூலையில உக்காரு என்று சத்தம் போட்டான். ஆனாலும் விடாது அவன் சட்டையை பிடித்து வாசலுக்கு இழுத்துச் சென்றது. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அது எதற்கு இழுக்கிறது என்றும் புரியவில்லை.

அவன் அம்மா சொன்னார், இந்தா என் மொபைல வச்சுக்கோ. இந்த குடைய எடுத்துக்கிட்டுப் போ. அப்படியே தெருமுனைல உங்கப்பா வர்றாரான்னு பாரு.

அவனும் ஷபியும் போனார்கள். தெருமுனை வந்தவுடன், அவன் நின்றான். உடனே மீண்டும் ஷபி அவன் சட்டையை இழுத்துக் கொண்டு ஒரு குறுக்கு சந்துக்கு கூட்டிக்கொண்டு போனது.

அங்கே ஒரு பள்ளத்தில் அவன் அப்பா கொண்டு சென்ற வண்டி கவிழ்ந்து கிடந்தது. அவர் அப்பாவும் சுயநினைவில்லாமல் இருந்தார். உடனே அவன் ஆம்புலன்ஸிற்கு போன் செய்தான். தக்க சமயத்தில் அவன் அப்பா ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டதால் உயிர் பிழைத்தார்.

எல்லாருக்கும் மகிழ்ச்சி. ஹாஸ்பிடலுக்கு ஷபியும் வந்திருந்தது. அப்பொழுது அவன் அப்பாவிடம் ஷபி செய்த காரியத்தை சொன்னவுடன், அவருக்கு கண்ணீர் வந்தது. எத்தனையோ நாள் இந்த ஷபியை திட்டியிருக்கேன்.ஆனால் தக்கசமயத்தில என் உயிரை காப்பாற்றிடுச்சு.

டேய் ஷபி, உன் அன்பு எப்போதும் எனக்கு வேணும், என்கூடவே இருக்கணும் என்று சொன்னவுடன், அந்த ஷபி இருகைகளையும் சேர்த்து அவரைபார்த்து மேலே தாவியது.

“நீ சொன்னது சரிதான் பாபு. மனுஷங்கத்தான் நன்றியை சொல்லிட்டு, அதோட மறந்துடறாங்க. இனிமேலாவது யார்க்காவது உதவி நாம செஞ்சாலும், இல்ல நமக்கு யாராவது உதவி செஞ்சாலும், நன்றியைக் காட்டிலும், நாம எல்லாரும், நீங்க செஞ்ச உதவி எனக்கு மனசுல நல்ல நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் கொடுத்துருக்குன்னு சொல்லனும்…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *